Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

கல்வி வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி!

 

கல்வி வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி!

     கல்வி சமுதாயத்தில் இளைஞர்களிடையே பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது. குழந்தைகளைக் கல்வி கற்க அனுப்பாது இருந்தால், அவை அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பதோடு அதன் அறிவு தானாக அறியக் கூடியவற்றோடு முடிந்துவிடும். ஆனால் தகைமையுடைய ஆசிரியரிடத்தில் அக்குழந்தையை ஒப்படைத்தால் கலைகளையும், விஞ்ஞானத்தையும் அறியக்கூடும். வழி தவழிச் செல்பவர்களுக்குக் கல்வி சரியான வழியைக் காட்டும். குருடருக்குக் கண்ணாகவும், மடையருக்கு நிதான புத்தியையும், பயனற்ற வாழ்க்கை நடத்துபவர்களுக்கு பயனுள்ளதாகவும் ஆக்கச் செய்வது கல்வியே என்பதை அனைவரும் உணரவேண்டும்.

          குடிமக்களுக்குக் கல்வி வசதி செய்து தரவேண்டியது ஒவ்வொரு அரசின் முக்கிய கடமையாகும். கல்வியறிவு இல்லாதவர்கள் மிகுந்தால் அந்நாடு முன்னேற்றம் அடையாது. எனவே நாட்டின் முன்னேற்றம் கருதி மக்கள் கல்வியறிவு பெறும் பொருட்டு அரசு தொடக்கநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவற்றைத் தோற்றுவித்துக் கல்வி வசதி செய்து தருவதே தலையாய பணியாகும். அறிவியல், மானிடவியல், நிர்வாகவியல், விவசாயம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது அரசின் கடமையாகும்.

கல்வியின் முக்கியத்துவம்

        இன்றைய உலகில் மக்களுக்கு அனைத்துச் செல்வத்திலும் கல்விச் செல்வமே முதன்மையானதாகக் கருதப்படுகின்றது. இக்கல்வி பிறவிக் குணத்தை விருத்தி செய்து, அறியாமையை நீக்கி அறிவைக் கொடுப்பதாகும். மக்களிடம் காணப்படும் தீய குணம், தீய நடத்தை, முதலியவற்றை நீக்கி, நற்குணம், நன்னடத்தை முதலியவற்றை உண்டாக்குகிறது. உண்மை எது? பொய் எது? என்பதைப் பகுத்தறிய செய்து வாழ்வில் உயர்வு பெறச் செய்வது கல்வியே உயிரினும் சிறந்த கல்வியாகும்.

        இவ்வுலகில் தம் பிள்ளைகளுக்குக் கல்வியைக் கற்பிக்காமல் உயர்வகையான ஆடைகளையும், அணிகலன்களையும் செல்வத்தையும் கொடுத்துச் செல்லமாக வளர்த்தல் கூடாது. அவ்வாறு வளர்த்தால் பிற்காலத்தில் தாய் தந்தையராகிய தங்களுக்குத் துன்பம் செய்ய ஓர் எமனை வளர்ப்பதற்குச் சமமாகும் என்பதை,

          ”மாலினால் இருவரும் மருவி மாசிலாப்

         பாலனைப் பயந்தபின் படிப்பி லாதுஉயர்

         தாலமேல் செல்வமா வளர்த்தல் தங்கட்கு ஓர்

         காலனை வளர்க்கின்ற காட்சி போலுமால்” (விவேக சிந்தாமணி,3)

என்றும், சமுதாயத்தில் கீழ்க்குடியில் பிறந்த ஒருவனை மேல்நிலைக்கு உயரச் செய்வதும் கல்வியே, இதனை,

          ”மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

           கற்றார் அனைத்திலர் பாடு”   (குறள், 409)

என்ற குறளில் உடலோடு ஒழியும் சாதி உயர்விலும், உயிரோடு செல்லும் கல்வி உயர்வுடையது என உணர்த்தப் பெறுகின்றது. இந்தக் கருத்தை நாலடியாரிலும்,

          ”தோணி இயக்குவான் தொல்லை வருணத்து

         காணிற் கடைப்பட்டான் என்றிகழார் – காணாய்

         அவன்துணையா ஆறு போயற்றே நூல்கற்ற

         மகன்துணையா நல்ல கொளல்” (நாலடி, 136)

என்ற பாடல் எடுத்துரைக்கின்றது. தோணி இயக்குபவன், நால்வகைச் சாதியில் கடைப்பட்டவனாக இருந்தாலும், அதைக் கருத்தில் கொள்ளாமல் ஆற்றினைக் கடந்து செல்கின்றனர். அதுபோல், கல்வி கற்றவன் கீழ்க்குடியில் பிறந்தவனாக இருந்தாலும், அவனை இகழாமல் அவனிடத்திலிருந்து நூலறிவினைக் கற்றுக் கொள்ளவேண்டுமென்று வலியுறுத்துகின்றது.

கல்வியும் ஆளுமையும்

     ஒருவன் சமுதயத்தில் கண்டோர் போற்றும் வண்ணம் ஆளுமையுடன் செயல்பட வேண்டுமானால் கல்வி இன்றியமையாதது.  பழங்காலத்தில் சிறந்த ஆளுமையைக் கொண்டிருந்த அரசனையே உயிர் என்று எண்ணி மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை,

          ”நெல்லும் உயிரன்று, நீரும் உயிரன்று

           மன்னர் உயிர்த்தே மலர்தலை உலகம்” (புறம், 186)

என்று புறநானூறு சுட்டுகின்றது. அரசர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு அமைச்சர்கள் நியமிக்கப்படும் போது பல்துறை அறிவு கொண்டவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பட்டது. இன்றும் சமுதாயத்தில் ஒருவர் உயர்பதவி பெற வேண்டுமானால் அவர்கள் சில தகுதிகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அவை ஒருவனிடம் தளராத இயல்பு, குடிகளைக் காத்தல், முயற்சி என்று மட்டும் இருந்தால் போதாது. அவற்றுடன் கல்வியறிவும் இணைதல் வேண்டும். இதனை வள்ளுவர், ஒருவன் அமைச்சராக இருக்க வேண்டுமென்றால் தளராத இயல்பு, குடிமகனைக் காத்தல், கல்வி, அறிவு, முயற்சி என்ற ஐந்தினையும் கொண்டிருக்க வேண்டும் என்கிறார். இதனை,

          ”வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

           ஐந்துடன் மாண்டது அமைச்சு”  (குறள், 632)

என்ற குறள் மூலம் அறியலாம்.

நிறைவாக,

        ஒரு நாடோ அல்லது ஒரு சமுதாயமோ மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டில் உள்ள மக்கள் கல்வி கற்ற அறிவுடையவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் அந்நாடும், சமுதாயமும் மகிழ்ச்சியுடன் இருக்கும். இதை இனியவை நாற்பது என்னும் நூலில் ”ஊர் மன்றத்தின்கண் அறிவுடையோர் வாழ்கின்ற ஊர் இனிது” என்றும், ”நூல் விதிப்படி வாழ்கின்ற தவத்தோரது மாட்சிமையும் இனிது” என்றும் சுட்டிக்காட்டுகின்றது.

பார்வை நூல்

1.  சையத் ஜாகீர் ஹசன். முனைவர். அ, - நீதி நூல்களில் கல்வி, இராஜா வெளியீடு, திருச்சி. முதல் பதிப்பு, 2010.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...