Skip to main content

தமிழக மலையின மக்கள் (புத்தக மதிப்புரை)

 

தமிழக மலையின மக்கள்

(புத்தக மதிப்புரை)

 

புத்தக மதிப்புரை என்ற கட்டுரையில் முனைவர் கே..குணசேகரன் அவர்கள் எழுதிய தமிழக மலையின மக்கள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம்.

      இத்தகைய சிறந்ததொரு புத்தகம் முதல் பதிப்பாக செப்டம்பர் 1994 – ஆம் ஆண்டும், இரண்டாம் பதிப்பாக செப்டம்பர் 2011 – ஆம் ஆண்டும் சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,  வெளியிட்டுள்ளார்கள். விலை 100 ரூபாய், பக்கங்கள் 135.

நூலாசிரியர் கே. ஏ. குணசேகரன் என அழைக்கப்படும் கரு. அழ. குணசேகரன், அவர்கள் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர்எழுத்தாளர்நாட்டுப்புறவியல்-நாடகவியல்-தலித்தியல் அறிஞர், பாடகர், மற்றும் திரைக் கலைஞர் ஆவார். நாடகத்தைப் பற்றியும், நாட்டுப்புறவியலைப் பற்றியும் ஆய்வு நூல்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், பதினான்குக்கும் மேற்பட்ட படைப்பு நூல்களையும் எழுதியுள்ளார். சமஸ்கிருத அரங்கவியலுக்கு (theatre) மாற்றாக, தலித் அரங்கவியல் என்னும் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார்.      உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் 2016 சனவரி 17 ந் தேதி காலமானார்.

            இந்நூலுக்கு சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.

            நூலாசிரியர் தமது இரண்டாம் பதிப்புரையில் நீலகிரி மலை, ஜவ்வாது மலை, ஆனை மலை, கல்வராயன் மலை, தென்பொதிகைத் தொடர்ச்சி மலை, சிறுமலை போன்ற தமிழக மலைகள் தோறும் ஏறிச் சுற்றி முதுவர், கோத்தர், தோடர், சோளகர், புலையர், காணிக்காரன், இருளர், லம்பாடியர், மலசர், காடர் எனத் தமிழக மலையின் மக்களோடு கலந்துரையாடிய நினைவுகள் இன்னும் மனதில் பசுமரத்தாணி போல் பதிவு கொண்டுள்ளன என பதிவுசெய்துள்ளார்.

            இந்நூலில் கொல்லிமலை மலையாளிகளின் வாழ்க்கை நிலை, முதுவர் பழங்குடி மக்கள், நீலகிரி தோடர் இன மக்கள், சோளகர்லிங்காயத்தார், புலையர் இன மக்கள், காணிக்காரன் மலையின மக்களின் வாழ்க்கை நிலை, நீலகிரி கோத்தர் மலையின மக்களின் விழாக்கள், இருளர் பழங்குடி இன விளையாட்டுகள், லம்பாடியர், மலசர், காடர் என பன்னிரண்டு தலைப்புக்களில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

கொல்லிமலை மலையாளிகளின் வாழ்க்கை நிலை

 சேரர்களின் குறிப்பிடத்தகுந்த மலைப்பகுதிகளுள் ஒன்றாக கொல்லிமலை குறிப்பிடப்படுகின்றது. உயர்ந்த உச்சியையுடைய கொல்லிமலைக்குத் தலைவன் வல்வில் ஓரி என்று குறிக்கப்படுகிறது. கரும்பு ஓர் சோலைப் பெரும் பெயர் கொல்லிப் பெருவாய் மவரொடு புகழ்பிடி மகிழ்ந்து” (பதிற்றுப்பத்து – 24-25) என்று பதிற்றுப்பத்து பாடல் மூலம் சோலைவளம் மிக்க கொல்லிமலை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று இம்மலையில் மலையாளிகள் எனக் கூறப்படும் மலையின மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மலை தொடங்கி புகார் வரை பாயும் காவிரியின் வனப்பகுதிகளில் பல நாடுகள் உண்டு. இதனை கொல்லிக் கூற்றம் என பதிற்றுப் பத்து 8 வது பதிகம் 3 வது வரி பதிவு செய்கிறது.

1.   வாழவந்தான் நாடு 2. திண்ணனூர் நாடு 3. சேலூர் நாடு 4. தேவலூர் நாடு 5. வழப்பூர் நாடு 6. அரியூர் நாடு 7. குண்டூர் நாடு 10. திருப்புலி நாடு 11. எடப்புலி நாடு 12. பைல் நாடு 13. சித்தூர் நாடு 14. பெக்கரை காடு

என மேற்காணும் பதினான்கு வகை நாடுகளிலும் 2001 ஆம் ஆண்டு மக்கட் தொகைக் கணக்கெடுப்பின் படி சுமார் 36,000 மக்கள் தொகையினர் இம்மலையில் வாழ்கின்றனர்.

·   பன்றி, கரடி, குறுமான், முயல் போன்ற விலங்கினங்கள் அதிகம் வாழும் இந்த மலையில் நெல், கேழ்வரகு, சோளம், சாமை, தினை, கடுகு, மிளகு, கிராம்பு, மரவள்ளி, அன்னாசிப் பழம், வாழை, கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளை போன்றவை விளைபொருளாக விளைகின்றன.

·   இம்மலையில் பல நோய்களை தீர்க்கவல்ல மூலிகை மருத்துவச் செடிகள், கொடிகள், கிழங்குகள், போன்றவை வளர்கின்றன.

·         ஆட்டுக்காலில் உள்ளது போன்ற மயிர் மற்றும் கணுக்கள் கொண்ட ஆட்டுக்கால் கிழங்கு என்ற கிழங்கு மூட்டுவலிக்கு பயன்படுகிறது.

·  பதினான்கு நாடுகளுக்கும் அரசு பேருந்து வசதிகள் முறையே இயங்கிக் கொண்டிருக்கிறது.

·   இங்கு கல்லூரிகள் செயற்படவில்லை. மேல்நிலைப்பள்ளிகள் நான்கும் உயர்நிலைப் பள்ளிகள் இரண்டும் செயற்பட்டு வருகின்றன.

·         வாழவந்தி, செம்மேடு, செங்கரை, பவர்க்காடு போன்ற ஊர்களில் தரமான அரசு மருத்துவமனைகள் செயற்படுகின்றன.

தெய்வங்கள்

அரப்பளீஸ்வரர் கோயில் தெய்வத்தை வணங்கும் இம்மக்கள் அவரவர் குலு தெய்வங்களையும் வணங்கிப் பூசை செய்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் சக்கரத் தேர்த் திருவிழா நடைபெறுகின்றது. மாரியம்மன் இவர்களுக்குப் பொதுவான பெண் தெய்வங்களுள் முதன்மையான தெய்வமாகும். அம்பு எய்தல் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. மலை ஆண்டவன், அங்காளம்மன், காளியம்மன், மாரியம்மன், பெருமாள் சாமி, அரங்கத்தய்யா, கொங்காயம்மன், எட்டுக்கையம்மா, மாசி பெரியசாமி போன்ற தெய்வங்கள் இம்மக்களின் தெய்வங்களாக உள்ளன.

குலங்கள்

இம்மக்கள் குலங்களால் பிரிந்துள்ளனர். குறிப்பிட்ட குலத்தாரோடு மட்டுமே மணம் செய்து கொள்வது என்பது நடைமுறையில் உள்ளது. பிற குலங்களில் உள்ளவர்கள் யாவரும் அவர்களுக்குச் சகோதர உறவுமுறை உள்ளவர்களாவர். சிலுப்பை, வலஞ்சை, கேனான், சடக்கன், கோப்பையன், செம்மண்டை, தம்மண்டை, கவரை, சொல்லான், சுள்ளான், மாட்டையன், புலியாண்டை, வேளாண், கனகன், யாதவிட்டான், மாதையாள், மாணிக்கம், சினுமதி, கண்ணுடையார், காவி, நிவிடியான், அரங்கன் சாவி, குறுந்தடியன், சோந்தன், கவுண்டன், சின்னப்ப கொங்கன், சாத்தன், கழுவடையான் எனும் 260 குலங்களாக மக்கள் வாழ்கின்றனர்.

தூரத்திலே பெண்ணெடுத்தா

காலமெல்லாம் உறவாகும்

பக்கத்திலே பெண்ணெடுத்தா

பாதிதான் உறவாகும்

பால்போல் இருந்த முகம்

பழம்போல் ஆனதென்ன

சூரியன் போல் இருந்த முகம்

சோர்ந்து கிடப்பதென்ன

தெக்குந் தெரியாம

திசை மாறிப் போனதென்ன

 வடக்குந் தெரியாம

வழிமாறிப் போனதென்ன

என்பன போன்ற வாய்மொழிப் பாடல்கள் வழியே உறவுமுறைகளைப் பேணுவதில் மக்கள் மிகுந்த ஆர்வமும் எச்சரிக்கையும் கொண்டுள்ளனர். வனப்பகுதிகள் பாதைகளற்றுக் கிடக்கும். வழி அறிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்.

            மலையின மக்கள் தம் வாய்மொழிப் பாடல்களாக இயற்கை வளம், சாமி, நம்பிக்கை, மக்கள் உறவு, மலை வளம், குழுமநிலை மனம் போன்ற பாடுபொருள்கள் பொதிந்திருக்கக் காண முடிகின்றன.

கூத்துக்கள்

            பதினாறு பேர் கொண்ட கூத்துக்குழு இயங்குகிறது. பதினான்கு நாடுகளுக்கும் இக்குழு பயணித்துக் கூத்து நடத்துகின்றது. இவர்கள் முழுநேரக் கூத்துக் கலைஞர்களில்லை. உள்ளூர்ப் பகுதிகளில் கூத்து நடத்துவதென்றால் ரூ 1500, வெளியூர் என்றால் ரூ 4000 முதல் 6000 வரை கட்டணம் பேசிச் சென்று வருகின்றனர்.

            சீக்குப் பாறையில்காட்சி முனைஎனும் அழகிள பள்ளத்தாக்குக் காட்சி மலை காண வருவோர்க்கு விருந்தாக உள்ளது. அரப்பளீஸ்வரர் கோயில் அருகே சுமார் 300 அடி ஆழத்தில் ஒரு நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. சிறுசிறு படிகள் இருப்பினும் இறங்குவதற்கு மேலாக படிகளை ஏறி வந்து சேர்வது இலகுவானதாக இல்லை.

முதுவர் பழங்குடி மக்கள்

            தமிழக மலைகளிலே வாழும் ஏனைய மலையின மக்களோடு ஒப்பிடுகையில் முதுவப் பழங்குடி மக்களே ஆதிமுதற் கொண்டு வாழ்வதாகக் கருதப்படுகின்றனர்.

            தை முதல் நாள், சித்திரை முதல் நாள், கார்த்திகை நோன்பு எனக் கவனம் கொண்டு வாழும் முதுவர்கள் வெள்ளை நிற உடைகளையே உடுத்திக் கொள்கின்றனர். முதுவர் இன ஆடவர்கள் தலைப்பாகை கட்டி உள்ளனர். 5 அடிக்குக் குறையாத வளர்ச்சி கொண்ட ஆண்களும், பெண்கள் சற்று உயரம் குறைந்தவர்களாகவும் உள்ளனர். பெண்கள் கழுத்து நிறைய பழைய வெள்ளி, செம்புக் காசுகளைக் கோர்வை செய்து மாலையாக அணிந்துள்ளனர். ஒரு சேலைத் துணியையே மார்பு முதல் முழங்கால் வரை இழுத்துக் கட்டியுள்ளனர். ஆடவர்கள் தலைப்பாகை கட்டிய நிலையில் கையில் ஒரு கைத்தடியையும் கொண்டுள்ளனர்.

குடியிருப்புப் பகுதி

         முதுவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக வாழ்கின்றனர். இவர்களின் குடியிருப்புகள், கொக்கன மலையிலிருக்கும் கருமட்டிக்குடி, தங்கிச்சி மலை, அக்காமலை, சின்ன ஆனை மலை, பச்சைப்பால் மலை, வெள்ளி முடி, பூசைக் கொண்டான் பாறை, ஆட்டுமலை, தினங்காடு போன்ற மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன. இவர்களின் குடியிருப்புகள் பெரும்பாலும் உச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைப்பகுதி மற்றும் மரங்கள் அடர்ந்த பசுமை படர்ந்த சோலைப் பகுதிகளை ஒட்டி அமைந்திருக்கின்றன. குடியிருப்புப் பகுதியின்  அருகில் வேளாண்மை செய்து வருகின்றன. வேறு இனத்தவர்கள் வருவதோ தங்குவதோ அனுமதிக்கப்படாத ஒன்றாகும். இங்கு நுழைவதற்கு காட்டு இலாகாவினரின் அனுமதி பெற்ற வர இயலும்.

உணவு முறை

            முதுவர்கள் ராகி, தினை, சாமை, சோளம் ஆகியவற்றிலிருந்து உப்பில்லாத களி செய்து  காலை இரவு என இரு நேர உணவு உண்கின்றனர். பெண்கள் இரண்டு தடித்த குச்சிகள் கொண்டு களி கிண்டுகின்றனர். இக்களியை தேக்கு மற்றும் ஆமணக்கு இலைகளில் வைத்து காய வைத்துத் தேவையான போது எடுத்து உண்கின்றனர். உப்பில்லாத பண்டங்களுக்கு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் புளி ஆகியவற்றோடு சில பயறுகள் சேர்த்து உப்பு நிறைய போட்டு துணைப் பொருளாக வைத்துக் களி உண்கின்றனர். சித்திரை, ஆனி மாதங்களில் தேன் எடுக்கின்றனர். தண்டங்கீரை விதைகள வறுத்துப் பொரியாகச் செய்து தேன் துணையோடும் உண்ணுகின்றனர். சைவ உணவு மட்டும் உண்ணும் வழக்கத்தை வைத்துள்ளனர்.

மொழி

       முதுவர் மொழியில் தமிழ்மொழிச் சாயல், சில வேளைகளில் தமிழ் மொழியே பரவியிருத்தல் எனும் நிலை காணப்படுகிறது. தமிழக எல்லைக்குள் வாழும் முதுவர்கள் கேரள எல்லை ஓரத்தில் வாழ்வதாலும், கேரள எல்லைக்குள் தம் சக இனத்தவர்கள் ஆங்காங்குள்ள மலைகளில் வாழ்வதாலும் இம்மக்களின் முதுவ மொழியில் தமிழ் மொழி கூடுதலாகவும் மலையாள மொழி சிறுபான்மையாகவும் இடம்பெறக் காண முடிகிறது. தமிழர்களின் பொங்கல் திருவிழாவின் போதும், மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் ஓணம் திருவிழாவின் போதும் முதுவர்கள் பங்கெடுக்கின்றனர்.

முதுவர் மொழி                        தமிழர் மொழி

விளம்பு                                           சொல், கூறு

மக்காள்                                              பிள்ளைகள்

சின்ன அம்மணி                                சின்னப் பெண்

இளையர் சத்திரம் அல்லது பொது சத்திரம்

          முதுவப் பழங்குடியினரது குடியிருப்புகளில் தவறாமல் இளைஞர் சத்திரம் அல்லது பொது சத்திரம் என்று இம்மக்களால் கட்டப்படுகின்றது. இந்தப் பொது சத்திரத்தின் நடுவில் தீக்கனல் இரவு வேளை முழுவதும் இருக்கும் வண்ணம் பெரிய விறகுக் கட்டைகள் வீட்டுக்கு ஒருவர் ஒரு கட்டை கொண்டு வந்து பங்களிக்கின்றனர்.

            இச்சத்திரத்தில் விருந்தாளியாக வந்த ஆடவர்கள், இளைஞர்கள், மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் உள்ள வீட்டில் உள்ள ஆடவர்கள், குழந்தை பிறந்த வீட்டில் உள்ள ஆடவர்கள் ஆகியோர் பொதுச்சத்திரத்தில் இரவு வேளைகளில் தவறாமல் படுக்க இச்சத்திரம் எனும் குடிசை வீடு பெரிதாகக் கட்டப்படுகின்றது.

            ஆடவர்களுக்கு இருப்பது போல பெண்களுக்காகவும் ஒரு பொது சத்திரம் கட்டப்பட்டு உள்ளது. இதில் பூப்படைந்த பெண்கள், பூப்படைய உள்ள இளவயதுப் பெண்கள், வீட்டு வந்த உறவுக்காரப் பெண்களும் படுக்கச் சென்றிட வேண்டும். ஆடவர்க்கும் பெண்களுக்கும் உள்ள இந்த இரு சத்திரங்களும் ஊர்க்குடியிருப்பினுக்கு அப்பால் இரு வேறு திசைகளில் தனித்தனியாகக் கட்டப்பட்டிருக்கும்.

            பெண்கள் பொதுவாக இளைஞர்களிடம் பேசுதல் தவிர்த்துக் கொள்கின்றனர். அவ்வாறு தவறுதலாகப் பேசி கிண்டல் செய்தாலோ, முறைதவறி நடந்து கொண்டாலோ ரூபாய் 5 லிருந்து 10 வரை தண்டம் விதிக்கின்றனர்.

இசைக்கருவிஆட்டம்

            கொயல் எனும் குழல் இசைக்கருவி, உறும்புக் கட்டை எனும் உறுமி இசைக்கருவி, தம்பட்டம் எனும் தப்பு இசைக்கருவி வாத்தியம் ஆகியவற்றை ஆடவர்கள் இசைக்க பெண்கள் ஆட்டம் ஆடுகின்றனர்.தோலிசைக் கருவிகள் வெள்ளாட்டுத் தோல், அல்லது மான்தோல் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

     இசைக்கருவிகள் குழந்தைப் பேற்றின் போதும், திருமண விழாவின் போதும் வாசிக்கப்படுகின்றன. சில வேளைகளில் விளை நிலங்களுக்கு வரும் யானைகளையும் விரட்டவும் பயன்படுத்துகின்றனர்.

தொழில்

            ஆடுமாடுகள் வளர்க்கும் இவ்வின மக்கள் மாடு, ஆடு ஆகியவற்றை விற்பனை செய்கின்றனர். எலுமிச்சை விளைவித்து விற்கின்றனர். பெண்கள் ஆடுமாடுகளின் சாணங்களைச் சேகரித்து விற்கின்றனர். முதுவர்கள் தங்கள் நிலங்களில் தாங்களே உழைக்கின்றனர். கூலி வேலைகளுக்குச் செல்வதில்லை.

குடியிருப்புப் பகுதி

            காடுகளில் விளையும் சோளத்தட்டை, தானியங்களிலிருந்து கிடைக்கும் வைக்கோல் ஒரு வகை புல் ஆகியவற்றைக் கொண்டும், மூங்கில், பிரம்புகள், தேக்கு போன்ற மரங்களைக் கொண்டும் ஆங்காங்கே விளைநிலங்கள் தயார் நிலையில் பகுதிகள் அருகே வீடுகளையும் தாங்களே கட்டிக் கொள்கின்றனர்.

நீலகிரி தோடர்களின் சமூக வாழ்வில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள்

எனும் தலைப்பில்,

            நீலகிரி மலையில் வாழும் மலையின மக்கள் தோடர் என்ற இனத்தவர் ஆவர். இவர்கள் தாங்கள் வளர்க்கும் எருமை மாடுகளின் கொம்புகளைத் தொட்டு வணங்குகின்றனர். இம்மக்கள் 5 அடி 7 அங்குலம் வரை ஆண்களும், 5 அடி 6 அங்குலம் வரை பெண்களும் சராசரி உயரமுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.இவர்கள் வாழும் பகுதியை மத், மந்த், மந்து என்றெல்லாம் அழைக்கின்றனர். தோடர்களில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியோர் ஒரு சாரராக உள்ளனர்.

திருமணம் - உறவு நிலை

            ஒரு மந்தில் உள்ளவர்களிடையே திருமணம் இல்லை. பழமையான தேவையற்ற பால்ய மணம் மற்றும் பலர் உறவு நிலை ஆகியவை இன்று மாறி கொண்டுவருகின்றன.

உணவுமுறை

            எருமைகளைச் சொத்தாக வைத்திருக்கும் இத்தோடர்களில் பச்சைப்பால், பாலிலிருந்து கிடைக்கும் வெண்ணெய் போன்ற வகைகளை விரும்பி உட்கொள்கின்றனர். ராகி, தினை என்னும் தானியங்களை கோத்தர்களிடமிருந்து பண்டமாற்றுச் செய்து அத்தினையில் பால், வெண்ணெய் போன்றவற்றைக் கலந்து உருண்டையாகச் செய்து உண்ணுகின்றனர். சமைத்து உண்ணுதல் என்பது இம்மக்களிடையே அரிதாக இருந்தது.

            தற்போது நியாய விலைக் கடைகள் அரசினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் பயனால் அரிசி, கோதுமை, பச்சரிசி போன்றவற்றை வாங்கிச் சமைத்து உண்கின்றனர்.

அரசு அலுவலகங்கள், மற்றுமுள்ள ஏனைய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஆண் பெண் ஆகியோர் மூன்று வேளைகளிலும் உணவு உண்ணும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். முதியோர் மற்றும் எருமைகளை மேய்த்து வீடுகளில் தொழில் செய்து வாழ்வோர் காலை இரவு என்னும் இரு வேளைகளில் மட்டுமே உணவு உட்கொள்ளும் வழக்கத்தைத் தொடரந்து கொண்டுள்ளனர்.

உடை - ஒப்பனை முறை

            ஆண்கள் குமண், தார்ப், புத்துக்குளி என்பனவற்றை முறையே அணிகின்றனர். தார்ப், புத்துக்குளி ஆகியவற்றைப் பெண்கள் அணிகின்றனர். குமண் என்பது கோவணம் ஆகும். தார்ப் என்பது இடுப்பிலிருந்து கெண்டைக்கால் வரை அமையும் நீண்ட ஆடை ஆகும். புத்துக்குளி என்பது உடம்பைப் போர்த்துக் கொள்ள உதவும் ஆடை ஆகும். தோடர்களுள் ஆடவர் கைத்தடியை எப்போதும் கொண்டுள்ளனர். பெண்கள் தங்கள் தலைமுடியைக் கைவிரல்களால் சுருட்டிச் சுருட்டி நீண்டு தொங்குமாறு செய்து தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றனர். ஆடவரும் பெண்டிரும் கடு்க்கண் அணிந்து காணப்படுகின்றனர்.

இறப்பு சடங்கு முறை

            தோடர்களின் இறப்புச் சடங்கின் போது பல்வேறு மலை முகடுகளில் வாழும் தோடர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்கின்றனர். ஒருவரின் இறப்புச் சடங்கின் போது எத்தனை எருமைகள் வெட்டப்படுகின்றன (பலி) என்பதைப் பொறுத்து அவரின் சொத்து மதிப்பீடு என்பது தீர்மானிக்கப்படுகின்றது. எல்லா மந்த் தோடர்கள் வந்து சேர மூன்று அல்லது 5 நாட்கள் ஆகும். எனவே இறந்தவர்களை அவர்கள் வரும்வரை வைத்திருப்பார்கள். அவர்களின் தட்பவெப்பநிலை சாதகமாக அமைவதால் பிரச்சனை ஏதுமில்லை.

            கிறித்துவ மதத்தைத் தழுவிய தோடர்களின் இறப்புச் சடங்குகள் பாதிரியார் உள்ளிட்ட நிலையில் சிலுவைக் கம்பு செய்யப்பட்டும். கிறித்துவ முறைப்படி அடக்க ஆராதனை செய்யப்பட்டும் நடைபெறுகின்றன.

சோளகர் - லிங்காயத்தார்

            சோளகர் என்றும் சோளவர் என்றும் அழைக்கப்படும் இம்மக்கள் தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் உள்ள கர்நாடக எல்லையோரத்தில் அதிகம் வாழ்கின்றனர். கருத்த மேனி கொண்ட இம்மக்கள் இன்றளவும் உணவு தேடும் மக்களாக உள்ளனர். இம்மக்களை ஆசிரியர் நேரில் சந்தித்துப் பெற்ற அனுபவங்களையேக் கட்டுரையாக வழங்கியுள்ளார்.

சோழகர் வாழும் பகுதிகள்

            இம்மக்கள் மலைக்காடுகளில் உள்ள நீர்நிலைகளின் அருகே அமைகின்றன. வேட்டை ஆடுவதற்கேற்ற அடர்ந்த காடுகள், பள்ளத்தாக்குகள் போன்ற இடங்களில் கூரைக் குடிசைக் குடியிருப்புகள் உள்ளன. ஓசூரில் 50 குடிகளும், ஆலனையில் 10 குடிகளும், கொங்காடியில் 100 குடிகளுக்குக் கூடுதலாகவுமு், ஆலசுப்பட்டியில் 20 குடிகளும், தன்னக்கரையில் 5 குடிகளும் தம்பரட்டியில் 5 குடிகளும், தாமரைக் கரையில் 20 குடிகளும் வாழ்கின்றனர். கர்நாடக எல்லையோரத்தில் வாழ்வதால் அண்டை மாநில மொழியையும் பேசத் தெரிந்துள்ளனர்.

சோளகர் - லிங்காயத்தார் உறவு நிலை

          லிங்காயத்தார் எனும் மலையின மக்கள் சைவ உணவு உண்போராக உள்ளனர். கழுத்தில் லிங்கம் வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்டு, மாலையாக, சின்னமாக அணிந்துள்ளனர். லிங்க மாலையுடன் இருக்கும் இம்மக்கள் அசைவ உணவு உண்ணும் சோளகரைத் தங்கள் வீடுகளில் நுழைய அனுமதிப்பதில்லை.

வாழ்க்கை முறை

·         காடுகளில் வேட்டையாடுதலை முதன்மை தொழிலாகக் கொண்டிருந்த மக்கள் இன்று கூலி விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் நெல், ராகி, சாமை, தினை போன்ற தானிய பயர்களோடு அவரை, துவரை, மற்றும் மரவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவற்றையும் வீட்டருகே பயிர் செய்து கொள்கின்றனர்.

·         கல்யாணம், திருவிழா போன்றவைக்குக் கருப்புச்சாமி, சித்தசுராசாமி, வெள்ளைப் பறையன், மசனியம்மா, மாதைய்யா, பெரியசாமி போன்ற சிறுதெய்வங்களை வணங்கி பூசை செய்கின்றனர்.

·         இறந்து போனவர்களைப் புதைக்கின்றனர்.

·         வினாசி, தோலு, மத்தளம் எனும் குழலிசைக் கருவி தவில் போன்ற இருபுற முழவு, மத்தளம் ஆகிய இசைக் கருவிகளை இவர்களே தயார் செய்து இயக்கிக் கொள்கின்றனர்.

·         பெத்ஜில்பல, துர்சனம்பல, ஊகமலை, கொண்டப்பூர் ஆகிய பகுதிகளில் இம்மக்கள் வாழ்கின்றனர்.         

நீலகிரி கோத்தர் உணவுமுறையில் மூலிகை மருத்துவம்

            கோத்தரின மக்கள் தலைக்கனம், கண்வலி, உடம்பு சூடு. வயிற்று வலி, காயம்பட்ட புண், எலும்பு முறிவு, சொறி, சிரங்கு, விசக்கடி, முள் தைத்த புண், மகப்பேறு, தாய் உடல் நலம் பேணுதல் போன்ற இவர்களின் நோய்களுக்கு மருத்துவர்களாகவும் விளங்குகின்றனர்.

            நீலகிரி மலையின மலையின மக்களாகிய கோத்தர்களிடம் மூலிகை மருத்துவ முறைகள் இன்றளவும் பெரும்பான்மையாகக் கடைபிடிக்கப்படுகின்றன. கோத்தர்களது மூலிகைகள் பலவற்றில் இலைப் பகுதிகள், கொழுந்துப் பகுதிகள், தண்டுப் பகுதிகள் சிறுபான்மையாக வேர்ப்பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. பத்தியமற்ற முறையே பெரிதும் இவர்களிடம் வழக்கமாக உள்ளது.

இருளர் பழங்குடியினரது விளையாட்டுகள்

      விளையாட்டுகள் வட்டாரங்களுக்கு வட்டாரம் வேறுபடும். பெண்களின் கும்மி விளையாட்டு, வயது முதிர்ந்தோர் விளையாடும் விளையாட்டுகள், சிறுவர், இளைஞர் விளையாட்டுகள் வாழ்வியல் விளையாட்டுகள் போன்றவையாகும். சமவெளிகளில் விளங்கும் விளையாட்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது பொதுவாக அறிவுத் திறன்களை விட உற்பத்தித் திறன்கள் அதிகம் கொண்டவையாக விளங்குகின்றன. சிறுவர் சிறுமியர், இளைஞர் ஆகியோரது விளையாட்டுகள் குறிவைத்து எய்யும் நிலை, ஓடுதல். தப்பித்தல், ஒளிதல், கண்டுபிடித்தல், குழுமநிலையில் செயற்படுதல், கைவிரல்களால் நூல் பின்னுதல், போன்ற விளையாட்டுக் கூறுகள் இருளர் மக்களது வேட்டைத்  தொழில், கூடைப் பின்னுதல், கண்ணி வலை பின்னுதல் போன்ற தொழில்களோடு தொடர்பு கொண்டுள்ளன.

      இந்நூலில் ஆசிரியர் தமது முன்னுரையில் பல்வேறு கருத்தரங்குகளில் வாசித்தளிக்கப்பட்டக் கட்டுரைகள், மற்றும் கள ஆய்வுகளின் போது பெற்ற தரவுகள், தகவல்கள் ஆகியவை கொண்டும், சில இதழ்களில் வெளியான கட்டுரைகள் இங்கு நூல் வடிவம் பெறுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

    நூலில் பன்னிரண்டு கட்டுரைகளும், இறுதியிலுள்ள கலந்துரையாடல் பதிவுகளும் தமிழகத்தின் மூத்தப் பழங்குடிகளாகிய தோடர், சோளர், லிங்காயத்தார், புலையர்,  காணிக்காரர், இருளர், லம்பாடியர், மலவர் போன்ற மலையின மக்கள் அனைவரின் வாழ்க்கையின் நிலைகளாக,

·         வரலாற்றுப் போக்கின் வித்தியாசமான காலகட்டங்களுக்குரிய தொழில்களால் அவர்கள் ஒருவருக்கொருவர்  வேறுபட்டு இருக்கிறார்கள்.

·         வேட்டையாடி அன்றாடம் உணவு தேடும் இனத்தாரும், விவசாயம் செய்து ஆண்டு முழுவதற்கும் சேமிக்கும் இனத்தாரும் அடிமைகளாக இருக்கிறார்கள்.

·           சப்பை மூக்குகளும்- எடுப்பான மூக்குகளுமாக எவ்வளவு வித்தியாசப்பட்டு் இருக்கிறார்கள்.

·         தொழில் வேறுபாடு மூலம் உணவு வேறுபாடு, உணவு வேறுபாடு மூலம் தீண்டாமை, ஜாதிபேதப் புயல் எங்கும் மையங்கொண்டு உள்ளது.

·         சடங்குகள் பிறப்புச் சடங்கு முதல் நீத்தார் நினைவுச் சடங்கு வரை விதைப்பு விழா முதல் பணியார விழா வரை எல்லாமே அவர்கள் சமூக வாழ்வோடு இரண்டறக் கலந்து நிற்பதை நூலாசிரியர் அருமையாகக் காட்டுகின்றார்.

·         வரதட்சணைக் கொடுமை அங்கு இல்லை. ஆண்தான் பெண்களுக்குப் பரிசம் போடவேண்டும். சிறப்புச் செய்ய வேண்டும். இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.

நிறைவாக,

         இந்நூலிற்காக நூலாசிரியர் கே..குணசேகரன் அவர்கள் கள செய்த இடங்களாக,

·         ஓராண்டுக்கான  திட்டப்பணியாக நீலகிரி மலையின  மக்களிடையே களஆய்வு செய்தக் கட்டுரையைத் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

·          ஜவ்வாது மலை, ஆனை மலை, கல்வராயன் மலை, தென் பொதிகைத் தொடர்ச்சி மலை, சிறுமலை போன்ற தமிழக மலைகள் தோறும் ஏறிச் சுற்றி முதுவர், கோத்தர், தோடர், சோளகர், புலையர், காணிக்காரன், இருளர், லம்பாடியர், மலசர், காடர் எனத் தமிழக மலையின மக்களோடு கலந்துரையாடிய நினைவுகளைத் தம் கட்டுரையில் பதிவுச் செய்துள்ளார்.

·         மொழியியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், பிற மக்கள் இனங்களோடு ஒப்பிட்டு பயன்தரத்தக்க பல அரிய தகவல்களை ஒரு ஆய்வுக் களஞ்சிய நூலாக நமக்கு அளித்துள்ளார் நூலாசிரியர்.

·         மேலும் இம்மக்களுக்கு எப்படி உதவலாம் என்று மிகுந்த மனித நேய பொறுப்புணர்வோடு குறிப்பிட்டுள்ளார்.

·         இந்நூல் ஆய்வு மாணவர்களுக்கும், சமூக பொறுப்பாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றேன்.

 

           

         

 

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...