Skip to main content

மனஅமைதிக்குச் சில வழிகள் (புத்தக மதிப்புரை)

  மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள்   என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர்.   சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...

வில்லின் வரலாறு

 வில்லின் வரலாறு

        மிதிலையில் சனகன் மாளிகையில் சிவனால் கொடுக்கப்பட்ட வில் இருந்தது. அதை ஒடிக்க முயன்று தோல்வியைத் தழுவியர் பலர். ஆண்டுகள் சில கடந்தும் வில்லை ஒடித்து சீதையை மணப்பாரின்மையால் சனகன் பெருங்கவலையில் ஆழ்ந்தான். நாளும் அவன் வேதனை வளர்ந்து வந்தது. அந்நிலையில்தான் கோசிகன் இராம இலக்குவருடன் சனகன் மாளிகை அடைந்தான். இராமனைக் கண்டதும் சனகன் மனதில் சிறிது நம்பிக்கை தோன்றியது. இச்செய்தியை கம்பர் அழகாக வருணிக்கிறார்.

            ”போதக மனையவன் பொலிவு நோக்கியவ்

             வேதனை தருகின்ற வில்லை நோக்கித்தன்

             மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய

             கோதமன் காதலன் கூறன் மேயினான்

          தக்கன் உமையவளை இகழ்ந்தான். அதனை அறிந்த சிவன் சினம் கொண்டான். தன் கையில் வில்லை ஏந்தினான். வேள்விச்சாலையை நோக்கி விரைந்தான் தக்கன். வேள்விக்குத் துணையாக நின்ற தேவர்களின் பற்கள் பறந்தன. கைகள் அறுந்து வீழ்ந்தன. எஞ்சிய தேவர் அஞ்சி ஓடி ஒளிந்தனர். புகாத இடமெங்கும் சென்று புகுந்தனர். வேள்வித் தீ அளிந்தது. பின்னரே, முக்கண்ணன் முனிவு நீங்கியது, ஆயினும், தேவர்கள் வில்லினிடத்துக் கொண்ட அச்சத்தை நீக்கினாரல்லர். தேவர்களின் அச்சத்தைப் போக்க, சிவன் தன் கை வில்லை வாட் படையிற் சிறந்து விளங்கிய சனகன் முன்னோனுக்கு வழங்கினான்.

அவ்வில்தான் சீதையின் திருமணத்திற்கு அன்றுவரை தடையாக இருந்தது. ஆற்றல் வாய்ந்த அவ்வில்லை இராமன் நொய்தின் எடுத்து வளைத்து ஒடித்தான். சனகன் வேதனை தீர்ந்தது. தையலாள் சானகியை இராமன் மணம் செய்து கொண்டான். தயரத மன்னனும், மக்களும், படையினரும் அயோத்திக்குத் திரும்பி வரும் வழியில் மூவேழு தலைமுறை மன்னர் குலத்தைக் கருவறுத்த பரசுராமன் எதிர்ப்பட்டான். கையில் வில் ஒன்றைத் தாங்கி நின்ற பரசுராமன் வில்லின் வரலாற்றைக் கூறினான்.

தெய்வத் தச்சன் மயன் இரு விற்களை வடித்தான். சூரியனைப் போன்ற ஒளியுடனும், மேருமலை போன்ற வலியுடனும், தமக்கு ஈடில்லாதனவுமாக அவை விளங்கின. ஒன்றை உமை கேள்வன் உவந்து எடுத்தான். மற்றொன்றை நெடிய மால் கொண்டான். ஆளுக்கு ஒரு வில்லை எடுத்ததை அறிந்தனர் தேவர்கள். இரு விற்களின் ஆற்றல் சான்ற வில் எது என்பதை அறிய அவாக் கொண்டனர். விண்ணவர், தங்கள் கருத்தை தாமரைக் கிழவனிடம் வெளிப்படுத்தினர். தேவர் சிந்தனை சீரிது என உணர்ந்த வேரியங் கமலத்தோன் வில்லைக் காரணமாகக் கொண்டு யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவராம் இருவரிடையேயும் அமர் மூட்டினான்.

வில்லைத் தாங்கிய வித்தகர் இருவரும் ஏழுலகமும் அஞ்சுமாறு போரைத் தொடங்கினர். மூண்ட போருக்கு முடிவு காண இயலவில்லை.  கடும்போர் நடந்தது. திரிபுரம் எரித்த தேவன் வில் முறிந்தது. மூண்ட சினம் பெருகச் சிவன் போரைத் தொடர, விண்ணவர் தலையிட்டு விலக்கினர். நெற்றிக்கண் கடவுள் தன் வில்லை ஆயிரம் கண்ணோனிடம் கொடுத்தான். கரியமால் கையில் தவத்தில் சிறந்து விளங்கிய இரிசிக முனிவனிடம் சென்றது. இரிசிகன் சமதக்கினிக்குக் கொடுக்க, அவ்வில் பரசுராமனை அடைந்தது. விண்ணவர் கோன் உமையொரு பாகனிடம் பெற்ற வில்லைச் சனகனுக்கு அளித்தான். அவ்வில்லைத் தான் மிதிலையில் இராமன் ஒடித்து சீதையைக் கைப்பிடித்தான்.

இருபெருங் கடவுளரிடம் இருந்த விற்கள் இரண்டில் வரலாற்றை இரு வேறிடங்களில் சுருக்கமாகவே கம்பர் கூறியுள்ளார். சுருங்கக் கூறப்பட்ட வரலாறு காப்பிய தலைவனுடைய பண்பை வெளிப்படுத்தப் போவதாக உள்ளது. காப்பியத் தலைவன் இராமனுடைய வீரம் வெளிப்படும் முதலிடம் தாடகை வதமாகும் என்பதை முன்னர் கண்டோம். வேள்விக்குத் தடையாக இருந்த அரக்கர்களைக் கொன்று ஒழித்ததாலும் அறிந்தோம். கை வண்ணத்தைக் காட்டிய கம்பர் கால் வண்ணம் காட்டத் தவறவில்லை. விற்களின் வரலாற்றாலும் இராமனுடைய வீரத்தைப் புலப்படுத்துகிறார்.

வில்லின் பெருமையை அறிந்தால் தான் அவ்வில்லை ஆண்ட ஆடவன் சிறப்பும் வெளிப்படும். சிவன் தந்த வில்லின் சிறப்பை முற்கூறி, அவ்வில் இராமனால் இரிந்ததையையும் விளக்கினார் கம்பர். பின், பரசுராமன் வாயிலாக மற்றொரு வில்லின் ஆற்றலைக் காட்டி, அவ்வில்லையும் இராமன் நொய்தின் வாங்கி வளைத்து நாணேற்றிய திறனையும் செப்பினான். செப்பருங் குணத்து இராமன் தோளாற்றலை விளக்கும் பொருட்டே விற்களின் வரலாறு கூறப்பட்டது.

இவ்வரலாற்றால் மற்றொரு செய்தியையும் கம்பநாடன் காட்டுவதை எளிதில் உணரலாம். உரிய பொருள் உரியவனிடம் வந்து சேர்ந்ததை நயமாகக் கூறியுள்ளார் கம்பர். இரண்டு விற்களில், சிவன் கை வில் மிதிலையில் இராமனால் ஒடிக்கப்பட்டது. திருமால் தாங்கிய வில், ‘எங்கு சுற்றியும் அரங்கனைச் சேவி’ என்பது போல இராமனை வந்தடைந்தது. இராமன் திருமாலின் அவதாரம் என்பதைக் குறிப்பாக உணர்த்திச் செல்லும் இடங்களும், வெளிப்படையாக் கூறும் இடங்களும் இராமாயணத்தில் காணப்படுகின்றன. இவ்விடத்தில் நுட்பமாக உணர்த்தி செல்லும் திறத்தினைக் கண்டு உவக்கின்றோம்.

 

          

Comments

Popular posts from this blog