Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

நாண்மகிழிருக்கை

 

நாண்மகிழிருக்கை

நாண்மகிழிருக்கை என்பதற்குத் தமிழ் அகராதி அரசனது தர்பார், நாளோலக்கம் என்று பொருள் கூறுகின்றது. இது சங்க இலக்கியங்களில் நாளவை, நாளிக்கை, கலிமகிழ், தேர்விசிருக்கை, நறவு மகிழிருக்கை என்று கூறப்பட்டுள்ளது. நாண்மகிழிருக்கையை  உ.வே.சா ”நாண்மகிழிருக்கை – காலையில் யாவரும் தன்னைக் காணும்படி காட்சிக்கு எளியனாய் வீற்றிருக்கை, இது நாளவையெனவும் கூறப்படும்” என்று விளக்குகிறார். நாள்தோறும் மகிழ்ந்திருக்கக் கூடிய இருக்கை நாண்மகிழிருக்கை எனப்படும். இதில் பெருநில மன்னர்கள், குறுநில மன்னர்கள் பெருஞ்செல்வர்கள் முதலியோர் தலைமை பெறுகின்றனர்.

நாண்மகிழிருக்கை

          நாண்மகிழிருக்கை நாள்தோறும் எந்த நேரத்தில் நடைபெற்றது என்பது ஆராயப்பட வேண்டியது. இறையனார் களவியல் உரைக்காரர் தலைமகன் ஒழுகலாற்றைக் கூறும் பொழுது, தலைமகனால் தலைநின்று ஒழுகப்படுவன அறம், பொருள், காமம் என மூன்று, இம்மூன்றினையும் ஒரு பகலை மூன்று கூறிட்டு, முதற்கட் பத்து நாளிகையும் அறத்தோடு பட்டுச் செல்லும். இடையன பத்து நாளிகையும் அருத்தத்தொடு பட்டுச் செல்லும். கடையன பத்து நாளிகையும் காமத்தொடு பட்டுச் செல்லும்.” என்பர். அருத்தம் என்பது இரவலர்க்கு ஈதல், இறையும் முறையும் கேட்டல் ஆகும். இடையன பத்து நாளிகையானது பத்து மணி முதல் இரண்டு மணி வரையிலான இடைப்பட்ட  காலம் ஆகும். ஒரு நாளுள் முதலன பத்து நாளிகையும் அறத்தின் வழியொழுகிப் பின்பத்து நாழிகையும் இறையின் முறைமை கேட்டுச் செய்த பொருளைப் பரிசிலர்க்குக் கொடுத்து மகிழ்ந்திருத்தலால் கடும்பகல் தேர்வீசிருக்கை யென்றார் என்று உறுதிப்படுத்துவர். இவற்றால் நாண்மகிழிருக்கை காலை, பகல், இரவு என்ற வேறுபாடின்றி அவரவர் விருப்பத்திற்கேற்ப நடைபெற்றுள்ளது என்பது புலனாகும்.

நாளிமகிருக்கை நடைபெறும் இடங்கள்

        நாண்மகிழிருக்கை பெரும்பாலும் அரசனது நாளோலக்க மண்டபத்தின் கண்ணே நடைபெறும். மேலும் பாசறையிலும் மகிழ்ந்திருத்தலைக் கபிலர் பாடுகின்றார். செல்வகடுங்கோ வாழியாதன், ஒளி பொருந்திய வாட்படையையும், வன்மைமிக்க களிறுகளையும் உடைய புலால் நாற்றம் பொருந்திய பாசறைக்கண் ஆரவாரமிக்க திருவோலக்கத்தில் வீற்றிருக்கின்றான். அங்கு பாடினி, முழங்கும் முழவின் தாளத்திற்கேற்ப வெறுங் கையை அசைத்து அவனது வேற்படையைப் பாடுகின்றாள்.

          ஆய் என்னும் மன்னன் மன்றத்தின்கண் வந்த பரிசிலர்க்குக் கன்றுடன் யானைகளை அணியணியாகக் கொடுக்கின்றான்(புறநா.135). இங்கு ஆய் மன்றத்தின் கண் வீற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

          தலைவன் ஒருவன் வெள்ளாட்டுப் பிழுக்கைகள் பரந்துகிடக்கின்ற பந்தர் கீழ் வீற்றிருக்கின்றான். இடையன் சிறிய சுடருடைய விளக்கைக் கொளுத்தி நிற்க, அவனைப் பாணர்கள் சூழ்ந்து நிற்கின்றனர். (புறநா.324)

          இவற்றால் நாண்மகிழிருக்கை அரசனது நாளோலக்க மண்டபம், பாசறை, மன்றம், ஊர், பந்தல் போன்ற இடங்களில் நடந்தமை புலனாகின்றது.

நடைமுறை வாழ்க்கையில் நாண்மகிழிருக்கை

          அரசர்கள், குறுநில மன்னர்கள், செல்வந்தர்கள், தலைவர்கள் ஆகியோரது  நடைமுறை வாழ்வில் நாண்மிகிழிருக்கை சிறப்பிடம் பெறுகிறது. அவர்கள் நாள்தோறும் கள்ளுண்டு மகிழ்ந்து இரவலர்க்குக் கள்ளும் பரிசுப் பொருட்களும் அளித்து மகிழ்ந்திருக்கும் களமாக நாண்மிகிழிருக்கை விளங்குகின்றது.கலைஞர்களான பாணர், பொருநர், விறலியர், புரவலர்களிடம் சென்று பரிசில் பெறுவதற்குரிய களமாகவும் நாண்மகிழிருக்கை உள்ளது.

          அக்கால நடைமுறை வாழ்வில் அரசர்களும், குறுநில மன்னர்களும், தலைவர்களும் இரவலர்க்கு வரையாது வழங்குவதைப் பெருமையாகக் கருதியுள்ளனர். அவர்களது வாழ்வில் தினமுமோ அல்லது பல காலமுமோ நடைபெற்றமையால் புலவர்கள் அவர்களைச் சிறப்பிக்க, நாண்மகிழிருக்கையின் சிறப்பை எடுத்தியம்புகின்றனர். நாண்மகிழிருக்கையின் சிறப்பை எடுத்தியம்புகின்றனர். நாண்மகிழிருக்கை அவர்களது ஈகை, புகழ், கொடை, செல்வச் சிறப்பு முதலான பண்பு நலன்களையெல்லாம் குறிக்கும் குறியீடாக விளங்குகின்றது.

          இந்நாண்மகிழிருக்கையை இனக்குழு மக்கள் வாழ்க்கையின் எச்சமாகக் கருதுவர். ”இனக்குழு மக்கள் உணவு சேகரித்தல் நிலையிலிருந்து உணவு உற்பத்தி நிலைக்கு மாறிய போது பகைக் குழுவை எதிர்த்துத் தற்காத்துக் கொள்ளத் திரண்டனர். அப்போது அவர்கள் மது அருந்தினர். அதனை இருக்கை, நாளிருக்கை, மகிழ், மகிழிருக்கை, நறவு மகிழிருக்கை, நாள் மகிழிருக்கை என்றனர்” என்பர்.

நிறைவாக,

          சங்க காலத்தில் மன்னர்கள், குறுநில மன்னர்கள், பெருஞ் செல்வர்கள், தலைவர்கள் ஆகியோரது வாழ்வில் நாண்மிகிழிருக்கை சிறப்பிடம் பெற்றுள்ளது. அவர்கள் நாள்தோறும் கள்ளுண்டு, இரவலர்க்குக் கள்ளும், பரிசிலும் இந்நாண்மகிழிருக்கையில் வழங்கியுள்ளனர். நாண்மகிழிருக்கை இனக்குழு மக்கள் வாழ்வில் எச்சமாகவும் வளர்ச்சியாகவும் தெரிகிறது. நடைமறை வாழ்வில் புரவலர்கள் பொழுது போக்கி மகிழும் களமாகவும், இரவலர்கள் பரிசில் களமாகவும் உள்ளது.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...