Skip to main content

என் எண்ணச் சிதறல்கள்! - (2)

  என் எண்ணச் சிதறல்கள்!  (2)             Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ண ங்களைக் கடந்த சில மாதங்களாக க்   கவிதைக ளாக வெளியிட்டு வ ருகிறேன். அந்தக் கவிதைகளை அனைத்தையும்   தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1.    சேவை! தேவை! முகம் பார்த்து செய்வது சேவை! அகம் பார்த்து செய்வது தேவை!   2.    சோதனை! சாதனை! சங்கடம் இல்லாத சோதனை இல்லை! சவால் இல்லாத சாதனை இல்லை!   3.    புத்தகத்தின் பலன்களாக! நம் வாழ்நாளில் படிக்கும் புத்தகங்கள் சில கிலோ எடைதான் பலன் ? பல டன்களாக இருக்கும்!   4.    ஆலோசனை! பலரிடம் ஆலோசனை கேட்கலாம்-முடிவு உனதாக இருக்க வேண்டும்!   5.    மெளனம்! மெளனம் - என்பது பேச்சில்லாமல் இருப்பது என்பதல்ல! நினைவுகள் -என்ற சப்தம் இல்லாமல் இருப்பது!   6.    அனுபவப் பாடம்! நம் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக் கொள்வதை விட அடுத்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பாடமாக நெறிப்படுத்திக் கொள்பவனே சா...

குரம்பை

 

குரம்பை

          நெடுநிலை மாடங்களும், ஓடுகளும் கூரையாகக் கொண்டிருந்த தமிழகத்தில் ஓலைகளால் ஆன குரம்பை வீடுகளும் காணப்பட்டன. குரம்பை வீடுகள் பற்றி தமிழிலக்கியங்கள் தெளிவாக விளக்குகின்றன. பாலை, முல்லை, மருத, நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களும் தோப்புக்குடிகளில் வாழ்ந்தவர்களும் வேறு வேறு விதமான கூரைகளால் குரம்பை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர். இவர்களின் குரம்பைகளைப் பற்றி விவரங்களைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப் படையில் தெளிவாகத் தருகின்றார்.

ஈந்துக் குரம்பை

     பாலை நிலத்தில் வாழும் எயினர்கள் ஈந்தின் இலையால் வேயப்பட்ட குடிசையில் வாழ்ந்தனர். சொரசொரப்பான முதுகுப்புறத்தையும், கொழுவிய மடலையும், வேல் போலும் நுனியையும் பொருந்தியது ஈந்தின் இலை. முள் போன்ற ஈந்தின் இலை கொண்டு குரம்பை வேயப்பட்டு இருந்ததால் கூரையில் அணிலும், கருப்பை(எலி) யும் ஓடாமல் காக்கப்பட்டது. எளிய பொருட்களைக் கொண்டு அரிய நுட்பத்துடன் எயினர் கள் குரம்பை அமைத்து வாழ்ந்த நிலையினை,

          ”வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது

           யாற்றுஅறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்

           வேல்தலை அன்ன வைந்நுதி, நெடுந்தகர்

           ஈந்துஇலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை” (பெரும்.85-88)

என்று பெரும்பாணாற்றுப்படை விளக்குகிறது.

வரகு வைக்கோல் குரம்பை

     முல்லை நிலத்தில் வாழ்ந்த கோவலர்கள் வரகு வைக்கோல் கற்றையை மூங்கில் கழியில் மீது வேய்ந்த குரம்பையில் வாழ்ந்தனர். இதனை,

          ”கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்”(பெரும்.150)

என்னும் பெரும்பாணாற்றுப்படைச் சுட்டுகிறது.

நெல் வைக்கோல் குரம்பை

          மருத நிலத்தில் நெல் மிகுதி, நெல்லது வைக்கோலைக் கொண்டு உழவர்கள் குரம்பைகளைக் கட்டிக் கொண்டனர் என்பதனை,

          ”புதுவை வேய்ந்த கவிகுடில்” (பெரும்.225)

என்று பெரும்பாணாற்றுப்படை வழி அறியலாம். இதில் புதுவை என்பது ‘புது வைக்கோல்’ எனப் பொருள் படும்.

தருப்பைப் புல் (நாணல்) குரம்பை

      நெய்தல் நிலத்தில் தருப்பைப் புல் (நாணல்) மிகுதியாகக் காணப்படும். நெய்தல் நில வலைஞர்கள், வேழக்கோலை நிரல்பட வைத்து இடையிடையே வெள்ளிய கொம்புகளைக் கலந்து நிறுத்தி இவைகளைத் தாழை நாரால் கட்டி நிறுத்தினர். இந்தக் கட்டுமானத்தின் மீது தருப்பைப் புல்லை வேய்ந்து குரம்பையைக் கட்டினர். இத்தகவலை,

          ”வேழம் நிரைத்து, வெண்கோடு விரைஇ

           தாழை ஐடிந்து தருப்பை வேய்ந்த

           குறியிறைக் குரம்பை” (பெரும்.263-265)

என்னும் வரிகளில் உருத்திரங்கண்ணனார் வெளியிடுகின்றார்.

          இதில் வேழம் என்பது கருப்பந்தட்டை, கொறுக்கைச்சி, மூங்கில்கோல் ஆகிய மூன்றினையும் குறிக்கும். வேழம்,புல், இனத்தது ஆதலின் உறுதியின் பொருட்டு வெள்ளிய மரக்கொம்பை நிறுத்தினர்.

தெங்கு மடல் குரம்பை

    தென்னந்தோப்புகளில் வாழும் உழவர்கள் தோப்புகளின் நடுவில் தென்னையின் வாடிய மடலால் (தென்னை ஓலை) வேயப்பட்ட குரம்பையில் வாழ்ந்தனர். இதனை,

          ”வண்தோட்டுத் தெங்கின் வேய்ந்த

         .... ......     .......   .......   ...... ..........

         தண்டலை உழவர் தனிமனை” (பெரும்.353-355)

என்று பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கின்றது.

முள் வேலிகள்

       சில வீடுகளில் முன்றிலில் வேலியாக முட்களை நட்டனர். அவ்வாறு நடப்பட்ட வேலிகள் வாழ்முள்வேலி என்றும், இடுமுள்வேலி என்றும் வழங்கப்பட்டன. இருவேறு வகைப்பட்ட வேலிகளை தேவைக்கு ஏற்றாற் போல் நட்டனர்.

          வாழ்முள்வேலி என்பது முட்செடிகளையும், முள்மரங்களையும் வளர்த்து அவற்றால் ஆக்கிய வேலி எயினர் வீட்டில்,

          ”வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பை” (பெரும்.126)

இருந்ததாகப் பெரும்பாணாற்றுப்படை தெரிவிக்கின்றது.

       கோவலர் குடியிருப்புகளில் இடுமுள் வேலி காணப்பட்டது. முள்ளை வெட்டிக் கொணர்ந்து அமைக்கும் வேலி இடுமுள்வேலி எனப்படும். இதனை,

          ”இடுமுள் வேலி எருப்படு வரைப்பின்” (பெரும் . 154)

எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எடுத்துரைக்கின்றார்.

          முள்வேலிகள் மட்டுமல்லாது நெல்லி மரங்களால் ஆன வேலியும் இருந்தது. சங்ககாலத்து மன்னன்  பிட்டங்கொற்றன் ஊரில் நெல்லி மரங்கள் வேலியாக வளர்க்கப்பட்டன. மான்கள் நெல்லிக்கனிகளை முன்றிலில் துப்பிச் சென்றதை,

          ”மரை பிரித்துஉண்ட நெல்லி வேலி

           பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்” (புறம்.170,1-2)

என்று உறையூர் மருத்துவன் தாமோதரனார் வருணிக்கிறார்.

 

 

 

Comments

Popular posts from this blog