Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

பொற்றாமரை


          சங்க காலத்தில் எல்லா செல்வங்களையும் பெற்று உயர்ந்த நிலையில் வாழ்பவர்கள் ஒரு புறமும், ஒரு வேளை உணவுக்கும் வழியின்றி இரக்கும் அறிஞர்கள் மற்றொரு புறமுமாகக் காணும் நிலை எல்லாச் சமுதாயத்திலும் தொடர்ந்து காணப்படுகிறது. அக்காலத்தில் வறுமை நிலை பெரும்பாலும் கலைஞர்களிடம் காணப்படுகிறது. அவர்கள் தமக்கும் தம் சுற்றத்தினருக்கும் பொருள் வேண்டி, மன்னர்களையும் செல்வர்களையும் நாடி , அவர்களிடம் தம் கலைத்திறனைக் காட்டிப் பொருள் பெற்றுள்ளனர். அவர்களும் பெருமகிழ்வுடன் பொருள்களை வாரி வழங்கியுள்ளனர்.

பொற்றாமரை வழங்கும் மரபு

       புரவலர்கள், இரவலர்களுக்கு யானை, தேர், அணிகலன், ஊர் எனப் பலவகையான பொருள்களைப் பரிசிலாகக் கொடுத்துள்ளனர். இவற்றுள் பொற்றாமரைப் பூவினைக் கலைஞர்களுக்கு வழங்கும் மரபு பெரிதும் காணப்படுகிறது.

          நெட்டிமையார் என்ற புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் பரிசில் வழங்கும் இயல்பைச் சிறப்பிக்கப் பாணர்க்குத் தாமரை மலையும் தன்மையைப் பாடுகின்றார் (புற.நா.12). சோழன் நலங்கிள்ளியின் நாண்மகிழிருக்கையில், பாணர்கள் பொன்னாலின்ற தாமரைப் பூவினைப் பொற்கம்பியாலான நூலின்கண் சேர்த்து அலங்கரித்த மாலையை அரிய தலையில் பொலிவு பெறச் சூட்டிப் பெருமகிழ்வுடன் சூழ்ந்து இருக்கின்றனர்(புறநா.29). கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், பாணர்க்குப் பொற்றாமரை சூட்டியதால் கெடாத புகழை நிலைநாட்டுகின்றனான்(பதிற்.48).

         பொற்றாமரைப் பூக்கள், பகைவருடைய யானைகளைக் கொன்று, அவற்றின் ஓடைப் பொன்னைக் கொண்டு ஆக்கப்பெறும். இவ்வாறு செய்யப் பெற்ற வாடாத் தாமரையினைத் திருமுடிக்காரியின் முன்னோர், பாணர்க்கு வழங்கியுள்ளனர். (புறநா.126). பொன்னால் செய்யப்பெறும் பூவானது, வெள்ளி நாரால் தொடுக்கப் பெற்று வழங்கப்பெறுவதை,

                   ”ஒள்ளழல் புரிந்த தாமரை

                    வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே” (புறநா.11)

என்பர் பேய்மகள் இளவெயினி.

பொற்றாமரைப் புனைவு

    பொன்னாலாகிய தாமரைப் பூ, ‘பொலந் தாமரை’ (புறநா.361), ‘பைம்பொற்றாமரை’(பதிற்.48), ‘பசும்பொற்றாமரை’ (புறநா.141) எனச் சிறப்பிக்கப் பெறுகிறது. பொன்னை நெருப்பிலிட்டுச் சூடாக்கி அணியாகச் செய்யப்பெறும் தன்மையை ‘அழல்புரிந்த வடா தாமரை”(புறநா.29), ‘ஒள்ளழல் புரிந்த தாமரை’ (புறநா.11) என்பர்.

          இயற்கையாக, நீரில் பூக்கும் தாமரை வாடும் இயல்புடையது. பொன்னால் செய்யப்பெறும் இத்தாமரை வாடாத இயல்புடையது என்பதனால் இதனை, ‘வாடாத் தாமரை’(புறநா.126,319) என்பர். இயல்பாகப் பூத்து நிற்கும் தாமரையையே வண்டுகள் மொய்க்கும். பொன்னால் செய்யப்பெறும் தாமரையில் வண்டுகள் சூழா. இத்தன்மையை ‘ஆடுவண்டி மிராத்தாமரை’(புறநா.69, பெரும்பாண்.480) என நயம்படப் பாடுகின்றனர். பொன்னாலியன்ற தாமரை, நீர் நிலையில் பூவா; ஆதலின் ‘கேணி பூவா’ (புறநா.364) என விதந்து மொழிகின்றனர்.

பொற்குவளைப் பரிசில்

         பாணர், பொன்னாலாகிய குவளை மலரினையும் பரிசிலாகப் பெற்றுள்ளனர். வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றத்திற்கு, வல்வில்லோரி ‘பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை’ யினைப் பரிசிலாக வழங்கியுள்ளான். பொன்னால் செய்யப்பெற்ற இக்குவளை மலரை, வெள்ளி நாரில் தொடுத்துக் கண்ணியாக்கிக் கொடுத்துள்ளான்(புறநா.153).

நிறைவாக,

          சங்க காலத்தில் ஆடல், பாடல் இசையில் வல்ல கலைஞர்களுக்குப்  பொற்றாமரை வழங்கும் மரபினைக் கொண்டுள்ளனர். பொற்றாமரை பெறுவதன் மூலம் பாணர் முதலியோர் சிறந்த கலைஞர்கள் என்ற அங்கீகாரத்தைச் சமுதாயத்தில் பெறுகின்றனர். இன்றும் ‘பொற்கிழி’ போன்ற விருது  சிறந்த கலைஞர்களுக்கு அளிக்கப்பெறுவது இம்மரபின் தொடர்ச்சியைக் காட்டி நிற்கும்.

         


Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...