அமெரிக்கா (சின்சினாட்டி) சென்ற பயணஅனுபவங்களாக...
நண்பர்களே! நீண்ட நாள் கழித்து அமெரிக்கா சென்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
நான் சிங்கப்பூர், மலேசியா போன்ற இரண்டு அயல்நாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளேன். விமானத்தில்
பயணிக்கும் நேரம் 4 மணிநேரம் அல்லது 5 மணி நேரமாக இருக்கலாம். ஆனால் இந்த அனுபவம் எனக்கு
மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. நான் Emirates என்னும் விமானத்தில் பயணம்
செய்தேன்.
திருச்சி- சென்னை
திருச்சியிலிருந்து
செவ்வாய் கிழமை (23.04.2025) அன்று மாலை 5.00 மணிக்குக் கிளம்பினேன். இரவு 12.00 மணிக்கு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தேன். நம் சென்னை விமானநிலையத்தில்
ஒன்றும் பிரச்சனையில்லை. இரவு மணிக்கு 1.00 மணிக்கு check – in at முடிந்து 3 மணிக்கு
விமானத்திற்காக காத்திருந்தோம். அங்கு அனைவரும் உதவியாக இருந்தார்கள். இந்த முறை தனியாக
சென்றதால் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. 3.30 மணியளவில் விமானத்தில் அமர்ந்து கொண்டேன்.
பிறகு விமான பணிப்பெண் உணவு கொடுத்தார்கள். பிறகு உறங்கினேன். துபாய் வந்தது.
துபாய் – சிகாகோ
துபாய் விமானநிலையத்தில் காலை 7.00 மணியளவில்
இறங்கினேன். எனக்கு வீல்சேர் என்று போட்டு இருந்ததால் அதற்கென தனி வரிசையில் நாங்கள்
வந்தோம். துபாய் விமான நிலையத்தில் அனைத்து அதிகாரிகளும் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள்.
நாங்கள் எந்த நாட்டிற்கு செல்கிறோம் என்பதைப் பார்த்து அதற்கு தகுந்தாற் போல ஏற்பாடு
செய்து அனுப்பி வைத்தார்கள். நல்ல அனுபவமாக இருந்தது. அதிக வயதானவர்கள் வீல் சேர் என்று
போட்டு வந்தார்கள். நானும் அதில் ஒருத்தியாக இருந்தேன். வீல் சேர் என்று போடுவதற்குக்
காரணம், ஒன்று மொழிப் பிரச்சனை, மற்றொன்று விமான நிலையத்தில் ஒரு விமானத்தில் இறங்கி
மற்றொரு விமானத்தை அடைய குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மால் அவ்வளவு தூரம் மொழி தெரியாத
காரணத்தினால் நடந்து செல்வது என்பது இயலாத காரியம். அதனால் நானும் என் மகளிடம் வீல்சேரில்
போடச் சொன்னேன்.
சிகாகோ செல்லும் விமானத்தில் ஏற்றி விட்டார்கள்.
கால தாமதம் என்று சொன்னார்கள். எனக்குத் தெரியவில்லை. துபாய் – சிகாகோ விமான பயணம்
14 மணி நேரமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். விமானத்தில் செல்லும் போது எந்த வித
பிரச்சனையும் இல்லை. தமிழ் சினிமா மூன்று நான்கு படங்களைப் பார்த்தேன். பின் கொஞ்சம்
நடந்தேன். தூங்கினேன். குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை உணவு வழங்கினார்கள். விமானப்
பணிப்பெண்கள் நன்கு கவனித்துக் கொண்டார்கள். இந்தியா நேரம், அமெரிக்க நேரம் என்று அந்தப்
பிரச்சனை. எனக்கு அதனால் நேரமும் கணிக்க முடியவில்லை. பணிப்பெண்களிடம் டீ, பழச்சாறு
என்று எதைக் கேட்டாலும் கொடுத்தார்கள். எந்தவொரு தொந்தரவும் இல்லை. குழந்தைகளின் அழுகுரல்
சிறு சிறு உரையாடல் என்று இருந்ததே தவிர சிரிப்பு, நட்புடன் பேசுதல், நீண்ட உரையாடல்
என்று எதுவும் இல்லை. எனக்கு மொழிப் பிரச்சனை. மற்றவர்கள் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள்.
அவர்களும் அதிகம் உரையாடிக் கொள்ள வில்லை. புன்னகை ஒன்றே அதிகம் பரிமாறப்பட்டது.
இறுதியாக ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக காட்டனில் சுடுதண்ணீர் நனைத்து ஒன்றை
விமான பணிப்பெண் வழங்கினார்கள். அப்பொழுது தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் விமானம் தரையிரங்கப்
போகிறது என்று நினைத்தேன். எனவே நான் என்னுடைய கையில் வைத்திருக்கும் பையில் அனைத்தையும்
சரிப்பார்த்து வைத்துக் கொண்டேன். ஆனால் நன்கு
பாதுகாப்பாகவும், அன்பாகவும் சிகாகோ விமான நிலையத்திற்கு விமானம் வந்தடைந்தது.
ஆனால் பேருந்து, தொடர்வண்டி என்றால் இந்நேரம் அதிகம் பேசியிருப்போம். பேசுவதற்கு
வயது தடையில்லை. புதிய நட்பு கிடைத்திருக்கும். நம் மனமும், முகமும் மகிழ்ச்சி, சோகம்,
நட்பு, விரக்தி, என்று அனைத்து நிலைகளிலும் மாறி மாறி ஓரளவு சகப் பயணிகளிடம் பேசிக்
கொண்டிருப்போம். ஆனால் விமான நிலையத்தில் எனக்கு மொழிப் பிரச்சனை. நான் தமிழில் மட்டும்
பேசுவேன். ஆங்கிலம் புரிந்து கொள்வேன். ஆனால் திரும்ப அவர்களிடம் நெடுந்தொடராக பேச
வராது. என்னால் பேச முடியாது. தமிழ் பேசுபவர்கள் வேறு வேறு இடத்தில் சீட்டில் அமர்ந்திருந்தோம்.
ஆகையால் பேச முடியவில்லை.
சிகாகோ – சின்சினாட்டி
சின்சினாட்டி விமான நிலையத்தில் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது. சிகாகோ விமான
நிலையத்தில் இந்தியர்கள் அதிகப் பேர் வீல் சேர் என்று டிக்கர் போட்டவர்களை தனி வரிசையாக
அழைத்துச் சென்றார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒரு இடத்திற்குச் செல்வதால் அவர்களால் குறிப்பிட்ட
நேரத்திற்குள் எங்களை அழைத்து செல்ல இயலவில்லை. விமானம் கொஞ்சம் கால தாமதம் என்று கூறி
என்னை சின்சினாட்டி விமானத்தைப் பிடிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள் அதிகாரிகள்.
பிறகு இருந்தாலும் என்னுடைய கூலிக்கு ஆள் வைத்து பெட்டிகளை எடுத்துக் கொண்டுச் சென்றேன்.
அவர் வேறு ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் (Terminal -3, c11 gate) வழிக்காட்ட சொல்லிவிட்டு
அவருடன் என்னை அனுப்பி வைத்தார். அவரும் என்னை வேகமாகத்தான் கூட்டிச் சென்றார் அந்த
சகோதரி. ஆனால் என்னால் அந்த சின்சினாட்டி விமானத்தைப் பிடிக்க முடியவில்லை. நான் மட்டும்
தான் சின்சினாட்டி செல்கிறேன். ஆகையால் எனக்கு
தெரிந்த ஆங்கிலத்தில் சின்ன வார்த்தைகளைக் கொண்டு விமான நிலையத்தில் பணிபுரியும்
பெண்ணிடம் என் மகளின் தொலைபேசி எண்ணைக் கொடுத்துப் பேசச் சொன்னேன். பிறகு அடுத்த விமானம்
டிக்கெட் போட்டு பிறகு Terminal 2, F1 கேட்டுக்குப் போகச் சொன்னார்கள். அங்கு வந்து
அமர்ந்து கொண்டேன். பிறகு United Airlines என்ற விமானம் மூலம் அமெரிக்க நேரம் இரவு
9.05 க்கு விமானம் புறப்பட்டது. இரவு 11.15 மணிக்கு சின்சினாட்டி வந்து சேர்ந்தேன்.
சிகாகோ விமான நிலையத்தில் வீல் சேரில் அழைத்துச் செல்ல ஆள் இல்லை. அதனால் 6 மைல் நடந்து
இருப்பேன். ரொம்ப அசந்து விட்டேன். இரவு உணவும் விமான நிலையத்தில் வாங்கவில்லை. தண்ணீர்
பாட்டில் 450 ரூபாய் என்றதும் வாங்காமல் என்னிடம் காலியாக உள்ள தண்ணீர் பாட்டிலில்
பிடித்துக் கொண்டேன்.
இவை அனைத்தும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக
இருந்தது. ஆனால் சிகாகோ விமான நிலையத்தில் யாரிடம் வழித் தடம் கேட்டாலும் புன்னகையுடனும்,
பொறுப்பாகவும் சொன்னார்கள். விமான நிலையத்தில் free WIFI connection, கொடுக்க உதவினார்கள்.
ஆகையால் என் மகளிடம் தொடர்பு கொள்ள முடிந்தது.எனக்கு உதவி செய்த அனைவரையும் இந்த நேரத்தில்
நினைத்துப் பார்க்கின்றேன். அனைவருக்கும் நன்றிகள் பல.
சின்சினாட்டி 23.04.2025 அன்று இரவு
12.00 வந்து சேர்ந்தேன். ஆனால் இன்று வரை தூக்கம், அலுப்பு, வெளியே Shoping என்று போய்
கொண்டிருக்கிறது.
29.04.2025 இன்று தான் என்னுடைய பயண அனுபவங்களைப்
பகிர முடிந்தது.
Comments
Post a Comment