சங்ககாலப் புலவர்களின்
வாழ்வியல் நிலைகள்
சங்ககாலப்
புலவர்கள் பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். எனினும், அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் தலைக்காட்டவில்லை. ‘கற்றுத்தெளிந்த
அறிஞரிடையே மலரவேண்டிய நட்பிற்குச் சாதியும், சமயமும் எக்காலத்தும் குறுக்கீடாக இருக்கமுடியாது’ என்பதைக் காட்டுவதாகச் சங்ககாலப் புலவர்களின் வாழ்வியல் நிலை
அமைந்துள்ளது.
நட்புரிமை
பழந்தமிழ்
வேந்தரிடம் புலவர்கள் கொண்டிருந்த தொடர்பு புரவலர், இரவலர் என்ற நிலையினைக் கடந்து உள்ளம் உணர்ந்த உயிர் நட்பாக
விளங்கியது.
·
கோப்பெருஞ்சோழனை
நேரில் கண்டு பழகாமலே அவனோடு நட்பு பூண்டவர் பிசிராந்தையார்.
·
பாரி இறந்தபிறகு, அவனது நண்பரான
கபிலர் அவன் மகளிரைத் திருமணம் செய்விக்க வேண்டிப் பல மன்னரிடமும் வேண்ட, எந்தவொரு மன்னரும்
அவர்களை மணம் புரிய முன்வராமையால் திருக்கோவலூரிலுள்ள பார்ப்பார் ஒருவரிடம் அவர்களைப்
படுத்தி விட்டு, அங்குள்ள தென்பெண்ணை
ஆற்றினருகே பாரியை நினைத்து வடக்கிருந்து உயிர்விட்டார் என்பதிலிருந்து கபிலர், பாரியிடம் கொண்டிருந்த
அன்பின் திறத்தையும் நட்பின் ஆழத்தையும் உணரமுடிகின்றது.
மான உணர்வு
புலமையாளர்கள்
இரவலர் வாழ்க்கையை மேற்கொண்டு வேந்தர்களின் கைவண்மையை எதிர்நோக்கி வாழ்ந்தபோதும் மன்னர்களின்
முன் அஞ்சியொடுங்கி அவலம் அடையாதவர்கள். அவர்கள் பொருள் இன்மையால் மிகவும் துன்படைந்து வாடியபோதும்
தன்மானம் கெடவரும் வாழ்க்கையை விரும்பாதவர்கள்.
”முற்றிய திருவின் மூவராயினும்
பெட்பின்றி ஈதல் யாம்வேண்டலமே” (புறம்-205:1-2)
என்றும்,
”பெரிதே உலகம் பேணுநர் பலரே” (புறம்-207)
என்றும், புலமைபற்றி
வந்த பெருமிதத்தால் தம்மை மதியாது கொடுக்கப்பட்ட பரிசில்களை விரும்பி ஏற்றுக் கொள்ளாது
வெறுத்தொதுக்கியவர்கள்.
சந்து செய்வித்தல்
”சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளவளவன் மலையமான் திருமுடிக்காரியின் மக்களைக்
கொல்ல முற்படும்போது, புலவர் கோவூர்கிழார் தலையிட்டு அச்செயலைத் தடுத்து நிறுத்தினார். இச்செய்தியின்
மூலம் புலவர்கள் தங்களின் புலமைத் திறத்தாலும், மன்னனிடம் தங்களுக்குள்ள செல்வாக்கினாலும், போரையும், கொலையையும்
தடுத்து நிறுத்தினர் (புறம் –
46)” என்பது தெரிய
வருகிறது.
தூது செல்லுதல்
தொண்டை நாட்டை ஆண்டு வந்த தொண்டைமான் தன்னிடம் படைக்கலம் மிக்கிருப்பதாக எண்ணி
அதியமானோடு பகைமை கொண்டான். போரின் கொடுமையையும், அதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் நேரிடும் அழிவை உணர்த்த வேண்டி அதியமான் அவ்வையாரைத்
தொண்டைமானிடம் தூது விடுத்தான் (புறம் – 36). அவ்வையார் அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்ற நிகழ்ச்சியிலிருந்து
புலவர்கள் நாடாளும் வேந்தனுக்காகத் தூது சென்றிருக்கின்றனர் என்பது தெரிகின்றது.
சமூகக் கொடுமையை எதிர்த்தல்
புலவர்கள்
மன்னர்களைப் புகழ்ந்து பாடி பரிசில்கள் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிராமல், அவ்வப்போது
மன்னர்களால் சமூகத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் தவிர்த்திட முனைந்திருக்கிறார்கள்.
”பாண்டியன் அறிவுடைநம்பி தன்நாட்டுக் குடிமக்களிடம் வரிவாங்கும் முறையில் பெருந்தவறு
செய்திட, அவனை இடித்துரைத்து
நெறிப்படுத்தும் நெஞ்சுரம் இல்லாதவர்களாய் அரசியல் சுற்றத்தார்கள் திகழ்ந்திட, பிசிராந்தையார்
அவனிடம் சென்று குடிமக்களிடம் அன்பிலாது மிகுதியாக வரிவாங்கும் அவனது கொடுமையை எடுத்துக்
கூறி அவனது அச்செயலைத் தடுத்து நிறுத்தியதும்” (புறம்- 36),
”அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலவரி சில ஆண்டுகளாகச் செலுத்தப்படாமல் கடனாய்
விட, அவ்வரியைச்
செலுத்திட முடியாமல் குடிமக்கள் மிகுந்த துன்படைய, அதனைக் கண்ட வெள்ளைக்குடி நாகனார் குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவனிடம் சென்று மக்களுக்காகப் பேசி நிலவரிக்கடனைத் தள்ளுப செய்ததன் மூலமும்”(புறம்- 184) புலவர்கள் மக்கள் சமூகத்திற்காக முன்னின்று செயல்பட்டனர்.
ஒருமைப்பாட்டுணர்வு
கணியன்
பூங்குன்றனார், ”யாதும்
ஊரே யாவரும் கேளிர்” (புறம்-172) என்று மொழி, இனம், சாதி, நாடு போன்ற
வேறுபாடுகளைக் கடந்த ஒருமைப்பாட்டை விரும்புவதிலிருந்தும்,
நரிவெரூஉத்தலையார்
சான்றோர்களை நோக்கிக் கூறுவது போல,
”நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியும் ஆறும்அதுவே” (புறம்-195)
என்று கூறுவதன் மூலம் சங்ககாலப்
புலவர்களில் சிலர் எந்த ஆட்சியாளர்களையும் புகழ்ந்து பாடாமல் எக்காலத்தும், எந்நாட்டிற்கும்
தேவையான, மக்களின் நல்வாழ்வுக்கான
கருத்துக்களைப் பாடுவதிலும் நாட்டம் கொண்டிருந்தனர் என்பது தெரிய வருகிறது.
நிறைவாக,
சங்ககாலத்தில் 500 –க் கும் மேற்பட்ட
புலவர்கள் இருந்துள்ளனர். புலவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேந்தர்களையும், குறுநில மன்னரையும், சீறூர் தலைவரையும்
பாடியுள்ளனர். புலவர்களால்
பாடப்பட்டவர்களுக்குதான் கருத்து மோதல்களும், வேறுபாடுகளும் நிகழ்ந்தனவே தவிர, பாடிய புலவர்களுக்குள் இணக்கமான நிலையே நிலவியது.
Comments
Post a Comment