தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்
21 – ஆம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சியில் அசைக்கமுடியாத இடத்தைப்
பெற்றிருப்பது இணையமாகும். தகவல் தொழில் நுட்ப உலகில் இணையம் மிகப்பெரிய உதவிகளை மொழி, இனம் பாராமல் மக்களுக்குச் செய்து வருகின்றது. இது விஞ்ஞானம், அறிவியல், கணக்குகள் என்ற ஒரு குறிப்பிட்ட சிலவற்றிற்கு மட்டும் பயன்படாமல் இலக்கிய வளர்ச்சிக்கும்
பெரிதும் பங்காற்றி வருகின்றது. நெடிய பாரம்பரிய மிக்க தமிழ்மொழியும் இவ் இணையத்தில் தனக்கென
ஓர் இடத்தைப் பெற்று வளர்ந்து வருகின்றது. இணையத்தில் எண்ணிலடங்கா இலக்கிய வகைகளைப் பெற்று வளர்ந்து வரும் தமிழ்மொழிக்கு
வலைப்பூக்கள் என்ற புதிய இலக்கிய வகை தோன்றிப் பெரும் பங்காற்றி வருகிறது.
வலைப்பூ – வலைப்பதிவு
”ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவிகொண்டு செய்யும் இனத்தின் நாளைய
வாழ்வு நலியும். இது தவிர்க்க முடியாதது” என்று டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் கூற்றின்படி நாம் இன்றைய பணியை இன்றைய
கருவிக் கொண்டு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் தான் நாம் இணையத்தை இன்று பயன்படுத்தத்
தொடங்கிவிட்டோம். அதில் வலைப்பூக்கள் என்ற ஒரு தனி இலக்கிய வகையாகத் தோன்றியுள்ளது. ஒருவரிடமிருந்து பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும்
தகவல் தொடர்புக்கான எழுத்துக்கள், ஒலி, ஒளி வடிவக் கோப்புகள், ஓவியம், படங்கள் என்று அனைத்தையும் இணையம் வழியே தனிப்பட்ட ஒருவர்
உலகில் இருக்கும் பிறருக்குத் தெரிவிக்க உதவும் இணைய வழியிலான ஒரு சேவையே வலைப்பூ என்பதாகும்.
வலைப்பூ என்பதை ஆங்கிலத்தில் பிளாக்
(Blog) என்கிறார்கள். இதன் மூலம், வெப்ளாக் (Webblog) என்பதாகும். இந்த பிளாக்கை 17 டிசம்பர் 1997 –ல் ஜார்ன் பெர்கர் (John Berger) என்பவர்தான்
வலைப்பூவிற்கு ஆங்கிலத்திற்கு Webblog என்ற பெயரை உருவாக்கிப் பயன்படுத்தினார். இதன் பின் இதன் சுருக்க வடிவமான Blog எனும்
பெயரைப் பீட்டர் மெர்ஹால்ஸ் (Peter Merholz)
என்பவர் 1999 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்படுத்தத் தொடங்கினார். இவரது வலைப்பதிவின் பக்கப் பட்டையில் Webblog எனும் சொல் இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்று பிரித்துக் கையாளத்
தொடங்கினார். இப்படியே வலைப்பூவிற்கு Blog எனும் பெயர் நிலைத்து விட்டது. இப்பெயரை சிமெண்ட்க் (Symantec)
நிறுவனத்தின் இயக்குநர் மணி.மணிவண்ணன் சூட்டியுள்ளார். இன்று தமிழில் இந்த வலைப்பூ என்ற பெயரே பயன்பாட்டில் இருந்து
வருகிறது.
வலைப்பூவின் வளர்ச்சி
தமிழ் மொழியில் முதல் வலைப்பூவை நவன் என்கிற வலைப்பதிவர் 2003 – ஆம் ஆண்டில் ஜனவரி –
26 ல் உருவாக்கினார் என்று அவருடைய வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2003 – ஆம் ஆண்டில் ஜனவரி முதல் தேதியில் கார்த்திக் ராமாஸ் என்பவர்
முதல் வலைப்பூவை உருவாக்கினார் என்று சிந்தா நதி எனும் இணைய இதழில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இரு வலைப்பூக்களில் நவன் வலைப்பூ.காம் தளத்திலும், (www.navan.name/blog/?P=18) கார்த்திக் ராமாஸ் வலைப்பூ பிளாக்டிரைவ் எனும் தளத்திலும்
பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ் வலைப்பூக்களின் தொடக்கக் காலத்தில் தமிழ் எழுத்துருப் பிரச்சனைகள் இருந்ததால்
இதன் வளர்ச்சி சற்றுக் குறைவாகவே இருந்தன.
2003 – ஆம் ஆண்டிலிருந்து
2005 – ஆம் ஆண்டு வரை சுமார்
1000 வலைப்பூக்கள் தோன்றியிருந்தன. அதற்கடுத்து 2005 – முதல் 2007 ஆம் ஆண்டு வரை 15000 வலைபூக்கள் உருவாகியுள்ளன. 2012 முதல் இன்று வரை
16,625 வலைப்பதிவுகள் இருப்பதாக நீச்சல்காரன் தனது இணையதளத்தில்
குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கு எதிர்வரும் காலங்களில் மேலும் உயர்ந்து 50,000 மேல் தொட்டுவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 31 அன்று உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்
·
வலைப்பூக்களின் வருகையால் தமிழ் இலக்கியங்கள் வெளியுலக மக்களுக்குத்
தெரிய வருகின்றது.
·
இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் பெருகியுள்ளனர். இதனை தமிழின் நிலை வளர்ச்சி அடைந்துள்ளது.
·
வலைப்பூக்களால் உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களின்
கருத்துக்கள் மிக விரைவாகக் கிடைக்கின்றது.
·
இலங்கை, மலேசியா, கனடா, தென்கொரியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்றவற்றில் வாழும் மக்களின் படைப்புகள் தமிழ்மொழியில்
இருப்பதால் அனைவரும் கருத்தைப் பகிர்ந்து கொள்ள முடிகின்றது.
·
தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் முதல் கொண்டு இக்கால இலக்கியங்கள் வரை வலைப்பூவில்
உலகத் தமிழர்களுக்குக் கிடைக்கின்றன. இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்று வருகிறது.
·
இவைகள் அன்றி கணிப்பொறி சார்ந்த தகவல்கள் அதிகம் கிடைக்கின்றது. அறிவியல், விஞ்ஞானக் கருத்துக்களும் அது தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளும் நமக்கு உடனடியாகக்
கிடைக்கின்றது.
·
உலக நாடுகளில் உள்ள சைவ மடாலயங்களும், திருத்தலங்களும் பற்றியச் செய்திகள் இடம் பெற்றுள்ளது.
·
தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் வலைப்பூக்களில் வெளிவருகின்றன.
·
வலைப்பூக்களினால் தொழில் நுட்ப வளர்ச்சி பெற்றுத் தமிழ்மொழி
வளர்ந்து வருகின்றன.
·
வலைப்பூக்களில் வெளிவரும் படைப்புகளும் கட்டுரைகளும் கவிதைகளும்
பிற கருத்துகளுக்கும் உடனுக்குடன் பின்னூட்டம் என்ற பெயரில் விமர்சனங்கள் பல நாடுகளிலிருந்து
எழுகின்றார்கள். இது தமிழ் மொழிக்குக் கிடைத்த விமர்சன இலக்கியம் என்றே கூறலாம். மேலும் பல துறைகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்களும் தமிழ் மொழிக்குத்
தன்னால் இயன்ற பணிகளையும் செய்து வருகின்றார்கள்.
வலைப்பதிவர் திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 31- ஆம் நாள் உலக வரைப்பதிவர் நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்று கூடி தமது
கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு
தமிழகத்தில் நடந்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இருப்பவர்களில் திண்டுக்கல் சரவணன், ஆசிரியர் முத்துநிலவன் ஆவார்கள்.
2012 – ஆம் ஆண்டு ஆகஸ்டு
மாதம் 26 – ம் நாள் அன்றும்,
2013 செப்டம்பர் மாதம் 1
– ம் தேதியும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பைத்
திறம்பட நடத்தி முடித்தனர். மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு 26-10-2014 ல் மதுரையில் நடைபெற்றது. நான்காவது தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் அக்டோபர் 11, 2015 –ஆம் ஆண்டு கோலகலமாக நடைபெற்றது.
வலைப்பூக்கள் மற்றும் இணையதளங்கள் மொத்தம்
There are more than 17420 tamil sites/blogs are available in internet (Thanks:
Neechalkaaran.com) வலைப்பதிவு மட்டும்
16625 இருப்பதாக வலைத்தமிழ் இணையப்பக்கம் தெரிவித்துள்ளது. (http://www.valaitamil.com/tamilsites/)
இலக்கிய வரலாற்றில் சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கிய காலம், ஐரோப்பியர் காலம் என்று வகைப்படுத்துவது போல இன்றைய காலக் கட்டத்தைக் கணினியுக
காலம் அல்லது இணையக் காலம் எனலாம். புதிய இலக்கிய வகையாக வலைப்பூ உருவாகி உலக மொழிகளில் தமிழின பெருமையை நிலைநாட்டிக்
கொண்டிருக்கின்றன. இதனால் பலவகைப்பட்ட தமிழ் இலக்கியங்கள் வெளி உலகுக்கு விரைவாகக்
கொண்டு செல்லப்படுகின்றன. எனவே தமிழ் மொழி வளர்ச்சிக்கு வலைப்பூக்களின் பங்களிப்பு
அளப்பரிய தொண்டினைச் செய்து வருகிறது எனலாம்.
தமிழ் வலைப்பூக்களை உருவாக்குதல் (Creation of Tamil Blog)
இணையத்தில் வலைப்பூவை உருவாக்குவது மிகவும் எளிமையானதாகும். இணையத்தைப் பயன்படுத்தும் எவரும் இத்தகைய தமிழ் வலைப்பூவினை
உருவாக்கிக் கொள்ளலாம். தனி மனிதர்களின் சுதந்திரக் கருத்தை இதில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையத்தில் வலைப்பூக்களை உருவாக்க வேண்டுமெனில் முதலில் கூகிள், யாகூ, ரெடிஃப் மெயிலில் கணக்கு வைத்திருக்க வேண்டும். கணக்கு என்றால் மின் அஞ்சல் முகவரியை உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.
தமிழில் வலைப்பூக்களை உருவாக்கிக் கொண்ள்ள
google, Yahoo. Rediffmail போன்ற இணையதள நிறுவனங்கள் முன்வருகின்றன. இவை முழுக்க முழுக்க இலவசமாக வழங்குகின்றன. இதனை ஆங்கிலத்தில்
Blogger என்று அழைப்பர். மேலும் பிளாக்கர்ஸ் போன்று வேர்ட்பிரஸ் என்ற ஒரு அமைப்பும் உள்ளது. குறிப்பாக Gmail, Yahoo வில் மின்னஞ்சல் வைத்திருக்க வேண்டும். எனினும் கூகுள் நிறுவனத்தில்தான் அதிகமான நபர்கள் வலைப்பூவைத் தொடங்கியுள்ளனர்.
முதலில் இணைய உலாவியின் மேல் பட்டையில் www.blogger.com என்று உள்ளிட
வேண்டும். அதில் blogger முகப்பு பக்கத்தில் வலைப்பதிவை உருவாக்கு (Create blog) பதத்தைச் சொடுக்க வேண்டும். அடுத்து கூகுள் நிறுவனத்தில் கணக்கைத் தொடங்கு என்ற
முகப்பு தோன்றும். (Create a google account) நீங்கள் கூகுள் நிறுவனத்தில் வைத்திருக்கும் மின்னஞ்சல் முகவரியை அவர்கள் கேட்டுள்ள
இடத்தில் (Enter email address) அடிக்க
வேண்டும். அடுத்து உங்களது கடவுச் சொல்லை
இட (Enter a password) வேண்டும். மீண்டும் ஒரு முறை கடவுச் சொல்லை அடிக்க வேண்டும்.
பிறகு உங்களது வலைப்பூவின் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு Display name என்ற கட்டத்தில் தேர்ந்தெடுத்த உங்கள் பெயரை அடிக்க வேண்டும். அடுத்து கீழே கொடுத்துள்ள ஆங்கில எழுத்துக்களை அவர்கள் கொடுத்துள்ள
அடைப்புப் பட்டையில் அடித்துவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து continue என்ற இடத்தில் தேடுபொறியை
வைத்துச் சொடுக்கினால் அடுத்த பக்கம் தோன்றும். மேற்சொன்ன செய்முறையானது படம் இரண்டில் செய்ய வேண்டும். தொடர்க என்ற பதத்தைச் சொடுக்கியவுடன் மூன்றாவது ஒரு படம்
தோன்றும். இதில் உங்களுக்கு வலைப்பதிவிற்குப் பெயர் சூட்டுங்கள் என்ற
பக்கம் திரையில் தோன்றும்.
முதலில் வலைப்பதிவுத் தலைப்பை arivusaral என்பது போல உங்களுக்குப் பிடித்த பெயரைக் கொடுக்க வேண்டும். வரைப்பதிவு முகவரி
URL கேட்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பை ஒட்டி உங்களது வலைப்பூவிற்கான முகவரியை எழுத
வேண்டும். எ.கா: arivusaral.blogspot.com.
அடுத்து சொல் சரிபார்ப்பு என்பதில் முன்பு படம் இரண்டில் செய்தது போல் அதில்
இருக்கும் ஆங்கில எழுத்துக்களைச் சரியாக கட்டத்தில் எழுதவேண்டும். இது மிக மிக அவசியம். தவறாக எழுதினால் அடுத்தப் பக்கத்திற்குச் செல்ல இயலாது. முடிந்ததும் தொடர்க என்பதில் சுட்டியை வைத்து சொடுக்க வேண்டும். இவையாவும் படம் மூன்றில் செய்ய வேண்டிய பணியாகும். நான்காவது டெம்பிளேட்டைத் தேர்வு செய்க என்ற படம் திரையில்
தோன்றும்.
டெம்பிளேட்டைத் தேர்வு செய்தவுடன் உங்கள் வலைப்பூவிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும். பிறகு முதல் இடுகையினை உருவாக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்த முகவரியில் உங்கள் பெயரில் வலைப்பதிவு
உருவாக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி அடுத்தப் பக்கத்தில் தோன்றும். அந்தப் படத்தில் வலைப்பதிவு இடலை தொடங்கு என்று தோன்றும். அதனைச் சொடுக்கினால் உங்களது வலைப்பூ பெயருடன் இடுகையை உருவாக்குக
என்ற அடுத்த படம் தோன்றும்.
அந்த பக்கத்தில் நீங்கள் எழுத வேண்டியதை எழுதிவிட்டு இப்பொழுது சேமிக்கவும்
என்று கீழே இருக்கும் பதத்தைச் சொடுக்கினால் நீங்கள் எழுதிய அல்லது பதிவு செய்த செய்தியை
உங்கள் வலைப்பூ பக்கத்தில் பார்க்க இடுகையை வெளியிடு என்பதைச் சொடுக்க வேண்டும். உங்களது இடுகை இப்பொழுது திரையில் தோன்றும்.
பிறகு இறுதியாக உங்கள் வலைப்பதிவு இடுகை வெற்றிகரமாக வெளியிடப்பட்டது என்று
இறுதியாக ஒரு பக்கம் தோன்றும். இனி உங்கள் கருத்துக்களை உலக மக்கள் அனைவரும் காண்பார்கள். மீண்டும் உங்கள் வலைப்பூவினைக் காண வேண்டுமெனில் உங்கள் வலைப்பூவின்
முகவரியை தட்டச்சு செய்தால் போதும். வலைப்பதிவு திரையில் தோன்றும். இவ்வாறு உருவாக்கப்பட்ட வலைப்பூக்களை ஒன்றாகத் திரட்டி ஒரே இடத்தில் கொடுப்பதைத்
திரட்டி என்று அழைப்பர்.
வலைப்பதிவுகளின் திரட்டிகள்
வலைப்பூக்கள் தொடக்க காலங்களில் குறைவான எண்ணிக்கையில் இருந்தன. ஒருவர் மட்டுமே இயக்கும் இவ்வலைப்பூவினை ஒரு அறைக்குள் மட்டுமே
வைத்திருப்பது பொருந்தாது என முடிவு செய்து அதனை உலகிலுள்ள அனைவரும் காணுமாறு ஒரு வழிவகைச்
செய்யப்பட்டது. அதுதான் உலகில் உள்ள வலைப்பதிவுகளை எல்லாம் தொகுத்து திரட்டித்
தருவது என்ற எண்ணம்.
தொடக்கத்தில் எண்ணிக்கையில் குறைந்த அளவு வலைப்பூக்களே இருந்துள்ளன. இதன் பட்டியலை ஒன்று திரட்டி, மதி கந்தசாமி என்பவரால் 2003 ஜீன் மாதம் வெளியிடப்பட்டுள்ளனது. (மு.இளங்கோவன், திரட்டிகள், 8 – வது தமிழ் இணைய மாநாடு சிறப்பதழ்) இச்செயல் தமிழ் வலைப்பதிவுக்கு மிகப்பெரிய அடித்தளம் அமைத்துக்
கொடுத்தது. அவ்வாறு திரட்டிய வலைப்பூவில் பதித்தச் செய்திகளை உடனுக்குடன்
பார்க்க சூழல் நிலவியது.
இந்நிலையில் இ.கலப்பை மென்பொருள் உருவாக்கிய முகந்தராசு அவர்களால் நியூக்ளியசு
என்னும் வலைப்பதிவுக்கு உதவும் மென்பொருளைத் தமிழ்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கினார். அதனை ஏற்று அமெரிக்காவில் பணிபுரியும் காசி ஆறுமுகம் என்னும்
வடிவமைப்பு பொறியாளர் நியூக்ளியசைத் தமிழ்ப்படுத்தும் முயற்சியில் வெற்றிப் பெற்றார். மொழிப் பெயர்த்ததைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற நிலையில்
தமிழ் மணம்.காம் என்ற தளம் உருவாகியது.
தமிழ் மணம் உலகில் தோன்றிய முதல் தமிழ் திரட்டி ஆகும். அதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 6000 – பேர் எழுதும் பதிவுகள் திரட்டப்பட்டுள்ளன. 356 – பேர் ஒவ்வொரு நாளும் தங்கள் பதிவை இணைக்கின்றார்கள். 2002 பின்னூட்டங்கள் இடப்படுவது ஒவ்வொரு நாளும் இதன் வழியாக அறிய
முடிகிறது. இக்கணக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது (டிசம்பர் – 2009)
திரட்டி – காம் (www.thiratti.com)
திரட்டி, காம் வலைப்பூக்களைத் திரட்டித் தரும் மற்றொரு திரட்டி ஆகும். தொடக்கத்தில் பதிவர்களின் படத்தையும் அவர்கள் வெளியிடும்
பதிவு படங்களையும் வெளியிட்டு வந்தது. இப்பொழுது முக்கியமான தகவல்களை மட்டுமே வெளியிடுகிறது. மேலும் இணையக் குழுக்கள் வெளியிடும் தகவல்களையும் இத்தளம் திரட்டித் தருகிறது.
வலைப்பதிவுகளை மட்டுமே இத்தளம் திரட்டித் தருகிறது. பின்னூட்டங்களைத் திரட்டுவது இல்லை. மேலும் பழைய பதிவுகளைத் தேடி பார்க்கும் வசதியும் இல்லை. எனவே தளத்தில் உள்ள தகவல்களை மட்டுமே பார்க்க முடியும். தளத்தில் விளம்பரங்கள், மருத்துவம், திரைப்படம், பங்கு வர்த்தகம், அரசியல், கவிதை, புகைப்படக்கலை எனும் தலைப்புகளில் செய்திகளை வெளியிடுகின்றன. தமிழ்வெளி திரட்டியில்
1400 – பேர் எழுதும் பதிவுகளைத் திரட்டித் தருகிறது. முகப்பு, பதிவுகள், இணைக்க, தொடர்புக்கு எனும் தலைப்புகளில் தகவல்களைத் தருகிறது.
முகப்புக் பக்கத்தில் இணைப்பதற்குரிய வசதி எளிமைப்படுத்தப்பட்டு சேவைக்குத்
தயாராக உள்ளது. அடுத்து நிகழ்வுகள் என்ற தலைப்பில் அண்மைய நிகழ்வுகள் பற்றிய
முழு விபரங்கள் தரப்பட்டுள்ளது. அடுத்து வலைப்பதிவர்களின் முழு விபரம் காணப்படுகிறது. அடுத்து பதிவுகள் குறித்த பின்னூட்டங்கள் அதிகமாக பார்வையிடப்பட்ட
பக்கங்கள் காணப்படுகிறது.
பதிவுகள் என்ற பகுப்பில் இன்றைய பதிவுகள் முந்தைய பதிவுகள் உள்ளன. இணைக்க என்ற பகுதியில் செல்ல சேர்க்கை நிலை என்னும் பகுதி
இருக்கும். இதில் விதிமுறைகளுக்கு உட்பட்டு இணைக்க வேண்டும். சிறந்த வலைப்பதிவுகளையும், பதிவர்களையும் இது தேர்ந்தெடுத்துச் செய்கிறது.
முத்துக்கமலம் (www.muthukamalam.com)
இது ஒரு தமிழ் இணைய தளமாகும். இதில் 600 மேற்பட்ட வலைப்பூவை தொகுத்தளித்தார் இதன் ஆசிரியர் தேனி எஸ்.சுப்பிரமணியன்.
வோட்பிரசு (ta.wordpress.com)
வோட்பிரசு நிறுவனம் அனைத்து மொழி வலைப்பூக்களையும் திரட்டித் தருகிறது. இதில் பதிவு செய்து கொண்டால் நம் பதிவுகளை வெளியிடும். திரட்டியில் தமிழ் மொழி வலைப்பூக்களையும் திரட்டித் தருகிறது.
வலைப்பூவின் நன்மைகள்
·
வலைப்பூ இலக்கியம் எல்லா வகை இலக்கிய வகை போன்று அமைந்திருந்தாலும்
இஃது உடனுக்குடன் பலரால் பல நாட்டினரால் பார்வையிடப் பெற்று அவர்களின் மௌனத்தின் மீதோ
அல்லது திறனாய்வு மீதோ பின்னூட்டங்களைப் பெறுகிறது என்பது தான் இதன் வலிமை.
·
தனி நபர் ஒருவர் இணையதளத்தை உருவாக்க வேண்டுமெனில் அதிக பொருட்செலவு
ஏற்படும். இதனால் வணிக நோக்கில் அமைந்த நிறுவனங்களால் மட்டுமே இணையதளத்தை
உருவாக்கிக் கொள்ள முடிகிறது. தனிமனிதர்களால் ஏற்படுத்த இயலவில்லை. ஆனால் வலைப்பூவை உருவாக்கவோ, நிர்வகிக்கவோ பொருட் செலவு ஏதுமில்லை. (முனைவர். க.துறையரசன், இணையமும் இனிய தமிழும்)
·
தனி நபரின் சிந்தனைகளைப் பொருட்செலவு இல்லாமல் இணையத்தில்
வெளியிட இவ் வலைப்பூ பயன்படுகிறது.
·
வயது, மொழி, கல்வி, இனம், பால், பெயர் என எவ்வகையிலும் கட்டுப்பாடு தேவையில்லை. யார் வேண்டுமானாலும் எந்த மொழியிலும் இவ்வலைப்பூவினை உருவாக்கிக்
கொள்ளலாம். தமிழில் படிக்கத் தெரிந்தால் வலையேற்றம் செய்யலாம்.
·
வலைப்பூ இலக்கியம் எல்லா இலக்கிய வகை போன்று அமையாமல் இஃது
உடனுக்குடன் அனைவராலும் பார்வையிடப்படுகின்றன.
·
வலைப்பூவினால் காலம் மிச்சப்படுத்தப்படுகிறது. கருத்துக்கள் சிட்டுக்குருவி போல் உலகத்தை வலம் வந்து விடுகின்றன. ஒரு பைசா செலவு இல்லாமல் நம் செயல்பாடுகளைக் கொண்டு இயங்குகிறது.
வலைப்பூவின் தீமைகள்
உலகில் நன்மை என்று ஒன்று இருந்தால் எதிர்ப்பக்கம் தீமை என்பது ஒன்றும் உண்டு. அதைப் போல வலைப்பூவினால் நன்மைகள் அதிகம் தீமைகள் மிக மிக
குறைவாகும்.
·
பாலியல் தொடர்பான செய்திகளைத் தாங்கி ஒரு சில வலைப்பூக்கள்
வெளிவருகின்றன.
·
வலைப்பூவை உருவாக்கியவர்கள் பின் அதனைத் தொடராமல் இடையில்
விட்டு விடுகின்றனர்.
·
சில வலைப்பூக்களில் பெரும்பாலும் மீள்பிரதி செய்யப்பட்டச்
செய்தியாக இருக்கின்றன.
·
ஒரு இணையதளத்தைப் பார்க்கும் அளவிற்கு ஒருவரது வலைப்பூவைப்
பார்ப்பது மிக மிக குறைவாக உள்ளது.
நிறைவாக,
வலைப்பூவை ஒரு தமிழ் இலக்கிய வகையாகக் கருதி அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் இலக்கிய
வளர்ச்சிக்குத் துணை புரியவேண்டும். அதற்கு கணிப்பொறி அறிவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் துறை வாரியாக இலக்கியம், கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் எனத் தனித்தனியே பல லட்சம்
வலைப்பூக்கள் தோன்ற வேண்டும். இஃது தமிழ் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருக்கும்.
இணையத்தைப் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் இயக்க முடியும் என்ற
தவறான எண்ணத்தைப் போக்க வேண்டும். அதற்குத் தமிழ் வழி இணையத்தை மாணவர்கள் பயன்படுத்தும் அடிப்படையில்
தமிழ் கணிப்பொறி, இணையப் பயன்பாட்டை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க முன் வரலாம்.
எனது arivusaral.com எனும் வலைதளத்தைக் கடந்த 2022 – ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் பதிவேற்றம் செய்து கொண்டு வருகிறேன். அவ்வலைப்பூவை 31000 மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். இவ்வலைதளத்தில் தமிழ்மொழியின் சிறப்புக்களைப் பல வகைகளில்
பதிவேற்றம் செய்து வருகிறேன். எனக்கும் கையேடு போல் பயன்படுகிறது .
துணை நின்ற நூல்கள்
1.
மணிகண்டன். முனைவர். துரை – இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், கௌதம் பதிப்பகம், சென்னை – 600 050.
2. மணிகண்டன். முனைவர்.துரை , வானதி . த, – தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், கமலினி பதிப்பகம், தஞ்சாவூர் மாவட்டம் – 613 102.
3.
வெங்கட்ராகவன் – கூகுள் பயன்பாட்டு நெறிமுறைகள், யாழ்மன்ன்ன் பதிப்பகம், சென்னை – 600 031.
Comments
Post a Comment