Skip to main content

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...

  சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...           சேலம் , மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம் , செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா ( 29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும் , மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது.           மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தக வெளியீட்டு நிகழ்வு           புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்ற...

நில வளம் காக்க, நீர் வளம் பெருக்கு!

 

நில வளம் காக்க, நீர் வளம் பெருக்கு!

 

நூல் – புறநானூறு, பாடல் எண் - 18

பாடியவர் – குடப் புலவியனார்

திணை – பொதுவியல் திணை

பாடப்பட்டவன் – தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டின் நெடுஞ்செழியன்.

(தலையாலங்கானம் என்னுமிடத்தே முடிவேந்தரையும் வேளிர்களையும் வென்றதால், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் என்று சிறப்பிக்கப்படும் நெடுஞ்செழியன் பால், நாட்டில் நீர் வளம் மிக வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்த, குடநாட்டைச் சேர்ந்த புலவியனார் என்னும் புலவர் பாடியது.)

 

”முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

பரந்துபட்ட வியன்ஞாலம்

தாளின் தந்து தம்புகழ் நிறீஇ:

ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!

ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய

 

பெருமைத்து ஆகநின் ஆயுள் தானே!

நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்

பூக் கதூஉம் இன வாளை

நுண் ஆரல், பரு வரால்

குரூஉக் கெடிற்ற குண்டு அகழி;

 

வான் உட்கும் வடிநீள் மதில்

மல்லன் மூதூர் வய வேந்தே!

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்

ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி

ஒருநீ ஆகல் வேண்டினும் சிறந்த

 

நல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்

தகுதி கேள் இனி மிகுதியான

நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே!

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

 

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;

வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்

வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்

 

இறைவன் தாட்குஉதவாதே அதனால்

அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே

நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோர் அம்ம இவண்தட் டோரே;

தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.

 

        ஒலி முழங்கும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைத் தம் முயற்சியால் வென்று புகழ் கொள்ள அரசாண்ட வீரர் மரபில் வந்தவனே! ஒன்று பத்து எனத் தொடங்கும் எண்ணிக்கையில் இறுதி எண்ணாகிய கோடி இலட்சங் கோடி எனும் பேரெண்ணிக்கை உடையதாக நீ வாழ்க! நின் வாழ்நாள் வாழ்க! நீரின் மேல் படரந்த சிறு காஞ்சிப் பூக்  கண்டு மயங்கும், வாளையும், சிறு ஆரலும், பெரிய வராலும், கரிய கெளிறும் ஆகிய மீன்கள் நிறைந்த ஆழமான அகழியும், வானம் வரை உயர்ந்த நெடிய மதிற் சுவரும் உடைய வளமிக்க பழம் பதிக்கு அரசே! பாண்டியனே! வானுலகில், மறுமையில் அடைய விரும்பும் செல்வத்தை நீ வேண்டினாலும், இவ்வுலகத்தைக் காத்து நின்று அரசாளும் மன்னர் பலரை வென்று, வேந்தர் வேந்தனாக நீ ஒருவனே இவ்வுலகம் முழுவதையும் அரசாள நினைத்தாலும், மிக்க புகழுடனே இவ்வுலகில் வாழ விரும்பினாலும், உன் ஆசை நிறைவேறுவதற்கான வழிகளைச் சொல்லுகிறேன், கேட்பாயாக! பெருமைக் குரியவனே! நீரின்றி வாழ முடியாக இவ்வுயிர் உடலின் பசி நீங்க உணவு கொடுப்பவர்கள், அவ்வுடலுக்கு உயிர் கொடுத்தவர்கள் ஆவார்கள்! எனவே உடலுக்கு உயிர் போன்றதாகும் உணவு. உணவெனப்படுவது நிலத்தோடு சேர்ந்த நீர் ஆகும். எனவே தான், நீரும் நிலமும் திருத்தி விளைவுக்கு உதவியவர்கள், உயிரும் உடலும் படைத்தளித்துக் காப்போர் என்னும் புகழுக்குரியவர் ஆகின்றனர்.

          பரப்பளவில் உயர்ந்த தென்றாலும், (நெல் முதலியவற்றை விளைத்து விட்டு) வான் மழையை எதிர்ப்பார்த்துக் கிடக்கும் வறண்ட பூமியால், அதனை யாளும் மன்னவனுக்கு ஒரு பயனும் உண்டாகாது. ஆகவே, போரில் வல்ல பாண்டியன் நெடுஞ்செழியனே! நான் கூறிய இவற்றை மறவாது கைக் கொள்க. பள்ளத்தாக்குகளிலே நீரினைத் தேக்கி நீர் நிலைகளை உண்டாக்கியவர்களே, தாம் செல்லும் வானுலக இன்பங்களையும், புகழையும் இவ்வுலகில் பெற்று மகிழ்வோர் ஆவார்கள். அப்படி நீரினைத் தேக்கி விளைவுக்கு உதவார்கள், இவ்வுலகில் தம் புகழை நிலை நிறுத்த முடியாதவர் ஆவார்கள்.

 

(நீரைத் தேக்கி நிலவளம் காக்க வேண்டும் என்ற இன்றைய நீர் விஞ்ஞானம் அன்றே நினைவு படுத்தப்பட்டுள்ளது)

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...