பழமொழிகள் உணர்த்தும்
வாழ்க்கைத் தத்துவங்கள்
சங்கம்
கண்ட தங்கத் தமிழின் அமுத ஊற்றுகளே பழமொழிகள். பழமையும் பெருமையும் கொண்ட அம்மொழிகள் நம் உளவியல், உணர்வியல் கூறுகளை
மட்டுமின்றி நாட்டு நடப்பு மற்றும் கலை, கலாச்சாரப் பகிர்வுகளையும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது. நமக்குள் தரும்
வியப்பு. சின்னசிறு சொற்றொடரால்
காலந்தோறும் வாய்மொழியாகவே வழங்கி மக்களால் இன்றும் வழக்கினில் இருப்பதே அவற்றின் தொன்மைக்குச்
சான்றாகும்.
பழமொழிகள்
இறைமை சார்ந்த பழமொழிகள், இல்லறம் சார்ந்த பழமொழிகள், திருமணம் சார்ந்த பழமொழிகள், உறவுமுறை பற்றிய பழமொழிகள், பெண்மை நிலை பற்றிய பழமொழிகள், உளவியல், மருத்துவம், அறிவியல், அறிவுரை என்று அனைத்து நிலைகளிலும் பழமொழிகள் மனிதன் வாழ்வில் இடம்பெற்று வழிநடத்துகிறது.
·
சுண்டைக்காய்
கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்
சுண்டைக்காய்
என்பது சாதாரணக் காய் வகை! மிகவும் சிறிய அளவிலான மருத்துவ குணம் கொண்ட சுண்டைச் செடியாம். மூலிகைச் செடியில்
வளரும் கசப்புச் சுவையுடைய காய்! இது நன்கு விளைந்து காய் பறிக்கும் நேரத்தில் இதற்குக் கொடுக்கும்
கூலி கால் பங்கு என்றால், அதாவது ஒன்றில் கால் பாகம் ஆகும். ஆனால் அதைச்
சுமந்து சென்று விற்று வர ஆகும் செலவு மூன்று மடங்கு முக்கால் பணம் ஆகும் என்பது போல்
தோன்றும்.
இவையன்றி, சாதாரணமாக நாம்
எதையும் இலகுவாக, எளிதாக சிறிய முதலீட்டில் செய்ய நினைத்த வியாபாரம் மிகப்
பெரிய அளவில் சென்று நமக்கு இலாபமின்றி கைப் பொருளும் இழந்து நஷ்டப்படும் வேளையில், அலுத்து சலித்து ”சுண்டைக்காய
கால் பணம்; சுமைகூலி முக்கால்
பணம்” என்று! இந்நிகழ்வு
சாலப் பொருந்தும். ஒருவர் செய்யும் செயல் நிலை, அச்செயலுக்கான திறன், செயலின் வெளிப்பாடு இவற்றையும் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
·
சொல்லிக் கொடுத்த
வார்த்தையும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளைக்கு?
பழங்காலத்தில்
ஆங்காங்கே வாழ்ந்த மக்கள் ஊர் விட்டு ஊர் செல்லப் பல நாட்கள் ஆகும். அவ்வாறு செல்கையில்
தனிவழிப் பயணம் மேற்கொள்ளாமல் பலர் கூடிச் சேர்ந்து கூட்டமாக பொருள் தேடும் வகையில், வியாபாரம் செய்ய
என்று செல்வர். வழியிடைத் துன்பம்
நீங்க ஆடிப் பாடிச் செல்வர். அப்பொழுது பல நாட்களுக்குத் தேவையான உணவு, நீர் போன்ற
முக்கியப் பொருட்களையும் கொண்டு செல்வர். இரவு நேரம் வந்தால் ஆங்காங்கே உள்ள சத்திரம், சாவடிகளில்
தங்கி மறுநாள் விடிந்த பின் மீண்டும் பயணத்தைத் தொடர்வர். இரவு நேரம் வந்தால் ஆங்காங்கே உள்ள சத்திரம், சாவடிகளில்
தங்கி மறுநாள் விடிந்த பின் மீண்டும் பயணத்தைத் தொடர்வர். எனவே இவ்வாறு பயணித்த மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவமாக
”தான் சொல்லிக்
கொடுத்த வார்த்தையும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளைக்கு வரும் என்னும் தொடரை
வழங்கியிருப்பார்கள். இத்தொடரில் அர்த்தம் நமக்கு காலத்தைக் கடந்தும் இன்றளவும்
பழக்கத்தில் இருந்து இதன் மாண்பினை பறைச்சாற்றுகிறது.
நாம்
வெளியூர் செல்ல நமக்கு தேவையான உணவு, நீர் இவற்றை எடுத்துச் செல்வது ஒரு சில நாட்கள் மட்டும் கெடாமல்
பயன்தரும் வகையில் அமைந்திருக்கும். அவ்வாறு கொண்டு சென்ற உணவு பொருட்கள் தீர்ந்த பின் உணவிற்கு
அந்தந்த இடங்களில் அவரவர்களின் திறமையால் பெறவேண்டும். மேலும் மக்களோடு கலந்து பழக புத்திக்கூர்மையும், மொழிப்புலமையும்
இல்லாவிட்டாலும் சமாளிக்கும் சாதுரியம் வேண்டும். இல்லையென்றால் கடினமானதாக இருக்கும். எனவே சொல்லிக்
கொடுத்த வார்த்தை மட்டும் போதாது. சுயசிந்தனை வேண்டும். உனது முயற்சியால் யோசித்துச் செயலைச் சந்திக்கும் பக்குவத்தை
அழகுற உணர்த்துகிறது. தவிர கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு? என்பதால் நீ
முயன்று பல கலைகளையும் கற்று தெளிய வேண்டும் என்றும் விளக்குகிறது.
இன்றைய
விஞ்ஞான யுகத்திலும் இவை பொருந்தும். கணினி ஆனாலும், மின்னணு சாகசம் புரிந்தாலும் நமக்கு வேண்டியது சுய சிந்தனை. எதையும் யாரையும்
சார்ந்து இருக்காமல் மென்மேலும் புதியன பல கற்பதற்கு தனது திறமையை உலகுக்கு நிரூபிக்க
இத்தொடர் மொழி நம்மை வழிநடத்தும் என்றால் அது மிகையாகாது.
·
துள்ளுகிற மாடு
பொதி சுமக்காது
மாடு
என்பதற்கு செல்வம் என்ற பொருள் உண்டு. எனவே அதிக செல்வம் வந்தவுடன் தலை கால் புரியாமல் ஆடாதே. நீண்ட நாள்
நிலைக்காது என்று செல்வத்தின் நிலையாமை தத்துவத்தையும், ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதையும் சொல்லாமல் சொல்கிறது இப்பழமொழி.
துள்ளுகிற
மாடு – அதாவது செல்வம்
வந்தபோது தன்னிலையில் தடுமாறி வீணே செலவு செய்து ஆனந்தக் கூத்தாடுவதால் பொதி, என்றால் சுமையை
பொருளாதாரச் சுமை? நீண்ட நாள் சுமக்க இயலாமல் போகும் என்பதைச் சுட்டி காட்டுவதாகவும்
உள்ளது. ஆகவே நாம் எப்பொருள்
கொண்டாலும் அதனில் மெய்ப்பொருள் அறிந்து வாழ்க்கை எனும் தேரை நேர்வழியில் செலுத்த வேண்டும்.
·
சாகிற வரை வைத்தியன்
விடமாட்டான்; செத்தாலும் விடமாட்டான் பஞ்சாங்கக்காரன்
மக்கள்
கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கிய காலம் முதல் ஒருவரோடு ஒருவர் கலந்து பழகி அன்பு, ஆசை, காதல், பாசம் என்ற
உணர்வுகள் மேலோங்கி உறவுப் பிணைப்புகளால் வளர்ந்தோங்கினர். இச் சமயத்தில் இயற்கையின் மாற்றங்ளும், நிகழ்வுகளும்
மனிதன் மனதில் சில தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நாகரீகம், அறிவு வளர வளர எதையும் கணித்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வம்
வளரத் தொடங்கியது. அதில் சோதிடக் கலை என்பது முழுக்க, முழுக்கக் கணிதம்
சார்ந்த துறையாகும். மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வியல் நுணுக்கங்களை
அறிந்து கொள்ள முடியும் என்பதனை விஞ்ஞானத்தார் ஆழ்ந்து அறிந்தனர்.
காலப்போக்கில்
மக்களிடையே சோதிடத்தின்மேல் நம்பிக்கையும், எதிர்காலம் பற்றி அறியும் ஆவலும் அதிகரிக்க, அதிகரிக்க சோதிடம்
கூறுபவர்களும், பல்வேறு பிரிவுகளில்
வளர்ச்சிப் பெற்றனர். பெரும்பாலோர் சோதிடம், பஞ்சாங்கம், நல்ல நேரம், கெட்ட நேரம் என்று காலத்தைப் பகுத்து செய்யும் செயலை முடக்கிப்
போடுவதும் உண்டு.
இந்த
நிலை ஆதிகாலம் முதல் இருந்து வந்ததால் செத்தாலும் விடமாட்டான் பஞ்சாங்கக்காரன் என்ற
மொழி என்று எண்ணத் தோன்றுகிறது. பிறந்தவுடன் நாள், நட்சத்திரம் பார்க்கும் நாம் இறந்த பின்னும் செய்யும் சடங்குகள்
வரை தொடர்கின்றது. பஞ்சாங்கக்காரன் தொடர்பு ஒரு மனிதனுக்கு நாமே மறைந்தாலும்
நம்மை விட்டு மறையாது பஞ்சாங்கக்காரன் தொடர்பு என்பதை எத்தனை அழகாக விளக்குகிறது.
நாம்
வாழும்போது நம்மோடு வாழும் நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வைத்தியரிடம்
சென்று தகுந்த சிகிச்சைப் பெறுவோம். அதனால் ஒவ்வொரு மனிதனுக்கும் எதாவது ஒரு சமயத்தில் அல்லது
தொடர்ந்தோ வைத்தியனுடன் உறவு இருந்தாலும் அது நாம் உயிருடன் இருக்கும் வரைதான். நாம் இறந்தவுடன்
நமது நாடித்துடிப்பு அடங்கியவுடன் அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். ஆனால் பஞ்சாங்கக்காரன்
தொடர்பு அவ்வாறில்லை. நாம் இறந்த
பிறகும் நாள் பார்த்து சொல்லும் பஞ்சாங்கக்காரன் தொடர்பு வைத்தியனை விட வலுவானது என்று
மிக அழகாக எடுத்துரைக்கின்றது.
நிறைவாக,
பழமொழி
ஒரு முதிர்ச்சியுள்ள வாழ்க்கைத் தத்துவத்தைச் செறிந்த சொற்களால் விளக்குவதாகும். ‘நாட்டுக்கு
நாடு’, ‘சமுதாயத்திற்குச்
சமுதாயம்’ பழமொழிகள், பழக்கவழக்கங்கள்
மாறுபடுகின்றன. ‘பழம்’ என்னும் சொல்லுக்கு ‘பயன்’ என்னும் பொருள்
உலக வழக்கில் உண்டு. பழமொழி பயனுள்ள மொழி. முதிர்ந்த அனுபவத்தில் ஒருவர் நாவிலிருந்து வெளிவந்த மொழி. காலங்கடந்து
இன்றளவும் நாகரீக உலகில் எல்லோராலும் அறியப்படும் நிலையில் உள்ளதே இதன் பெருமைக்குச்
சான்றாகும். தனித்துவம்
கொண்டு திகழும் பழமொழியை அனைவரும் படித்து நடைமுறைப் படுத்த வேண்டும்.
பழமொழி சுருங்கச்
சொல்லி பெருமளவு மாற்றத்தை தருகின்ற மொழியாக அமைந்ததே சிறப்பாகும்.
கள ஆய்வு
பெயர் – மூக்கு ரெட்டியார், வயது - 95
ஊர் – ரெங்கநாதபுரம் (பெரம்பலூர்
மாவட்டம்)
இவர் என் தாத்தா (அம்மாவின் தந்தை) இன்றும் வாழ்ந்து
கொண்டுள்ளார். அவரிடம் கேட்டு
இந்த பழமொழிகளைப் பற்றி அறிந்து கொண்டேன். இவர் தொலைக் காட்சி மருத்துவ நிகழ்ச்சிகளின் குறிப்புகளையும், பல நூல்கள்
மூலம் சேமித்த கீரைகளின் பயன்களையும் தொகுத்து நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு இல்லறம் நல்லறமாக... என்ற நூலை வெளியிட்டேன். வயதானவர்கள் நமக்கு ஒரு பொக்கிஷம். அவர்களின் அறிவுரைகளும், பழங்கதைகளும்
நமக்கு வழிகாட்டியாகப் பயன்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் தாத்தா
அவர்களுக்கு நன்றிகள் பல.
-----
Comments
Post a Comment