Skip to main content

சங்க இலக்கியத்தில் பழந்தமிழர் வணிகம்

 

சங்க இலக்கியத்தில் பழந்தமிழர் வணிகம்


சுருக்கம்

  அன்றைய வணிகர்கள் நீண்ட நுகத்தில் தைத்த பகல் ஆணியைப் போல நடுவுநிலை என்ற குணம்கொண்டு மிக்கநாணயத்துடன், அறநோக்குடன், பொருளை வாங்குவோர், விற்போர் இருபாலரும் ஒத்தநலன் பெறும்வகையில் வணிகம் செய்தனர். தமது தொழில் தொடங்குமுன் இரவலர்க்குத் தம் விற்பனைப் பொருளைக் கொடுத்து உதவினர். வணிகர் கல்வியிலும் சிறந்தோங்கி இலக்கியம் படைக்கும் புலமையாளராய்ப் பெருமை பெற்றதை முல்லைப்பாட்டு பாடிய பொன் வணிகனார், நப்பூதனார், மதுரை அறுவை வணிகன் இளவேட்டனார், உறையூர் இளம்பொன் வணிகனார், சீத்தலைச் சாத்தனார், மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் எனப் பலரது பெயர்கள் அமைந்துள்ளதின் மூலம் அறியலாம்.

தமிழின் தலைநூலாம் தொல்காப்பியம் சமூகக் கட்டமைப்பில் அரசருக்கு அடுத்த சிறப்பினை வணிகருக்குத் தந்துள்ளது. தமிழின் முதல் காப்பியமாம் சிலப்பதிகாரம் வணிகரினத் தோன்றல்களைக் கூறியுள்ளது. இவற்றால் பழந்தமிழரின் வணிகச் சிறப்பு விரிக்காமலே விளங்கும்.

திறவுச் சொற்கள்

            வணிகம், பண்டம், பண்ணியம், நியமம், அங்காடி, பண்டமாற்று, சாத்து, நிர்ணயம், நிமித்தம்.

முன்னுரை

பல்வகைத் தொழில்களுள் ஒன்றாக அமைவது வணிகம். இத்தொழிலைச் செய்வோர் வணிகர், வாணிகர் என்றழைக்கப்பட்டதுடன் விலை கூறி விற்பதால் விலைஞர்என்றும், தன்னிடம் உள்ள பொருள் இன்னது என இயம்பி விற்பதால் பகர்வர்என்று ஐங்குறுநூற்றிலும், ‘விலையாட்டிஎன்று சிலம்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். பொது நிலையில் வெளியூர்களிலிருந்து வணிகம் செய்ய வருவோரைச் சாத்துஎன அழைத்தனர். வணிகத்திற்குரிய பொருட்களைப் பொதுநிலையில் பண்டம், பண்ணியம் எனக் குறிப்பிட்டதை,

பல்பண்டம் பகர்ந்து வீசும்” 1

சிறந்த தேஎத்துப் பண்ணியம்” 2

என்னும் சான்றுகள் வழி அறியலாம். கூலம்என்பது உணவு தானியங்களைக் குறிப்பதாயிற்று. வணிகப் பொருட்களுக்குரிய மதிப்பு விலைஎனப்பட்டது. இன்றும் அவ்வாறே விலைஎன்ற சொல்லே வழக்கில் இருந்து வருகின்றது.

வணிக முறை

விற்பனைக்குரிய பல்வேறு பண்டங்களையும் ஓரிடத்தில் தொகுத்து விற்பனை செய்யும் நிலையான விற்பனைக் கூடங்கள் சங்ககாலத்தில் இருந்தன. இத்தகைய இடங்கள் ஆவணம்’, ‘நியமம்’, ‘அங்காடிஎன்றழைக்கப்பட்டன. ஒவ்வொரு பொருளுக்குமெனத் தனித்தனி விற்பனை நிலையங்கள் இருந்தன. அதற்கு இன்றைய வழக்கமான கடைஎனவும் குறிப்பிடப்பட்டது. பொருள் வேண்டுவோர் நேரில் வந்து வாங்கிக் கொள்ள வாய்ப்பாகப் பகல் பொழுதில் இயங்கும் அங்காடி நாளங்காடி எனவும், இரவுப் பொழுதில் இயங்கும் அங்காடி அல்லங்காடியாகவும் வழங்கப்பட்டன. இவை வாங்குவோர், விற்போர் செய்யும் ஆராவாரத்தில் பேரிரைச்சலுடன் விளங்கியதை மதுரைக்காஞ்சி,

ஆடுதுவன்று விழவின் ஆடார்த்தன்றே

 மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்

 நாளங்காடி நனந்தலைக் கம்பலை”3

 பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே

அல் அங்காடி அழிதரு கம்பலை”4

எனச் சிறப்பித்துரைக்கிறது. இவ்வாறின்றி வீதிதோறுமாக, வீடு வீடாகச் சென்று தம் பொருளை விற்கும் அசையும் வணிகரும் இருந்துள்ளனர்

வணிகரியல்பு

உள்ளூர் ஒழிந்து பிற ஊர்களுக்கும், நாடுகளுக்கும் வணிகம் செய்யச் சென்றுள்ளனர். ஆறலைக் கள்வரால் இவர்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளானதைச் சங்க இலக்கியம் பலவாறாகக் காட்டியுள்ளது.

சாத்து எறிந்து

அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்

கொடுவில் ஆடவர் படுபகை வெரி”5

என்பது சான்றாகும். இவர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள படைக் கலன்களுடன் சென்றதை அகநானூறு பொறைமலி கழுதை நெடுநிலை தழீஇய திருந்துவாள் வயவர்’6 எனக் காட்டுகின்றது. கடலில் மீன் பிடித்தலும் கூட்டாகவே நிகழ்ந்துள்ளது.

வணிகர்களது வாழ்க்கை அறநெறி பிறழாது அமைந்தது. தமது தொழில் தொடங்குமுன் இரவலர்க்குத் தம் விற்பனைப் பொருளைக் கொடுத்து உதவினர். மீன் பிடித்து வந்த பரதவர் தம்முன் பங்கீடும் விலை நிர்ணயம் செய்யுமுன், இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி’7 மகிழ்ந்ததை, வணிகர் விற்பனைக்குச் செல்லுமுன் நிமித்தம் பார்க்கும் வழக்கம் கொண்டிருந்ததை,

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்

உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்

குடபுல மருங்கின் உயம்மார் புள்ஓர்த்துப்

படைஅமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர்”8

என்னும் பகுதியால் அறியலாம்.

அன்றைய வணிகர்கள் நீண்ட நுகத்தில் தைத்த பகல் ஆணியைப் போல நடுவுநிலை என்ற குணம்கொண்டு மிக்கநாணயத்துடன், அறநோக்குடன், பொருளை வாங்குவோர், விற்போர் இருபாலரும் ஒத்தநலன் பெறும்வகையில் வணிகம் செய்ததை,

கொள்வதூஉம் மிகை கொளாது

கொடுப்பதூஉம் குறை கொடாது

பல்பண்டம் பகர்ந்து வீசும்

தொல் தொண்டித் துவன்று இருக்கை”9

என்ற பட்டினப்பாலை பாடலின் மூலம் அறியலாம்.

அன்று பெண்களும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் மீன், உப்பு, பூ, உணவுப் பொருள்கள், பால், மோர், தயிர் ஆகியவற்றையும் விற்றனர். கள் காய்ச்சுதலும் அவர்கள் தொழிலாகக் கொண்டிருந்தனர். இன்றைய காலத்திலும் பெண்கள் மீன், உப்பு, பூ, உணவுப்பொருள்கள், பால், மோர், தயிர் போன்ற பொருள்களை விற்கின்றனர். பெண்களும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது சங்ககாலத்திலிருந்து இன்றைய காலம் வரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

வணிகர் கல்வியிலும் சிறந்தோங்கி இலக்கியம் படைக்கும் புலமையாளராய்ப் பெருமை பெற்றதை முல்லைப்பாட்டு பாடிய பொன் வணிகனார், நப்பூதனார், மதுரை அறுவை வணிகன் இளவேட்டனார், உறையூர் இளம்பொன் வணிகனார், சீத்தலைச் சாத்தனார், மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் எனப் பலரது பெயர்கள் அமைந்துள்ளதின் மூலம் அறியலாம்.

பண்டமாற்று வணிகம்

சங்ககாலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்து கொண்டார்கள். பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக இன்னொரு பொருளைக்கொள்வது. அதிக விலையுள்ள பொருள்களை மட்டும் காசு கொடுத்து வாங்கினார்கள். பெரிய பட்டினங்களிலும், நகரங்களிலும் காசு கொடுத்துப் பொருளை வாங்கும் முறை இருந்தபோதிலும் ஊர்களிலும், கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது. தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்திலே எல்லா நாடுகளிலும் பழங்காலத்தில் பண்டமாற்றுதான் நடந்துவந்தது. மற்ற நாடுகளில் இருந்ததுபோலவே தமிழகத்திலும் பழங்காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. இதனைச் சங்க இலக்கியங்களின் மூலம் அறிகிறோம்.

இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக் கொண்டதை முதுகூத்தனார்,

பாலொடு வந்து கூழொடு பெயரும்

யாடுடை இடையன்”10

என்று கூறுகிறார் (கூழ் என்பது அரிசி, கேழ்வரகு, வரகு, தினை முதலான தானியங்கள்). ஆனால் இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று செய்யாமல் காசுக்கு விற்று அக்காசுகளைச் சேமித்து, அக்காசைக் கொடுத்துப் பசுவையும் எருமையையும் விலைக்கு வாங்கினார்கள் என்பதைப் பெரும்பாணாற்றுப்படையின் மூலம் அறியலாம்.

இன்றைய காலத்தில் பண்டமாற்று முறை பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை. உற்பத்தியாளர்கள் தமது பொருளை விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தின் மூலம் தமது குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்கின்றனர்.

காசு (நாணயம்)

பண்ட மாற்று வாணிகம் நடந்த அந்தக்காலத்தில் காசு வழங்கப்படவில்லை என்று கருதுவது கூடாது. அதே காலத்தில் செம்பு, வெள்ளி, பொன் காசுகளும் வழங்கி வந்தன. அந்தக் காசுகள் விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டன. பண்டமாற்று நடந்ததைச் சங்க நூல்களிலிருந்து தெரிந்துகொள்வது போலவே, காசுகள் வழங்கி வந்ததையும் சங்க இலக்கியத்தின் மூலம் அறியலாம். அந்தக் காசுகள் நெல்லிக்காயின் வடிவம் போல உருண்டு சிறிது தட்டையாக இருந்தன என்று அறிகிறோம். இதனை மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் பாலை நிலத்து வழியிலே இருந்த நெல்லி மரங்களிலிருந்து உதிர்ந்துள்ள நெல்லிக்காய்கள், பொற்காசுகள் உதிர்ந்து கிடப்பனபோலக் காணப்பட்டன என்பதை,

புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய்

கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்ப

பொலஞ்செய் காசிற் பொற்பத்தாஅம்”11

எனும் அகநானூற்றுப் பாடல் வரிகள் மூலம் கூறுகிறார்.

பொற்காசுகளை மாலையாகச் செய்து மகளிர் மேகலை போல அணிந்து கொண்டதைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய,

ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த

பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல் ”12

எனும் புறநானூற்று பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார்க்கு நாற்பது நூறாயிரம் பொன் (நான்கு இலட்சம்) அவன் பரிசாகக் கொடுத்தான் என்று பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தின் பதிகத்தின் மூலம் அறியலாம். செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலருக்குப் பரிசாக அவ்வரசன் நூறாயிரம் காணம் வழங்கினான் என்று ஏழாம்பத்துப் பதிகம் கூறுகிறது. இளஞ்சேரல் இரும்பொறை தன்னைப் பாடிய பெருங்குன்றூர் கிழார்க்கு முப்பதாயிரம் காணம் பரிசாகக் கொடுத்தான் என்பதை ஒன்பதாம் பத்து பாயிரத்தினால் அறியலாம்.

போக்குவரத்துச்  சாதனங்கள்

வணிகப்பொருள்கள் எல்லாம் ஒரே இடத்தில் உற்பத்தியாவதில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்கள் உற்பத்தியானதால், அப்பொருள்களையெல்லாம் ஓரிடத்தில் கொண்டுவந்து சேர்ப்பதற்கு வணிகர் கால்நடைகளையும் வண்டிகளையும் பயன்படுத்தினார்கள். ஆனால், இக்காலத்தில் உள்ள உந்து வண்டிகள், இரயில் வண்டிகள் போன்ற விரைவான போக்குவரத்துச் சாதனங்கள் இருப்பதுபோல அக்காலத்தில் இல்லை. ஆகவே, அவர்கள் எருது, கழுதை, வண்டி, படகு, பாய்க்கப்பல்களைப் பயன்படுத்தினார்கள். எருமைக் கடாவை ஏர் உழுவதற்குப் பயன்படுத்தினார்கள். சிந்து, பாரசீகம், அரபி நாடுகளிலிருந்து குதிரைகள் அக்காலத்தில் கொண்டு வரப்பட்டன. அவை கடல் வழியாகக் கப்பல்களில் கொண்டு வரப்பட்டன. குதிரைகளை அரசர் போர்செய்யப் பயன்படுத்தினார்கள்.

உள்நாட்டு வணிகம்

தமிழ் நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்தபடியால் தமிழர் இயற்கையாகவே கடற்பிரயாணம் செய்வதிலும் கப்பல் வாணிகம் செய்வதிலும் தொன்று தொட்டு ஈடுபட்டிருந்தார்கள். மேலும் கடற்கரையாகிய நெய்தல் நிலங்களில் வாழ்ந்தவர்கள் நாள்தோறும் கடலில் சென்று மீன் பிடித்துவந்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆகையால் கடலில் போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது.

கடலில் சென்று வணிகம் செய்தது போலவே தரை வழியாகவும் பல நாடுகளுக்குப் போய் வணிகம் செய்தார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் தரை வழியாக வடஇந்திய நகரங்களுக்கும் போய் வணிகம் செய்தவர்களுக்குப் பெருங்குடி வணிகர்என்பது பெயராகும்.

நிலவழியில் பொருள்களைக் கொண்டு உள்நாட்டிலேயே விற்பனை செய்தனர். நெய்தல் நிலப் பொருள்களாகிய உப்பும், மீனும் பண்டமாற்றுக்குப் பயன்பட்டவை. பரதர் உப்பு விளைவிப்பவர்கள். உமணர் உப்பை வாங்கிச் சென்று விற்பவர்கள். இலக்கியத்தில் இவர்களே மிகுதியும் இடம் பெறுபவர்கள். தன்னிறைவு சமுதாயத்தில் சுவை கூட்டும் இன்றியமையாத தேவையினடிப்டையில் உப்பே முதலிடம் பெற்றிருக்கும். எனவே, உப்பு வணிகம் இலக்கியத்தில் மிகுதியும் இடம் பெற்றதில் வியப்பில்லை.

உள்நாட்டு வணிகத்தைப் பற்றி அறியும்பொழுது மக்கள் புரிந்த தொழில் நிலத்திற்கு நிலம் மாறுபட்டதால் அவர்களுக்குப் போக்குவரத்துச் சாதனங்கள் தேவைப்பட்டன. பொருள்களை ஏற்றிச் செல்ல வண்டிகளும், கழுதைகளும், எருதுகளும் நிலத்தினில் செல்லும்போது பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டு வணிகத்திற்குப் பாய்மரக் கப்பல்களும், படகுகளும், கட்டுமரங்களும் பயன்படுத்தப்பட்டன.

உள்நாட்டு வணிகத்திற்குப் படகையும் பயன்படுத்தினர் என்பதைப் பட்டினப்பாலை,

வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி

நெல் லொடுவந்த வல்வாய் பஃறி”13

என்று குறிப்பிடுகின்றது. அதாவது வெள்ளை உப்பைக்கொடுத்து நெல்லைப் பெற்றுவரும் சிறு ஓடங்கள் என்று கூறுகின்றது.

தரை வணிகம்

சங்க காலத்தில் தரை வணிகமும் நல்ல வளர்ச்சியுற்றிருந்தது. அவரவரும் தத்தம் பொருள்களைக் கொடுத்துத் தமக்குத் தேவையான பொருள்களை மாற்றிக்கொண்டனர். எனவே மாறுதல் என்றாலே வணிகம் செய்தல்என்று பொருள்படுவதாயிற்று. கோவலன் கண்ணகியிடம் சிலம்பைப் பெற்றுக்கொண்டதும், ‘மதுரை சென்று மாறி வருகுவன், மயங்காதொழி’13 என்று கூறிச் சென்றான். அக்காலத்தில் நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது எனலாம். உப்பும் நெல்லும் அன்று ஒரே மதிப்புடையனவாக இருந்தன என அறிய முடிகின்றது.

நெல்லும் உப்பும் நேரே யூரிர்

கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும்” 14

அகநானூற்றுப் பாடலின் மூலம் தேனையும், நெய்யையும், கிழங்கையும் கொடுத்து மீனின் கொழுப்பையும், நறவத்தையும் பெற்றுக்கொண்டதையும், கரும்பையும் அவலையும் கொடுத்துக் கள்ளையும், மானிறைச்சியையும் பெற்றுக்கொண்டதையும் அறிகின்றோம்.

உமணர்கள் பெரிய வண்டியில் உப்பை மட்டுமின்றித் தம் வீட்டுச் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு உள்நாட்டுக்குள் நெடுந்தொலைவு சென்று விற்பார்கள். இவர்களைப்பற்றி பெரும்பாணாற்றுப்படையிலும், சிறுபாணாற்றுப்படையிலும் காணலாம்.

வணிகர்கள் வாழும் தெருக்களும் கடைவீதிகளும் தனித்தன்மையுடன் விளங்கின. வண்ணமும், சுண்ணமும், சந்தனமும், பூவும், புகைப் பொருட்களும், விற்பார் வீதிகளும்; பட்டினும், மயிரினும் செய்யப்பட்ட ஆடைகளை விற்கும் நெய்தற் தொழிலாளர் வாழும் தெருக்களும் இருந்தன. அகிலும், ஆரமும், முத்தும், மணியும், பொன்னும் அளவில்லாது நிரம்பிக்கிடந்தன. இவ்வாறு பண்டையத் தமிழரின் தரை வணிகம் சிறந்து விளங்கியது.

கடல் வணிகம்

கடல் வணிகத்தையும் அக்காலத் தமிழர் வளர்த்தார்கள். மரக்கலங்களில் உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு போய் அயல்நாடுகளில் விற்று, அந்நாடுகளிலிருந்து வேறுபொருள்களை ஏற்றிக்கொண்டு வந்தார்கள். தங்கள் நாவாய்களை அவர்கள் கடலில் கரையோரமாகச் செலுத்திக்கொண்டுபோய் கரையோரமாக இருந்த ஊர்களில் தங்கிப் பொருள்களை இறக்குமதி ஏற்றுமதி செய்தார்கள்.

காவிரிப் பூம்பட்டினத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது நிகழ்ந்தது எவ்வாறிருந்ததெனில், மலையில் பெய்த நீர் கடலில் கலப்பது போலவும், வான்முகந்த நீர் மலையில் பொழிவது போலவும் இருந்தது. நீரிலிருந்து நிலத்தில் இறங்குவதும், நிலத்திலிருந்து கலத்தில் ஏற்றுவதுமான பொருள்கள் அளப்பரியனவாக இருந்தன.

நீரின்று நிலத்தேற்றவும்

நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்

அளந்தறியா பல்பண்டம்

வரம்பறியாமை வந்தீண்டி”15

அக்காலக் கப்பல்கள் காற்றின் துணைகொண்டே இயங்கின. அவை பாய்மரக் கப்பல்களாகும். இதற்குக் காற்று எவ்வெப்போது எத்திசை நோக்கி வீசும் என்று உணர்வது அடிப்படையாகும். இதனைத் தமிழர் நன்கு உணர்ந்திருந்தனர். கரிகாலனின் முன்னோர்

நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி

வளிதொழி லாண்ட உரவோர்”16

எனப் பாராட்டப்பட்டுள்ளனர்.

உப்பங்கழிகளில் செலுத்துதற்குரிய சிறிய படகுகளும், கடலில் செலுத்துதற்குரிய பெரிய நாவாய்களும் அன்று இருந்தன. உள்நாட்டில் பயன்பட்டது பஃறிஎனப்படும். அவற்றில் வெள்ளுப்பை ஏற்றிச் சென்று விற்றனர். பண்டமாற்றாக நெல்லைப் பெற்று வந்தனர். அத்தகைய படகுகள் வரிசையாகத் தறிகளிலே பிணிக்கப்பட்டிருந்தன. அது குதிரைவரிசைபோல் தோன்றிற்று என்பதைப் பட்டினப்பாலையின் மூலம் அறியலாம்.

நிறைவாக,

தமிழின் தலைநூலாம் தொல்காப்பியம் சமூகக் கட்டமைப்பில் அரசருக்கு அடுத்த சிறப்பினை வணிகருக்குத் தந்துள்ளது. தமிழின் முதல் காப்பியமாம் சிலப்பதிகாரம் வணிகரினத் தோன்றல்களைக் கூறியுள்ளது. இவற்றால் பழந்தமிழரின் வணிகச் சிறப்பு விரிக்காமலே விளங்கும். இதனை உறுதி செய்யும் வகையில் சங்க இலக்கியமான எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் வணிகர், வணிக முறை, பண்டமாற்று, உள்நாட்டு வணிகம், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டார் குறிப்புகள், கடல் வணிகம் போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை எடுத்துக்காட்டுவதாக இவ்வாய்வு அமைக்கப்பட்டுள்ளது.

சான்றெண் விளக்கம்

1.    பட்டினப்பாலை, பா.வரி.212

2.    மதுரைக்காஞ்சி , பா.வரி.506

3.    மேலது, பா.வரி.428 – 430

4.    மேலது, பா.வரி,534 – 544

5.    அகம், பா.எண்,390 , 8-10

6.    மேலது, பா.எண், 89, 12 -13

7.    மேலது, பா.எண், 30, 9

8.    மேலது, பா.எண், 207, 1-4

9.    பட்டினப்பாலை, பா.வரி 210 – 212

10. மேலது, பா.வரி 131 – 136

11. அகம், பா.எண், 363,6-8

12. புறம், பா.எண், 353, 1-2

13. .தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், .115

14. அகம், பா.எண், 390, 8-9

15. பட்டினப்பாலை, பா.வரி 172-175

16. புறம், பா.எண், 66, 1-2

துணைநூற் பட்டியல்

     1.  சாமிநாதையர், உ. வே.          பத்துப்பாட்டு (ப. ஆ.)         

                                                      கேசரி அச்சுக்கூடம்

                                               சென்னை, மூன்றாம் பதிப்பு, 1931.

    2.    ----                                   அகநானூறு மூலமும் உரையும்

                                                சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

                                                1-140, பிரகாசம் சாலை, சென்னை,

                                                மறு பதிப்பு.

   3. துரைசாமிப்பிள்ளை, சு.            பதிற்றுப்பத்து மூலமும் விளக்க உரையும் (உ. ஆ.)                                                                      சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

                                                சென்னை, ஆறாம் பதிப்பு, 1973.

  4.  -----                                     புறநாநூறு மூலமும் உரையும்

                                                சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

                                                சென்னை, இரண்டாம் பதிப்பு, 1973.

  5.வேங்கடசாமி, மயிலை          பழங்காலத் தமிழர் வாணிகம்

                                                நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட்

                                                சென்னை, இரண்டாம் பதிப்பு, 1978

----

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...