கும்பகோணம் சென்ற அனுபவங்களாக...
கும்பகோணம்
கும்பகோணம்
"கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பல பழமையான மற்றும் சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. 12
ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா மிகவும் புகழ்
பெற்றது.
கும்பகோணம் வெற்றிலை உலகெங்கிலும் மிகவும்
பிரபலமானது.
கும்பகோணம் சென்ற அனுபவங்கள்
நானும் என் மகளின் தோழி நிருபமா அவர்களும் 24.11.2025 அன்று கும்பகோணத்திற்குச் சென்றோம். எங்கள் புது வீட்டிற்கு ஊஞ்சலுக்குப் பித்தளைச் செயின் வாங்கச் சென்றோம். மற்ற இடங்களில் கேட்டு விட்டு கும்பகோணத்தில் குறைவான விலையில் வாங்கலாம் என்று கும்பகோணத்திற்குச் சென்றோம். மரகதலஷ்மி என்ற கடையில் 22,000 ரூபாயில் ஊஞ்சல் செயின் வாங்கினோம். பாத்திரக்கடை மிகப் பெரிய அளவில் மூன்று அடுக்கு மாளிகையில் அதிகமான பித்தளை, வெங்கலம் என்று கோயில் சாமான்கள், கல்யாணத்திற்குத் தேவையான சாமான்கள் என்று அதிகமாக இருந்தது. ஊஞ்சல் செயின் தவிர வெங்கலத்தில் 2 டம்ளர், சொம்பு, கெட்டில், உருளி என்று வாங்கினேன். மிகவும் மனநிறைவாகவும், நாங்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டில் வாங்கிவிட்டு வந்தோம். அதிகமான வகைகளில் மாடல் இருப்பதால் நாமும் நமக்குப் பிடித்த வகையில் தேர்வு செய்வதற்கு நன்றாக இருந்தது.
பாண்டியன் மெஸ்
அன்று மதியம் 75 ஆண்டு பாரம்பரியம் மிக்க பாண்டியன் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு
வந்தோம். மட்டன் பிரியாணி, முழு சாப்பாடு, காடை மசாலா, சிக்கன் என்று சாப்பிட்டோம்.
சுவையாகவும், எல்லா வயதினரும் சாப்பிடும் வகையில் காரம் அதிகம் இல்லாமல் மிகவும் நன்றாக
இருந்தது.
தாரசுரம் (ஐராவதேஸ்வரர்
கோயில்)
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை
தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில்
இக்கோயிலும் ஒன்றாகும். 1987-ல், பெருவுடையார்
கோயில், யுனெஸ்கோ அமைப்பால்
உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும்
ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.
தமிழ்நாடு
தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள
கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை
பதிப்பித்துள்ளது.
இக்கோயிலுக்குச்
சென்று நம் முன்னோர்களின் கலைத்திறனை கண்டு வியந்தோம். நாங்கள் மதியம் 2 மணிக்குச்
சென்றோம். எனவே நாங்கள் சாமியைப் பார்க்கவில்லை. சாமியைத் தரிசனம் செய்யாமல் கோயிலின்
சிற்ப வேலைப்பாடுகளைப் பார்த்து விட்டு வந்தோம். மிகவும் அமைதியாகவும், குழந்தைகள்
விளையாடுவதற்கு நல்ல அமைதியான இடங்களும் உள்ளது. மிகவும் நன்றாக இருந்தது.
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால்
தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது சரஸ்வதி மஹால் நூலகம். இது
ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்று. இந்த நூலகம், நாயக்கா்
மற்றும் மராத்திய மன்னா்களின் 300 ஆண்டுகால சேகரிப்பின்
பொக்கிஷமாகத் திகழ்கிறது. சுமார்
617
ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சோழர்கள் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டு
அவர்களின் பணியால் வளர்ச்சியடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க
மன்னர்களால் மேம்படுத்தப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால்
வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட
ஓர் ஒப்பற்ற நூலகமாக திகழ்கிறது.
நிறைவாக,
மதியம்
3 மணிக்குத் தஞ்சை சரஸ்வதி மஹாலுக்குச் சென்றோம். நான் சுவடியியல் சார்ந்த புத்தகங்கள்
பார்க்கச் சென்றேன். அங்குப் புத்தகங்களைப் பார்த்துவிட்டு வந்தோம். பின் நாங்கள் அங்கிருந்து
புறப்பட்டு மாலை 5.30 மணியளவில் திருச்சிக்கு வந்தோம்.
இன்றைய
நாள் காலை 7.30 மணிக்குத் திருச்சியிலிருந்து புறப்பட்டு கும்பகோணம், தஞ்சாவூர் வந்து
மாலை 5.30 மணிக்கு வந்துவிட்டோம். இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும்
அமைந்தது.







Comments
Post a Comment