Skip to main content

புறநானூற்றுப் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் திணை – துறை பொருத்தம்

                       

                    புறநானூற்றுப் பெண்பாற் புலவர்களின் பாடல்களில்

                                    திணைதுறை பொருத்தம்

         காட்சிப் பொருள் என்றும் கருத்துப் பொருள் என்றும் வகைப்படுத்தப்பெறும் உலகப் பொருள்கள் அனைத்தையும் பழந்தமிழ் சான்றோர் முதல், கரு, உரி என மூன்றாகப் பகுத்து அவற்றை அகம், புறம் என இருவகையாக வகுத்தனர். இவற்றுள் அகம் என்பது ஒத்த அன்புடையோர் தாமேயன்றிப் பிறரால் உய்த்துணரப் படாததும், இஃது இவ்வாறிருந்ததெனப் பிறருக்குக் கூறாமல் துய்த்தோர் தம் அகத்தே வைத்து மகிழ்வது என்பது பொருளாகும்.

          ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற

           காலத்துப் பிறந்த பேரின்பம்” (தொல், பொருள்,1-2)

என்பது நச்சினார்க்கினியர் தம் உரையில் குறிப்பிட்டுள்ளார். புறம் என்பது அகம் போல ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லோராலும் உய்த்துணரப்படுவதும் இஃது இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படும் ஒழுகலாறாகும்.

          அகத்தே நிகழ்கின்ற இன்பத்தை அகம் என்றும், அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுக்கத்தைப் புறம் என்பதும் ஆகுபெயர் இலக்கணமாகும். திணை என்பது பல பொருள் குறித்து ஒரு சொற் கிளவி ஈண்டு ஒழுக்கம் என்னும் பொருளைத் தருவதாகும்.

          திணையே நிலன்குலன் ஒழுக்கம்” (தொல், பொருள், 48)

 புறத்திணை என்பதன் பொருள் அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுக்கம் என்பதாயிற்று.

திணைகள் ஏழா? பன்னிரண்டா?

          தொல்காப்பியர் அகத்திணைகள் ஏழு, புறத்திணைகள் ஏழு என்கின்றார். ஆனால் தொல்காப்பியத்திற்குப் பின்னர் தோன்றிய பன்னிரு படலமும், புறப்பொருள் வெண்பாமாலையும் புறத்திணைகளைப் பன்னிரண்டாக வகுக்கின்றன. இக்கருத்தை இளம்பூரணர் உவமை வாயிலாகவும், பிறகாரணங்கள் வாயிலாகவும் இன்னிதின் மறுக்கின்றார். நச்சினார்க்கினியரும், இளம்பூரணரின் உவமையைக் கொண்டுஅகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாயவாறு போல அகத்திணை ஏழற்கும் புறத்திணை ஏழென்றலே பொருத்தமுடையதாகும்  என முடிவு கட்டுகின்றார்.

          வெட்சி தானே குறிஞ்சியது புறனே

          வஞ்சி தானே முல்லையது புறனே

           உழிஞை தானே மருதத்துப் புறனே

          தும்பை தானே நெய்தலது புறனே

         வாகை தானே பாலையது புறனே

         காஞ்சி தானே பெருந்திணைப் புறனே

         பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே” (தொல், பொருள்,52)

இன்ன இன்ன திணைகள் இன்ன இன்ன அகத்திணைகளது புறன் என நூற்பா யாத்த தொல்காப்பியர் என்ன காரணத்தால் இவை ஒன்றுக்கொன்று புறனாயின என்பதை யாண்டும் கூறவில்லை. ஆகையால் உரையாசிரியர்கள் இவை புறனாவதற்குரிய காரணங்களாக முதல், கரு, உரிப் பொருள்களின் அடிப்படையில் காணலாம் என சில ஒப்புமைகளைச் சுட்டுகின்றார்.

போருக்குரிய காரணம்

  மண்ணாசை, பெண்ணாசை, புகழாசை காரணங்களாகப் போர் நடைபெற்றமையைத் தொல்காப்பியம்,

          எஞ்சா மண்ணசை வேந்தன்” (தொல்,பொருள்,52)

          மகட்பாடு அஞ்சிய மகட்பால்” (பு.பொ.வெண்பாமாலை,15)

         மைந்து பொருளாக வந்த வேந்தன்” (புறம், 269)

எனவரும் தொடர்களால்  வெளிப்படுத்தப்படுகின்றன.

          பண்டைய காலத்தில் போர்கள் பலக் காரணங்களால் நிகழ்ந்துள்ளன. ஆனால் போர் நிகழ்ச்சியில் ஓர் ஒழுங்குமுறை பின்பற்றினர். போர் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திக் கூறுங்கால், போரைக் கருவியாகக் கொண்டு நடைபெறும் புறத்திணைகள் எழுவகைப்படும். பண்டைய வேந்தரும், மறவரும், போர் நிலைக்கேற்ப மாலை சூடிப் போரிடுவர். அம்மலரின் பெயரால் திணை வகுக்கப்படும். புறப்பொருள் திணை பன்னிரண்டனுள் எட்டு மலரின் பெயரால் பெயர் பெற்றவை.  அவை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை என்பன.

          புறநானூற்றில் பெண்பாற் புலவர்கள் 15 பேரும், 57 பாடல்களைப் பாடியுள்ளனர். அப்பாடல்களில் உள்ள திணை, அவற்றில் உள்ள துறைகள் அடிப்படையில் காணலாம்.

1.   வெட்சித் திணை

வெட்சி என்பது மன்னுறு தொழிலும், தன்னுறு தொழிலும் என இரு வகையினை உடையது. பகைவரை வெற்றி பெறக் கருதிய வேந்தன் ஏவிய பொழுதிலாயினும், அவனது ஏவுதல் இல்லாதேயாயினும் சென்று, மாறுபாட்டினையுடைய பகை நாட்டிடத்தேயுள்ள ஆநிரைகளைக் கைக்கொண்டு வருவது வெட்சி ஆகும்.

வெட்சித் திணையின் துறைகள்

       வெட்சித் திணையின் துறைகள் இருபது ஆகும். அவை வெட்சி, வெட்சியரவம், விரிச்சி, செலவு, வேய், புறத்திறை, ஊர்கொலை, ஆகோள், பூசன் மாற்று, சூரத்துய்த்தல், தலைத்தோற்றம், தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, புலனறி சிறப்பு, பிள்ளை வழக்கு, துடிநிலை, கொற்றவை நிலை, வெறியாட்டு என இருபதும் வெட்சித் திணையும், அதன் துறைகளும் ஆகும்.

          இந்த இருபது துறைகளில் உண்டாட்டு என்னும் துறையில் ஔவையார் 269 - ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

உண்டாட்டு

        வீரக்கழலினை உடையவரான மறவர்கள் மதுவினை உண்டு ஆரவாரம் செய்து கொண்டு மனங்களித்து ஆடி மகிழ்வது உண்டாட்டு ஆகும்.

          குயில்வாய் அன்ன கூர்முகை யதிரல்

           பயிலாது அல்கிய பல்காழ் மாலை

           மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்

           புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர்

           ஒன்றிடு முறையிருந்து உண்ட பின்றை

           உவலைக் கண்ணித் துடியன் வந்தென்” (புறம், 286)

வெம்மையான கள்ளை ஒரு முறைக்கு இருமுறையாக உண்டனை! அப்போது வெட்சிக் கொள்கவெனக் கொட்டும் துடியின் ஒலி எழுந்தது. அதனைக் கேட்டு எழுந்த தலைவன் வடித்தக் கள்ளினை ஏந்தி உண்க என நிற்பார் வேண்டியும், அதனை வாழ்த்திப் போருக்கு எழுந்தனை! கரந்தையரோ மிகப்பலர். மறைந்திருந்தும் போர் செய்தனர் எனினும் அம்மறவர்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தி ஆநிரைகளைப் பற்றிக் கொண்டு மீண்டனை என்றனர். பெருமானே அவரைத் தடிந்த வாள் பெரிதாக விளங்கும் இக் கைவாள் தானோ? என ஔவையார் தலைவனது பேராண்மையை விளக்கியுள்ளார். இவ்வாறு வெட்சி மறவரது உண்டாட்டுப் பற்றிக் கூறும் பாடலாக அமைந்துள்ளது.

2.   கரந்தைத் திணை

பகைவர் ஆநிரையைக் கொண்டு சென்றதனைக் கேட்டுத் தாம் தம் செய்திருந்த தொழில்கள் அனைத்தும் அங்ஙனமே விட்டுவிட்டு, தம் நிரையினை மீட்டல் பொருட்டு விரையும் மறவர்கள் பாடிப்புறத்தே வந்து ஒன்று கூடுகின்ற கூறுபாட்டினை உரைப்பது கரந்தைத் திணை ஆகும்.

கரந்தைத் திணை ஒன்றும், துறைகள் பதிமூன்றும் ஆக பதினான்கு ஆகும்.

கரந்தைத் திணையின் துறைகள்

          கரந்தை, கரந்தை அரவம், வழியிடை செலவு, போர், மலைதல், புண்ணோடு வருதல், போர்க்களத்து ஒழிதல், ஆளெறி பிள்ளை, பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு, கையறுநிலை, நெடுமொழி கூறல், பிள்ளை வேத்தியன் மலிவு, குடிநிலை என பதினான்கு துறைகள் ஆகும். இதில் புறநானூற்றில் பெண்பாற் புலவர்கள் பாடியுள்ள பாடல்களில் உள்ள துறைகள் வேத்தியன், குடிநிலை ஆகிய இரண்டு துறைகள் ஆகும்.

வேத்தியல்

          தோள்வலிய வய வேந்தனை

            வாள் வலி மறவர் சிறப்புரைத் தன்று”(புறம், 290)

தோள் வன்மையாற் சிறந்த மாமன்னனை, வாள் வலிமையினால் சிறந்தோரான கரந்தை மறவர்கள் சிறப்புரைத்துப் போற்றுவதுவேத்தியன் மலிவுஆகும்.

          புறநானூற்றில் வேத்தியல் துறையில் ஔவையார் 286 - ஆம் பாடலைப் பாடியுள்ளார். ஔவையார் அதியமானின் வீரத்தைப் பாடியதோடு நில்லாமல் நாடு காக்கப் போரிடும் படைவீரர்களின் வீரமாண்பையும்  புகழ்ந்து பாடியுள்ளார்.

          வேந்தரிடையே போர் நிகழும்போது போர்க்களத்தில் அருஞ்செயல் பல செய்து, பல எதிரிகளை வீழ்த்தி, விழுப்புண் பல ஏற்று வெற்றியுடன் திரும்பிய வீரன் ஒருவனைக் கண்ட அவனின் வீரத்தாய், தன் மகன் வீரங்கண்டு மகிழ்ந்தாலும் அவள் உள்ளத்தில் ஒரு பெருங்குறை இருந்தது. அதையறிந்த ஔவையார் அவ்வீரத்தாயிடம்உன் மனக்குறை யாது?’ என்று கேட்டார் அதற்கு அந்த வீரத்தாய் கூறிய பதில்,

          வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்

         தன்னோ ரன்ன இளையர் இருப்பப்

         பலர்மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்

         கால்கழி கட்டிலில் கிடப்பித்

         தூவெள் ளறுவை போர்ப்பித் திலவே” (புறம் – 290)

தலைவன் கண்ணீர் வடிக்கும்படியான வீரமரணம் அடையும் வாய்ப்புத் தன் மகனுக்கு கிடைக்கவில்லையே என வீரத்தாய் வருந்துகிறாள். அவ்வீரத்தாயின் உயர்ந்த உள்ளத்தையறிந்த மகிழ்ந்து அவ்வீரத் தாயாக மாறிப் பாடிய பாடலே மேற்கண்ட பாடல். இத்தகைய வீரத்தாயரும், வீரரும் வாழ்ந்த தமிழகம் சங்க காலத் தமிழகம்.

குடிநிலை உரைத்தல்

          மனசெறிந்த இந்த நிலவுலகினிடத்தில் பழைமையும், தறுகண்மையும் கொண்டு, அவற்றின் சிறப்பால் பிறர் எல்லாம் அறியும்படியாக புகழுடன் விளங்கும் மறக்குடியின் வரலாற்றை உரைப்பது குடிநிலை ஆகும்.

          யானைப்படையும், தேர்ப்படையும் உடைய வேந்தே! உன் பாட்டனுக்கும், இவ்வீரனின் பாட்டன் போரில் துணையாக இருந்தபோது கண்ணிமைக்காமல் காத்து, தச்சனால் ஆர்க்கால்கள் சேர்த்துச் செய்யப்பட்ட வண்டிக்குடம் போல, பகைவர்கள் எறிந்த கருவிகளைத் தன்னுடம்பில் ஏற்று வீரமரணம் அடைந்தான்.

          மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்

        உறைப்புழி யோலை போலே

        மறைக்குவன் பெருமநின் குறித்துவரு வேலே” (புறம், 290)

பாட்டனுக்கும், பேரனுக்கும் இரண்டு அருமையான உவமைகள் கூறப்பட்டுள்ளன. ‘தந்தைய ரொப்பர் மக்கள்என்பது தொல்காப்பியர் கூற்று. பாட்டன், பேரன் செயல்களால் இடைநின்ற தந்தை செயல் விளங்குமாதலால் கூறப்படவில்லை.

          போருக்குரிய சினமும், யானைகளும் தேர்களும் இருப்பினும் மறவருக்குப் பிறந்த மாண்புடைய வீரர் துணையின்றி வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தசினப்போர் இனகளிற்று யானை இயல் தேர்க்குருசில்என்றார்.

      குடிநிலை உரைத்தலைமண்தினி ஞாலத்துத் தொன்மையும் மறனும் கொண்டு பிறரளியும் குடிவரவு உரைத்தன்றுஎன்று புறப்பொருள் வெண்பாமாலை கூற்றாகும்.

3. நொச்சித் திணை

          பகைவரின் கோட்டை மதிலை முற்றுகையிடுவோர் உழிஞை மாலை சூடுவர். மதில் காப்போர் நொச்சி மாலை சூடிப் போரிடுவதால் நொச்சித் திணை என்பர்.

நொச்சித்திணையின் துறைகள்

          நுவலரும் காப்பின் நொச்சி யேனை

         மறனுடைப் பாசி ஊர்ச்செரு என்றா

        செருவிடை வீழ்தல் திண்பரி மறனே

        எயிலது போரே எயில்தனை அழித்தல்

        அழிபடை தாங்கல் மகள்மறுத்து மொழிதல்என

        எச்சமின்றி எண்ணிய ஒன்பதும்

        நொச்சித் திணையுந் துறையும் ஆகும்” (புறம், 299)

என நொச்சித் திணையின் துறைகளைப் பற்றிக் கூறுகிறது. இதிலுள்ளகுதிரைமறம்என்ற துறையில் ஒரு பாடலைப் பொன்முடியார் பாடியுள்ளனர்.

குதிரை மறம்

     போர்க்குதிரையின் வீரத்தை விளக்குவதுகுதிரை மறம்என்னும் துறையாகும். ஒரு சமயம் பெருவேந்தனுக்கும், சிற்றரசனுக்கும் நடைபெற்ற போரில், சிற்றரசனது குதிரைப் படைக்குப் பெருவேந்தனது குதிரைப்படை தோற்றோடியது. பெருவேந்தனும் தோற்று ஓடினான். இக்காட்சியை நேரில் கண்ட பொன்முடியார் பாடிய பாடல்.

          பருத்திச் செடிகளையே வேலியாக உடைய சிற்றூரின் அரசன் குதிரைகள் உழுத்தஞ் சக்கையை உணவாக உண்டவை; தளர்ந்த நடையை உடையவை. மருதநில வளம் மிக்க பெருநில வேந்தரின் குதிரைகள் நெய்பெய்து மிதித்துத் தயாரித்த உணவையுண்டு, கத்தரிக்கப்பட்ட பிடரி மயிரை உடையவை. சிற்றரசன் குதிரைப்படை கடலலைகளைக் கிழித்துச் செல்லும் படகுபோல, பெருவேந்தன் குதிரைப்படையைக் கிழித்துச் சென்றது.

          அணங்குடை முருகன் கோட்டத்துக்

         கலந்தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே” (பு.வெ.மாலை,127)

வீட்டில் எல்லாச் சுதந்திரமும் பெற்று வாழும் மங்கல மகளிர், கோவிலுக்குப் போகும் நேரத்தில் விலக்காகிவிட, எதையும் தொடும் சுதந்திரமின்றி உள்ளே போய் வழிபாடு செய்ய வழியின்றி, வெட்கித் தலை கவிழ்ந்து நிற்கும் நிலையைகலந்தொடா மகளிரின்என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்து, நன்றாக உண்டு கொழுத்த குதிரைப்படை, எளிய குதிரைகளிடம் தோற்று நிற்கும் நிலைக்கு உவமை காட்டியிருக்கும் நயமும் போற்றுதற்குரியது.

4.   தும்பைத் துணை

        செங்களத்து மறங்குருதிப்

         பைந்தும்பை தலைமலைந்தன்று” (புறம், 88)

மறமேம்பாட்டைக் கருதிக் குருதியாற் சிவந்த போர்க்களத்தின் கண்ணே, வேந்தன் ஒருவன், பசிய தும்பையாகிய போர்ப்பூவினைத் தலையிடத்தே சூடியது தும்பைத் திணையாகும்.

தும்பைத் திணையின் துறைகள்

          தும்பை அரவம், தானை மறம், யானை மறம், குதிரை மறம், தார்நிலை, தேர்மறம், பண்பாட்டு, இருவரும் தடிநிலை, எருமை மறம், ஏம எருமை, நூழில், நூழிலாட்டு, முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை, பேய்க்குரவை, களிற்று உடனிலை, ஒள்வாள் அமலை, தானை நிலை, வெளிவருநிலை, சிருங்கார நிலை, உவகைக் கலுழ்ச்சி, தன்னை வேட்டல், தொகை நிலை ஆகிய 23 துறைகள் ஆகும்.

          புறநானூற்றில் பெண்பாற் புலவர்கள் பாடியுள்ள பாடல்களில் அமைந்துள்ள துறைகள் தானை மறம், நூலிலாட்டு, பண்பாட்டு, உவகைக் கலுழ்ச்சி என்ற நான்கு துறைகள் ஆகும்.

தானை மறம்

          பொருதற்கு எதிரெதிர் நிற்கும் படைகள் இரண்டும் தம்முள் போரை விலக்கிப் பாதுகாத்த உயர்ச்சியைக் கூறுவது தானை மறம் ஆகும்.

          ஒருமுறை அதியான் நெடுமான் அஞ்சியோடு போர்புரிய அவன் பகைவர் சிலர் தம்முள் பேசிக் கொண்டதை ஔவையார் அறிய நேரிட்டது. அவர் அங்ஙனம் கூறுவதற்குக் காரணம் யாதெனத் தேர்ந்த ஔவையார், அவர் தம்முடைய கூழைப்படை, தார்ப்படை, என்ற இவற்றின் வலிமையை நினைந்து போர்புரிய நினைப்பதை அறிந்தார். உடனே ஔவை பகைவரை நோக்கி, நீவிர் அதியமானைக் காணா முன்பு கூழையும், தாரையும் கொண்டு பொறாது வெல்வோம் என்று நினைத்தல் கூடாது. அப்படையைக்  காண்பீராயின் அவ்வாறு நினைப்பதற்கு அஞ்சுவீர்கள் என்பதை விளக்கும் பாடல்,

          யாவிராயினுங் கூழைதார்கொண்டு

        யாம் பொருதும் என்றல் ஓம்புமின் ஓங்குதிறன்

        ஒளிறு இலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்

        கதிர்விடு துண்பூண் அம்பகட்டு மார்பின்

        விழவு மேம்பட்ட நற்போர்

        முழவுத்தோள் என்னையைக் காணா ஊங்கே” (புறம், 88)

என ஔவையார் பகைவர்களை நோக்கி அதியமானின் ஆற்றலைத் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும் இதே துறையில் 87,89,90 என்ற மூன்று பாடல்களை ஔவையார் பாடியுள்ளார்.

பண்பாட்டுத் துறை

          யாழினை இசைக்கின்ற கைத்தொழிலே வல்லவரான பாணர், குருதி வெள்ளத்தால் சிவந்த போர்க்களத்திடையே பகைவருடைய களிறுகளைக் கொன்று அப்போரிடையே தாமும்பட்டு வீழ்ந்தத் தும்பை மறவர்கட்குச் செய்யும் கடனை செய்து அவர் புகழைப் பாடுவது பண்பாட்டுத் துறையாகும்.

          ஔவையார் பலர்க்கும் உதவி செய்த ஒருவன் ஒரு போரில் கடும்போர் செய்து மேம்பட்டான். அவனைப் பகைவர் பல படைகலங்களை எறிந்து தாக்கினர். அவர்களின் படைக்கலங்களை எல்லாம் அவன் தன் கேடயம் ஒன்றாலேயே தடுத்து வென்றான். கண்சிவக்க அவன் ஒருவனே நின்று போரிட்டு நின்றது காணத்தக்க காட்சி, அதனை,

          களாப்படு கூவல் தோண்டி நாளும்

         புலைத்தி கழீஇய தூவெள் அறுவை

         தாதுஎரு மறுகின் மாசுண இருந்து

         பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு

         ஒருவரும் இல்லை மாதோ செருவத்துச்

         சிறப்புடைச் செங்கண் புகையவோர்

        தோல்கொண்டு மறைக்கும் சால்புடையோனே” (புறம், 311)

இப்பாடல் மூலம் பண்பாட்டுத் துறையை விளக்கியுள்ளார்.

நூழிலாட்டு

          போர்க்களத்தில் கடும்போர் செய்யும் வீரன் தன் கைக்கருவிகளையிழந்த நிலையில், அவன் மார்பில் பாய்ந்த வேலையே பிடுங்கிப் பகைவர் மேல் எறிவதுநூழிலாட்டுஎனப்படும்.

          கைவேள் களிற்றோடு போக்கி வருபவன்

           மெய்வேல் பறியா நகும்” (குறள்-774)

என்னும் குறட்பா நூழிலாட்டுத் துறையாகும்.

          முன்னாள் போரில் பல களிறுகளை வீழ்த்தித் தானும் வீழ்ந்துபட்ட பெரு வீரன் ஒருவனின் மகன் பெரும் போர் செய்து பல களிறுகளையும், பகைவர்களையும் வீழ்த்தி, தன் மார்பில் அம்பு பாய்ந்ததையும் உணராது போர் செய்கிறான். கைக்கருவிகளை இழந்து கேடயமும் வீழ்த்தப்பட்டு அதன் மீது வீழ்ந்து கிடக்கிறான். அதன்பின் நடந்த நிகழ்ச்சியைப் பொன்முடியார் நேரில் கண்டு பாடியுள்ளார்.

         குழந்தைப் பருவத்தில் கிண்ணத்தில் பால் கொண்டு ஊட்டியபொழுது குடிக்க மறத்ததால், சிறுகோல் ஓச்சி மிரட்ட, அதற்கு அஞ்சிய இவனுக்காக வருந்தும் மனமே! இப்பொழுது முன்னாள் போரில் வீழ்ந்த பெருவீரன் மகனாதலால் பல களிறுகளை வீழ்த்தி மார்பில் அம்பு பாய்ந்ததையும் உணராமல் போர் செய்து கேடயத்தின் மீது வீழ்ந்து கிடக்கின்றான்.

          உன்னிலென் என்னும் பண் ஒன்று அம்பு

        மான் உளை யன்ன குடுமித்

        தோல்மிசைக் கிடந்த புல் அணலோனே” (புறம், 277)

செறாஅது ஓச்சிய சிறுகோலுக்கு அஞ்சிய குழந்தைப் பருவ நிகழ்ச்சியும், மார்பில் அம்பு பாய்ந்ததையும், உணராது போருடற்றும் இளமைப் பருவத்து வீர உணர்ச்சியும் முரண்தொடையாக அமைந்து கற்போருக்கு வியப்பும், மகிழ்வும் ஊட்டுகின்றன. மான் உளையன்ன குடுமியும், புல் அணலும் அக்கால இளம்வீரர்களின் தோற்றப் பொலிவை விளக்குகின்றன.

உவகைக் கலுழ்ச்சி

          உவகைக் கலுழ்ச்சி என்பது விழுப்புண் ஆழப்பெற்று இறந்த வீரனைக் கண்டதும் அவள் தாய் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து மகிழ்வுறுவது ஆகும்.

          உவகைக் கலுழ்ச்சித் துறையில் பூங்கண் உத்திரையார் 277 – வது பாடலும், காக்கைப் பாடினி நச்செள்ளையார் 278 -ஆம் பாடலும், ஔவையார் 295 -ஆம் பாடலையும் பாடியுள்ளனர்.

       மறக்குடியில் தோன்றிய ஒரு பெண்ணுக்குக் காலங்கடந்து ஒரே மகன் பிறந்தான். அப்பொழுது அவள் அடைந்த உவகைக்கு எல்லையிருக்குமா? அவன் மறமாண்புடன் வளர்க்கப்பட்டு இளைஞன் ஆனான். அவள் கொக்கின் சிறகுபோல் வெளுத்து நரைத்த கூந்தலுடைய முதியவளானாள். நாடு காக்கும் போர் வந்தது. முதுமை காலத்தில் ஒரே ஆதரவான மகனை மகிழ்ச்சியுடன் போருக்கு அனுப்பி வைத்தாள்.

          போருக்குச் சென்றவன் அரும்போர் செய்து அவற்றை வீழ்த்தி, தானும் விழுப்புண்ணுடன் வீழ்ந்து மாய்ந்தான். இதைக்கேட்ட வீரத்தாய்,

          ஈன்ற ஞான்றினும் பெரிதே; காணீர்

         நோன்கதை துயல்வரும் வெதிஏத்து

         வான் வெயத் தூங்கிய சிதரினும் பலவே” (புறம், 277)

இக்காட்சியை அருகிருந்து கண்ட பூங்கண் உத்திரையார் வியப்பு மேலீட்டால் பாடிய  பாடலாகும்.

5.   வாகைத் திணை

        வாகை என்பது பாலைத்திணைக்குரிய மரம். போரில் பகைவரை வென்றவர் இந்த மலரைச் சூடி ஆரவாரிப்பர். அதனால் இது வாகைத் திணை ஆயிற்று.

வாகைத் திணையின் துறைகள்

        வாகைத்திணை முப்பத்திரண்டுத் துறைகளைக் கொண்டது. அவை வாகை யரவம், அரச வாகை, முரச வாகை, மறக்கள வழி, களவேள்வி, முன்தேர்க் குரவை, பின்தேர்க்குரவை, பார்ப்பன வாகை, வாணிக வாகை, வேளாண் வாகை, பொருள் வாகை, அறிவன் வாகை, தாபத வாகை, உதிர்ப் பாசறை, வாடைப் பாசறை, அரசமுல்லை, குடை முல்லை, பேராண் முல்லை, மறமுல்லை, கண்படை நிலை, அவிப்பலி, சால்பு முல்லை,  இணைநிலை, பொருளொடு புகறல், அருளோடு நீங்கல் என்பன ஆகும்.

        இந்த முப்பத்திரண்டு துறைகளில் பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்களின் துறைகள் அரச வாகை, மூதின் முல்லை, ஏறாண் முல்லை, வல்லாண் முல்லை என நான்கு துறைகள் ஆகும்.

அரசவாகை

     நுகத்தின் கண் பகலாணியைப் போன்று நடுநிலையோடு விளங்கும் சொல்லினையுடைய மாறுபட்டால் சிறந்த வேந்தனது இயல்பைக் கூறுவது அரசவாகையாகும்.

          அரச வாகைத்  துறையில் 37, 66, 93, 98, 99,104, 105, 174 என எட்டுப் பாடல்கள் உள்ளன.

          திருவோலக்கத்தின் அரசர் சூழ இருப்பினும், போர்க்களத்தே படை நடுவில் இருப்பினும் ஔவையாருக்கும், அவரொத்த புலவர்களுக்கும் அதியமான் இன்முகமும், இன்சொல்லும் உடையவனாய் விளங்கினான்.

          ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழா அலின்

         நீர்த்துறை படியும் பெருங்களிறு போல்

        இனியை பெரும எமக்கே மற்றதன்

        துன்னருங் கடாஅம் போல்

        இன்னாப் பெருமநின் ஒன்னாதோர்க்கே”(புறம், 306)

என அரசனது கொடை வெற்றியையும், போர் வெற்றியையும் இப்பாடல் கூறுவதால் அரசவாகைத் துறையாயிற்று.

மூதின் முல்லை

     பெண்களின் வீர உள்ளத்தையும், வீரமொழியையும் வீரச் செயலையும் விளக்குவது மூதின் முல்லைத் துறையாகும். மூதின் முல்லைத் துறையில் 279, 306, 312 என மூன்று பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

          மூதின் முல்லைத் துறையில் 279, 306, 312 என மூன்று பாடல்கள் உள்ளன. போரில் அரியன செய்து விழுப்புண் ஏற்று மாண்ட வீரர்க்குக் கல்நட்டு வழிபாடு செய்யும் மரபை முன்பே அறிந்துள்ளோம். ஒரு சமயம் நான் காடு சார்ந்த ஊர் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது,  ஒரு மறக்குடி மங்கை தன் முன்னோரின் நடுகல்லை வழிபட்டு வேண்டிய பாடல்,

          விருந்தெதிர் பெறுதில் யானே; என்னையும்

            ........    ....... வேந்தனோடு

           நாடு தரு விழுப்பகை எய்துக எனவே” (புறம், 306)

இப்பாடலின் மூலம் நடுகல் வழிபாட்டு மரபும், இல்லற மாண்பும், நாட்டுப்பற்றும், மற மாண்பும் வெளிப்படுகின்றன. விழுப்பகை எய்துவதால், கணவனுக்கு வெற்றிப் புகழும், விருந்தோம்புவதற்குரிய பொருளும் கிடைக்கும் செல்வத்துப் பயன் ஈதல் தானே?

          கற்புங் காமமும் நற்பால் ஒழுக்கமும்

         மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்

         விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

         பிறவும் அன்ன இழவோன் மாண்புகள்” (புறம்-86)

என்பர் ஒல்காப் பெரும்புலவர் தொல்காப்பியர்.

ஏறான் முல்லை

     மாறுபாடு இல்லாத பொழுதில் சினம் கொண்டு ஏறாநின்ற ஆண்மை தன்மையுடைய குடியொழுக்கத்தினை உயர்த்திச் சொல்வது ஏறாண் முல்லை ஆகும்.

          ஒருநாள் காவற்பெண்டின் பக்கத்து வீட்டு அம்மையார் காவற்பெண்டின் வீட்டிற்கு வந்து, தூணைச் சார்ந்து நின்றுஉன் மகன் எங்கேஎன்று கேட்டதற்குப்  பதிலாக,

          சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

           யாண்டு உளனோஎன வினவுதி?  என்மகன்

         யாண்டு உளனாயினும் அறியேன்; ஓரும்

         புலிசேர்ந்து போகிய கல் அளை போல

         ஈன்ற வயிறோ இதுவே;

        தோன்றுவன மாதோ போர்க்களத் தானே!” (புறம், 86)

காவற்பெண்டு மறக்குடிப் பெண்ணாகையால் தன் வீரமரபிலும், வீரமகன் மேலும் நம்பிக்கைக் கொண்டு தன் வயிற்றைப் புலிக்குகையாகவும், அவனைப் போர்ப்புலியாகவும் கூறுகிறார். ”தோன்றிற் புகழொடு தோன்றுக” (குறள், 236) என்னும் வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப காவற்பெண்டின் மறமாண்பும் நம்பிக்கையும் புலப்படுகிறது.

வல்லாண் முல்லை

          ஒரு மறவனது குடியையும், ஊரையும் இயல்பு மேம்பாட்டையும் எடுத்துக் கூறி, அவனது ஆண்மைத் தன்மையை நன்மை பெருகச் சொல்லியது வல்லாண் முல்லை ஆகும்.

          உடையவன் ஆயின் உண்ணவும் வல்லன்

        கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்

        மடவர் மகிழ்துணை நெடுமான் அஞ்சி

        இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்

        தோன்றாது இருக்கவும் வல்லன் மற்றதன்

        கான்றுபடு கனைஎரி போலத்

        தோன்றவும் வல்லன்தான் தோன்றும் காலே!” (புறம், 315)

          என அதியமான் நெடுமானஞ்சியின் கொடைப் பண்பினையும், மறப்பண்பினையும் ஔவையார் ஒருங்கே வெளிப்படுத்தியுள்ளார்.

6.  பாடாண் திணை

          ஒரு தலைவனின் புகழும், வலியும் சீர் தூக்காது வழங்கும் கொடையும் தண்ணளியும் என இவற்றை ஆராய்ந்து பாடுவது பாடாண் திணை ஆகும்.

பாடாண் திணையின் துறைகள்

       பாடாண் பாட்டுஎன்கின்ற பாடாண் திணையின் துறைகள் 48 ஆகும். அதன் திணை ஒன்றும் துறைகள் நாற்பத்தேழும் ஆகும்.

          வாயில் நிலை, கடவுள் வாழ்த்து, பூவை நிலை, பரிசில் துறை, இயன்மொழி வாழ்த்து, கண்படைநிலை, துயிலெடை நிலை, மங்கல நிலை, விளக்கு நிலை, கபிலை கண்ணிய புண்ணிய நிலை, வேள்வி நிலை, வெள்ளி நிலை, நாடு வாழ்த்து, கிணை நிலை, களவழி வாழ்த்து, வீற்றினிதிருந்த பெருமங்கலம், குடுமி களைந்த புகழ்காற்று நிலை, மணமங்கலம், பொலிவு மங்கலம், நாள் மங்கலம், பரிசில் நிலை,  பரிசில் விடை, ஆள்வினை வேள்வி, பாணாற்றுப் படை, கூத்தராற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, வாயுறை வாழ்த்து, செவியறிவுறுஉ, குடை மங்கலம், மண்ணு மங்கலம், வாள் மங்கலம், எம்படை, புறநெறி வாழ்த்து, கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, பரவல், பழிச்சினர் பணிதல், கைக்கிளை, பெருந்திணை, புலவிப் பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு, கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம், கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம், குழவிக் கண் தோன்றிய காமப்பகுதி, ஊரின்கண் தோன்றிய காமப் பகுதி என 48 துறைகளாகும்.

          பாடாண் திணையில் புறநானூற்றுப் பெண்பாற் புலவர்கள் பரிசில் துறை, இயன்மொழி வாழ்த்து, வாள் மங்கலம், பரிசில் விடை, விறலியாற்றுப்படை என ஐந்து துறைகளில் பாடியுள்ளார்கள்.

பரிசில் துறை

          நாடு காக்கும் மன்னனின் முன், கருதி வந்த பரிசில் இதுவென பரிசிலன் உரைப்பது பரிசில் துறையாகும்.

        இன்றைய தருமபுரியே அன்றைய தகடூர். தகடூரைத் தலைநகராகக் கொண்டு நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான் அதியமான். இவன் சிறந்த வீரனாகவும், புலவர் பரணர், விறலியர் முதலிய கலைஞர்களுக்கு வரையாது வழங்கும் வள்ளலாகவும் பெரும்புகழ் பெற்று விளங்கினான்.

          அதியமான் புகழைக் கேள்வியுற்ற ஔவையார், அவனை நேரில் கண்டு பாடிப் பரிசில் பெறவிரும்பி தகடூர் அரண்மனைக்குத் தன் உறவினருடன் வந்தார். அதியமான் வேலை மிகுதியாலும், சூழ்நிலையாலும் அவருக்கு எளிதில் காட்சியளிக்காமல் அவரை நன்கு உபசரிப்பதற்குரிய ஏற்பாடு மட்டும் செய்திருந்தான்.

          ஔவையாரை அரண்மனையில் உள்ள அனைவரும் நன்கு உபசரித்துப் போற்றி வந்தனர். மன்னனை மட்டும் காணவில்லை. மன்னன் சூழ்நிலை உணராத ஔவையார் சினந்து வாயிற்காவலனிடம், விரைந்து செல்லும் குதிரையையுடைய தலைவனாகிய நெடுமானஞ்சி, தன் தரத்தை அறியானோ? அறிவும் புகழுடைய வள்ளல் சிலர் மாய்ந்ததால், உலகம் வறுமையடைந்து விடவில்லை. இன்னும் வள்ளல் பலர் வாழ்கின்றனர்.

          மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

         மழுவுடைக் காட்டகத் தற்றே

         எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” (புறம், 206)

அக்காலப் புலவர்களின் தன்மானம் குன்றாப் பரிசில் வாழ்வையும், உவமை உருவகங்களுடன் பாடும் ஔவையாரின் புலமை நலத்தையும் இப்பாடல் விளக்குகிறது.

இயன்மொழி வாழ்த்து

          தலைவன் எதிர்ச்சென்று அவனுடைய செய்தியையும், அவன் குலத்தோர் செய்தியையும், அவன் மேல் ஏற்றிப் புகழ்வது. அஃதாவது இக்குடிப் பிறந்தோர்க்கெல்லாம் இக்குணங்கள் இயல்பென்றும் அவற்றை நீயும் இயல்பாக உடையை என்றும், அன்னோர் போல, எமக்கு நீயும் இயல்பாக ஈயென்றும் உயர்ந்தோரைக் கூறி அவனை வாழ்த்துவதாகும்.

          இயன்மொழி வாழ்த்துத் துறையில் 39, 92, 96, 102,157, 390 ஆகிய பாடல்களைப் புலவர்கள் பாடியுள்ளனர்.

          தந்தையாகிய அதியமான் ஆண்ட காலத்தில் மகன் பொகுட்டெழினி இளவரசு பட்டம் ஏற்று தந்தைக்குத் துணையாக ஆண்டு வந்தான். ‘அரம்பையின் கீழ்க் கன்றும் கனியுதவும்என்னும் நன்னெறி மொழிக்கேற்ப, மகனும் தந்தையைப் போலவே வள்ளலாய்த் திகழ்ந்தான் என்று ஔவையார் உவமை நயத்துடன் பாடல் பாடியுள்ளார். அப்பாடலில் உப்பு மூட்டை ஏற்றப்பட்ட வண்டியில் பள்ளத்தில் இறங்கும் போதும், மேட்டில் ஏறும் போதும், எதுவும் நேரலாம். அப்படி முறிந்தால் உதவுவதற்கு சேம அச்சாகிய மற்றொன்றையும் உப்பு வணிகர் கட்டிச் செல்வர். அத்தகைய துணையச்சுப் போலத் தந்தைக்கு உதவியாகிய இருக்கும் எழினியே! என்று பாராட்டியுள்ளார்.

          ...... ....... .......... திங்கள்

        நாள் நிறை மதியத்து அனையை! இருள்

        யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே” (புறம், 102)

அச்சுக்குச் சேமம் துணையாவது போல, தந்தையின் ஆட்சிக்கு மகனின் ஆட்சியும் துணையாக உள்ளது. தந்தையின் ஆட்சி செம்மையாக நடைபெறவும், மக்களுக்குத் துன்பம் நேராமல் காக்கவும் பொகுட்டெழினி பேருதவியாக விளங்கினான்.

பரிசில் விடை

          வேந்தன் உள்ளம் மகிழும்படியாகத் தனது வெற்றிப் புகழினைக் கூறி பரிசிலர்க்குப் பரிசில்களைக் கொடுத்து, அவர்தம் சுற்றத்தோடு சென்றடைந்து இன்புறுமாறு விடுத்தது பரிசில் விடையாகும்.

          பரிசில் விடை துறையில் ஔவையார் புறம் 140 - ஆவது பாடலைப் பாடியுள்ளார். நாகர்கோயிலை அடுத்த நாஞ்சில் நாடு என்னும் பகுதியை ஆண்ட நாஞ்சில் வள்ளுவன். சேரர் ஆட்சிக்குட்பட்டு ஆண்டக் குறுநிலத் தலைவனாகிய இவன் சிறந்த கொடைவள்ளல். சான்றோர் போற்றும் மாண்புடையவன். இத்தகைய நாஞ்சில் வள்ளுவனை ஒருசிறைபெரியனார், மருதனிளநாகனார், ஔவையார், கருவூர்க் கதப்பிள்ளை ஆகிய நால்வரும் பாடியுள்ளனர்.

          ஔவையார் விறலியர் சூழ நாஞ்சில் நாட்டிற்குச் சென்றார். விறலியர் தங்கியிருந்த இடத்தில் சமைத்துக் கீரைப்  பொரியல் செய்யும் பொழுது அதற்கிடத் துவரம்பருப்பு இல்லை. ஔவையார் நாஞ்சில் வள்ளுவனிடம் சென்று சிறிதளவு பருப்புக் கேட்டபொழுது,

                   அரிசி வேண்டினே மாக, தான்பிற

                 பரிசை அறிதலின் தன்னும் தாக்கி

                இருங்கடறு வளைஇய குன்றத்து

                தேற்றா ஈகையும் உளகொல்

                போற்றார் அம்ம, பெரியோர்தம் கடனே” (புறம், 140)

தேற்றா ஈகை என்று பழிப்பது போல் வஞ்சப் புகழ்ச்சியாக வியந்து பாராட்டியுள்ளார்.

விறலியாற்றுப்படை

        வெற்றியுடைய மன்னன் புகழினைப் பாடுகின்ற விறலியை வழிப்படுத்துவது விறலியாற்றுப்படை ஆகும்.

          ஔவையார் அதியமானிடம் பரிசில் பெற்று வருகையில் ஒரு சுரத்திடையே தங்கியிருந்த விறலி ஒருத்தியைக் கண்டார். கவிழ்ந்து கிடக்கும் உண்கலமாகிய என மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கும் விறலியை அதியமானிடம் ஆற்றுப்படுத்தும் 103 – வது பாடல் விறலியாற்றுப்படை துறையில் அமைந்துள்ள பாடலாகும்.

வாள் மங்கலம்

                 கயக்கறு கடற்றானை

                 வயக்களிற்றான் வான்புகழ்ந்தன்று” (பு.வெண்பாமாலை, 223)

பகைவரானே கலக்குதற்கு அரியதான கடல்போன்ற பரந்த சேனையினையும் வலிய களிறுகளையும் உடையவனான தம் மன்னனது, கொற்றவாளினைப் புகழ்ந்தது வாள் மங்கலமாகும்.

          புறம் 93 – ஆவது பாடலில் ஔவையார் அதியமான் போர்களில் வெற்றி கண்டான். அவன் கருவிகள் எப்பொழுதும் சிதைந்து, அடுத்தப் போருக்குத் தயார் செய்வதற்காகக் கொல்லன் உலைக்களத்தில் கிடக்கும். ஆனால் உன் கருவிகள் புத்தம் புதியதாக போர்க்களமே காணாதவையாக உள்ளன என வஞ்சப்புகழ்ச்சி அணிநயத்துடன் கூறித் தொண்டைமானை உணர வைத்தார். உண்மையுணர்ந்த தொண்டைமான் போர் எண்ணத்தைக் கைவிட்டுச் சமாதானம் பேசினான். ஔவையாரின் தூது வெற்றி பெற்றது.

10. பொதுவியல் திணை

          அகத்திற்கும், புறத்திற்கும் பொதுவானது. திணை வகைகளுள் பொதுவாக நிகழும் இயல்பினை உடையது பொதுவியல் திணையாகும்.

       பொதுவியல் திணையில் ஏழு திணைக்கும் பொதுவான 45 துறைகள் உள்ளன. புறநானூற்றில் பெண்பாற் புலவர்கள் கையறுநிலை, பொருள்மொழிக் காஞ்சி, ஆனந்த பையுள், தாபத நிலை போன்ற துறைகளில் பாடியுள்ளனர்.

கையறுநிலை

          செய்வினையினால் சிறப்புற்று விளங்கும் மன்னன் போரில் இறந்தான் என அவனைச் சேர்ந்தோர் தம்முடைய கையறவினை உரைத்துச் செயலற்று நிற்பது கையறுநிலை ஆகும்.

          மூவேந்தரால் வள்ளல் பாரி வஞ்சனையாகக் கொல்லப்பட்டுப் பறம்பு மலையை வென்றனர். தந்தையையும், நாட்டையும் இழந்து வருந்தும் பாரி மகளிரை கபிலர் அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தார். சில நாட்கள் கழிந்தன. முழுநிலவு நாள் வந்தது. விண்ணில் முழு வெண்ணிலவு ஒளிவீசித் திகழ்ந்தது. அப்பொழுது அவர்கள் உள்ளத்தில் பொங்கிய அவல உணர்வு பாடலாக வந்தது.

                   அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்

                எந்தையும் உடையேம், எம்குன்றும் பிறர்கொளார்

                இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்

                வென்றெறி முரசின் வேந்தர் எம்

                குன்றும் கொண்டார், யாம் எந்தையும் இலமே” (புறம், 112)

ஐந்தடிகளே கொண்ட இச்சிறிய பாடல் முரண் தொடை, வஞ்சப்புகழ்ச்சி ஆகியவற்றுடன் அவலச் சுவையின் பிழிவாக உணர்ச்சிமிக்கப் பாடலாக அமைந்துள்ளது.

பொருண்மொழிக்காஞ்சி

          அவிர்ந்து திகழும் சடாமுடியினை உடையவரான துறவியர், விரும்பித் தெளிந்த பொருளைக் கூறுவது பொருண்மொழிக் காஞ்சி ஆகும்.

          எது சிறந்த நாடு? நில வளம், நீர் வளம், கனி வளம் முதலிய வளங்கள் மட்டும் மிக்க நாடு சிறந்த நாடாகுமா? எல்லா வளங்களும் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவாரும், பிறருக்குப் பயன்படச் செய்வாரும் இல்லாத நாடு நாடாகுமா? கொலை, கொள்ளை முதலியன செய்யும் தீயவர் நாடு நல்ல நாடாகுமா?

          இந்தத் தத்துவத்தை ஈராயிரம் ஆண்டுகட்டு முன்பே பெண்பாற் புலவராகிய ஔவையார் புறம் 187- வது பாடலில் பாடியுள்ளார். இளமையில் சிறந்த வளமையும் இல்லை என்பது சான்றோர் மொழி. அவ்வளமைக்குச் சிறப்பும், நற்பண்பும், நற்செயலும் நிரம்பிய ஆடவராலே நாடு நலமும், வளமும் புகழும் பெற்று ஓங்கும்.

ஆனந்தப் பையுள்

          தலைவனையிழந்து வருந்தும் தலைவியின் துயரநிலைக்கு ஆனந்த பையுள் என்று பெயர்.

                   விழுமங்கூர வேய்த்தோளரிவை

                 கொழுநன் வீயக் குழைந்து உயங்கின்று

                                                               (பு.வெண்பாமாலை, 267)

என்று புறப்பொருள் வெண்பாமாலை புகழும்.

          தலைவன் மார்பில் ஏற்பட்ட புண்ணின் கடுமையாலும், ஆங்கு நிகழ்ந்த தீநிமித்தங்களாலும், அவன் பிழைப்பது அரிது என உணர்ந்த தலைவி தனக்காக வருந்தாமல் ஆதரிக்கப்பட்டோரின் ஆதரவற்ற நிலைக்காக வருந்தும் மாண்பையும், தலைவனைப் பிரிந்து வாழ விரும்பாத கற்பின் மேன்மையை நயமாகவும், கற்போர் உள்ளம் நெக்குறும்படியும் நப்பசலையார் புறம் 280 – ஆம் பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

தாபத நிலை

          கணவனை இழந்த மனைவி கைம்மை நோன்பு நோற்றலுக்குத் தாபத நிலை என்று பெயர்.

                 குருந்தலர்க்கண்ணி கொழுநன் மாய்ந்தெனக்

                 கருந்தடங்கண்ணி கைம்மை கூறின்று

                                                              (பு.வெண்பாமாலை, 267)

பொலிவுடையமனை

          விருந்தோம்பும் பண்புமிக்க தலைவனும் தலைவியும் வாழும் வளமான அழகிய பெரிய மனை. அம்மனையின் வாசலில் பெரிய பந்தல்  எப்பொழுதும் இருக்கும். விருந்தினருக்குச் சமைக்கும் பொழுது, தாளிக்கும் ஓசையும், மணமும் விருந்தினரையும், இரவலரையும் தடுத்து அம்மனையிலேயே இருக்கும் பந்தல் ஏழைகளின் கண்ணீரைப் போக்கும்.

பொலிவிழந்த மனை

        இல்லத் தலைவன் இறந்து விட்டான். தலைவி மொட்டையடித்துக் கொண்டு வளையல்களை நீக்கிவிட்டு, சுவையான உணவை நீக்கி, அல்லியரிசி உணவு உண்டு கைம்மை நோன்பு நோற்கின்றாள். விருந்தினர், இரவலர் வரவும் நின்று விட்டது. தாளிப்பு ஓசையும், மணமும் இல்லை. அந்த வளமான மனையும் பொலிவிழந்து விட்டது. அத்தலைவியும் பொலிவிழந்து கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளாள். பல ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க முயலவில்லை. பலருக்குச் சுவையான உணவு படைத்து வந்த தலைவி ஒருத்திக்கு இப்பொழுது சுவையான உணவு இல்லை.

          இந்த இரண்டு நிலையையும் கண்ட தாயங்கண்ணியாரின் உணர்ச்சிமிக்கப் பாடலாக புறம் 250 – வது பாடல் அமைந்துள்ளது.

கைக்கிளைத் திணை

          கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம். காதலித்தற்குரிய இருவருள், ஒருவர் விரும்பி மற்றொருவர் விரும்பாமையைக் கைக்கிளைக் காமம் என்றும் ஒரு தலைக் காதல் என்றும் கூறுவர். கைக்கிளைத் திணையில் உள்ள பழிச்சுதல் துறையில் நக்கண்ணையார் 83, 84, 85 ஆகிய மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

பழிச்சுதல் துறை

          பழிச்சுதல் என்றால் துதித்தல், துதித்துப் பாடுயவை பழிச்சுதல் துறையாகும். சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளிபால் நக்கண்ணையார் ஒரு தலைக் காதல் கொண்டு, அவனை வாழ்த்தித் துதித்துப் பாடியவை புறநானூற்றுப் பாடல்களில் காணப்படுகின்றன. இவர் காதலித்தற்குரிய இளமைப் பருவத்திலேயே பாடும் புலமையும் பெற்றிருக்கிறார்.

          கோப்பெருநற்கிள்ளியின் பொழுதுபோக்கு அடிக்கடி போரவைக் கூட்டி மற்போர், விற்போர் முதலியன செய்து வீரம் விளைவிப்பதால் அவனுக்குப் போரவை என்னும் அடைமொழி ஏற்பட்டது. ஒரு சமயம் முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனுக்கும், நற்கிள்ளிக்கும் மற்போர் போட்டி ஏற்பட்டது. அப்பொழுது நேரில் கண்டு களித்த நக்கண்ணையார் பாடியது.

                   என்னைக்கு ஊர் இஃது அன்மையானும்

                 என்னைக்கு நாடு இஃது அன்மையானும்

                ஆடு ஆடு என்ப ஒரு சாரோரே

                ஆடு அன்று என்ப ஒரு சாரோரே

                நல்ல பல்லோர் இருநன் மொழியே

                அம்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்மில்

                முழா அரைப் போந்தை பொருந்தி நின்று

                யான் கண்டனன்அவன் ஆடு ஆகுதலே” (புறம், 85)

பெண்கள் நிற்கும் போது, ஏதேனும் ஒரு பொருளைச் சார்ந்து நிற்பது வழக்கமாகையால் போந்தை பொருந்தி நின்றார்.

     அம்சிலம்பு ஒலிப்ப ஓடியது நக்கண்ணையாரின் இளமையை நன்கு விளக்குகின்றது. இப்புலவர் பெருமாட்டியார் தன் காதலன் தன்னை காதலிக்காவிட்டாலும் அவன் வெற்றியையும், வீரத்தையும் பாராட்டி வாழ்த்திப் பாடும் பண்புடையவராகத் திகழ்கிறார்.

நிறைவாக,

        சங்க காலத்தில் தமிழ்ச் சான்றோர் அகம், புறம் என இருவகையாக பகுத்து, புறத்தில் நிகழும் போர் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு திணைகளைப் பிரித்தார்கள்.  புறநானூற்றில் பெண்பாற் புலவர்கள் 57 பாடல்களைப் பாடியுள்ளனர். அவற்றில் வெட்சி, கரந்தை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண் திணை, பொதுவியல் துணை, கைக்கிளை ஆகிய திணைகளில் உள்ள துறைகளில் பாடல்கள் அமைந்துள்ளன. இதில் ஔவையார் அதிக பாடல்களைப் பாடியுள்ளதால் அவரின் பாடல்களே பல்வேறு துறைகளில் அமைந்துள்ளதைக் காணலாம்.

துணை நின்ற நூல்கள்

1.   மாணிக்கனார்.,  உரையாசிரியர் -  புறநானூறு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை -600 001, முதற்பதிப்பு, 1998.

2.   இராசாமி. .வே.ராபுறநானூற்றுப் பெண்பாற் புலவர்கள், திருவள்ளுவர் பதிப்பகம், வைரிசெட்டிப்பாளையம், திருச்சி.

3.   கோவிந்தசாமி.முபுறநானூற்றுப் புதையல், திருமலைக்குமரன் பதிப்பகம், தஞ்சை.

------

 

         

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...