Skip to main content

சிந்தையில் சிதறியவை – இறையன்பு (புத்தக மதிப்புரை)

  சிந்தையில் சிதறியவை – இறையன்பு   ( புத்தக மதிப்புரை )   இன்று புத்தக மதிப்புரையில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய சிந்தையில் சிதறியவை என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை ஜனவரி – 2025 ஆம் ஆண்டு , சென்னை , கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 232, விலை 250 ரூபாய் . வெ. இறையன்பு அவர்கள் எழுத்தாளர் , சிந்தனையாளர் , தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர் , சமூக ஆர்வலர் எ னப் பல்துறைகளில் செயல்பட்டு வருகிறார். இவரது நூல்கள் , பொது வாசிப்புக்கும் தீவிர இலக்கியத்திற்கும் இடைப்பட்டவை. தத்துவப் பின்னணிகளை நோக்கமாகக் கொண்டவை. தனது படைப்புகள் குறித்து இறையன்பு , " மனிதனுக்கு உள்ளிருக்கும் தெய்வீக உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்வதே என் படைப்புகளின் நோக்கம்" என்கிறார். இவரது கட்டுரை , நாவல் , சிறுகதைத் தொகுப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள் எம்.பில் , பிஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார்கள்.   வெ. இறையன்பு அவர்கள் வார்த்தை ஜாலங்கள் இல்லாத , நேர்த்தியாக ,   கதை சொல்லும் பாணியில் சிந்திக்க வைக்கும் படைப்புகளைத் தந்துள்ளார். பல்வேறு பணிப் பொறுப்புகளி...

சங்க இலக்கியத்தில் நோய்களும் மருத்துவமும்

 

 

        சங்க இலக்கியத்தில் நோய்களும் மருத்துவமும்

சங்க காலப் புலவர்கள் நானூற்று எழுபத்து மூவருள் உறையூர் மருத்துவன் தாமோதரனார் மருத்துவத் தொழில் புரிந்தவர் என்பது அவர்தம் பெயரால் புலப்படும். சங்கப் பாடல்கள் இம்மருத்துவர்களின் இயல்பைப் பல அடிகளில் குறித்துள்ளன. பிணியுற்றவர்களுக்கு அவர் விரும்புவன கொடாது வேறாகிய மருந்து கொடுப்பது மருத்துவர் இயல்பு. இதனை நத்தங்கொற்றனார்,

          ”அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது

         மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்” (நற்.136)  

எனக் குறிப்பிடுவர். மருத்துவன் நோய்க்குரிய மருந்தை வாய்வழியாக ஊட்டுதல் மரபு. இதனைச் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ,

                   ”... .. ...யாக்கையுண் மருத்துவ னூட்டிய

                   மருந்து” (கலித்.17)

எனச் சுட்டுவர். மேலும், மனிதனுக்கு ஏற்படும் உடல் நோயையும், உளநோயையும் சுட்டுகின்றன.

உடல் நோய் மருத்துவம்

சங்க காலத்தில் வீரம் சிறப்பாகப் போற்றப்பட்டதால் போர்களும் அதிகமாக நடந்தன. போரில் கூர்மையான வாள்பட்டு உடலில் குருதி வழியப் புண் ஏற்படும் பொழுது அக்குருதி வழிவதைத் தடுக்கவும் புண்பட்ட இடத்தில் தூசு முதலியன படாமல் இருக்கவும் புண்களில் பஞ்சு வைத்துத் துணியால் கட்டியுள்ளனர். இதனை,

”கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு

பஞ்சியுங் களையாப் புண்ணர்” (புறநா.353)

என்பது உணர்த்தும்.

          போரில் ஏற்பட்ட பிளந்த காயத்தை ஊசி கொண்டு தையலிடுவதை மருத்துவ முறையாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு தைப்பதற்கு ஊசியைப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வூசி ‘நெடுவள்ளூசி’ எனப் பெற்றுள்ளது. இந்நெடிய வெண்மையான ஊசி தசையில் புகுந்து குருதியில் தோய்ந்து வெளிவருதலை, மீன்கொத்திப் பறவை நீரில் வாழும் மீனைக் கொத்தி எழுவதற்கு ஒப்பிடுவர். இதனை,

          ”மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச்

         சிரல்பெயர்ந் தன்ன நெடுவள் ளூசி

         நெடுவசி பரந்த வடு” (பதிற்.42)

என்பர் பரணர்.

          தேள் கொட்டினால் தடவும் மருந்தைச் சோழன் நல்லுருத்திரன் ‘இடுதேள் மருந்து’ (கலி.110) எனச் சுட்டுவர். இதனால் சங்க காலத்தில் தேள் போன்ற விடப் பூச்சிகள் கடித்தால் தடவுவதற்கு மருந்து இருந்தது என்பதால் அறியலாம்.

          உடல் நோய்களுக்கு மரம் சிறந்த மருந்தாக விளங்கியுள்ளது. மருந்தாகப் பயன்படுத்தப்படும் மரத்தை மக்கள் எவரும் அதனை அழித்து வெட்டிப் பயன் கொள்ளமாட்டார்கள். இதனை,

          ”மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்” (நற்.226)

என்பர் கணியன் பூங்குன்றனார். ”மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி” (புறம்.180)  மருந்து கொள் மரம் ஈண்டு அத்திமரம் ஆகும். அத்தி மரத்தின் பால் புண்ணுக்கிடுவர். அதனால் அதன் அடிப்பகுதி வெட்டுப்பட்ட வடுக்கள் நிரம்பியிருத்தலின் வடுப்பட்ட யாக்கைக்கு உவமையாயிற்று.

உளநோய்

        சங்க இலக்கியத்தில் காதலால், பிரிவால் தலைமக்கள் அடையும் துன்பம் புலவர்களால் நோயாகச் சுட்டப்படுகிறது. இந்நோய்க்குரிய மருந்தினையும் புலவர்கள் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். தலைவியின் உளநோய்க்குச் சிறந்த மருந்தாகப் புதுபுனலாடுதல் கூறப்பட்டுள்ளது. தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாது வரைவு நீட்டிக்கின்றான். விரைவில் திருமணம் செய்துகொள்ள உணர்த்த விரும்பும் தோழி, தலைவன் சிறைப்புறமாக நிற்கும் பொழுது தலைவியிடம் அன்னை கூறிய மொழிகளைக் கூறுகிறாள். அக்கூற்றில் அன்னை தலைவியின் உடல் வேறுபாட்டை உணர்ந்து புதுபுனலில் நீராடச் செல்லுமாறு கூறியதை எடுத்துரைக்கிறாள். இதனை,

          ”வானுற நிவந்த பெருமலைக் கவாஅன்

         ஆர்கலி வானம் தலைஇ நடுநாள்

         கனைபெயல் பொழிந்தெனக் கானம் கல்லென்று

        முளியிலைக் கழித்தன முகிழிணர் கொளவரும்

         விருந்தின் தீநீர் மருந்து மாயின்

         கண்ணின் நோக்கித் தண்ணென வுண்டு

        முனியா தாடப் பெறின்இவள்

        பிணியும் தீர்குவள் செல்கென் றோளே” (நற்.53)

என்பர். இதனால் புதுப் புனலாடுதல் சிறந்த மருந்தாகக் கருதப்பெற்றமை பெறப்படும். புதுப்புனல் மலைப்பகுதியில் உள்ள உலர்ந்த சருகுகளையும் அரும்புகளோடு கூடிய பூங்கொத்துக்களையும் அடித்துக் கொண்டு வருவதால், அது மருந்துத் தன்மை உடையதாகக் கருதப்படுகிறது. இப்புதுப்புனலில் உடலும் உள்ளமும் குளிர நீராடினால் மெய்வருத்தம் நீங்கும் என்பது உணர்த்தப்பட்டுள்ளது.

நிறைவாக,

          சங்ககாலத்தில் வெட்டுக் காயங்களைத் தையலிட்டு மருந்து வைத்துக் கட்டியுள்ளனர். உளநோய் தொடர்பான சிந்தனை இருந்துள்ளமையைப் பல பாடலகள் உணர்த்துகின்றன. இவற்றால் இயற்கை மருத்துவமே சங்க கால மருத்துவ முறைஎன்பது விளங்கும்.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...