பாத்திரங்களினால் உண்டாகும் பலன்கள்
உணவு, நீர், தானியங்கள், தயிர், மோர், நெய், சாறு, எண்ணெய் போன்ற பொருள்களைச் சேமிக்கவும், சமைக்கவும் பாத்திரங்கள் தேவைப்படுகின்றன. பயன்படுத்தப்பட்டு வருகின்ற பாத்திரங்கள் காலத்துக்கும், நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாறிக் கொண்டே வந்துள்ளன. உலோகங்கள் கண்டு பிடிக்கப்படாத காலத்தில் மண், கல், பீங்கான், மரப்பட்டை, மூங்கில், பரங்கி, சுரக்காய், தேங்காய், திருவோடு, இலைகள் போன்றவை பாத்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் உலோகங்கள் கண்டறியப்பட்டன. தங்கம், வெள்ளி, பித்தளை, அலுமினியம், இரும்பு, வெண்கலம், எவர்சில்வர் முதலியவை பயன்படுத்தப்பட்டன. தற்போது காகிதம், பிளாஸ்டிக் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பயன்படுத்த எளிதாகவும், இலகுவாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவே, புத்தம்புது பாண்டங்களும் தோன்றின.
செல்வந்தர்களும், மன்னர் போன்றவர்களும் விலை
மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பாத்திரங்களைச் சேர்த்துக் கொண்டனர். பாத்திரங்களைப்
பயன்படுத்தும் முன் அவற்றினால் ஏற்படக் கூடிய நன்மை தீமைகளை கருத்திற் கொண்டால், உடல்
நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். பயன்கருதாது பயன்படுத்துவோர் ஏராளம்.
மாவீரன் நெப்போலியன், தான் உணவு உண்பதற்காக
அலுமினியத்தினால் செய்யப்பட்ட தட்டு வைத்திருந்தாராம். அன்றைய காலத்தில் அலுமினியம்
விலை மதிப்புடையதாக இருந்திருக்கிறது. இன்றைக்கு அப்பாத்திரம் ஏழைகளின் பாத்திரமாக
இருந்திருக்கிறது.
பாத்திரங்களின்
நன்மை தீமைகள்
மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தார். அப்போரில், ஈடுப்பட்ட
போர் வீரர்கள் தீராத வயிற்று வலியினால் அவதியுற்றனர். ஆனால் போர்ப் படைத் தளபதிகள்
எவ்வித நோயும் இல்லாமல் நலமுடன் இருந்தார்கள். அதற்குக் காரணம், படை வீரர்கள் அனைவரும்
வெள்ளீயத்தினாலான குவளைகளைப் பயன்படுத்தினர். படைத்தளபதிகள் வெள்ளியால் ஆன குவளைகளைப்
பயன்படுத்தினர். வெள்ளிக் குவளையைப் பயன்படுத்தியவர்களுக்கு எந்த நோயுமில்லை. வெள்ளீயத்தைப்
பயன்படுத்தியவர்கள் வயிற்று வலியால் அவதியுற்றனர். அதனால் மாவீரர் அலெக்சாண்டர் தன்னாட்டுக்குத்
திரும்ப நேர்ந்தது. ஆகையால் பாத்திரங்களை பயன்படுத்துவதன் முன் அதனால் உண்டாகக் கூடிய
நன்மை தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
அறிவியல் ஆய்வின் படி, வெள்ளியில் நோய்களை உண்டாக்கக் கூடிய 650 நுண்ணுயிர்களை
அழிக்கும் தன்மை உள்ளது. மேலும் ஒரு லிட்டர் தண்ணீரைச் சுத்தம் செய்ய 0.1. கிராம் வெள்ளியே
போதுமானது. தண்ணீரிலுள்ள நுண்கிருமிகளை வெள்ளி தூய்மைப் படுத்துவதால், பாலை வெள்ளிப்
பாத்திரத்தில் இட்டு அருந்துவதால் பாலின் மூலம் பரவும் நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
செம்பு பாத்திரம்
தமிழர் நாகரிகம் செம்பு நாகரிகத்தில் தொடங்கியதாகக்
கூறுவர். செம்பு அதிக அளவில் கிடைக்கப் பெற்றதால் தேவையான கருவிகளும் பாத்திரங்களும்
செம்பினால் செய்து கொண்டனர்.
சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள் அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர். அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்துவதால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்று இன்றைய அறிவியலார்கள் கண்டறிந்துள்ளனர். தண்ணீரைச் சேமித்து வைப்பதற்காகவும் செம்புப் பாத்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார்கள். சித்தர்களும், முனிவர்களும் பயன்படுத்தி வந்த கமண்டலங்கள் செம்பினால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கையாகவே செம்பு பாத்திரங்களில் நீர் வைத்திருந்தால், நீரிலுள்ள தீய நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.
செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், ரத்தத்திலுள்ள பித்த நோய்கள், சந்தி, கபம், பிலீகம், மந்தம், வெண்மேகம், அழலை, சூதக நோய், புண், கிரந்தி, சுவாச நோய்கள், கிருமி, தாது நட்டம், கண் நோய் ஆகியவை நீங்கி விடும் என்பது தெரிகிறது. உலக நல நிறுவனம் (WHO) குடிநீரைப் பற்றிக் கூறும் போது, குடிநீரில் கோலிஃபார்ம் பாக்டீரியா உள்ள நீரைப் பருகினால் டைபாய்ட் சுரமும், வயிற்றுப் போக்கு நோய்களும் ஏற்படும் என்று தெரிவிக்கிறது. ஆனால் செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் கோலிஃபார்ம் பாக்டீரியா முற்றிலும் அழிந்துவிடுகிறது.
பார்வை நூல்
1. உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம் – வாசுதேவன். இர, New
Horizon Media Pvt.Ltd. Alwarpet, Chennai -600 018. First edition-June 2008.
Comments
Post a Comment