Skip to main content

புத்தாண்டு வாழ்த்துகள்!

 அன்பில் தொடங்கி ஆனந்தத்தில் முடியட்டும்! புன்னகையில் தொடங்கி மகிழ்ச்சியில் முடியட்டும்! சிந்தனையில் தொடங்கி செயலில் முடியட்டும்! துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பிறக்கட்டும்!!! அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!!

மாவலி மன்னன்

 

மாவலி மன்னன் 

          இராமாயணத்தில் நான்காவதாக எடுத்தாளப்படும் கிளைக் கதை. கோசிகனுடன் தொடர்ந்து சென்ற இராம இலக்குவர் வளம் கொழிக்கும் சோலை ஒன்றைக் கண்டார். உள்ளத்தைக் கவர்ந்த அச்சோலையின் தன்மையினைப் பற்றி அறிய விரும்பினர் இருவரும். கோசிகன் தான் வேள்வி செய்வதற்குத் தேர்ந்தெடுத்த இடம். காசிப முனிவன் விரதம் மேற்கொண்டு சித்திப் பெற்ற இடம். எனவே சித்தாச்சிரமம் என்றழைக்கப்பட்டது. அதன் சிறப்பினைக் கோசிகன் கூறினான்.

மாவலி மன்னன் 

          கொண்டானிற் சிறந்த தெய்வமில்லை. என்று எண்ணும் குலமகள் சிந்தைபோல் தூய்மை நிறைந்தது சோலை. அச்சோலையில் திருமால் நூறு ஊழிக்காலம் இருந்து தவம் செய்தான்.

          திருமால் சோலையிலிருந்து தவஞ்செய்து கொண்டிருந்த காலத்தில் மாவலி என்னும் பெயருடைய அசுரர்க்கு அரசன் வாழ்ந்தான். அவ்வசுரன் தன் ஆற்றலால் வையகத்தையும் வானகத்தையும் வெற்றி கொண்டு கைப்பற்றிக் கொண்டான். மாவலி தெளிந்த அறிவுடையவன். வானவரும் செய்ய முடியாப் பெரு வேள்வி செய்ய எண்ணம் கொண்டான். வேள்வி செய்து வையகத்துப் பொருள் யாவையும் அந்தணர்க்கு அளிக்க உறுதி கொண்டான்.

          மாவலி செய்ய எண்ணியிருந்த வேள்வியைப் பற்றி வானவர் அறிந்தார். அச்சம் கொண்டார். மாவலியால் தங்களுக்கு இன்னல் விளையுமோ என்று ஐயுற்றார். சோலையில் தவஞ்செய்து கொண்டிருந்த மாயனைச் சரண் அடைந்தார். தங்களை மாவலியிடமிருந்து காக்குமாறு வேண்டினர். அஞ்சி அபயம் வேண்டிய தேவர்களுக்குத் திருமால் அருள் செய்தான். தேவர்களுக்கு அருள் செய்ய திருவுளம் கொண்ட திருமால் காசிப முனிவருக்கு மகனாகத் தோன்றினான். குறுகிய வடிவமுடன் தோன்றினான்.

          மெய்யுணர்வுடையாரே அறியத்தக்க திருமால், சிறிய வடிவுடன் மாவலி வேள்விசெய்து கொண்டிருந்த இடத்தை அடைந்தான். வாமனனாக வந்த திருமாலைக் கண்ட மாவலி உள்ளம் உவந்து வரவேற்றான். ‘உன்னிலும் சிறந்த அந்தணர் இல்லை. உன்னைக் காணப் பெற்றதால் என்னிலும் சிறந்த பேறு பெற்றவர் உலகில் எவருமிலர்’ என்று புகழ்ந்துரைத்தான் மாவலி. புகழுரை கேட்ட வாமனன், ‘உன்னிடம் வந்து இரப்போர்க்கு அவர்கள் எண்ணுவதை விட மிகுதியாகக் கொடுப்பவனே! பெருந்தகையோனே! உன்னிடம் ஒன்றை வேண்டி வந்தவரே சிறப்புடையோர், மற்றவர் சிறப்பற்றவரேயாவர்’. என்று மாவலியின் கொடைச் சிறப்பைப் பாராட்டினான்.

வாமனன் புகழுரை கேட்டு மயங்கிய மாவலி வாமனன் வேண்டும் பொருளைக் கேட்டுப் பெறுமாறு கூறினான். தன் கால் அடியால் மூன்றடி மண் வேண்டும் என்று இரந்தான் வாமனன். உடனே தந்ததாக வாக்களித்தான் மாவலி. கேட்டதைக் கொடுப்பதாக மாவலி உறுதி கூறியதைக் கேட்டதும் அருகிலிருந்த அரசகுரு சுக்கிரன் மாவலியின் கொடையைத் தடுத்தான். ‘உன் முன்னர்க் குறளனாய் நிற்பவனை நீ அறிந்தலை. அவன் கொண்ட தோற்றம் பொய்யானது. அண்டமும், அகண்டமும் மேனாள் உண்டவனே இவ்வடிவு கொண்டு வந்துள்ளான். இது வஞ்சகச் செயல். அதனை நீ உணராது வரம் கொடுத்து விட்டாயே’ என்று  உண்மையை மாவலிக்கு உணர்த்தினான்.

சுக்கிராச்சாரியார் சுட்டிக் காட்டிய பின்னரும் மாவலி மனம் கலங்கவில்லை. கொடுத்த வரத்தை இல்லை என்று மறுக்கவுமில்லை. மாறாகத் தன் குருவிற்கே அறிவுரை கூறினான். என்னிடம் இரந்து வேண்டிய நாராயணன் கை எனில் அது நான் பெற்ற பெரும் பேறாகும். தானம் அளிப்பவர் தானம் வேண்டி நிற்பவை உறவினர் என்றோ பகைவர் என்றோ பிரித்துக் காண்பதில்லை. மேலோர் கைப்பொருள் இருக்கும் காலத்தில் பிறர்க்குக் கொடுத்து இசை வளர்ப்பர். மறுமையில் வீடுபேறடைவர். அவ்வாறு கொடுப்பார்க்குக் கொடும்பகை கொடாமையேயாகும். ஈயாமையைச் சான்றோர் விலக்கினர்.

”எடுத்தொருவ ருக்கொருவ ரீவதனின் முன்னம்

தடுப்பது நினக்கழகி தோதகவில் வெள்ளி

கொடுப்பது விலக்குகொடி யோர்தமது சுற்றம்

உடுப்பதுவு முண்பதுவு மின்றியொழி யுங்காண்”

தன் உள்ளக் கருத்தினை மாவலி சுக்கிரனுக்குக் கூறிபின் வாமனனை  நோக்கி, மூன்றடி மண்ணைக் காலால் அளந்து கொள்க என்றனன். நெடியமால் குறிய கையில் நீர் வார்த்தான் மாவலி.

          நீர் வார்க்கப்பட்டதும் வாமனன் நெடிது உயர்ந்தான். கண்டோர் வியக்க முண்ணும் விண்ணும் தொட நின்றான். உயர்ந்தார்க்கு உதவிய உதவி போல் உயர்ந்து நின்றான். ஊன்றிய கால் மண்ணுலகு எங்கணும் பரந்தது. விண்ணுலகு சென்ற கால் இடம் பெறாது திரும்பியது. மூன்றாம் அடிக்கு நிலத்திலும் வானிலும் இடமில்லை. எனவே, வரம் தந்த மாவலியின் தலையை மூன்றாம் அடிக்கு இலக்காக்கி அவனை பாதாளத்தில் அழுத்தி வானவரைக் காத்தான். இந்திரனுக்கு உரிய உலகை மாவலியிடமிருந்து பெற்று மீண்டும் இந்திரனுக்கு அளித்தான். பின் பாற்கடலை அடைந்தான் பரந்தாமன். அப்பரந்தாமன் இருந்து தவம் செய்த சித்தச்சிரமத்தைத் தன் வேள்விக்கு ஏற்ற இடமாகக் கொண்டான் கோசிகன். அதன் வரலாற்றையும் கூறி முடித்தான்.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...