Skip to main content

மனஅமைதிக்குச் சில வழிகள் (புத்தக மதிப்புரை)

  மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள்   என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர்.   சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...

அருந்ததி நோன்பு

 

அருந்ததி நோன்பு

 

          பழந்தமிழரிடம் இடம் பெறாத அருந்ததி நோன்பு காப்பியத்தில் இடம் பெறுகிறது. இந்நோன்பு மகளிர் மேற்கொண்டமையுடன், மணவினையின் போது ஏற்றுக் கொள்ளும் நோன்பாகவும் இது அமைகிறது. பழந்தமிழர் கற்பு நிலைக்குச் சான்றாக அருந்ததியைச் சுட்டுவர். அருந்ததியின் வாழ்க்கைக் குறிப்பை அபிதான சிந்தாமணி விளக்குகிறது.

          சிலம்பில் அருந்ததியின் கற்பும், கண்ணகியின் கற்பும் ஒக்கும் என்று ஒப்பிட்டுப் பேசப்படுதலைக் காணலாம். அருந்ததி நோன்பு என்ற பெயரில் இச்செயல் மணவினையில் இடம் பெறுவதனைப் பெருங்கதையில் காணலாம். இதனைக் கற்பு விரதம் என்று சுட்டுகிறது.

          ”விடுசுடர் மதியமொடு வெண்மீனிவர்ந்த

         வடமான் மருங்கிற் சுடர் மிக் கூரிய

         கற்புடை விழுமீன் காணக் காட்டிய

         பொற்றொடி நுதன் மிசைப் புனைவிரல் கூப்பின்

         மண்ணிய உலகினு ன்யியல் பாக

         என்வயி னருளென மும்முறை யிறைஞ்சுவித்

         எதிர்த்த விரதமொடு விசும்பிற் பிழையாது”

                                                        (பெருங்.2.2:124-129)

என விண்ணில் மதியத்துடன், ஒளிவீசும் விண்மீன்களில் மிகவும் சுடர் வீசும் விண்மீன்களாகிய அருந்ததியைக் காட்ட, மணமகள் கரம் கூப்பி வணங்கி விரதத்தை ஏற்றுக் கொள்கிறாள் என கொங்கு வேளிர் காட்டுகிறார். சிந்தாமணியிலும் அருந்ததி காட்டிய செயல் இடம் பெறுகிறது.

          ‘மணம் முடித்த காலை, அம்மி மிதித்து, சாந்தியான கூத்தும் ஆலத்தியும் கண்டு மணமக்கள் அருந்ததியைக் காணச் சென்றனர். மணமகன் விண்ணில் உள்ள அருந்ததி கண்டு வணங்கிப் பால் சோறு உண்ணுதற்குச் சென்றனர் எனக் கூறப்படுதலால், உண்ணாமல் இருந்து விரதம் ஏற்றப் பின்னரே உணவு உண்ணுதல் மரபு என்பது அறியமுடிகின்றது. இந்நோன்பு மணநாள் அன்று மாலை இடம் பெற்றமைக் காணலாம்.

          ”விளங்கொளி விசும்பிற் பூத்த வருந்ததி காட்டி

         யான்பால், வளங்கொளப் பூத்தகோல

                                                மலரடிகழீஇய பின்றை,

         இளங்கதிர்க் கலத்தி னேந்த வயினி கண்டமர்ந்திருந்தான்,

         துளங்கெயிற்றுழுவை தொல்சீர்த் தோகையோடிருந்த தொத்தான்”

                                                                        (சீவக.249)

கம்பராமாயணத்தில் இது, வைதீகச் சடங்கு முறையில் இணைந்து, ஒன்றாகவிட்ட நிலைமையை அறியமுடிகிறது.

          ”வலம்பொடு தீயை வணங்கினர், வந்து

         பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி,

         இலங்கு ஒளி அம்மி மிதித்து, எதிர் நின்ற

         கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார்”(கம்ப.1250)

மணமக்கள் இராமனும், சீதையும் அருந்ததியைப் பார்த்த செயல் குறிப்பிடப்பட்டுள்ளமையைக் காணலாம்.

          அருந்ததியைப்  பார்த்தல் மணவினையில் இடம்பெறும் சடங்காக இன்றும் வைதீக முறைத் திருமணங்களில் இடம்பெறுதனைக் காணமுடிகிறது.

பார்வை நூல்

1. காப்பியங்களில் பழக்கவழக்கங்களில்  நம்பிக்கைகளும் - முனைவர் புலவர் சீ. வசந்தா எம்.ஏ., எம்.எட்.,ஸ்ரீ வித்யா பதிப்பகம், சென்னை -600 082.

         

 

Comments

Popular posts from this blog