Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

வல்வில் ஓரி

 

வல்வில் ஓரி



          நாமக்கல்லுக்கு அருகிலுள்ள கொல்லிமலை தன்னாட்டு அதிபனை நாடிவரும் விறலியர், கூத்தர், பாணர் புலவர்களை பல்வகைப் பூக்களின் மணம் வீச மகிழ்ச்சியுடன் வரவேற்கும் எழில் கொஞ்சும் மலையாகும்.

     இயற்கையெழில் கொஞ்சும் இன்பமலையாக அது திகழ்ந்ததோடு மற்றொரு வகையிலும் அது தன்னிகரற்று விளங்கியது. காண்பார் கண்களையும் கருத்தினையும் ஒரு சேர ஈர்த்து உவக்க வைக்கும் ஒரு அழகுப் பாவையும் அந்த மலையில் இருந்தது. ‘கொல்லிப்பாவை’ என்று அனைவராலும் போற்றப்பட்ட ‘தெய்வம் எழுதிய அந்த வினைமாண் பாவை’ சங்கப் புலவர் பரணரால்,

          ”கால்பொருது இடிப்பினும் கதழுழை கடுகினும்

           உருமுடன்று எறியினும் ஊறுபல தோன்றினும்

           பெருநிலங் கிளறினும் திருநல உருவின்

           மாயா வியற்கைப் பாவை”

என்று போற்றிப் பாடப்பட்ட பெருமை கொண்டது.

          இத்தகு கொல்லிமலையையும் அதனை அடுத்துள்ள நாட்டுப் பகுதியையும் அறநெறி பிறழாது அரசு செய்து வந்த குறுநில மன்னனே ஓரி என்பவன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகப் போற்றப்படும் பெருங்கொடையாளன். அருளாளன், அற்புதத் திறனாளன்.

      ஆண்மையிலும் ஆற்றலிலும் தன்னிகரற்று விளங்கிய இவன் வில்லாற்றலிலும் இணையற்றவனாக இருந்தான். ஒரே அம்பால் பலவற்றையும் ஊடுருவிச் செல்லும் வண்ணம் எய்யும் ஆற்றல் இவனிடம் இருந்தது. ஓரியின் இத்தகு வில்லாற்றலை,

          ”வேழம் வீழ்த்த விழுத்தொடை பகழி

           பேழிவா யுழுவையைப் பெரும் பிறி துறீஇப்

           புழற்றலை புகர்க்கலை யூருட்டி யுரற்றலைக்

           கேழற்பன்றி வீழ வயலது

           ஆழற் புற்றத் துடும்பிற் செற்றும்

            வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்

            புகழ் சால் சிறப்பி னம்புமிகத் திளைக்கும்

            கொலைவன் யார்கொலோ! (புறம் -152)

‘ஒரு யானை, ஒரு புலி, ஒரு புள்ளிமான், ஒரு காட்டுப்பன்றி, ஆகியவற்றைத் துளைத்து வீழ்த்திவிட்ட நிலையில் ஒரு அம்பு புற்றுக்கு அருகிலிருந்த உடும்பின் உடலில் செருகி இருந்த்தைக் காண நேர்ந்த ஒரு பாணர் கூட்டம் இப்படி ஒரே அம்பால் ஐந்து உயிர்களையும் கொல்லும் ஆற்றல் படைத்தவன் வல்வில் ஓரியோ யாரோ? எனும் பொருள் கொண்ட  வன்பரணின் புறநானூற்றுப் பாடலின் மூலம் அறியலாம். அத்துடன்,

         ”வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்திற்

         றானுயிர் செகுத்த மானிணப் புழுக்கொடு

         ஆனுருக் கன்ன வேரியை நல்கித்

         தன்மலை பிறந்த காவினன் பொன்

         பன்மணிக் குவையொடும் விரைஇக்

         கொண்மெனச்

         சுரத்திடை நல்கி யோனே விடர்ச்சிமை

         ஓங்கிருங் கொல்லிப் பொருநன்

         ஓம்பா வீகை விறல்வெய் யோனே” (புறம்- 152)

என்ற தன்னைப் போற்றிக் கூறவந்த புகழுரைகளையும் பாணர்களைச் சொல்லவிடாது அவர்களுக்கு ஆவின் நெய்யை உருக்கினாற் போன்ற மதுவையும், மலையின் கண் விளைந்த மாசறு பொருள்களையும், பொன்னையும் அள்ளித் தருகின்ற ஒப்பிலா கொடையாளி – எனும் பொருள்கொடை ஓரியின் ஈகைத் திறம் பற்றிய செய்தியை அதே புறநானூற்றுப் பாடல் போற்றுவதை உணரலாம்.

        ”மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்

         இழையணி யானை இரப்போர்க் கீயும்

        சுடர்விடு பசும்பூண் சூர்ப்பமை முன்கை

        எடுபோர் ஆனா ஆத னோரி

        மாரி வண்கொடை காணிய நன்றும்

         சென்றது மன்னெங் கண்ணுளங் கடும்பே

        பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை

        வானார்த் தொடுத்த கண்ணியும் கலனும்

        யானை இனத்தொடு பெற்றனர், நீங்கிப்

        பசிய ராகல் மாறுகொள் விசிப்பிணிக்

        கூடுகொ ளின்னியம் கறங்க

        ஆடலும் ஒல்லார்தம் பாடலும் மறந்தே” (புறம் – 153)

என்கிற மற்றொரு புறநானூற்று வன்பரணர் பாடலும் வல்வில் ஓரியின் நல்லருங் கொடையைப் பற்றி புல்லரிக்கப் புகழ்கிறது. ஓரியிடம் தடையிலா நிலையில் கொடையெனப் பெற்ற பெரும் பொருளால் இரவலர்கள் கானை மறந்த களிமயிலைப் போல தன்குலத் தொழிலையே மறந்தவராய் மகிழ்ச்சியில் மிதந்தார்களாம்.

          ஒரு சமயம் கழைதின் யானையார் என்னும் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர் ஓரியை மிகுந்த விருப்பத்துடன் சென்று கண்டார். புலவரல்லவா? உடனே அவர் நாக்கில் பாடல் சுரந்தது. இப்பாடல் இமிழ்கடல் உலகில் அமிழ்த்தெனப் போற்றத் தக்கது.

          ” ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன்எதிர்

          ஈயேன் என்றல் அதினினும் இழிந்தன்று

          கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்

          கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

         தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்

         உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே

         ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்

         சேறொடு பட்ட சிறுமைத்து ஆயினும்

         உண்ணீர் மருங்கின் அதர்பல ஆயினும்

         புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை

         உள்ளிச்  சென்றோர் பழியவர், அதனாற்

         புலவேன் – வாழியர் ஓரி விசும்பின்

         கருவி வானம் போல்

         வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே” (புறம் – 204)

      ‘ஒன்றைத் தா என இரத்தல் இழிந்தது. ஆனால் அவ்வாறு இரந்தோர்க்கு ஈயேன் என்று மறுத்தலே அதனினும் இழிவுடையதாகும். ‘இந்தா... பெற்றுக் கொள் என்று தானே விரும்பிக் கொடுப்பத உயர்ந்தது. ஆனால் அவ்வாறு வலிய கொடுக்கப்பட்டாலும் கொள்ளமாட்டான்’ என்பது அதனினும் மிக உயர்ந்தது. நீர்தாகம் கொண்டவர்கள் கடல் நீரை அருந்தார். பசுக்களும் விலங்குகளும் கலங்கிய சேற்று நீர் என்றாலும் அத்தாழ்ந்த இடத்திற்குத் தேடிச் செல்லும் வழிகள் பலவாக இருக்கும்.

இரவலர்கள் பரிசில் பெறாதபோது தாம் நாடிவந்தவரைப் பழித்துப் பேசார். பதிலாக தாம் புறப்பட்ட நேரத்தையும் அப்போது கண்ட பட்சி சகுனத்தையுமே பழிப்பர். அதனால் நீ எனக்கு இல்லை என்றனையேனும் உன்னை நான் வெறுக்கமாட்டேன். மாரிபோல் வழங்கும் ஓரியே! நீ வாழி!  என்ற அரிய நீதியைக் கொண்ட இப்பாடல் தமிழ்ச் சான்றோர் அனைவராலும் அமிழ்தாகச் சுவைக்கப் படுவதொன்றாகும். ஓரியின் வள்ளன்மையால் வரமாகப் பெற்ற இவ்வரிய அறவுரை செறிந் பாடலை அப்படிச் சுவைக்கும்போது அந்த தமிழ் நெஞ்சில் வல்வில் ஓரியின் எண்ணம் நன்றியுறச் சுரக்க வேண்டும்.

இயற்கை வளத்தாலும் செந்நாப் புலவர்களின் பல்நாப் பாடலகளாலும் புகழ்பெற்ற கொல்லிமலை முடிமன்னன் புகழ்பெற்ற கொல்லிமலை முடிமன்னன் ஒருவனின் ஆசைக்கு இலக்காகியது. சேரவேந்தன் பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லிமலையைக் கைப்பற்றி தன்னாட்சிக்கு உட்பட்ட பகுதியாக்கி கொள்ள வேண்டும் என்று தீவிரமாக எண்ணமிட்டான். அவனது நாட்டாசை முன் ஓரியின் கொடைத்திறம் ஒப்பற்றதாகத் தோன்றவில்லை. உயிர்ப்பற்றதாகவிட்டது.

காலம் கருதி காத்திருந்த சேரன், தன்னிடம் பழம் நழுவி பாலில் விழுவதுபோல் வலிய உதவி கோரி மலையமான் திருமுடிக்காரி வந்தபோது தன் காரியத்தை அந்தக் காரியை வைத்தே சாதித்துக் கொள்ள முடிவெடுத்தான்.

சேரனால் தனக்கும் ஆக வேண்டியது இருக்கவே காரியும் அதற்கு உடன்பட்டான்.

காரியின் தலைமையில் பெரும்படை ஓரியின் நாட்டின்மேல் சென்றது. நேர் காரணம் ஏதுமின்றி காரி தன்மேல் படையெடுத்து வருவதை அறிந்த ஓரி சிங்கம் எனச் சீறி எழுந்தான்.

பெரும்போர் நடந்தது. யானை முன் சிங்கம் என்று கூறும்படி சேரனின் பெரும்படையுடன் ஓரியின் சிறுபடை சிலிர்த்துப் போரிட்டது. ஆனால்,

பரந்து நின்ற படையின் நடுவிலே விற்போர் செய்துகொண்டிருந்த ஓரியின் மார்பிலே ஓர் கூர் அம்பு பாய்ந்தது. அடுத்தகணம் ஓரியின் உயிர் பிரிந்தது.

வெற்றிக் கொண்ட காரி ஓரியின் நாட்டை சேரனிடம் ஒப்படைத்து விட்ட செய்தியை,

”கழல்தொடிக் காரி

 செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்

 ஓரிக் கொன்று சேரலர்க் கீத்த

செவ்வேர்ப பலவின் பயங்கெழு கொல்லி”

என்ற பாடல் வரிகள் பரிதாபமாகப் பறைசாற்றுகின்றன.

         எல்லையில் புகழ் வல்வில் ஓரியின் கொடைத்திறம் இன்றும் கொல்லிமலைக் காற்றில் குளிர்ச்சியாக வீசிக் கொண்டு இருக்கிறது.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...