நயாகரா சென்ற அனுபவங்களாக...
நானும் என் மகள், மருமகன், பெயர்த்தி அனைவரும்
வெள்ளிக் கிழமை மதியம் 3.00 மணிக்கு சின்சினாட்டியிலிருந்து புறப்பட்டு நயாகரா நீர்
வீழ்ச்சி பார்க்கச் சென்றோம். இரவு 12.00 மணிக்கு நாங்கள் தங்கும் ஹோட்டலுக்குச் சென்றோம்.
காரில் சுமார் 6.00 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.
சனிக் கிழமை காலை நாங்கள் Fair Field by MARRIOTT என்னும் ஹோட்டலில் தங்கினோம். அந்த ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தால் காலை உணவு இலவசம். காலை உணவு மிகவும் ஆரோக்கியமான உணவாக இருந்தது சாப்பிட்டோம். அந்த ஹோட்டல் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நேர்த்தியாகவும் பணி செய்தார்கள். அவர்களது சிறப்பான உபசரிப்பிற்கு நன்றி கூறிவிட்டு வந்தோம். பிறகு பகல் 11 மணிக்கு மேல் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்றோம். தற்பொழுது வெயில் காலமாக இருப்பதால் ஓரளவு கூட்டம் இருந்தது. நன்றாக ரசித்துப் பார்த்தோம்.
நயாகரா நீர்வீழ்ச்சி
நயாகரா அருவி என்பது வடஅமெரிக்காவில்
வடகிழக்குப் பகுதியில் உள்ள பேரருவி. இது ஒரு சுற்றுலாத் தளங்களில் மிக முக்கியமான
ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த அருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும்
எல்லையில் ஓடும் அருவியாக உள்ளது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு அதிகமான
நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியில்
பாய்ந்து செல்கிறது என்பர். இந்த நயாகரா அருவி மின்சார உற்பத்திக்கும், சுற்றுச் சூழல்
பாதுகாப்பிற்கும் வெகுமதியாக உள்ள இயற்கையின் கொடையாகும். இயற்கை அதிசியமான நயாகாரா
அருவியின் இரட்டை நகரங்களான நயாகரா ஃபால்ஸ் (நியூயோர்க்), (ஒன்டாரியோ) ஆகிய நிலப்பகுதியை
உள்ளடக்கிய பகுதியாகும்.
அமெரிக்க நீர்வீழ்ச்சியின்
உயரம் அதற்கு கீழே இருக்கும் பெரிய கற்பாறைகளால் வேறுபடுகிறது. நயாகரா அருவியை விட
உலகில் ஐநூறுக்கும் மேற்பட்ட அருவிகள் இருந்தாலும் அதன் உயரமும் கொள்ளளவும் சேர்ந்தே
அதற்கு பெரும்புகழைத் தேடித் தருகிறது.
மெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the mist)
நயாகரா அருவி (குதிரை லாட அருவி) அருகே செல்லும்
மெய்ட் ஆப் த மிஸ்ட் என்பது 3 அருவிகளையும் படகு மூலம் காட்டும் நிகழ்வுக்கு பெயராகும்.
இப்படகு மூலம் குதிரை லாட அருவி அருகே செல்ல முடியும். அமெரிக்கப் பகுதியிலிருந்து
செல்லும் படகில் செல்வோருக்கு ஊதா (BLUE) கலர் பிளாஸ்டிக் கவர் போன்று பாதுகாப்பு
ஆடையும், கனடாவிலிருந்து வரும் படகில் வருவோர்க்கு சிவப்பு (RED) நிற பிளாஸ்டிக் கவர் போன்று பாதுகாப்பு ஆடையும் தருகிறார்கள். இரு நாட்டு மக்களின் வேறுபாட்டை அறிதல் பொருட்டு நிற வேறுபாடு அமைத்துள்ளார்கள்.
அந்த படகில் செல்லும் பொழுது
கொஞ்சம் அச்சமாக இருந்தது. இருந்தாலும் படகில்
கம்பியைப் பிடித்துக் கொண்டு சென்றோம். அருகே செல்லும் பொழுது நீர்வீழ்ச்சியிலிருந்து
தண்ணீர் தெறிக்கிறது. அருவியை நேராக கண்டு களிக்க முடியாது. ஏனென்றால் அருவியிலிருந்து
தண்ணீர் வேகமாகக் கொட்டுவதால் நம் முகத்தில் சாரல் வேகமாக விழும். அப்பொழுது அருவியை
நேர்கொண்டு பார்க்க முடியாது. இருந்தாலும் நாங்கள் நனையாதவாறு அந்த பிளாஸ்டிக் ஆடை
பாதுகாப்பாக இருந்தது. மிகுந்த மகிழ்ச்சியை அளித்த தருணமாக இருந்தது.
நயாகரா
அருவி இரவில் வண்ணமயமாக காட்சி அளித்தது. இரவு 8.30 மணிக்கு மேல் சென்றோம். அப்பொழுது
அந்த அருவி சிவப்பு, பச்சை, நீலம் என்று வண்ணமயமாக காட்சி அளித்தது. அதற்குக் காரணம்
அந்த அருவியின் எதிர் திசையில் ஒளியைப் பாய்ச்சி அந்த அருவியை வண்ணமயமாக்குகிறார்கள்.
அந்த வண்ணம் கண்ணிற்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில்
அருவியைக் காண ஏராளமானோர் வந்து கண்டு களித்தார்கள்.
அன்று இரவு அந்த ஹோட்டலில்
தங்கினோம். அன்று மட்டும் நாங்கள் 20 ஆயிரம் அடிக்கு மேல் நடந்தோம். ஆனால் எங்களுக்குச்
சோர்வு தெரியவில்லை. ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணிக்கு கிளம்பி இரவு 7 மணிக்கு சின்சினாட்டி
வந்து அடைந்தோம்.
நிறைவாக,
வெள்ளி கிழமை (09.05.2025)முதல் ஞாயிற்றுக் கிழமை (11.05.2025) வரை பிரயாண சோர்வு இருந்தாலும் மனதிற்கும், கண்ணிற்கும் மகிழ்வை அளித்தது. நான் மகள் குடும்பத்துடனும், எனது பெயர்த்தியுடனும் இருந்தது கூடுதல் மகிழ்வை அளித்தது. இந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
Comments
Post a Comment