Skip to main content

அறம் பழகு! (புத்தக மதிப்புரை)

  அறம் பழகு ! ( புத்தக மதிப்புரை )    புத்தக மதிப்புரையில்  குரும்பலூர் இராஜீ மோகன் அவர்கள் எழுதிய அறம் பழகு ! என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை நவம்பர் 2022 - ஆம் ஆண்டு , சென்னை , ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 92, விலை 180 ரூபாய் . ஐயா இராஜீமோகன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பிறந்தவர் .    அரசுப்பள்ளியில் 7 வது வரை படித்தவர் .   ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன்   குருகுலத்தில் உயர்க்கல்வியும் , அண்ணா பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் பொறியியல் படிப்பையும் , நிர்வாக மேலாண்மை என்ற முதுநிலை படிப்பையும் பயின்றவர் . 37 வருடங்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர் . ·       மாணவர்களின் ஆற்றலை நெறிப்படுத்தும்   இந்நூலுக்கு   பெருமை சேர்க்கும் வகையில் தஞ்சாவூர்   பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை முனைவர் வி . திருவள்ளுவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார் . ·         சென்னை , தெற்கு இயில்வேயில் பணி...

அறம் பழகு! (புத்தக மதிப்புரை)

 

அறம் பழகு! (புத்தக மதிப்புரை)

  புத்தக மதிப்புரையில் குரும்பலூர் இராஜீ மோகன் அவர்கள் எழுதிய அறம் பழகு! என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம். இந்தப் புத்தகத்தை நவம்பர் 2022 -ஆம் ஆண்டு, சென்னை, ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 92, விலை 180 ரூபாய்.

ஐயா இராஜீமோகன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பிறந்தவர்.   அரசுப்பள்ளியில் 7 வது வரை படித்தவர்.  ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன்  குருகுலத்தில் உயர்க்கல்வியும், அண்ணா பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் பொறியியல் படிப்பையும், நிர்வாக மேலாண்மை என்ற முதுநிலை படிப்பையும் பயின்றவர். 37 வருடங்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர்.

·     மாணவர்களின் ஆற்றலை நெறிப்படுத்தும்  இந்நூலுக்கு  பெருமை சேர்க்கும் வகையில் தஞ்சாவூர்  பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை முனைவர் வி.திருவள்ளுவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

·       சென்னை, தெற்கு இயில்வேயில் பணியாற்றும் .இரவீந்திரன், RTS அவர்கள் சிறப்பானதொரு அணிந்துரை வழங்கியுள்ளார்.

·         .இரவீந்தரன் அவர்கள் அனல்மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல்வேறு அமைப்புகளில் பணியாற்றியவர்.   இந்நூலுக்கு சிறந்த விரிவானதொரு அணிந்துரையை வழங்கியுள்ளார். 

நூலாசிரியர் தமது முன்னுரையில் இராமகிருஷ்ணா மிஷன் மாணவனான நான், சுவாமி விவேகானந்தரின் வீர முழக்கங்கள் அனைத்தையும் சத்திய வாக்குகளாக உணர்ந்து அவைகளைக் கொள்கையாகவும், கோட்பாடாகவும் என்னில் தாக்கத்தை ஏற்படுத்தின. அந்த வகையில் இயற்கையில் ஊடுருவிய இறையாக உள்ள அறக் கூற்றுக்களை என் மனதில் ஆழ்ந்து அசைபோடும் வகையில், வெளிவந்த உணர்வுகள் தமிழ் கவிதைகளாக உருவாகின. அவைகளை நித்தம் ஒரு கவிதை என்று எனக்குள் சுய இலக்கு ஏற்படுத்திக் கொண்டு இத்தகைய கவிதைகளை செம்மைப்படுத்திஅறம் பழகுஎனும் தலைப்பில் உருவாகி வந்துள்ளதுஎன்று பதிவு செய்துள்ளார்.

            இந்நூலில் முதலோன் துதி, தமிழ், தர்மம் கொள்வதே வெற்றி! தரணி வெல்வதல்ல!, காலமும் பொருளும் புகழ் காத்து நிற்க!, உள்ளும் புறமும் ஒன்றாக, சிறப்பான வாழ்விற்கு!, பொங்கல் வாழ்த்துகள்!, அப்பாலுக்கும் அப்பால், கருணையால் காப்போம்!, வேற்றுமையைப் போற்று!, உள்ளதே சிறக்கும்; அல்லது வாராது!, இழந்தது அனுபவமாக, வாழ்தல் வளர்ச்சியாக! என்று எழுபதுக்கும் மேற்பட்ட அறம் சார்ந்தக் கவிதைகளை வார்த்துள்ளார் நூலாசிரியர்.

தமிழ் என்னும் தலைப்பில் அமைந்த கவிதைகளாக, எனும் தலைப்பில் அமைந்த கவிதையில்,

            தமிழ் என்பது மொழி மட்டும் மல்ல. வாழ்வியல் தத்துவமும் ஆகும். உயிர் இலாது இயங்காது மெய், உயிர் கொள்ளும் பல மெய், என்று மொழியையும், உயிரின் முக்கியத்துவத்தையும் குறிப்பிடுகிறார் . மேலும் தமிழ் மொழியின் சிறப்பினை,

            விஞ்ஞானம் ஆன மொழி

           மெய்ஞானமும் ஆன மொழி

என்று தமிழ்மொழி எல்லாக் காலத்திலும் சிறந்து விளங்கும் மொழியாக உள்ளது.

தர்மம் கொள்வதே வெற்றி! தரணி வெல்வதல்ல! எனும் தலைப்பில்,

             அகண்ட தேசம் அமைத்திட,

ஆக்ரமிப்பு போர் செய்திட,

வெகு தூரம் ஓடினான்

மாவீரன் அலெக்சாண்டர்

உற்றநோயால் இறக்கையிலே,

உடன் எடுத்து செல்வது

ஏதுமில்லையென்று விரித்து

காட்டினான் இரு கைகளையே!

என்ற கவிதையின் வழி, பெரும் செல்வங்களை ஈட்டிய அலெக்சாண்டர் தன் கடைசி ஆசையாக மூன்று கூறினர்.

·         எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் என் சடலத்தைப் பின் தொடர்ந்து வரவேண்டும்.

·         அடுத்து நான் எழுதிய அத்தனை செல்வங்களும் காட்சிப்பொருளாகத் தொடரவேண்டும்.

·         என்னுடைய இரண்டு வெறும் கைகள் சவப்பெட்டிக்கு வெளியே தெரிய வேண்டும்.

அவர் இறுதி ஊர்வலத்தில் இந்த மூன்று ஆசைகளையும் பூர்த்தி செய்யப்பட்டன.ஆனால் அதற்கான காரணங்களை இங்கு அறிவோம்.

  • மருத்துவர்கள் உடலை மட்டுமே குணப்படுத்த முடியும் ஆனால் உயிரைக் கட்டிக் காக்க முடியாது.
  • அவன் இடையே உள்ள பெரும் செல்வங்கள் அவனை காக்க முடியாது.
  • இந்த உலகை விட்டு செல்லும் போது வெறும் கையோடு தான் செல்ல வேண்டும்.

என்ற இந்த மூன்று தத்துவங்களை எடுத்து உரைக்கத்தான் அவருடைய இறுதி வேண்டுகோள். நேர்வழியில் பொருளை ஈட்டி உவந்து தக்கோர்க்குக் கொடுத்துப் பழகவேண்டும். உண்மை, நேர்மை, உன்னில் உறைந்து போயின் உன்னுலகம் அன்பால்தான் அகண்டு போகும்.

உள்ளும் புறமும் ஒன்றாக! எனும் கவிதை தலைப்பில்,

            உண்மை நேர்மை உனக்குள் இருக்க, உலகில் பல வேடம் போடாது இருக்க வேண்டும். வாய்மை அதுவென்று வையகம் போற்றி நிற்க வேண்டும். உண்மையாக இருந்திட உறுதியான உள்ளம் வேண்டும். திண்மை சேர சேர தெளிவும், செல்லும் பாதையில் உறுதித் தன்மையும் கொண்டு நாளை பற்றி நாம் கொள்ள பயம் கவலை வருவதில்லை.

          ”பொருள் நாடி புகழ் நாடி

          புரியாது ஓடியோரெலாம்

          அடையாளம் அற்றே

          புதைந்து போனார்

          உண்மைக்கும் அன்புக்கும்

          உயிரும் கொடுத்தார்,

உலகில் உயர்ந்து

ஒளிரவும் செய்தார்”

மரணபயம் தந்தது கரோனா மானுடம் சிறக்க; சரிதானா? எனும் தலைப்பில்,

            கண்ணுக்கு தெரிந்த உலகிலேயே கர்சித்து இருந்த மானிடா! எனக்கே எல்லாம் என்று எகத்தாளம் ஆக்கிரமிப்பு செய்தவனே! விண்ணையும் கண்ணையும் தாண்டி விரிந்தது அண்டம் என அறிவாயா? அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் அணுவொன்றிலும் எனத் தெரிவாயா?

            பொருள் தேடிப் புகழ் தேடிப்  போட்டிகள் போட்டது போதலையா? புரண்டு போன உன் வாழ்க்கை பேதம் ஒன்றும் செய்யலையா? பிற உயிர்கள் சிறப்பாய் இயங்க இழந்து போனது நீதானா? வருந்தி இருக்கும் நீ திருந்தி வாழ நினைப்பாயா? வீரம் காட்டினாய் வெளியே மானிடா! ஈரம் கொள்! இறை உள் உணர்ந்து பார்! நித்தம் வாழ்க்கையில் நீயது பழகிக் கொண்டால் மொத்த வாழ்க்கையும் அர்த்தமாய் ஆகும்

          தனக்காக வாழ்ந்தால்

          தன்னையே மாய்ப்பாய்!

          ஊருக்காக வாழ்ந்தால்

          உயரத்தில் இருப்பாய்!

          வாழும் காலம் எவ்வளவு?

          கணக்கு முக்கியமில்லை

          வாழ்ந்த வருங்காலம்

          வகையாய் சிறந்து பார்!

          வருத்த வந்தது கரோனா

          தெளிவு கிடைத்தது வரம்தானா?

          தேற்ற இருப்பது குறள்தானா?

          பிறர் பேணுவோம்! சரிதானா!”

வேற்றுமையை போற்று! எனும் கவிதை தலைப்பில்,

            வேற்றுமையைப் போற்றி ஊற்றாய் அன்பு பாராட்டு! ‘இருவேறு இயந்திரங்கள் ஒன்றாய் என்றும் இருக்காது. பொறியியலில் படித்தது பொறியில் தட்டியது. கடற்கரை மணல்துகள்கள் கணக்கிலே அடங்காது ஒன்றுபோல இரண்டை, ஒருவரும் காட்ட முடியாது. அண்டத்து உயிர் இனம் ஆயிரமாயிரம் கோடி கண்டு பார்ப்பாயா ஒன்றானது தேடி? தேடித்தான் முயன்று செயல்படுத்தவேண்டும்.

          அஞ்சு விரல்களும்

          ஒன்று இல்லை;

          பஞ்சபூத கலவை

          மிஞ்சும் எல்லை

          குணங்கள் பலபல

          கொடுப்பது மூன்றானாலும்

          ஒளிரும் தாமசம்

          செய்யும் ராஜசம்

          மயங்கும் தாமசம் என

          உள்ளது உள்ளபடி,

          கொள்வது நல்ல நெறி,

          மதிப்பது கடமை, பிறரை

          மதிப்பிடுவது மடமை

          கேட்காத மன்னிப்பு,

          கொடுத்தால் இருவருக்கும் தித்திப்பு!

ஏற்றமும் பொறுத்தலும் அன்பு நாம் போற்றுதலே! நன்மை எவர்க்கும் நினைப்பது, நம்மை நாமே உயர்த்துவது ஆகும்.

வந்தது உயிர் வாழ! வழங்குவது நாம் வாழ! எனும் தலைப்பில்,

         உயிர் வாழ்வதற்கு முக்கியமானது உணவு, உடை, உறையால் தீர்வது ஆகும். உணர்வால் வாழ்வது, உள்ளது கொடுப்பது, அன்பு பெருக்குவது, அரிய மானிடராய் பிறந்தாலும் அறிவில் தெளிவு ஆகாமல் இருப்பதாகும். அடுத்தவர்களிடம் வாங்க நேரும்போது கொடுத்து வழங்கத் தெரியாமல் வாழ்கின்றனர். உலகத்தில் வாழும் கோடிக்கணக்கான உயிரினம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைச் சார்ந்து வாழ்கின்றனர்.

            மலர்விட்டு மலர்தாவி

           மகரந்தம் எடுக்கும் தேனீ,

           பல் தாவரம் பெருக்கி,

           சேர்க்கும் நிரந்தர தேனே!

          பழம்பல காய்க்கும்

          பல்வகை மரமும்

          பலதுக்கும் கொடுத்து

          இனம்தனைப் பெருக்கும்

ஆருயிர்க் கடமையான அன்பு கருணை ஆற்றாது போவது பிறவிக்கு இழுக்காகும். ஈட்டிய பொருள் ஈயாது மிகுந்தால் அழிந்தும், ஒழிந்தும் போகும். பிறவிப்பயன் என்பது அடுத்தவர்களுக்குக் கொடுத்து வாழ வேண்டும். இறப்பு சரித்திரமாகப் பிறர் இதயத்தில் வாழ வேண்டும்.

ஒளி சிறிதாயினும் வழி பெரிதாக்கும்! எனும் தலைப்பில்,

            மின்மினி பூச்சியானது விட்டுவிட்டு சிமிட்டினாலும் இருட்டுக் காட்டினிலே, ஒளி இட்டு இட்டுச் செல்வதால் சிறிய வெளிச்சமும் தொடர்ந்து வந்தால் நெடுந்தூரம் கடக்க முடியும். சிக்கிமுக்கிக் கல் உரசும் போது சிறு பொறியான நெருப்பானது பெரு நெருப்பாகும். காய்ந்த வனத்தில் சிறு கனலும்  கானகத்தை அழிக்கும். சிறியது என்றும், பெரியது என்றும் நெருப்பில் இல்லை.

            ஒளியும் அறிவும் ஒன்றாகும்

          சிறிதாய் தெரியினும் பெரிதாக்கும்

          ஒளியற்ற தன்மை இருளாகும்!

          வழி மறைப்பது அதுவாகும்!

          ஒளி என்பது அருளாகும்!

          உள்ளத்தில் இருந்தால் உயர்வாகும்!

          வழியும் ஒளியும் கொடுக்க,

          அழியாது இருப்பது உறுதி!

நெல்லும் சொல்லும் நல்லது காக்கும்!

          பாரம்பரிய நெல் வகைகள் பல்லாயிரம் கணக்கானவை. மருந்தாய் இருந்த நெல்லும், மறைந்தும் போனதின்று. வரமாய் இருந்த நெல்லெல்லாம் வாபம் பார்த்து ஒழித்திட்டோம். அன்னமிளகி, கேரளசுந்தரி, கருப்புக் கவுணி, யானைக்கொம்பன், கரியமிலவாயுக் கட்டுப்படுத்தும் ஆறரையடி காட்டு யாணம், புற்றுநோயும், பலவியாதியும் அற்றுபோக்கும் மாப்பிள்ளைசம்பா, எண்ணிலடங்கா வகைகள் விதைக்காது புதைத்திட்டோம்.

            மீட்டுக் கொடுத்த பெருந்தகைகள்,

           விவசாயத் தாத்தா நம்மாழ்வார்

          நெல் காத்த ஜெயராமன்

          ஒரிசாவின் நட்வர்சாரங்கி

          இழந்து போன விலையற்றதை

          நிலைத்திடக் கொணர்ந்த

          உயர் உழவர் பெருமக்களை

          சிரம்குவித்து வணங்கி நிற்போம்!

இழந்தது அனுபவமாக! வாழ்தல் வளர்ச்சியாக!

            மாற்றம் என்பது மாறாதது. இயற்கையாக நடக்கும் எந்த நிகழ்வையும் யாராலும் மாற்ற இயலாது. தடைக்கற்களைப் படிகட்டுகளாக மாற்றி நாம் வாழவேணடும் என்பதை இயற்கை நமக்கு உணர்த்துகிறது. அத்தகைய மாற்றத்தை மையாகக் கொண்டுக் கவிதைகளைப் படைத்துள்ளார். மரங்களிலிருந்து உதிரும்  இலைகள் பூக்களுக்கு ஒப்பாரி வைப்பதில்லை. வெட்டுப்பட்டப் புல்லை நினைத்து வளராமல் இருப்பதில்லை. மழையில் கரையும் புற்றை நினைத்து கலக்கம் கொள்வதில்லை கரையான்கள். குருவிகள் தன் கூடு கலைந்து கிடந்தாலும் கலங்கி நிற்பதில்லை. எறும்புகள் இழந்த துண்டு உணவை நினைத்து வருந்துவதில்லை.

            ஆண்டாண்டு காலம் அழுதாலும்

          மாண்டது வருவது இல்லையே!

          ஆறுகோடி செல்கள் உடலில் தினம்

           இறவாது புதிய பிறப்பு இல்லையே!

          இறப்பு பிறப்பு வளர்சிதை மாற்றம்

          அயற்சியற்ற முயற்சிதரும் ஏற்றம்!

நிழலுக்கும் உயிருண்டோ?

            இயற்கையாக நிகழும் காட்சிகளையும், நிகழ்வுகளையும் தம் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

            பகலவனும் பச்சை மரமும்

          பிரசவித்த உயிரான ஓவியங்கள்,

          காலையும் மாலையும் நீண்டு

          பகலில் சுருண்டு மீண்டு,

          களைத்தோர்க்கு இளைப்பு உண்டு

          கற்பனை சிறந்திட யாண்டும்

          இரசனை உள்ளோர் துதிபாட

என்று  நித்தமும் காட்டும் உருமாற்றம், வளர்ச்சி வேற்றுமை வாழ்வின் இலட்சணமென நிழல்கள் காட்டுமோ? என்று தம் கவிதைகளை விளக்கியுள்ளார்.

தெளிவாய் உள்ள மனம், எளிதால் வெல்லும் தினம்!

            மனம் என்பது சிந்தனை, உணர்வுகள், நோக்கு, கற்பனை, மன உறுதி போன்ற அறிவு மற்றும் உணர்வுநிலைகளின் தொகுப்பாகும். இது மூளை செயல்பாடுகளுடன் தொடர்புடையது. மேலும் எண்ணங்கள் மற்றும் செயல்களின் இருப்பிடமாகவும், உளவியல், நரம்பியல், தத்துவம் போன்ற துறைகளால் ஆய்வு செய்யப்படுகிறது. மனம் என்பது நொடிக்கு நொடி மாறக் கூடியது.

            இருப்பது என்றும் ஓரிடமாக

          ஆற்றும் செயலும் ஒன்றாக

          எண்ணுவது மனதில்

          ஏறிடும் மனதில் பாரமாக!

என்று தம் கவிதைகளில் குறிப்பிடுகிறார்.

தியாகத்தால் உயர்ந்தவர் அன்னை

ன்னையர் தினம் (Mother's Day) என்பது தாய்மை, தாய்மார்களின் அன்பு, தியாகம் மற்றும் சமூகத்தில் அவர்களின் தாக்கத்தைக் கொண்டாடும் ஒரு நாள்; இது உலகம் முழுவதும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படுகிறது, இந்த நாளில் அம்மாக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்களின் முக்கியத்துவத்தைப் போற்றவும் மக்கள் தங்கள் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறார்கள். 

தியாகத்தால் உயர்ந்தவள் அன்னை

செயல் யாகத்தால் உயர்த்து உன்னை

பிரசவ வலி உலகில்

          பெரிய வலி புரிவாயா?

          உன்னுயிர் பிறக்கத்

          தன்னுயிர் தருவாள் அன்னை!

          உணர்ந்தால் உன்வலி

 ஒன்றும் இல்லை அறிவாயா?

என்று அன்னையின் பெருமையைத் தம் கவிதைகளில் குறிப்பிடுகிறார்.

       பிறர்க்கு உதவும் எண்ணமிருந்தால் மட்டும் போதாது. அவ்வுதவிகள் செய்ய துணை நிற்கும் செல்வங்கள் யாவும் அறவழியில் ஈட்டப்பட்டனவாக இருக்க வேண்டும் என்பதைப் பாட்டுக்கொரு புலவன் பாரதி,

            நீதிநெறியில் நின்று பிறர்க்கு உதவும்

          நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்

என்னும் வரிகளின் வழி புதிய சிந்தனைகளைப் பூவுலகில் விதைத்தான். அதனை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில்,

            நேர்வழியில் ஈட்டி உவந்து

           தக்கோர்க்கு கொடுக்கப் பழகு

என்று நூலாசிரியர் உரைக்கும் கவிதைச் சரங்கள் யாவும் சந்தனப் பேழைகளாகத் திகழ்கின்றன.

நிறைவாக,

            இல்லற வாழ்வின் இறுதியான நோக்கம் புகழ் என்று குறள் வலியுறுத்திய கருத்துக்களை வெளிபடுத்தும் வகையில் இந்த நூல்களில் உள்ள கவிதைகள் அனைத்தும் அமைந்துள்ளது. இந்நூலில் அமைந்த ஒவ்வொரு கவிதையும் இயம்பும் பொருள் தனிமனிதன் ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து கொண்டு உட்பொருளை உள்வாங்கி அருள் பெறும் நோக்கத்துடன் அமைந்துள்ளது என்று தம் முன்னுரையில் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். தமிழ் கூறும் அனைத்து அறங்களையும் ஔவையார் முதல் வள்ளலார் வரை கூறிய அனைத்து அறங்களையும் ஆங்காங்கே விளக்கி, அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் இந்நூலை உருவாக்கிப் படைத்துள்ளார். இந்நூல் அனைவருக்கும் பயன்தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

            புத்தகங்கள் வெறும் காகிதங்களல்ல

          அவை வீரியமிக்க விதைகள்

          மனதில் அதை விதையுங்கள்!

          படிக்காத மனம் பண்படுவதில்லை!

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...