Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

குறிஞ்சி

 

குறிஞ்சி


        திணைகளில் முதல் திணை குறிஞ்சி. வரலாற்று அடிப்படையில் மலைகளிலும், காடுகளிலும் தேனும் கிழங்கும் பழமும் தேடியுண்டு வாழ்ந்த வாழ்க்கையே மனிதனின் முதல் வாழ்க்கையாதலால் குறிஞ்சித் திணையே முதல் திணையாகக் கருதப்பட்டது.

          கடல் மட்டத்திற்கு மேல் ஆறாயிரம் அடிக்கு மேற்பட்டுள்ள இடத்தில் இயற்கையில் காணக்கூடிய செடி குறிஞ்சிச் செடியாகும். பிற செடிகளுக்கு அத்தகைய வரையறை கிடையாது. இத்தன்மையின் காரணத்தாலேயே, மலையையும் மலை சார்ந்த இடத்தையும் இச்செடியின் பெயரால் அழைத்தனர். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது இச்செடியின் பூவின் தனித்தன்மையாகும். இச்செடியின் பூ ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றி பன்னிரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து காணப்படுகின்றது. இயற்கையில் இத்தகைய வியப்பிற்குரிய பூ வேறின்மையால் மலையிலும் மலை சார்ந்த இடத்திலும் காணப்படும் இந்தப் பூவின் பெயராலேயே இந்த இடத்தை அழைத்தனர். செடி நூலில் இச்செடி ஸ்ட்ரொபிளான்த்தெஸ்’ (Strobilanthes) என்ற இனத்தைச் சார்ந்தது.

தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் மத்திய இந்தியாவிலும் காணப்படுகின்றது. நீலகிரி மலையிலும் கொடைக்கானல் மலையிலும் பழனி மலையிலும் பல ஆண்டுகளாக இச்செடி பூக்கும் காலத்தைக் கண்டு வைத்திருக்கின்றனர். இவை மலைச்சாரல்களில் பூக்கும் பொழுது பல்லாயிரக்கணக்கான பூக்கள் ஒரே கூட்டமாகத் தென்படும். ஒன்பதாவது ஆண்டிலிருந்து பன்னிரண்டாவது ஆண்டு வரை மலைச்சாரல்களில் கூட்டம் கூட்டமாக இச்செடிப்புதர்கள் பூத்துக் கிடக்கும். பன்னிரண்டாம் ஆண்டில் செடிகள் இறந்துவிடுகின்றன. இப்படிக் கூட்டம் கூட்டமாகப் பார்த்தால்தான் பழந்தமிழ்ப் புலவர் கருங்கோற் குறிஞ்சி யடுக்கம்’, (புறம்,374) என்று கூறினார். இந்தப் பூவில் நிறையத் தேனுண்டு. பல்லாயிரக்கணக்கான பூக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றுவதால் தேனீக்கள் மலைச்சாரல்களில் பெரிய பெரிய தேன் கூடுகளைக் கட்டுகின்றன. இதனை,

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

 பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே” (குறுந்.3)

என்று குறுந்தொகைப் பாடல் வழி அறியலாம். குறிஞ்சிப் பெருந்தே னிறால் என்று கலித்தொகையும் கூறுகிறது.

          கருங்கோற் குறிஞ்சி மதனில வான்பூ

           நாறுகொள் பிரச மூறு நாடற்கு

என்ற நற்றிணைப் பாடலில் குறிஞ்சித்தேனின் இனிமை கூறப்பட்டிருக்கின்றது. குறிஞ்சித் தேனை மிக உயரியதாகக் கருதியதற்கு மற்றொரு காரணம் குறிஞ்சிப் பூக்களின் தேன்கூட்டில் பிற பூக்களின் தேன் கலப்பதில்லை. ஏனெனில் குறிஞ்சிச் செடி பூக்க ஆரம்பித்தால் தேனீக்கள் குறிஞ்சித் தேனையே கூடுகளில் சேரக்கின்றன. இத்தகைய தேனை தனிப் பூத்தேன்(Unifloral Honey) என்று அறிஞர்கள் அழைக்கின்றனர். இத்தகைய அரிய பெரிய இனிமையான தேனைத் தருவதாலும் மலையும் மலைசார்ந்த இடத்தையும் குறிஞ்சி என்ற பெயரால் அழைத்தனரென்று தெரிகின்றது.

          நீலகிரியில் தோடர்கள் தங்கள் குழந்தைகளின் வயதைக் குறிஞ்சிச் செடி பூப்பதைக் கொண்டே கணக்கிட்டனர் என்கின்றனர். குறிஞ்சிச்செடி எப்படிப் பழங்குடி மக்களையும் பழந்தமிழரையும் கவர்ந்ததோ, அது போல நீலகரியிலும் கொடைகானலிலும் வாழ்ந்த வெளிநாட்டாரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. இரண்டு நூற்றாண்டுகளாக இதைப் பற்றிய நாட்குறிப்பும் எழுதியுள்ளனர். இச்செடியின் பூவைப் படம் வரைந்தும் பாடம் செய்தும் வைத்திருக்கின்றனர்.

          குறிஞ்சிச் செடியின் பல இனங்கள் உள்ளன. அதில் ஓரினம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை மலரும். அது விளையும்போது பிற செடிகளை வளரவிடாது அழுத்திவிடும். இச்செடி ஆண்டுதோறும் இளவேனிலில் குருத்துத் தோன்றும். பல கணுக்கள் விட்டு வளரும். இக்குருத்து, ஆண்டு இறுதியில் கீழ்க்கணுவைத் தவிர்த்து முழுவதும் அழிந்துவிடும். குறிஞ்சிச் செடியில் 28 இனங்கள் ஈழத்தில் காணப்படுகின்றன. பர்மாவிலும் அசாமிலும் காணப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் அவை சிறப்புடையவனாகக் காணப்படுகின்றன. ஏனெனில் வேறெங்கும் அவை செழிப்பாகவும் பெரியதாகவும் தமிழ் நாட்டில் வளர்வது போல் இருப்பதில்லை. குறிஞ்சி இனங்களில் பூக்களின் நிறம் மாறுபடுகிறது. மிக அழகிய பூக்களையுடைய இனங்கள் பல ஆண்டுகளுக்கொரு முறையே பூக்கின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அறிவியல் அறிஞர்கள் இச்செடியை மலைவாழ் புதர்ச்செடி என வருணிக்கின்றனர். குறிஞ்சிப்பூவின் நிறங்களில் நீல நிறத்தையே தமிழர் போற்றினர்.

          குறிஞ்சிப் பூவின் பல நிறங்களையும் தமிழர் நன்றாக அறிந்திருந்தனர் என்று கூறுவது மிகையாகாது. கருங்கோற் குறிஞ்சிப் பூ என்று பலவிடங்களில் இப்பூ வருணிக்கப்படுகின்றது. குறிஞ்சி அரும்பாயிருக்கும் போது வெண்மையாகக் காணப்படும். நற்றிணையும் கருங்கோற் குறிஞ்சி மதனிலவான் பூ என்று கூறுகின்றது. குறிஞ்சித் திணையில் குறிஞ்சிப் பண் தோன்றியது. குறிஞ்சிப் பண்ணில் தோன்றும் இராகங்களைக் குறிஞ்சி இனப் பூக்களின் நிறத்தால் பெயரிட்டழைத்து இருக்கின்றனர்.

          இயற்கையோடு உள்ளுணர்வை இணைத்துப் பார்க்கும் முறை அறிவியல் வளர்ந்தபின் தோன்றியதொன்று. மிகப் பிற்காலத்தது. ஆனால் சங்க காலத் தமிழர் இயற்கை நிகழ்ச்சிகள், செய்திகள் எல்லாவற்றையும் நுண்ணிய உள்ளுணர்வோடு இணைத்துப் பார்த்திருக்கின்றனர். நிறத்திற்கும் இசைக்கும் ஒப்புமை காணும் அளவு நுண்ணிய மனவுணர்ச்சி உடையவராயிருந்தனர். நிறத்தையும் ஒழுக்கத்தையும் இணைத்து பார்க்கும் நுண்ணுணர்வும் இருந்தது. கற்பிற்குச் சின்னமாக மேல் நாட்டில் வெண்மையான ‘லில்லி’ என்ற பூவை இலக்கியத்தில் கூறுகின்றனர். ஓவியங்களில் வரைகின்றனர். சங்க காலப் புலவர்கள் வெள்ளை முல்லையைக் கற்புக்கு அறிகுறியாக அக்காலத்திலேயே கூறினர்.

 பல்லாண்டுகளுக்கு ஒரு முறை பிறந்து இறந்து, பிறந்து இறந்து வாழும் குறிஞ்சிப் பூவின் தேன் சாரலில் சேர்ந்து பெருந்தேனாவது போலப் பிறந்து இறந்து வாழும் எல்லாப் பிறப்பிலும் நாடனொடு நட்புக் கூட வேண்டும் என்று கூறக் கூடிய நுண்ணிய உள்ளுணர்வைப் பழந் தமிழிலக்கியத்தில் காண முடியும். காதலர் கூட்டத்திற்குக் குறிஞ்சி நிலம், கூதிர்க்காலம், நள்ளிரவு என்று பொருத்தம் கூறும் உள நூலறிவினைச் சங்க இலக்கியத்தில்தான் காணமுடியும். அகத்திணையில் நாம் காண்பது சிறந்த ஒழுக்கம், உயரிய குறிக்கோள், நுண்ணிய உள்ளுணர்வு, ஆழ்ந்த ஆராய்ச்சி, பரந்த உலகியலறிவு, அகன்ற இயற்கையறிவு, உலகம் அடங்கலும் அகத்திணையில் அடக்கிப் பார்த்த பழந்தமிழரின் அறிவைப் போற்றாதிருக்க முடியாது.

பார்வை நூல்

1.  சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம் – திரு.பி.எல் சாமி, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி -6.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...