Skip to main content

சதுரங்கக் காய்கள் (கவிதைத் தொகுப்பு)

  சதுரங்கக் காய்கள் ( கவிதைத் தொகுப்பு ) பாவலர் வையவன்   நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் சதுரங்கக் காய்கள் என்ற தலைப்பில் பாவலர் வையவன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தை ஜுலை 2015 - ஆம் ஆண்டு   திருவண்ணாமலை - சுபம் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 160 ,   விலை 125 ரூபாய். பாவலர் வையவன் அவர்கள் தமிழக எழுத்தாளர்களுள் ஒருவர். மேடைகளில் அரிமா வென முழங்கும் ஆற்றல் மிக்க பேச்சாளர். அவரது படைப்புக்களில் நாடு, மொழி, மக்கள், தன்மானம்,   கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள், சிறுகதைகள், கவிதைத் தொகுப்புகள், ஆங்கில நூல்கள், கட்டுரை நூல்கள் என   ஐம்பதுக்கும் மேற்பட்டப் படைப்புக்களைப் படைத்தவர். சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், மொழிப் பெயர்ப்பாளராகவும் விளங்கியவர் . தனது மகள் பெயரில் அமைந்த ‘தாரணி பதிப்பகம் ’ மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். படைப்பிலக்கியத்திற்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சதுரங்கக் காய்கள் எனும் தலைப்பில் அமைந்த இந...

ஓலை சுவடி – வரலாறு


 

ஓலை சுவடி – வரலாறு 

          பழங்காலத்தில் பள்ளிகள் திண்ணைப் பள்ளிக்கூடங்களாக (ஆசிரியரின் வீட்டுத் திண்ணை, சத்திரம், சாவடி, ஊர் மன்றம், கோவில்) அல்லது தெருப்பள்ளிக் கூடங்களாக இருந்துள்ளன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைவாக தான் இருப்பர். இம்மாணவர்களில் பெரும்பாலோர் தொடக்கநிலைக் கல்வியோடு நிறுத்திவிடுவர். ஒருசிலர் மட்டும் தனி ஆசிரியரைத் தேடிச் சென்று இலக்கண இலக்கியங்களைக் கற்றுள்ளனர். ஆசிரியர் இவர்களுக்குப் பாடங்களை வாய்மொழிப் பாடங்களாகவே சொல்லித் தருவர். இக்கல்வி முறையே பழங்காலத்தில் நிலவி வந்துள்ளது. அக்காலத்தில் மனன நிலையிலேயே நூல்கள் பயிலப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்துள்ளன. காட்டாக, நக்கீரரின் இறையனார் களவியல் உரைபன்னிரண்டு தலைமுறைகளாக வாய்மொழி பாடமாகவே  வளர்ந்து ஏட்டு உருவம் பெற்றதை இந்நூல் வரலாறு சுட்டுகிறது.

          பழங்காலத்தில் மாணவர்களுக்கு எழுத்துக்களைச் சொல்லிக் கொடுக்க நெல், அரிசி, மணல் போன்றவற்றைப் பரப்பி அவற்றில் எழுத்துக்களை எழுத வைத்துள்ளனர். இம்முறையில் பயிற்சி பெற்றவர்களுக்கு நரம்பு நீக்கப்படாத, பதப்படுத்தாத, குண்டெழுத்தாணி கொண்டு முதல் முதலில் ஏடுகளில் எழுதப் பழக்கியிருக்கின்றனர். இப்பழக்கத்தை வளர்த்துக் கொண்டவர்களே பின்னாளில் ஏடெழுதுவோராகத் திகழ்ந்திருக்கின்றனர். இவர்கள் தொடக்க காலத்தில் தமக்குத் தேவையான நீதி நூல்கள், அந்தாதி, சதகம், மாலை போன்ற அளவில் சிறிய நூல்களை எழுதியிருக்கின்றனர். பின்னர் சமய இலக்கியங்களை எழுதியிருக்கின்றனர். இவ்வாறு கல்வி கற்றதன் அடிப்படையில் பல்வேறு வகையான ஓலைச் சுவடிகள் உருவாகியிருக்கின்றன.

          தொடக்கக் கல்வியை முடித்தவர்கள் மேற்கல்வி கற்க தனியொரு ஆசிரியரை நாடிய போது, அங்குப் படிக்கத் தேவையான நூல்களைப் படியெடுத்திருக்கின்றனர். சித்த மருத்துவர்கள் தாம் கையாளும் வைத்திய முறைகளை ஏடுகளில் எழுதி வைத்திருக்கின்றனர். இதுபோல் பல்வேறுப்பட்ட செய்திகளைப் பல்வேறு வகையான பனையோலைகளில் பதிவு செய்த காலமே ஓலைச்சுவடியியலின் தோற்றமாக அமைகின்றது.

ஓலைச் சுவடியியலின் வளர்ச்சி

          மூல ஏடு என்பது வாய்மொழியாக வழங்கப்பட்டு பிறிதொரு காலத்தில் வேறொருவரால் ஏட்டுருவம் பெற்றதையும், ஆசிரியரால் எழுதப்பெற்றதையும் (ஆசிரியர் அல்லது பிறரைக் கொண்டு எழுதுவித்தததையோ) கூறுலாம். மூல ஏடுகள் உருவானது ஓலைச் சுவடியியலின் தோற்றமாக அமைகிறது. இம்மூல ஏடுகளிலிருந்து பல்வேறு நிலைகளில் உருவாகும் படியேடு (நகலேடு) ஓலைச்சுவடியியலின் வளர்ச்சிக்கு அடிகோலுகின்றன.

படியெடுப்பதற்குரிய காரணங்கள்

          படியெடு என்பது முன்னேட்டைப் பார்த்து எழுதப்பெறும் பிறிதொரு ஏடு ஆகும். இதனை வழியெடு என்றும் அழைப்பர். முன்னேடு என்பது எழுதப்படும் ஏட்டிற்கு மூலயேடு ஆகும். படியெடு எழுதும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தமையினால் தான் இன்றும் நமக்கு பழைய இலக்கிய இலக்கண மருத்துவ நூல்கள் கிடைக்கின்றன. பல்வேறுப்பட்ட சூழ்நிலைகளில் அக்காலத்தில் மக்கள் படியேடுகள் எழுதியிருக்கின்றனர். பனையேடுகள் அதிகப்படியாக நானூறு ஆண்டுகளே வாழக்கூடிய திறனைப் பெற்றவை என்பது ஆராய்ச்சியாளர்களின் எண்ணமாகும். சங்க கால இலக்கிய இலக்கணங்கள் இன்றும் நமக்குக் கிடைப்பதைக் காணும்போது பழைய சுவடியைப் பார்த்து படியெழுக்கும் வழக்கம் இருந்திருத்தல் வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.

          சுவடிகளைக் காக்கவேண்டி அதிலுள்ள செய்திகளைப் பிறிதொரு ஏட்டில் எழுதிக் கொண்டு பழைய ஏடுகளை ஆடிப்பெருக்கிலோ நல்லதொரு கிழமையிலோ ஓமம் வளர்த்துத் தீயிலோ போட்டு எறிந்தும் எரித்தும் இருக்கின்றனர். இதனால் மூலம் அழிந்தாலும் மூலச் செய்தி அழியாமல் காலந்தோறும் காப்பாற்றப் பெற்று வந்துள்ளது. கற்கப் போகும் நூல்களை ஆசிரியரிடமிருந்தோ ஏனையோரிடமிருந்தோ ஓலைச் சுவடிகளைப் பெற்றுப் படிப்பதற்காகவும் பாதுகாப்பிற்காகவும் படியெடுத்து உள்ளனர்.

          பெற்றோரின் சொத்துக்களை அவரின் வாரிசுதாரர்கள் பங்கு பிரித்துக் கொள்ளும் போது அவர் பயன்படுத்தியபாதுகாத்து வந்த சுவடிகளையும் சமமாகப் பிரித்திருக்கின்றனர். ஒரே சுவடியைப் பலருக்கு அதிலுள்ள ஏடுகளைப் பிரித்துக் கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் ஓலைச்சுவடி முழுமை பெற மற்ற ஏட்டிலுள்ள செய்திகளை ஒவ்வொருவரும் படியெடுத்திருக்கின்றனர். மூல ஆசிரியர் எழுதிய ஒரு ஓலைச் சுவடிக்குப் பலர் தாமாகவோ பிறரைக் கொண்டோ எழுதிய நகலேடுகள் பல்கிப் பெருகிய பின், படியேடுகள் மூல ஏட்டிலிருந்து மாறுபட்டமையும் நிலைக்கு வந்த பிறகு கல்வியிற் சிறந்த ஒருவரால் ஒரு நூல் குறித்த பல சுவடிகளைத் திரட்டி ஒப்பாய்வு செய்து திருந்திய பாடமாகஉண்மையான பாடமாக பிறிதொரு சுவடியை உருவாக்கி இருக்கின்றனர். இவ்வாறு உருவாக்கும் முறையினைத் திருத்திய ஏடெழுதுதல் என்பர்.

          காலங்காலமாக வைத்துப் போற்றக் கூடிய செப்பேடு மற்றும் கல்வெட்டுச் செய்திகளையும் மக்கள் ஓலைகளில்தான் முதன்முதலில் எழுதி வடித்திருக்கின்றனர். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு உரையாசிரியர்களால் பல்வேறு உரைகள் தோன்றியிருக்கின்றன. காலந்தோறும் பல்வேறு இலக்கிய வகைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இவ் இலக்கிய வகைகளுக்குள் பழந்தமிழ் இலக்கிய வடிவங்கள் பல மாற்றுருவம் பெற்றும், கிளைக்கதைகள் தனிக்கதைகளாக மாறியும், சில புத்திலக்கியங்களாகவும் தோன்றி வளர்ந்திருக்கினறன. குறிப்பாக, இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசக் கதைகள் மக்களிடையே இசையோடு பரப்பப்பட்டு வந்துள்ளன. இதனால் அவரவர் விரும்பிய வண்ணம் அந்நூல்கள் முழுமையாகவோ ஒரு சில நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டோ பல இலக்கிய வகைகள் ஓலைச்சுவடிகளில் முகிழ்ந்திருக்கின்றன.

      மன்னர்கள், குறுநில மன்னர்கள், செல்வந்தர்கள், ஆதீனங்கள், கல்வியாளர்கள் போன்றோரின் சுவடி ஆர்வமும், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், பிற தலைவர்கள் மீது பாடிய சிற்றிலக்கியச் சுவடிகளின் தோற்றமும் சுவடிகள் பெருகுவதற்குத் தோற்றுவாயாக அமைந்துள்ளன.

          குழந்தைகள் முதல் முதியோர் வரை இருபாலாருக்கும் பயன்படத் தக்க தமிழ் மருத்துவம் சித்தர்களாலும் முனிவர்களாலும் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. இம்மருத்துவ முறைகள் பயன்பாட்டு முறையில் கைகண்ட மருத்துவர்களாலும், பயன்படுத்திப் பயன்பெற்றவர்களாலும் பொது மக்களாலும் ஒவ்வொரு வகை மருத்துவமும் ஏடுகளில் எழுதித் தமக்கென ஒவ்வொருவரும் வைத்துக் கொள்ள எண்ணினர். இதே போல் சோதிடம், கணிதம், இசை, நாடகம், தோத்திரங்கள், சாத்திரங்கள் போன்ற நூல்களை அந்நூல்களில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களிடம் வைத்துக் கொள்ள எண்ணினர். இவ்வெண்ணத்தின் பலனாக பலர் தாமாகவோ பிறரைக் கொண்டோ படியெடுத்து வைத்துள்ளனர். இவ்வாறு பல்வேறு நிலைகளில் ஓலைச்சுவடிகள் பல காலகட்டங்களில் உருவாக்கப் பெற்று பல்கிப் பெருகி வளர்ச்சிப் பெற்றுள்ளன.

பார்வை நூல்

1.  உத்திராடம்.கோ, - சுவடியியல், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை – 600 005.

 

Comments

Popular posts from this blog