Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

விருந்து - அன்றும் இன்றும்

                                                     விருந்து - அன்றும் இன்றும்

        பண்பாட்டைப் போற்றி வாழ்ந்தவர் பழந்தமிழர். இன்றும் அப்பண்பாட்டின் மரபுநிலை தொடர்கிறது. அவர்கள் போற்றிய பண்புகளில் தலையாய பண்பு விருந்தோம்பல். விருந்து என்றால் புதுமை, புதியவர் என்று பொருள். ‘விருந்தே புதுமை’ என்பர் தொல்காப்பியர். இன்று உற்றார், உறவினர், நண்பர்களையும் விருந்து என்கிறோம். ஆயின், பழங்காலத்தில் முன் அறியாதவர்களாய் வீடு தேடி வருவோரை விருந்தினர் எனப் பெற்றனர். அக்கால மக்கள் அவர்களை அகமும் முகமும் மலர வரவேற்று விருந்தோம்பினர்.

          பண்டமாற்றுமுறை வழக்கிலிருந்த அக்காலத்தில் போக்குவரத்து வசதிகளும் இல்லாத சூழ்நிலை நிலவியது. எனவே இரவலர்கள் மட்டுமின்றி ஏனையோரும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கால்நடையாகவே நடந்து செல்ல வேண்டிருந்தது. உணவு விடுதிகளும் இல்லாத காரணத்தினால் உண்டிக்கும் உறையுளுக்கும் அனைவரும் செல்லும் ஊர்களையே நம்ப வேண்டியிருந்தது. ஆகவே புதிதாக வருவோர்க்குப் பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையான் விருந்தோம்பும் பண்பாடு தமிழகத்து இல்லங்களில் உருவாயிற்று.

இப்பண்பாடு தொல்காப்பயிர் காலத்திலேயே போற்றப் பெற்றது என்பதை,

”புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்

 பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்

வேளா ணெதிரும் விருந்தின் கண்ணும்” (தொல்.களவியல் – 17)

என்று களவியலிலும்,

          ”விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்” (தொல்.கற்பியல்-5)

என்று கற்பியலிலும் இடம்பெற்றுள்ள நூற்பாக்களால் அறியலாம்.

விருந்தோம்பும் முறை

          விருந்தோம்புவார்க்கு வேண்டிய இன்றியமையாப் பண்புகள் அகமலர்ச்சி, முகமலர்ச்சி, இன்சொல் ஆகியன. சிறுகுடி கிழான் பண்ணன் இல்லம் விருந்தோம்பும் பண்புச் சிறப்பின் காரணமாக, பசிப்பிணி மருத்துவன் இல்லம் என்று புகழப்பெற்றது.

          விருந்தினரைப் பேணும் முறையினை,

          ”விருந்தினனாக ஒருவன்வந் தெதிரின்

              வியத்தல்நல் மொழியினி துரைத்தல்

        திருந்துற நோக்கல் வருகென உரைத்தல்

              எழுதல்முன் மகிழ்வன செப்பல்

        பொருந்துமற் றவன்றன் அருகுற இருத்தல்

              போமெனின் பின்செல்வ தாதல்

         புரிந்துதல் முகமன் வழங்கல் இவ்ஒன்பான்

                 ஒழுக்கமும் வழிபடும் பண்பே”

என்ற விவேக சிந்தாமணிப் பாடல் விருந்தோம்பும் பண்புகளை விளக்கிக் காட்டுகிறது.

விருந்தோம்புதலின் பயன்

        இல்லறத்தின் சீரிய பண்பாகத் திகழ்ந்த விருந்தோம்பலுக்குத் தனியொரு அதிகாரம் அமைத்தப் பெருமை வள்ளுவரைச் சாரும். விருந்தோம்பலை வேள்வி என்று குறிப்பிடும் வள்ளுவர்,

          வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

          பருவந்து பாழ்படுதல் இன்று” (குறள் -83)

என்று விருந்தோம்புதலின் பயனை எடுத்துரைப்பர்.

          விருந்தோம்புபவரின் செல்வம் நல்வழிப் படுதலால் மகிழ்ச்சியும் விளையும். அவன் செல்வமும் பெருகும்.

    தொன்றுதொட்டு நிகழ்ந்து வரும் விருந்தோம்பல் பண்பாடு தமிழரின் அடிப்படைப் பண்பாடு என்றும், தொடர்ந்து வரும் பண்பாடு எனலாம். பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம், வேலையின்மை போன்ற நெருக்கடி நிலைகள் ஏற்பட்டபோதும் இன்றும் நம் மக்கள் விருந்து போற்றுவதைத் தவறாது தம் கடமையாகச் செய்து வருகின்றனர். நல்லவர் பலரைக் காண்பதற்கும் அவர் சொல் கேட்பதற்கும் அவரோடு பழகுவதற்கும் விரும்தோம்பல் வழி வகுக்கிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாப் பண்பான அன்பையும் அறிவையும் வளர்க்கும் வாயிலாக விருந்தோம்பற் பண்பாடு விளங்குகிறது.

  

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...