கற்பு
- தந்தை பெரியார்
கற்பு என்ற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்போமானால், கல் என்பதிலிருந்து
வந்ததாகவும், அதாவது படி – படிப்பு என்பது போல் கல் – கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு
வருகிறது. ‘கற்பெனப்படுவது சொற்றியம்பாமை!’ என்கிற வாக்கியப்படி கற்பு என்பது சொல்
தவறாமை அதாவது நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திறகு விரோதமில்லை என்கின்ற கருத்துக்கள்
கொண்டதாக இருக்கிறது.
நாயகன் – நாயகி என்கின்ற சமத்துவமுள்ள பதங்களும் கதைகளிலும், புராணங்களிலும்
ஆண் – பெண் இச்சைகளை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்குப்படுகின்றன. ஆகவே காமத்தையும்,
அன்பையும் குறிக்கும் காலங்களில் சமத்துவ பொருள் கொண்ட நாயகர் – நாயகி, தலைவர் – தலைவி
என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, கற்பு என்ற நிலையில் வரும்போது அதைப் பெண்களுக்கு
மட்டும் சம்பந்தப்படுத்தி பதி ஆகிய எஜமானனையே கடவுளாகக் கொள்ளவேண்டுமென்று கருத்துக்
கொள்ளப்படுகிறது.
திருக்குறளிலும் வாழ்க்கைத் துணைநலத்தைப் பற்றி 6 – ஆம் அத்தியாயத்திலும் பெண்வழிச்
சேரல் என்பதைப் பற்றி சொல்லவந்த 9 அவது அத்தியாயத்திலும் மற்றும் சில தனி இடங்களிலும்
பெண்கள் விஷயத்தில் மிக்க அடிமைத்தன்மையும், தாழ்ந்த தன்மையையும் புகுத்தப்பட்டிருப்பதாகவே
எண்ணத் தோன்றுகிறது. தெய்வத்தைத் தொழாமல் தன் கொழுநனாகிய தன் தலைவனைத் தொழுகின்றவள்
மழையைப் பெய்யென்றால் பெய்யும் என்றும் தன்னைக் கொண்டவன் என்றும் இம்மாதிரியான பல அடிமைக்கு
உகந்த கருத்துக்கள் கொண்ட வாசகங்கள் காணப்படுகின்றன. திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாக இருந்தால்
இத்தகைய எடுத்துக்காட்டுகளைக் காட்டியிருப்பாரா? என்பதையாவது கவனிக்கும்படி கேட்டுக்
கொள்கிறேன்.
புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல்
மறைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.
இந்நிலை சட்டத்தாலும், மதத்தாலும் மட்டும் ஏற்பட்டதென்று சொல்வதற்கு இல்லை.
பெண் சமூகமும் ஒப்புக் கொண்டு, இந்நிலைக்கு உதவி புரிந்து வருவதனாலும் இது உரம் பெற்று
வருகிறதென்றே சொல்ல வேண்டும். அநேக வருடப் பழக்கங்களால் தாழ்ந்த சாதியார் எனப்படுவோர்
எப்படி தாங்கள் ஒப்புக் கொண்டு, தாமாகவே தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக் கொண்டு,
தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும், விளங்கவும் முந்துகின்றார்களோ அதுபோலவே, பெண்
மக்களும் தாங்கள் ஆண் மக்களின் சொத்துக்கள் என்றும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்
என்றும் அவர்களது கோபத்திற்கு ஆளாக்க் கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு, சுதந்திரத்தில்
கவலையற்று இருக்கின்றார்கள். பிறப்புக் கொரு
நீதி வழங்கும் நிர்பந்தக் கற்புமுறை ஒழிந்து, இரு பிறப்புக்கும் சம்மான சுயேச்சைக்
கற்பு முறை ஏற்படவேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டு
இருக்கச் செய்யுமாறு நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழியவேண்டும்.
கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற
கொடுமையான மதங்கள் சட்டங்கள் நீக்க வேண்டும்.
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு, காதலும்,
அன்பும் இல்லாதவனுடன் இருக்கவேண்டும் என்கின்ற சமூக கொடுமையும் அழிய வேண்டும்.
எனவே இக்கொடுமைகள் நீங்கிய இடங்களில் மட்டும் மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை,
இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பை காணலாமே ஒழிய நிர்பந்தத்தாலும், ஒரு பிறப்புக்கொரு
நீதியாலும் வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒரு காலும் காண
முடியாது என்பதுடன் அடிமைக் கற்பையும், நிர்பந்தக் கற்பையும் தான் காணலாம். அன்றி,
இம்மாதிரியான கொடுமையை விட வெறுக்கத்தக்க காரியம் மனித சமூகத்தில் வெறொன்று இருப்பதாக
என்னால் சொல்ல முடியாது.
பார்வை நூல்
1.
பெண் ஏன் அடிமையானாள்?
– தந்தை பெரியார், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை – 600 005.
Comments
Post a Comment