வெற்றிப் பாதை (புத்தக மதிப்புரை)
வள்ளுவர் வழியில்
இன்று
புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் அகிலன் கண்ணன் அவர்கள் எழுதிய வெற்றிப்
பாதை வள்ளுவர் வழியில் என்ற
புத்தகத்தைப் பார்ப்போம். இந்தப் புத்தகத்தை டிசம்பர் 2003 -ஆம் ஆண்டு, சென்னை, தாகம் பதிப்பகம்
வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள்
92, விலை 180 ரூபாய்.
இந்நூலின் ஆசிரியர் திரு.அகிலன் கண்ணன் அவர்கள் பதிப்பாளர், எழுத்தாளர்,
விமர்சகர், கவிஞர், சமூக
ஆர்வலர், நாடக எழுத்தாளர் மற்றும் ஃப்ரீலான்ஸ்
பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தனக்கு மட்டுமல்லாது தமிழ்
மண்ணுக்கும் பெருமை சேர்த்து, தமிழ் மக்களின் மனதைக் கவர்ந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகனான கண்ணன்
தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றவர் ஆவார்.
கண்ணன் தனது தமிழ்ப் புத்தகாலயம் - தாகம்
பதிப்பகம் மூலமாக தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கி தமிழை
வளப்படுத்த இன்றும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மக்களிடையே வாசிப்புப்
பழக்கத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது உற்சாகமான
பங்களிப்பைச் செய்து வருகிறார்.
ஆசிரியர் அவர்கள் இந்நூலில் தமது அனுபவங்கள் வாயிலாக
பெற்ற நிகழ்வுகளின் வாயிலாக டாக்டர் மு.வ. அவர்களின்
திருக்குறள் உரைகளையும் இணைத்து இன்றைய இளைஞர்களுக்கு
பயன்தரும் வகையில் படைத்துள்ளார். அவற்றை தம் முன்னுரையில் வாழ்வில்
வளம் பெற துடிப்புள்ள யாவருக்கும் வள்ளுவர் காட்டும் வழியை முடிந்தளவு முட்புதர் நீக்கி
சிறு வெளிச்சம் காட்ட நான் கொண்ட பேராசையின் விளைவே இந்த புத்தகம் என்று பதிவு செய்துள்ளார்.
இந்நூலில் ஆசைப்படுவோம், குறிக்கோள் கொள்வோம், எண்ணம் வளர்ப்போம்,
கல்வி கற்போம், ஆற்றல் வளர்ப்போம், குடும்பமும் உறவும், உடல்நலன் காப்போம், தன்னைத் தான் அறிவோம் என்று 21 தலைப்புக்களில் தமது எண்ணங்களையும், தம்மையும் இந்நூலோடு இணைத்துப் பயணிப்பதாக அமைத்துள்ளார்.
1.
ஆசைப்படுவோம் எனும்
தலைப்பில்,
”ஆசையே துன்பத்திற்குக் காரணம்,
ஆசையே அழிவுக்குக் காரணம்” என்று போதித்தவர் புத்தர்.
ஆசை, மனதிற்கும் உடலுக்கும் ஒரு உந்துணர்வைத்
தருகிறது. அந்த உந்துணர்வின் காரணமாக உழைக்கத் தூண்டுகிறது.
போதிய உழைப்பு இருப்பின் அவ்வாசை ஈடேருகிறது. போதிய
உழைப்பு இல்லாமல் இருந்தால் தோல்வி ஏற்படுகிறது. மீண்டும் அவ்வாசை
அதிக உழைப்பை நல்கத் தூண்டுகிறது. அல்லது அத்தோல்வியால் மனது
உடைந்து சிதைந்து ஊக்கம் குன்றிப் போகிறது.
இந்நிலையில் அந்த ஆசையை அலசுவோம். ஏன் தோல்வி ஏற்பட்டது. நம்மால் உண்மையிலேயே
அடைய முடியாத ஆசை தானா அது? என்பதை ஆராய வேண்டும்.
நேர்மையான ஆசையாக இருக்க வேண்டும். அதீத ஆசை, பேராசை கூடாது.
நேர்மையற்ற, அநியாயமான ஆசை நிறைவேறிய அந்த கணத்தில் மகிழ்ச்சி தருவதுபோல் தோன்றினாலும்
பின் விளைவுகள் மனநிம்மதியையும் கெடுத்து வேண்டாத வம்புகளையும் கொணரும்.
துறவுகூட ஆசைப்பட்டு மேற்கொண்டால் தான் இனிக்கும்.
வள்ளுவர், ‘அவா அறுத்தல்’ என்று மிக அழுத்தமாக ஆசையை விலக்குவதால் ஏற்படக் கூடிய பயன்களைக் கூறுகிறார்.
அதனை,
”ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை
தரும்” (குறள், 370)
அதாவது ஒரு போதும் நிரம்பாத தன்மை உடைய ஆசையை ஒழித்தால் ஒழித்த
அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வை தரும் என்று குறள் வலியுறுத்துகிறது.
ஆசை, உணர்வின் வெளிப்பாடு, ரசனையின் வெளிப்பாடு, இயல்பாக மலர்வது முயற்சியின் மீது
மோகம் கொள்வோம். திறமையில். தீராக் காதல்
கொள்வோம். என்று கூறுகிறார் நூலாசிரியர்.
2. குறிக்கோள் கொள்வோம். எனும் தலைப்பில்
‘சிந்தனை செய் மனமே தினமே’
என்ற திரைப்பாடலுக்கேற்ப ஆறாவது அறிவு பகுத்தறிவு, மனித இனத்திற்கு மட்டுமே உள்ளது. நமது பிறப்பு நாம் விரும்பி
நிகழ்ந்ததல்ல, ஆனால்
நமது வாழ்வை நாம் விரும்பிய வண்ணம் அமைத்துக் கொள்ளும் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.
சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் பந்தயக் குதிரைதான். பாய்ந்தோடும் மனசு.
பிரச்சனையை அதன் வழியிலேயே சிந்திக்க ஆரம்பித்தால்
முதலில் மருட்சியும், பயமும், பொய்ம்மையும்,
தப்பிக்க நினைக்கும் மனோநிலையும் பரவும். அவ்வாறு
இல்லாமல், இப்பிரச்சனையை தீர்க்க இயலும் என சிந்திக்கும் போது
முதலில் மனதில் தெம்பு – தைரியம் பிறக்கும். சிந்தனை கூர்மைப்படும். பல திசைகளில் கதவு தட்டித் திறக்கும்.
ஆக்கப்பூர்வமான சிந்தனையை வளர்த்துக் கொள்ளவும், அச்சிந்தனைகள் வழியாக ஒரு குறிக்கோளையும் நிர்ணயித்துக் கொள்ள
வேண்டும். அறிவின் வெளிப்பாட்டால்
அமையாத ஆசையை அகற்றுவோம்.
”மனத்துக்கண்
மாசிலன் ஆதல், அனைத்தறன்
ஆகுல நீர பிற”
(குறள், 34)
ஒருவன் தன்
மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே.
மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆராவாரத் தன்மை உடையவை என்று குறள் வலியுறுத்துகிறது.
சிறந்த வாழ்வின்
ஆதாரமாக ‘அறவாழ்வு’ எனும் குறிக்கோளைக்
கொண்டுவிட்டால் அந்த அறவாழ்வு தெளிவு தரும்; தன்னம்பிக்கை தரும்;
நீடித்த மகிழ்ச்சி தரும்; அமைதி தரும்.
3. திட்டம் தீட்டுவோம். எனும் தலைப்பில்,
கவிஞர் திரு. ஆலங்குடி சோமு அவர்கள் திரைப்படப் பாடலில்,
”கத்தியைத் தீட்டாதே!
உந்தன் புத்தியைத் தீட்டு!”
என்று கூறுகிறார்.
திட்டமிடுதல் நமது சிந்தனையை முதலில் ஒருமுகப் படுத்தும். தேவையற்ற எண்ணச் சிதறல்களை, கவனப் பிறழ்வுகளைத் தவிர்த்திடும். திட்டமிடுதல் குறிக்கோளை அடைய வெகு முக்கியமான படிநிலையாகும்.
வீடுகட்டுவதற்கு,
தொழிற்சாலை நிர்மாணிப்பதற்கு,
கல்வி கற்பதற்கு
குடும்ப வாழ்க்கைக்கு,
பொருளாதார மேம்பாடு அடைவதற்கு,
என நினைவிற்குள் விரிகிறது.
மலர்ந்த பூ மணத்தையும் மலர்ச்சியையும், வண்ணத்தையும் தருகிறது. ஆனால் பூவை மொட்டாகப் பார்க்கிறோம். ஆனால் பூ மலரும் போது அந்த காட்சியை நாம் கண்டதுண்டா? பூக்கும் தருணங்கள் போன்றது தான் நம் செயலில் வெற்றியை
அடையும் நேரம்.
”பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்” (குறள், 675)
எனும் குறளில் பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற் கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும்
மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தல்
சாத்தியம் தானே!
4. முயற்சி மேற்கொள்வோம் எனும் தலைப்பில்,
‘ஊக்கமது கைவிடேல்’ என்பது நமது முதுமொழி. முயற்சிக்கு உடல், வயது எல்லைகளே இல்லை. ‘முயற்சி தன் மெய்வருத்தக்
கூலி தரும்’ எந்த அளவிற்கு நாம் நம் உடல் உழைப்பை
நல்கி முயல்கிறோமே, அந்த அளவிற்கு நமது முயற்சி நமக்கு
உரிய பலனைத் தரும்.
பெருந்தலைவர் காமராசர்
நிரம்பப் படித்தவர் அல்லர்; பெரிய வசதியான குடும்பத்தவரும் அல்லர்; ஆனால் அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். காங்கிரசுக் கட்சியில் அகில இந்திய அளவில் குறிப்பிடத்
தகுந்த அரசியல் பிரமுகர். King maker என்பதான இந்தியப் பிரதமர்களைத்
தேர்ந்தெடுக்கும் அளவிற்கு உயர்ந்தார். அவரின் இத்தகைய வளர்ச்சிக்கு
முயற்சியும் ஊக்கமும் உழைப்பும் தான் காரணம்.
இந்நூலாசிரியரின் தந்தை
அகிலன் அவர்கள் பள்ளியிறுதி வகுப்பு மட்டும் பயின்றவர். சிறு வயதில் தந்தையை இழந்து
தாயால் வளர்க்கப்பட்டவர். பின்னாளில் தான் பணிபுரிந்த அகில இந்திய
வானொலியில் படிப்படியாக உயர்ந்தவர். ஓய்வு பெறும் போது Chief producer – spoken word –
southern Region எனும் அளவிற்கு உயர்ந்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கியப் பரிசான பாரதீய ஞானபீடப்
பரிசைத் தன் படைப்புத் திறனுக்காக முதன் முதலில் தமிழுக்குப் பெற்றுத் தந்த பெருமைக்குரியர்
ஆனார். இன்றும் இவரது படைப்புக்கள் உலகத்தின்
பற்பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்று நூலாக வந்து வரவேற்பு பெற்று வருகின்றன என்று
தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். இதற்கு காரணம் முயற்சியும்
ஊக்கமும்.
”முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்” (குறள்,616)
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப்
பெருகச் செய்யும். முயற்சி இல்லாதிருந்தால் அவனுக்கு வறுமையைச்
சேர்த்து விடும்.
5. ஈடுபாடு கொள்வோம் எனும் தலைப்பில்,
சாவி கொடுத்த கடிகாரம் போல் இயந்திரத்தனமாக வாழ்வோரும்
உண்டு. சிறுசிறு செயலிலும் மிகுந்த ஈடுபாட்டுடன்
அதே காரியங்களைச் செய்வோரும் உண்டு. மன ஈடுபாடு இல்லாமல் செய்யப்பெறும்
செயலுக்கும், தான் முன்னின்று கலந்து செய்யப்பெறும்
செயலுக்கும் வேறுபாடு பளிச்செனப் புலப்படும்.
காலை எழுந்தவுடன் நமது அன்றைய உடைகளைத்
தேர்வு செய்து கொள்வதிலிருந்து நமது ஈடுபாடு புலரத் தொடங்கும். அலமாரி முழுவதும் நமது
உடைகளே. ஆனாலும் ஏன் நாள்தோறும் தேர்ந்து, மனதை அவ் ஆடையில் ஈடுபடுத்தி எடுத்து, உடுத்தி மகிழ்கிறோம்?
இவ்வாறாக அல்லாத எதையோ, எடுத்தோம், உடுத்தினோம் என்ற பற்றற்ற
முறைகளில் செயல்படுத்தப்படும் செயல்களால் ஆன வாழ்க்கை வாழப்படும் வாழ்க்கையல்ல. நிகழ்த்தப் பெறும் வாழ்க்கையாகும்.
இந்த வாழ்வின் மீது ஒரு கண்ணோட்டம், பிடிப்பு, நமது பங்கு, நமது சாதனை என்று கிளைவிட்டுப் பரவி அர்த்தமுள்ள வாழ்வை
வாழ மனதை ஒருமுகப்படுத்த ஒரு சக்தி வேண்டும்.
ஓர் அணுப்புள்ளியிலிந்து ஆலமரம் படரக்கூடும். ஆகவே முதலில் நமக்கு மெய்யுணர்வு வேண்டும்.
”எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள், 355)
என்ற குறளுக்கேற்ப, வாழ்வின் ஆதாரமே நம்பிக்கை தான்.
செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதற்கிணங்க, கடவுள் வாழ்த்துக் கூறும்
வள்ளுவர் கடவுளின் உருவத்தை மனத்தில் திணிக்காமல் ‘இறைமை’ என்ற கருத்தை மக்கள் மனத்துள் ஊன்றியுள்ளார். இந்த ஈடுபாடுதான் செயலை
மேம்படுத்தும். எக்காலத்திலும் அச்செயலின் தன்மை, அதை மேம்படுத்தும் விதம், செயலைச் செய்யும் வழி என்று
செயலின் கண் தம் சிந்தனையைச் சதா சர்வ காலமும் ஒருமுகப் படுத்தத் தூண்டும்.
ஈடுபாட்டுடன் செயல்புரிவோம்
நேர்த்தியுடன் செதுக்கிடுவோம்.
6. கல்வி கற்போம். எனும் தலைப்பில்
வள்ளுவர் கல்வியின் தேவையைச் சிறப்பாக வலியுறுத்தியுள்ளார்.
”கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை” (குறள், 400)
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்ற பொருள்கள் செல்வம் அல்ல. கல்வி வேறு, அறிவு வேறு என்று அன்றே பிரித்து வைத்துள்ளார் வள்ளுவர்.
கற்றோர் எல்லாம் அறிவுடையோர் அல்லர்; ஆனால் அறிவுடையோர் கற்றோர் ஆவார். கேள்வி ஞானம் மூலம் கல்வி வளரும்; அறிவு வளரும் என்றும் வலியுறுத்துகிறார். நிகழ்கலை வழியாக பாடல், கதை சொல்லுதல், கூத்து, நடனம் என்றெல்லாம் அக்காலத்தில் பிரபலமான வழிகளில் மக்களிடம் செய்திகள் சென்றடைந்துள்ளன எனலாம்.
7.
அடைவோம் அறிவுச் செல்வம் எனும் தலைப்பில்,
அறிவுடையோர் தம் கருத்துக்களை, கதையாக, நாடகமாக, கவிதைகளாக, காவியமாக, கட்டுரையாக, உரையாகத் தம் அனுபவங்களைப்
பல்வகை வடிவங்களில் வடித்துத் தருகின்றனர். அவற்றை அணுகி கொள்ளுவன
கொண்டு தள்ளுவன தள்ளி நாம் அவ் வழியில் பயணிக்க முயலலாம். அறிவுச் செல்வத்தைப் பெற
நாம் பொருள் செல்வம் அதிகம் செலவிட வேண்டியதில்லை.
தேடுதல் வேட்கையும், முனைப்பும், நேரமும், கருத்தும் ஒருங்கிணைந்தால் போதும் – நாம் அறிவுச் செல்வத்தையும் அனுபவ வெளிச்சத்தையும் பெறலாம். ஆக, அறிவுச் செல்வம், ஆர்வம் இருந்தால் தம்முள் புகுந்து ஆற்றல் வளர்க்கும் மந்திரச் சக்தியாகும்.
நம் வாழ்வை, நம் குறிக்கோளை நோக்கி நகர்த்தும் ‘துடுப்பு’ தானே அறிவு.
பட்டறிவு- படிப்பறிவு என்று வகை வகையாய் அறிவுப் பயணம் மேற்கொள்வதோடு
நின்றுவிடாது நாம் படிப்பதை, பயின்றதை, தெரிந்து கொண்டதை தமது
வாழ்க்கையில் பயன்படுத்தி? செயல்படுத்தி வெற்றியும் மகிழ்ச்சியும்
அடையவேண்டும். அதுவே அறிவுச் செல்வத்தின் பயன்.
அறிவு என்பது என்ன? அறிவுத் தேடலுக்குத் தேவை நாட்டம், முயற்சி, நமது சிந்தையில் படியும் ‘நமக்கு எல்லாம் தெரியும்!’ என்ற கதவு மூடலைத் தவிர்ப்போம்.
கற்றது கைம்மண்ணளவு
கல்லாதது உலகளவு!’
ஆகவே முதலில் காதுகள், கண்கள் என்னும் ஜன்னல்களைத் திறப்போம். படிப்புப் பெறுதல் எனும் அறிவுத் தேடல் கதவுத் திறப்போம். திறந்த மனதுடன் அறிவை அள்ளிப் பருகுவோம்.
8. ஆற்றல் வளர்ப்போம் எனும் தலைப்பில்,
மற்றவரால் முடிவது என்னாலும் முடியும்
என்கிற ஆர்வத்தால் நாம் செய்ய விரும்புகிற செயல்பற்றிய ஆரம்ப அறிவையும் தொடர்ந்து ஆழமான அறிவையும்
அடைந்துவிட்டால் நமது முயற்சியின் முதல் படியில் கால் வைத்துவிட்டோம் நாம் என உணரவேண்டும்.
பயிற்சி, செய்கை இவையிரண்டும் ஆற்றல்
எனும் ரயில் பயணத்திற்குத் தண்டவாளங்களாகச் செயல்படுகின்றன. நமது ஆற்றலை வளர்த்துக் கொள்ள முதலில் செயல்படவேண்டும். அச்செயல்பாட்டின் நிறை குறைகளைப் பிறர் சுட்டிக்காட்டி
நாம் அறிந்து கொண்டாலும் சரி, நமது சொந்த அபிப்ராயத்திலேயே பார்த்துக்
கொண்டாலும் சரி. நமது செயல்பாட்டின் தன்மையை நாம் உணர்வோம்.
ஆற்றல் வளர்ப்பு எனும் செய்கை கலைகளுக்கு
மட்டுமல்ல. பணிக்கும் வாழ்விற்கும் ஓர் அடிப்படைத்
தேவையாகும். ‘பெருந்தச்சன்’ என்ற மலையாளப் படம். எம்.டி. வாசுதேவன் நாயரின் கைவண்ணத்தில்
வெளிவந்த மிகச் சிறந்த படம். ஒரு செவி வழிக் கதையை அடிப்படையாக வைத்து
எடுக்கப் பெறற படம். அப்படம் சொன்ன அடிப்படை செய்தி வேறு.
ஆனால், அப்படத்தில் இடையில் ஊடுபாவாக ஒரு சிற்பியின் ஆற்றல் வளர்ப்பு எனும் செய்தி அழகாகச் சொல்லப் பெற்றிருக்கும். கல்லில் ஆண் கல், பெண் கல் உண்டா? பெருந்தச்சன் கத்தியால் ஒலி எழுப்பிக் கண்டறிந்து சொல்வார். தேவியின் சிலையை வடிப்பார். அச் சிலைக்குரிய கண்களைத் திறக்க அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி... அப்பப்பா .. முடித்து விட்டு அயர்ந்து உறங்கி விடுவார்.
அச்சிற்பத்தில் தான் செதுக்கியதில்
முழுமை ஏற்படாததை உணர்ந்து மறுநாள் அதைச் செழுமை செய்ய ஓடுவார்.. சிலையைத் தொட அனுமதி மறுக்கப்படுவார்.
ஆற்றலை எப்படி வளர்ப்பது?
செயல்பட வேண்டும். தொடர்ந்து செயல்பட வேண்டும். நாம் ஈடுபடும் துறைபற்றிய சுயதேடல் நம்முள் பெருக வேண்டும். நாம் செய்ததைப் பற்றிய பிறரது கருத்துக்களை, விமரசனங்களைத் திறந்த மனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். அக்கூற்றில் உண்மையிருப்பின் அவற்றை மேற்கொண்டு நம் செயலை மாற்றிக் கொள்ள, திருத்திக் கொள்ள, மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இத்துறையில் ஈடுபட்டு வெற்றியடைந்தோரின் அனுபவங்களை அறிந்து கொள்ள வேண்டும். வள்ளுவர் ‘ஆள்வினை உடைமை’ அதிகாரத்தில் ஆணித்தரமாக, ஆற்றல் வளர்க்கும் கலையை விளக்குகிறார்.
”முயற்சி திருவினை ஆக்கும் முயற்சியின்மை
இன்மை புகுத்தி விடும்” (குறள்- 616)
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்
செய்யும். முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச்
சேர்த்துவிடும்.
11. புகழ்பட வாழ்வோம் என்ற தலைப்பில்,
வாசல் கோலம் பிரமாதம்!
நீங்க இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!
உங்க ஆலோசனை ரொம்பப் பிரமாதம்!
என்று இப்புகழ் வார்த்தைகள் எல்லாம் இயல்பாக உள்ளத்திலிருந்து வெளிப்பட்டால் நம்மை உண்மையாக உற்சாகப்படுத்தும். ஊக்கப்படுத்தும். சிறு கம்பி மத்தாப்புகளாய் உற்சாக ஊசிபோடும். அவ்வாறின்றி உதட்டிலிருந்து வந்தால் சொல்பவரின் நடிப்பை நமக்குக் காண்பிக்கும். நமது செயல், முயற்சி, திறமை உணரப்படுகிறது. அங்கீகரிக்கப்படுகிறது என்பது முக்கியம்.
மனித மனம், இந்தத் ‘தட்டிக் கொடுக்கும்’ தன்மைக்கும், இதமாய் உணர்ந்ததை உணர்ந்தவாறே மெய்யாய்க் கூறுதலுக்கும் என தவிக்கும் இயல்பு கொண்டதுதான்!
புகழ் என்பது,
திறமையான செயலால் புகழ் கிட்டும்
பயன்தரு செயலால் புகழ் கிட்டும்
நல்வழி காட்டுதலால் புகழ் கிட்டும்
படைப்பாற்றலால் புகழ் கிட்டும்
ஈகையால் புகழ் கிட்டும்
நற்பண்புகளால் புகழ் கிட்டும்
நற்குணங்களால் புகழ் கிட்டும்
பதவியால் புகழ் கிட்டும்
பொருளால் புகழ் கிட்டும்
இவ்வகையில் புகழ்வதால், அப்புகழுக்கு உரியவரை மேலும் அத்திசையில் பயணித்துப் பயன்தரும்; பல சாதனைகளைச் செய்விக்கும்; ஆக்க சக்தியாகும்; மற்றவரையும் இத்திசையில் செயல்படத் தூண்டும். அரசின் பொதுத் துறையிலும் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்குச் சிறப்பிக்கும் வகையில்,
சிறந்த அஞ்சல்
ஊழியர்,
சிறந்த காவலர்,
நல்லாசிரியர் விருது.
கலைமாமணி விருது,
சிறந்த படைப்பாளர்,
இப்பரிசு விருது, புகழ் எல்லாம் பெரும்பாலும் அவ்வப்போது தலைமையின் தன்மைக்கேற்ப
நியாயமாகவே அறிவிக்கப்படுகிறது. இதனால் மேலும் அத்துறையில் ஆக்கப் பூர்வ
செயல்பாட்டிற்கு உதவும்.
”தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று” (குறள், 236)
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதால்
புகழோடு தோன்ற வேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்கு தோன்றுவதைவிடத்
தோன்றாமலிருப்பது நல்லது.
12. அன்பு செலுத்துவோம் எனும்
தலைப்பில்,
வாழ்வின் ஜீவத் துடிப்பே அன்பு தானே.
வெளியில் காண்பிக்கும் அன்பை வீட்டில்
காண்பிக்க மறப்பதேன்? மறுப்பதேன்? பந்தத்தால் பிணைக்கப்பட்ட உராய்வை, கீறலைக் காண நேர்வது அன்பின்மையால் தானோ?
”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர்
பிறர்க்கு” (குறள்,72)
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு
வாழ்வர். அன்பு உடையவர் நம் உடம்பையும் பிறர்க்கு
உரிமையாக்கி வாழ்வர்.
பல வீடுகளில்
பார்த்திருப்போம். மிகவும் தள்ளாத வயதிலும் தாத்தா ஏதோ தன்னால்
இயன்றதை அக்குடும்பத்திற்காகச் செய்து கொண்டிருப்பார். சிறுசிறு
உதவிகளைச் செய்வார். சாப்பாடு போடுகிறார்களே அதற்குப் பிரதியாகச் செய்வது என்ற நோக்கில் அல்ல இது.
அவர்கள் வேலையில், இன்ப துன்பத்தில் நாமும் பங்கேற்போம்
என்ற அன்பின் விளைவான பந்த பாசத்தால் செய்யப்படுகிற செயல்களே.
அன்பு மனதைப்
பண்படுத்துகிறது. அன்பு ஆக்க சக்தியான கிரியா ஊக்கியாக வாழ்வில்
செயல்படுகிறது. அன்பு ஒருவழி பாதை அல்ல. இருவழிப் பாதையாக அமையும். அன்பே வாழ்வை அர்த்தமுள்ள
வாழ்வாக்குகிறது.
13. பொறாமை கொள்ளாதே
எனும் தலைப்பில்,
பொறாமைப் படாதே. முன்மாதிரியாக்கிக் கொள்ள வேண்டும்.
உனக்குள் உனக்குப்
பிடித்த மனிதரை முன்மாதிரியாகக் கொள்.
அறிவுக்கு ஒருவர், ஆற்றலுக்கு ஒருவர், பொருளுக்கு ஒருவர், உழைப்புக்கு ஒருவர். என்று ஆக்கபூர்வமான சாதனையாளர்களை உனது முன்மாதிரிகளாகக் கொள். காரில் வந்த இறங்கி ஆடம்பரமாக ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் ஐஸ்கிரீம் சாப்பிட்டவரைப் பார்த்துப் பொறாமைப்படுவதில் பலனில்லை.
அந்த கார்
வாங்க, ஐஸ்கிரீம் சாப்பிட எவ்வளவு பொருள் செலவழிக்கிறார்.
அந்தப் பொருளை அடைய அவர் எப்படிச் சம்பாதித்தார். எவ்வளவு உழைக்கிறார்
என்று யோசி.
மந்திரத்தில்
மாங்காய் காய்க்காது.
வள்ளுவர் மிகச்சரியாக
‘அழுக்காறாமை’ அதிகாரத்தையும் அதையடுத்து வெஃகாமையையும்
அமைத்து வலியுறுத்துகிறார்.
”அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடஈன் பது” (குறள்,
165)
பொறாமை உடையவர்க்கு வேறு பகைவேண்டா. அஃது ஒன்றே போதும். பகைவர் தீங்கு செய்யத்
தவறினாலும் தவறாமல் கேட்டைத் தரும் தன்மையது.
பொறாமை குணத்தின்
பயனாக...
தான் ஒப்புநோக்கும் பதவியை, செல்வத்தை செல்வாக்கை அடைய, தன் வழியில் பயணப்படாமல் தன் இலக்கைத் தானே நிர்ணயிக்காமல் மற்றொருவர் தொட்ட உச்சியைத் தான் தொட முயலக் குறுக்குவழியை நாடும்போது வழுக்கல் ஆரம்பமாகிறது. தவறான வழிகளை, குறுக்கு வழிகளைத் தேடுகிற பொழுது விபரீதம் நிகழ்கிறது. சிறுவயதில் இருந்தே இம்மனப் போக்கு வளர்ந்து விடுகிற சூழலும் உள்ளது.
உழைக்காமல்
உயர முடியாது என்கிற உண்மையை உணரவேண்டும். தன் உழைப்பை நம்பாமல்
பிறரை ஏமாற்றி வஞ்சித்த அவர் பொருளை அபகரிப்பதும், குறுக்குவழி,
லஞ்சம் என்று நிரந்தமற்ற தீயவழிகளில் கருத்தைச் செலுத்திக் காரியம் ஆற்றும்
கேடற்ற குணத்தைக் களைய வேண்டும்.
காந்தி, நேத்தாஜி, விவேகானந்தர், நேரு, பாரதி, சர்.சிவி.இராமன், கணிதமேதை ராமானுஜர், ஜிடி.நாயுடு, ராஜாஜி, கக்கன், காமராசர், பெரியார், டாகடர் அப்துல்கலாம், டி.டி.கே., ரவிவர்மா, என்று பலர் பல துறைகளில் சாதனை செய்து தங்கள் தனிவாழ்விலும் குடும்ப வாழ்விலும் நிறைவான வாழ்வு வாழ்ந்துள்ளனர். இவர்களது வரலாறுகளைத் தேடிப் பிடித்துப் படித்து நமக்கு விருப்பமானவற்றைப் பின்பற்ற வேண்டும். நாம் சார்ந்துள்ள துறையைப் பற்றிய அறிவும், ஆர்வமும் பெருக வேண்டும்.
தேடுதல் உள்ளே
கனன்று கொண்டிருக்க வேண்டும்.
நம் மனதுக்கும்
வசதி வாய்ப்புக்கும் ஏற்றபடி, குடும்ப சூழலுக்கும் பொருளாதாரத்திற்கும்
ஏற்றபடி அதற்கான Role model ஐ தேர்ந்து கொள்ள வேண்டும்.
ஆசைக்கு அளவில்லை
திறமைக்கு
எல்லைகளில்லை
என்பதும் உண்மையே!
14. உடல் நலன்
காப்போம் எனும் தலைப்பில்
மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்வது போல, உடலை நலமாக வைத்துக் கொள்வதும் அவசியம். உடற்பயிற்சி, யோகம், உலாவல் என்று
கவனித்துக் கொள்ள வேண்டும்.
”நோய்நாடி
நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”
(குறள்,948)
நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து அதைத் தணிக்கும்
வழியையும் ஆராய்ந்து உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும்.
உடலும் மனமும்
ஒருசேர வளம் பெற வேண்டும்.
15. வள்ளுவர்
தரும் பரிசும் எச்சரிக்கையும்
மனதளவிலும் பொருளாதாரத்திலும், சூழலிலும் உணர்வு ரீதியிலும் நாம் வளமான வாழ்க்கை வாழவேண்டும். ஔவையார், ‘கொடிது! கொடிது! இளமையில் வறுமை கொடிது’ ஆனால் வறுமை எவ்வாறு ஏற்படுகிறது. ஏன் நேர்கிறது என்று யோசிக்க வேண்டாமா?அதற்கு வள்ளுவர்,
”இன்மையின்
இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னா
தது” (குறள், 1041)
என்ற குறள் வழி வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால் வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும் என்கிறார். பிறக்கும்போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. வெற்றுடம்பாகத் தான் ஜணிக்கிறோம். நாம் இறக்கும் போதும் எதையும் கொண்டு செல்வதில்லை. இடையில்தான் எல்லாம். ஆனால், இந்த வாழ்க்கையே இடையில்தான்.
”வெறும்
கைதான் என்று சொல்லாதே
விரல்கள் பத்தும் மூலதனம்”
பொருள் மட்டும் வாழ்க்கையாகி விடுவதில்லை. எனினும் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. என்பது தான் கசப்பான உண்மை.
நிறைவாக,
வாழ்வில் கலை,
இலக்கியங்கள் என்பன பொழுது போக்கிற்கும் மட்டுமல்ல. நம்மை வழி நடத்தவும் பயன்படும். சில சமயங்களில் வழி மறித்துத்
தடம் திருப்பவும் செய்துவிடும். அது எவ்வகை கலை, இலக்கிய வெளிப்பாடுகள் என்பதைப் பொறுத்து மாறும்.
இருவரிக் குறளில் அனுபவச் சாராகப் பிழிந்து தந்து
உலகத்துப் பொதுமறையாக ஒரு வழிகாட்டு இலக்கியம் படைக்க முடிந்ததை பல சமயம் உணர்ந்து
வியந்திருக்கிறேன் என்று நூலாசிரியர் தமது முன்னுரையில் பதிவிட்டுள்ளார்.
அவர் காட்டிய அளப்பரிய வாழ்க்கை முறையைப் பகுத்தும்
தொகுத்தும் பார்க்க முனையும் முயற்சி இப்புத்தகம். எனக்கு இசைவான பாதையில் வள்ளுவ வெளிச்சத்தில் கைவிளக்காகக் கொண்டிருக்கிறேன்
என்றும் பதிவிட்டுள்ளார் நம் நூலாசிரியர் அவர்கள்.
இந்நூல் இக்கால இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக
அமையும் என்று உறுதியாகக் கூறலாம்.
‘தொட்டுத் தொட்டுப் பார்த்தால் அது
வெறும் காகிதம், தொடர்ந்து படித்தால் அதுவே வெற்றியின் ஆயுதம்’ என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
Comments
Post a Comment