ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்
- சுப உதயகுமாரன்
(புத்தக மதிப்புரை (97) - 30.04.2025, நேரம்- மாலை 3.30 மணி)
புதுகை
பண்பலை 91.2 சமுதாய வானொலி புத்தக மதிப்புரை (97) என்னும் சிறப்பு நிகழ்ச்சியில் பேசுவதற்காகத் தொகுக்கப்பட்டக் கட்டுரை ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம் என்னும் தலைப்பில் சுப.உதயகுமாரன் அவர்கள்
எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம். இப்புத்தகத்தை நாகர்கோவில், வல்லமை இது ஒரு காலச் சுவடு பதிவீடு வெளியிட்டுள்ளார்கள்.
ஆசிரியர்
தமது வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்டு இந்நூலை அமைத்துள்ளார். அக்காலத்தில்
வீட்டில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, தங்கையர், அத்தைமார், என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த நிலையை நினைத்துப் பார்த்து
அப்போது வீடுகளில் வசிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வீடுகள் குறைவாக இருக்கும். அப்போது பெரும்பாலானக் குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்கள்
தான். ஆகையால் பெற்றோர்களின்
அன்போடு, பெரியவர்களின்
அரவணைப்பும் கிடைத்தது. குழந்தைகளை அடைக்காப்பது போலக் காத்து, அவர்களுக்குள்
சரியான வழிகாட்டுதல்களைக் கொடுத்து, முழுமையான மனிதர்களாக உலகத்துக்குள் இறக்கிவிட்டனர்.
மகாகவி
பாரதியார் சொன்ன ‘வீடுதோறும் கலையின் விளக்கம்’ என்பதுதான் அந்தத் துவக்கம். வீடுதோறும் கலை விளங்கும் போது, நாடு முழுவதும் நல்லொளி பாய்ச்சப்படும். வீடும் நாடும்
நெருங்கிய தொடர்புடையன. என்று தொடங்கி அன்றைய காலம் துவங்கி இன்றைய காலம் வரை உள்ள
நிலையை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய இழிநிலைக்கு வீடும் காரணமாகின்றன என்று தமது உள்ளக் குமுறலை
வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நூலில்
வீட்டைக் கட்டிப்பார், இன்றைய வீடு, கலை, கேட்கும் கலை, பேச்சுக் கலை, சிந்திக்கும் கலை, மாதர் வாழ்வை அறியும் கலை, பெண்களை மதிக்கும் மக்களை மதிக்கும் கலை, மெய் தீண்டல்
கலை எனப் பல தலைப்புக்களில் தன் எண்ணங்களைப் பதிய வைத்துள்ளார். இந்நூல் இக்காலத்திற்கு
ஏற்ற நூல். அனைவரும் வாசிக்க
வேண்டிய நூலாக சமுதாய உணர்வோடு படைத்துள்ளார்.
வீட்டைக் கட்டிப்பார்
நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கும், அமிலவீச்சு, கொலை, கொள்ளைக் குற்றங்கள் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் என்னதான் தீர்வு? நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, வழிபடும் கோவில், பள்ளி, கல்லூரி, காவல் நிலையம், நீதி மன்றம், சிறைக்கூடம்
இவை எவையும் தீர்வாகாது. தீர்வு நம் கையில். சாதராண மக்கள் கைகளில் இருக்கிறது. மகாகவி பாரதியார்
சொன்னது போல, ‘வீடுதோறும்
கலையின் விளக்கம்’ ஏற்படுத்துவதுதான் தீர்வு.
நமது சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு நமது வீடுகளில் தான் பிறக்கிறது. வீடு தான் விடை. ஒவ்வொரு வீடும்
மாறிவிட்டால் ஒரு நாடு ஓர் இரவில் மாறிவிடும். நம் கேள்விகளுக்கெல்லாம் பதில் ஒவ்வொரு வீட்டிலும் பேச வேண்டும். தேடப்படவேண்டும். அடையப்பட வேண்டும்.
‘நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்’ என்றான் பாவேந்தர் பாரதிதாசன். அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்வின் நிலைகளை நான்கு வகையாகப் பிரித்தனர் நம்
முன்னோர். இங்கே வீடு
என்றால் சொர்க்கம் என்று பொருள். ஒரு நல்ல வீடு சொர்க்கமாக இருக்கும். அங்கே அறம்
ஆளும். பொருள் வளரும், இன்பம் பெருகும்!
ஆனால், தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல்
போன்றவற்றால் பின் நவீனத்துவ வீடு பெரிதும் மாறிவிட்டிருக்கிறது. தாயும் இப்போது
பொருள் ஓங்க வளர்க்கிறாள். தந்தையும் மற்றைக் கருமங்கள் செய்கிறார். மக்கள் மால்களில்
சுற்றித் திரிகின்றனர். ஒற்றைப் பெற்றோர் வீடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு வீடு தனித்து இயங்கி தனது இலக்கை அடைந்துவிட முடியாது. தனி மரம் தோப்பாகாது. அதன் வளர்ச்சியில், வீழ்ச்சியில்
பரந்துபட்ட சமுதாயத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாம் வாழும் வீட்டை வடிவமைக்கும் பணியைப் பிறர் நமக்கு உதவிடத்
தலைப்படலாம். அல்லது உபத்திரவமாக
தலையீடுகள் வரலாம். ஆனால் நமது கோன்மையை நாமே விட்டுக் கொடுத்தாலொழிய, நமது வீடு நடத்துதல்
பணியினை யாரும் தடுத்து நிறுத்தவோ, அழிக்கவோ முடியாது.
வீடுதான் மனித வாழ்வின் அடித்தளமாக அமைகிறது. அனைத்து வீடுகளையும் சேர்த்துதான் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புகிறோம்.
‘கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்’ என்னும் சொலவடை வெறும் பொருளாதாரக் கோண்ணத்திலிருந்து பார்க்கப்படுகிறது. இது ஒரு தவறான
புரிதல். ஒரு வீட்டைக்
கட்டியெழுப்பும் கட்டிக்காக்கும் கையாளும் கரையேற்றும் கலையைத்தான், அதிலுள்ள கடினங்களைத்தான்
இந்த சொலவடையால் சுட்டியிருக்க வேண்டும் நம் முன்னோர். ஒரு வீடானது அன்பும் அறங்களும் நிறைந்திருக்கும் இடமாக இருக்கவேண்டும்.
இன்றைய வீடு
சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார மாற்றங்களால்
இன்றைய வீடு மிகவும் மாறிவிட்டிருக்கிறது. ஒரு வீடு இனிதே இயங்க குடும்ப உறுப்பினர்கள், அவர்களை வழிநடத்தும்
ஆளுமைகள், தேவையான பொருளாதாரம், புறச் சமூகத்துடன்
சுமூகமான உறவாடல் என நான்கு முக்கிய தேவைகளைக் கண்ணுறலாம். இந்தச் சதுரத்தின் நான்கு மூலைகளும் நல்லபடியாக அமைந்தால்
வீடு சிறப்படையும்.
அண்மை காலம் வரை நமது குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக இருந்தன. இதனால் பல சவால்கள், சங்கடங்கள், இருந்தாலும்
பற்பல பயன்கள் இருந்தன என்பதை மறுக்க இயலாது. அன்பு, பாசம், பாதுகாப்பு, தகராறு மேலாண்மை எனப் பலவழிகளில் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு
உதவியது. இந்தப் பாசம்
இன்றைய குடும்பங்களில் இல்லை.
”இடிப்பா ரில்லா ஏமரா மன்னன்
கெடுப்பா
ரிலானுங் கெடும்”
குறைகளை உணர்த்துவோர் இல்லாத
அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லாவிட்டாலும் கெட்டுப் போவது போல, தட்டிக் கேட்கப்
பெரியோர் இல்லாத குடும்பங்கள் தவறான பாதைகளில் போய்விடுகின்றன. மூலை முடுக்கெல்லாம்
முதியோர் இல்லங்கள் முகிழ்த்து தாத்தா, பாட்டிகளைத் தாங்கி நிற்கின்றன. தனிக்குடித்தனம் தான் இன்றைய வாழ்க்கை முறை என்றாகிவிட்டது.
ஒற்றைப் பெற்போர் குடும்பம் சாதாரணமாகிவிட்டது. திருமண முறிவு, உண்மையற்ற உறவு, விலகிப் போய்விடுதல், மரணம் எனப் பலக் காரணங்களால் ஒரு பெற்றோர் காணாமல் போகும்போது
அது ஒற்றைப் பெற்றோர் குடும்பம் ஆகிறது. இரட்டை மாட்டு வண்டியை ஒரு மாடு மட்டும் தனியே இழுப்பது போல, வாழ்க்கை வண்டி
நகர முடியாமல் ஆகிறது. அல்லது ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு போகிறது.
இன்றைய நாட்டின் இழிநிலைக்கு வீடும் இன்றைய வீட்டின் இழிநிலைக்கு நாடும் காரணமாகின்றன. இன்றைய வீடு
புனரமைக்கப்பட வேண்டும். ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்பது ‘நாம் இருவர், நமக்கு ஒருவர் என்றாகி இருக்கிறது. இது விரைவில் ‘நாம் இருவர், நமக்கு சைபர்’ என்றாகலாம். எண்ணிக்கையில்
குறைவாக இருந்தாலும், கூடி வாழும் நம்பிக்கையில் பலமானவர்களாக இருப்பது நல்லது. ‘கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை’ என்பதை உணர்வோம்.
கலை
‘வீடுதோறும் கலை’ எனும் சொற்றொடர் எதைக் குறிக்கிறது. அது உறவுகளைக்
கையாளும் கலைதான்!
கணவன் – மனைவிக்குள்
ஊடல், கூடல்! பெற்றோர் – குழந்தைகளுக்குள் அன்பு, அரவணைப்பு, சிரிப்பு, கண்டிப்பு என ஓராயிரம் பூக்கள். பிள்ளை வளர்ப்பது என்பது ஒரு தோட்டக்கலை போன்றதுதானே! உரமிட்டு, நீருற்றி, கவனஞ் செலுத்தி, கண்ணுங் கருத்துமாக
பார்த்து கருவேப்பலைக் கன்று போல் வளர்க்கப்படுவதுதானே குழந்தை! ‘மேவி அனைவரும் ஒன்றாய், நல்ல வீடு நடத்துதல்’ என்பது உறவுகளைப் பேணுவதுதான். இந்தக் கலை பலப் பரிணாமங்களைக் கொண்டது.
பேசுதல், எல்லாம் பேசுதல், எதையும் பேசுதல், எங்கேயும் பேசுதல், எப்படியும்
பேசுதல், எவ்வளவும் பேசுதல். அன்புடன் பேசுதல், கவனத்துடன்
பேசுதல், கேட்க விடுதல், உள் வாங்கல், சிந்தித்தல், முடிவெடுத்தல், கருத்துக்களைப் பரிமாற்றம் செய்தல்.
வீதியிலுள்ள உறவுகளைப் போல் அல்லாமல், வீட்டிலுள்ள உறவுகள் ஓர் உரிமையைத் தருகின்றன. கருத்துப் பரிமாற்றம்
பல நிலைகளில் நிகழலாம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரை மணி நேரமாவது ஒருவரோடு
ஒருவர் மனம் விட்டுப் பேசவேண்டும். ஆண் – பெண் வேறுபாடு
முற்றிலும் களையப்பட வேண்டும். இரவு உணவை அனைவரும் சேர்ந்து சாப்பிட வேண்டும். அப்பொழுது ஒவ்வொருவரும்
தங்களின் அன்றைய நாள் நிகழ்வை பகிர்ந்து கொள்ளலாம்.
கேளுங்க, கேளுங்க, கேட்டுக் கிட்டேயிருங்க! இதுதான் வீட்டுக்
கலை! வாழும் கலை!
பேச்சுக் கலை
மனம் திறந்து பேசும் கணவன் – மனைவி இடையே நம்பிக்கை இருக்கும். அன்பு, ஆசை இருக்கும். அதே போல் பெற்றோரும்
குழந்தைகளும் மனம் விட்டு பேசினால், அந்தக் குடும்பத்தில் சாந்தமும் சமாதானமும் இருக்கும். அப்போது பிரச்சனைகளை
மறைக்கத் தேவை இருக்காது.
ஒரு முறை கணவன் – மனைவியருக்கும் இடையே நடப்பது போல இங்கிலாந்து அரசி விக்டோரியாவுக்கும்
அவருடைய கணவர் ஆல்பர்ட்டுக்கும் ஒரு கருத்து வேறுபாடு எழுந்தது. ஒரு தவறான வார்த்தை
இன்னொரு தவறான வார்த்தைக்கு இட்டுச் செல்ல பிரச்சனை பெரிதாயிற்று. மேலும் பொறுத்துக்
கொள்ள இயலாத ஆல்பர்ட் படுக்கை அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார். அவரைப் பின்தொடரந்து
சென்ற ராணியார் ‘கதவைத் திறவுங்கள்’ என்று கட்டளையிட்டார். ஆல்பர்ட்டிடமிருந்து
எந்தப் பதிலும் வரவில்லை. ‘நான் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகளின் ராணி, இந்தியா உள்ளிட்ட
பிரிட்டானிய பொதுநல நாடுகளின் மகாராணி, பிரிட்டிஷ் ராணுவத்தின் படைத் தளபதி, நான் ஆணை யிடுகிறேன், கதவைத் திறவுங்கள்’ என்று கூறியும்
உள்ளேயிருந்து எந்த பதிலும் வரவில்லை. சற்று நேரம் கழித்து, மென்மையான குரலில் அரசி விக்டோரியா சொன்னார். ”ஆல்பர்ட், நம்மிடையே நடந்த
வாதத்திற்கு நான் வருந்துகிறேன். நான் உங்களை நேசிக்கிறேன்” கதவு திறந்தது.
வீட்டாரோடு பேசும்போது, கடினமற்ற, சமநிலையில் வார்த்தைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
சிந்திக்கும் கலை
சிந்திக்கும் திறன் என்பது எண்ணுவது, கண்ணோடுவது, தேர்வது, தெளிவது போன்றவற்றைக் குறிக்கும். ‘எப்பொருள் யார்யார்
வாய் கேட்பினும்’ அல்லது எப்பொருள் எத்தன்மைத் தாயினும்’ அப்பொருள் பற்றிய
உண்மைகளை உணர்வதுதான் அறிவு. அந்த அறிவைப் பெற உதவுவதுதான் சிந்திக்கும் கலை. மனிதர்களுக்கும்
விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகளில் தலையாயது இந்த சிந்திக்கும் திறன்தான்.
விதையை நிலத்தில் எங்கே போட்டாலும் வளரும். என்றாலும், விளைநிலத்தில் பாத்தி கட்டி, நீருற்றி, உரம் போட்டு வளர்த்தெடுக்கிறோமே, அது போலத்தான் சிந்திக்கும் கலையை வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
தற்போதைய நவீன கால வீடுகளில் வழி நடத்துவதற்குப் பெரியவர்கள் இல்லை. பெரும்பாலான
குழந்தைகளுக்கு வயது முதிர்ந்த தோழர்கள் கிடையவே கிடையாது. பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பதிலும், வாழ்க்கையை
ஓட்டுவதிலும் தங்கள் நேரம், சக்தி முழுமையும் செலவிட வேண்டியுள்ளது. இப்போது ஒரு
பழமொழியைப் பகிர்ந்து இளைஞர்களை வழிநடத்திச் சுட்டிக் காட்டும் நபர்கள் யாருமில்லை.
உண்மையைச் சொல்வதென்றால், சிந்திக்காத மனிதர்களையே இன்றைய உலகம் அதிகம் விரும்புகிறது. பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள்
சிந்திக்கிற மாணவர்களை விரும்பமாட்டார்கள். சிந்திக்கிற வேலையாளை முதலாளி விரும்புவதில்லை. சிந்திக்கிற
மக்களை அரசுகள் விரும்புவதில்லை. காரணம் சிந்திக்கிறவர் கேள்வி கேட்பார். கேள்வி கேட்பவர்
பதில் சொல் என்பார். பதில் கிடைக்க வில்லை யென்றால், கொடி பிடிப்பார். கோஷம் போடுவார். எனவே தான் நாட்டில் மது, மாது, சூது போன்றவற்றை நாட்டில் தாராளமயமாக்கி இளைஞர்களைச் சிந்திக்க
விடாமல், செயல்பட விடாமல்
முடக்கி வைக்கின்றனர்.
சிந்திப்பது, செயல்படுவது
குறித்து வள்ளுவர்,
”தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள்
யாதொன்றும் இல்”
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன்
நன்றாகத் தேர்ந்து, தானும் எண்ணிப் பார்த்து, செயல் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஏதுமில்லை. இப்படி சுயபுத்தி, சொல் புத்தி
இரண்டும் சிந்திப்பதற்கு உதவுகின்றன.
மாதர் வாழ்வை அறியும் கலை
மாதர் வாழ்வை அறியும் கலை மாதவிடாயில் இருந்து தொடங்கட்டும்! பெண்ணின் விசேடமான
உடற்கூறுகளை, அவற்றினால்
அவர்களுக்கு எழும் சமூக, பொருளாதார, அரசியல் அல்லல்களை, அவலங்களை எல்லாம் அறிந்திருப்பது அவசியம்.
ஒரு பெண் பருவமடைந்ததும், அவளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. வீட்டிற்கு
வெளியே போகக் கூடாது. ஓடியாடி விளையாடக் கூடாது. கண்ணைப் பார்த்து பேசக் கூடாது. எனக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்.
வீட்டிற்குள்ளே இந்த நிலை என்றால், வெளியே பெண் நிமிர்ந்து நடந்தால், தன்னம்பிக்கையோடு
பேசினால், வாய்விட்டு
சிரித்தால், சம உரிமையோடு
நடந்தால் நம்மில் பலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அறிவும் திறமையும் கொண்ட பெண்ணாக இருந்தாலும், அவளை அங்கீகரிக்க
மனம் ஒப்புவதில்லை. அவளைச் சமமாக நடத்தத் தலைப்படுவதில்லை.
நமது தமிழ்ச் சமூகத்தில் ஏராளமான ஆண்கள் பெண்களின் கண்களைப் பார்த்துப் பேசுவதில்லை. பெண்களுக்கு
நேரடி அங்கீகாரம் கொடுக்க விரும்பாதவர்கள், தங்களின் கையாலாகாத்தனத்தை மறைக்க முயல்கிறவர்கள், ஆணாதிக்க ஊனம்
உடையவர்கள் எல்லோரும் பெண்களைச் சமமாக எதிர்கொள்ள வெறுக்கின்றனர். இந்தக் குழப்பமான
மனநிலையின் வெளிப்பாடுதான் கண்களைப் பார்த்துப் பேசாமல் இருப்பதற்குக் காரணம்.
பாரதியார், ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று கூறுகிறார். சில ஆண்டுகளுக்கு
முன்பு வரை பெண் பெரியவளானதும் பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை. ஆனால், இன்று நிலைமை
மாறியுள்ளது. காரணம் வள்ளுவர்
சொல்வது போல,
”சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும்
காப்பே தலை”
என்பதை நாம் அறிந்திருக்கிறோம். பெண்களைச் சிறைவைத்து
காக்கும் முறை எந்தப் பயனையும் தராது. அவர்கள் நிறை எனும் பண்பால் தங்களைத் தாங்களே காத்துக் கொள்வதுதான்
சிறப்பு.
மேலும் பாரதியார், ”கற்பு நிலையென்று சொல்லவந்தால் இருகட்சிக்கும் அஃது பொதுவில்
என்போம்” பெண்ணுக்கு
மட்டும் தான் கற்பு, அதில்தான் அமைந்திருக்கிறது வீட்டின், நாட்டின் ஒழுக்கம், கௌரவம், பெருமை என்றெல்லாம்
பேசிக் கொண்டிராமல், ஆண், பெண் இருபாலரையும் ஒருங்கே பார்ப்பதுதான் மாதர் வாழ்வை அறியும்
கலை.
பெண்களை மதிக்கும் மகனை
வளர்க்கும் கலை
நமது தமிழ்ச சமூகத்தைப் பற்றிச் சற்றே
சிந்திப்போம். ஆண் குழந்தைகளை
எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து குட்டிச் சுவராக்கி விடுகிறோம். குழந்தை கருவிலிருக்கும்
போதே நமது ஆண் மோகம் தொடங்குகிறது. ஆண் குழந்தைகளுக்கு ஊட்டம் மிக்க நல்ல உணவு, பெண் குழந்தைகளுக்கு
உயிர் வாழ மட்டும் போதிய உணவு என்று பாரபட்சம் காட்டுகிறோம். ஆண் குழந்தைகளுக்குப்
பூரண சுதந்திரம், பெண் குழந்தைகளுக்கு அளவு அதிகமான கட்டுப்பாடுகள், ஆண் என்றால்
வாரிசு, பெண் என்றால்
பெரும் சுமை. இப்படியே பார்க்கிறோம், சிந்திக்கிறோம். செயல்படுகிறோம்.
பள்ளிக்கூடம் போனாலும் இதே கதைதான். அவனைப் பார்க்காதே, பேசாதே என்று ஆசிரியர்களை மனங்களுக்குள் மதிற்சுவர் கட்டுகிறார்கள். விடத்தைப் பாய்ச்சி
விபரீதங்களை விதைக்கிறார்கள். பொதுக் கலாச்சாரமும் இப்படிதான் இருக்கிறது. தற்போது காலம்
மாறியுள்ளது. இப்பொழுது அதிகக்
கட்டுப்பாடுகள் இல்லை. தற்போதைய வீடுகளிலும் இந்த நிலை கொஞ்சம் மாறியுள்ளது.
பெண்களைப் போகப் பொருளாகப் பார்த்தல், உரிமைகளற்ற உடமையாகக் கொள்ளல், தனக்கென வாழாது நமக்கென வாழும் அடிமையாகப் பாவித்தல், பாலியல் வன்கொடுமை, வன்புணர்ச்சி, என மனிதப் பண்பற்ற
போக்கே நிலவுகிறது நம் தமிழ் சமூகத்தில். அப்பனுக்குப் பிள்ளை அப்படியே பிறக்கிறது.
சரி, பெண்களை மதிக்கும் மகனை வளர்த்தெடுப்பது எப்படி? சோற்றில் உள்ள கல்லைப் பொறுக்காமல், சொக்கநாதர் கோவில் வரிக்கல்லைத்தான் பெயர்ப்பேன் என்பது மடமை, வீட்டில்தான் தொடங்க வேண்டும். இந்த விடயம். அப்பா என்கிற ஆண் அம்மாவின், குடும்பத்திலுள்ள பிற பெண்களின் முகத்தைப் பார்த்துப் பேசினால், அவர்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால், சம உரிமை கொடுத்து வாழ்க்கையை நடத்தினால், ஆண் குழந்தைகள் நல்ல பாடம் பெறுவர். பெண்களோடு பேசும்போது, பெண்களைப் பற்றி பேசும்போது, பயன்படுத்தும் மொழி, உடல், உளப்பாங்கு, அணுகுமுறை நேர்மறையாக இருந்தால், ஆண் குழந்தைகள் அதை ஏற்றுக் கொண்டு அவ்வழி நடப்பர்.
நிறைவாக, இத்தகைய அரியதொரு வாய்ப்பினை நல்கிய புதுகைப் பண்பலை 91.2 சமுதாய வானொலி
நிலையத்திற்கு எனது நன்றியினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
Comments
Post a Comment