தமிழ் சிந்தனை மரபில் ‘வெளி' யும் காலமும்
‘வெளி’ என்பது நிலத்தையும், நிலத்திற்கு மேலான பரப்பையும் குறிக்கிறது. மேலும், நிலத்திற்கு
மேல் உள்ள வான்வெளி, வீடு, விளைநிலம், கட்டடங்கள் அமைகின்ற வீதிகள், கண்ணுக்குப் புலனாகின்ற சுற்றுவெளி, புலனாகாத வெளி
போன்றவற்றை உள்ளடக்கியது.
தொல்காப்பியத்தில்
திணை அடிப்படையில் தொடங்கும் வெளி பிரிவினை, சோழர் காலத்தில் சாதியடிப்படையில் நிலைபெறத் தொடங்கிப் பின்னர்
நிலைபெற்று, இக்காலம் வரை
நடைமுறையில் உள்ளது. இந்நூலில் பதினொரு தலைப்புக்களில் ‘வெளி’ சார்ந்த நிகழ்வுகளை
விவரித்துள்ளார்.
தமிழ்ச் சிந்தனை
மரபில் வெளி
தமிழ் சிந்தனை மரபில் நிலமும் பொழுதும் இன்றியமையாதன. இவற்றின் மேல்தான்
உரிபொருளான வாழ்வு நடைபெறுகிறது. அகப்பொருளும், புறப்பொருளும் நிலம், பொழுது சார்ந்தே அமைகின்றன. நிலத்தைக் கைப்பற்றும் செயல் வீரர்கள் சார்ந்தவையாக எண்ணப்படுகின்றன. அ.மார்க்ஸ் என்பவர்
”நிலமென்பது
வணிகர்களுக்கு விற்பனைப் பொருளாகவும், புலம் பெயர்ந்த மக்களுக்கு இழந்த சொர்க்கமாகவும், பொதுவுடைமைக்
கருத்து உடையவர்களுக்கு உற்பத்திச் சாதனமாகவும், அரசுக்கு ஆளுகைப் பகுதியாகவும், குடிமக்களுக்கு
நாடாகவும் பொருள்படுகிறது” என்பர். நாம் வாழும் பூமியில் நிலம் என்கிற வெளி வாழ்வோடு தொடர்புடையது.
தொல்காப்பியத்தில்
வெளி
இனக்குழு வாழ்க்கை கொண்ட எளிய மக்களுக்கு பெரும் நிலப்பரப்புகள் தேவையில்லை. தொல்தமிழ் வெளியை
ஐந்திணை வெளிகளாகப் பிரித்துக் காட்டும் தொல்காப்பியர், கலாச்சாரப் புவியியலைத் தொடங்கி வைத்தார். பெருநிலப் பரப்பினை
ஆண் மையக் கடவுளரோடு இணைத்தார். எத்திணைக்கும் பெண் கடவுளைக் கருப்பொருளாகச் சுட்டவில்லை. பெருநில வெளிக்கான
தெய்வம், உணவு, பயிரினம், உயிரினங்களைத்
தொகைப்படுத்தி நிலத்துக்கும் பண்பாட்டுக்கும் உள்ள இணைப்பை உறுதிப்படுத்தினார். புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்று
மனித உணர்வுகளின் நிலைக்களன்களாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் நிலங்கள் அமைகின்றன. இதனை,
”மாயோன்மேய காடுறை உலகமும்
சேயோன்மேய
மைவரை உலகமும்
வேந்தன்
மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி, மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
என்ற நூற்பா காட்டுகின்றது. பண்டைச் சமூகத்தில்
தாய்த்தெய்வம் எனப்படும் பெண்தெய்வமே நிலத் தெய்வமாக விளங்கியது. ஆண் கடவுளர்
முதன்மை இல்லை. கானமர் செல்வி, வெல்போர்க்
கொற்றவை, அணங்கு, கடல்கெழுசெல்வி, சுனையுறை சூர்மகள் போன்ற பெண்தெய்வங்கள் உறையும் வெளி முதன்மையாகவும், ஆண்தெய்வங்கள்
உறையும் வெளி குறைவாகவும் செவ்வியல் பனுவல்களில் குறிப்பிடப்படுகின்றன.
இலக்கியங்களில்
வெளி
முரஞ்சீயூர் முடி நாகராயரின் புறநானூற்றுப் பாடலில்,
”மண்திணிந்த நிலனும்
நிலன்
ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு” (புறம்
-2, 1-5)
என்ற புறநானூற்றுப் பாடலடிகள்
மண் செறிந்த நிலனும், அந்நிலத்தின் மேல் அமைந்த ஆகாயமும், அந்த ஆகாயத்தைத்
தடவிவரும் காற்றும், காற்றின் கண் தலைப்பட்ட தீயும், தீயோடு மாறுபட்ட நீருமென்று ஐவகைப்பட்ட பூதத்து இயற்கையைத்
தமிழ் மரபு உரைக்கின்றது. இப்பாடல் நிலவெளியை முதன்மையாகக் கருதுகிறது. இக்கருத்தைப்
பிற்காலப் பழம் பாடலான பரிபாடல் பிரதிபலிக்கிறது.
மணிமேகலை தோன்றிய காலத்திலேயே தமிழகத்தில் சாதி வேற்றுமை வேரோடியிருந்தது. தொழில்கள் காரணமாகத்
தோன்றிய பலவகை சாதிகள் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத்துச் சுடுகாட்டைப் பற்றி மணிமேகலை விரிவாகச்
சொல்லுகிறது. அங்குப் பலவகைச்
சமாதிகள், இந்த சமாதி
இந்த வருணத்தார்க்கு உரியது என்று காணும் படி கட்டப்பட்டிருந்தது என்பதை,
”அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்குடன்
மாய்ந்த பெண்டிர்க்காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
இறந்தோர் மருங்கின் சிறந்தோர் செய்த
குறியவும், நெடியவும் குன்று கண்டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்” (மணி,
6, 54)
என்ற அடிகளில் அரசர்கள், தவசிகள், கணவருடன் இறந்த
பெண்டிர்களின் சாதி விளங்கும்படி சமாதிகள் கட்டப்பட்டிருந்தன. மேலும் 28 – வது காதையில்
தொழில் வாரியாகத் தனித்தனி வீதிகள் குறிக்கப்பட்டுள்ளன என சாமி சிதம்பரனார் கூறுகிறார்.
சங்க காலத்தில் சமூகநிலைகளை எடுத்துக் காட்டும் துடியர், பாணர், பறையர், கடம்பர் போன்ற
இனக்குழுக்களைக் குறிக்கும் வழக்காறுகள் இருந்தன. இதனைத்
”துடியன் பாணன் பறையன் கடம்பனென
நிற
நான்கல்லது குடியுமில்லை” (புறம்,
335)
என்ற புறநானூற்று பாடல்
மூலம் அறியலாம்.
வருண வேறுபாடில்லாத
வீதிகள்
நானிலப் பிரிவினையைத் தவிர வாழும் புலத்தில் பல்வேறு பிரிவினைகள் உள்ளன. பண்டைத் தமிழகத்தில்
தொழில் அடிப்படையில் அரசன் வாழும் இடம், அறங்கூறும் அவையத்தார் தெரு, வணிகர் தெரு, நாற்பெருங் குழுவினர் வாழும் தெரு, தொழில் செய்வோர்
தெரு என்று வாழுமிடம் பிரிக்கப்பட்டது. அவ்வாறு பிரிக்கப்பட்ட தெருக்களில் தீண்டாமை பாராட்டப்படவில்லை. ஒருவரோடு ஒருவர்
நெருங்கி நின்றனர். இதனைச்,
சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினுங் காலுற நிற்றார்” (மதுரைக்காஞ்சி, 521-522)
என்ற அடிகளில் காண முடிகிறது.
வாஸ்து சாத்திரப்படி
அமையாத அரண்மனை
நெடுநல்வாடையில் அரண்மனை கட்டப்படும் விதம் கூறப்படுகிறது. திசையெங்கும்
விரிந்த கதிர்களைப் பரப்பிய சூரியன், இரண்டு கோல்களை நடும்பொழுது அவற்றின் நிழல் எந்தப்பக்கமும்
சாயாது கோயில்களின் மேலே விழும் நண்பகல் பொழுதில், சிற்ப நூலறிஞர் நுட்பமாகக் கணக்கிட்டு நூல் பிடித்துத் திசையைக்
குறித்துத் தெய்வத்தை வணங்கி மன்னர்க்குப் பொருத்தமான அரண்மனையைக் கட்டினர். கதவு நிலையில்
வெண்சிறுகடுகின் சாந்தும் நெய்யும் கலந்த கலவை தடவப்பட்டது. கைத்தொழில்
வல்ல தச்சர் இரு கதவுகளைப் பொருத்தினர். புதிதாகக் கொண்டுவரப்பட்ட மணல் அரண்மனை முற்றத்தில் பரப்பப்பட்டது. (நெடுநல்வாடை 73-90)
அகநானூற்றுத் தலைவியின் திருமணத்தில் மணல் நிறைத்த நிலத்தில் பந்தல் காணப்படுகிறது (அகம் – 136). ஐங்குறுநூற்றில்
புதுமணல் பரப்பிய முற்றத்தில் வெறியாடுகளத்தை வேலன் நிறுவுகிறான். புதுமணல் பரப்புதல்
என்பது திருமண நிகழ்வுகளிலும் தனிப்பட்ட சமய நிகழ்வுகளிலும் நடைபெறுகிறது. மணல் பரப்புதலின்
வழியாக நடப்பு வெளி புதிய வெளியாக மாற்றப்படுகிறது.
கோயில் வாஸ்து
சாத்திரமும் வெளியும்
வாஸ்து சாத்திரம் வெளி அமைப்பினை நிர்ணயிக்கிறது. தெருக்கள், வீடுகள், கோயில், சன்னல், கூரை, கட்டுமானப்பொருட்கள், போன்றவற்றை எச்சாதி எவ்விதம் கைக் கொள்ள வேண்டும் என்பதை
வரையறுக்கிறது.
கோயில்கள் சதுரமாகவோ செவ்வகமாகவோ அமைகின்றன. கோயிலை எடுப்பதற்கு முன்னர் உரிய நிலத்தைத் தேர்ந்தெடுத்துச்
சமன் செய்து கோயிலின் அளவையொட்டி நிலத்தில் சதுரம் வரைவர். பக்கத்திற்கு எட்டாக மொத்தம் 64 சதுரங்களாகவோ அன்றி பக்கத்திற்கு ஒன்பது சதுரங்களாக 81 சதுரங்களாகவோ
அமைப்பர். இவற்றின் நடுவில்
உள்ள சதுரங்களில் விமானத்தையும் ஓரங்களில் உள்ள சதுரங்களில் திருச்சுற்றுப் பிரவாரக்
கோயில் முதலியவற்றையும் அமைப்பர். இடைப்பட்ட சதுரங்கள் வெளியாக இருக்க வேண்டும் என்பர். கிடைமட்ட வசத்தில்
மையப்பகுதி இன்றியமையாப் பகுதியாக அமைவதைப் போலன்றிச் செங்குத்து வசத்தில் தலைப்பகுதி
பிரதானமாகக் கருதப்படுகிறது. கோபுரக் கட்டடம் எழுப்புவதில் ஆதாரப் பகுதிகளாக உள்ளவை. 1. அதிட்டானம் (பீடம்) 2 சுவர் (கால்) 3. பிரஸ்தரம் (கூரை) 4. கழுத்து (கிரீவம்) 5.சிகரம் (தலை) 6. குடம் (ஸ்தூபி) என்பவையாகும். இவ் அங்கங்களை
அடி, கால், தோள், கழுத்து, தலை, முடி, என மனித உடல்
அங்கங்களுக்கு உவமிப்பர்.
பௌத்தத்திலும் புத்தரின் உடல் அட்ட மங்கலப் பொருளுடன் ஒப்பிடப்படுகிறது. புனிதக் கொடை, தங்க மீன் இணை, வலம்புரிச்சங்கு, அட்சயப் பாத்திரம், தாமரை, முடிவடையா முடிச்சு, வெற்றிப் பதாகை, சக்கரம் (தர்மச்சக்கரம்) என்பன புத்த
மதத்தின் எண்வகை மங்கலப் பொருட்கள் (அஷ்டமங்கலம்) ஆகும். இந்த எண்வகை மங்கல பொருட்கள் உடலின் பாகங்களைக் குறிக்கும்
குறியீடுகளாகக் கொள்ளப்படுகின்றன.
சோழர்காலச்
சாதிய வெளி
சோழர்காலத்தில் தான் சாதிய அடிப்படையிலான வெளி உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ”தச்சன், குயவன், தட்டான், அம்பட்டன், தலையாரி, மருத்துவன், செக்கார், இடையர், நெசவாளர்” போன்ற இவர்கள் கிராமங்களில் ஒதுக்குபுறமாக வாழ்ந்தனர். இதற்குக் கழனைகள்
என்று பெயர். இவர்கள் பரம்பரையாகச்
சாதியை அடிப்படையாகக் கொண்டே தொழில் புரிந்தனர். இவர்கள் கிராமங்களை விட்டு வெளியேறித் தொழில் செய்யக் கூடாதென்று
தடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெரு, வீடுகள் அமைய
வேண்டிய விதிமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. இன்ன இடத்தில்
இன்ன வீடுகள் கட்டலாம் என்றும், இத்தனை மாடிகளுடன் கட்டவேண்டும் என்றும் ஒழுங்கு விதிமுறைகள்
பிறப்பிக்கப்பட்டிருந்தன. தஞ்சை மாநகரமானது உள்ளாலை, புறம்பாடி என்று இரு பிரிவுகளாக இருந்தன.
சோழர் காலத்தில் ”ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பிராமணர்களை இறக்குமதி செய்து
கோயில்களிலும், மடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் அருச்சகர்களாகவும் புரோகிதர்களாகவும்
வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தப்பட்டுத் தனி நிலங்களும் முழுக்கிராமங்களும்
அளிக்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் என
வழங்கப்பட்டன” எனக் கே.கே.பிள்ளை கூறுகின்றார்.
அகம் – புறம் என்ற
வெளியமைவு
பண்டைய இலக்கிய பனுவல்களில் இயற்கைச் சூழல் பாடலின் பின்புலமாக விளங்கியது. இயற்கையைப்
பாதுகாத்தல் அகமாகும். இயற்கையை அழித்தல் புறமாகும். இயற்கை தாய்வழிச் சமூகத்தோடு தொடர்புடையது. பெண்ணோடு இணைந்தது
வளமை. அந்த வளமையை
அழித்தல் இயற்கைக்கு எதிரான புறமாகும். போர்கள் இயற்கையை அழிப்பவை. பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து போன்ற பனுவல்களில் இத்தன்மையைக் காண முடியும். இனக்குழு அழிவிற்குப்பின்
வேந்தர் எழுச்சியின் போது பெருந்தெய்வ மரபு தோன்றுகிறது.
ஆண் – பெண் விளையாட்டு
வெளி
ஆணாதிக்கச் சாதியச் சமூகவெளியில் ஊடுருவியது போல விளையாட்டு வெளி அமைப்பிலும்
ஊடுருவியுள்ளது. ஆண், பெண் விளையாட்டுகளும், விளையாட்டு
வெளிகளும் வேறுபட்டவை.
ஆண் விளையாட்டுகள் – ஆண் விளையாட்டு
வெளி எல்லையற்றுப் பரந்து விரிந்துள்ளது. மரமேறுதல், கிணற்றுக்குள் பாய்தல், தெரு, மந்தை, வெட்டவெளி, திடல், கண்மாய், ஆறு, வயல்வெளி, என எங்கும் நீளும். ஆணின் விளையாட்டுகள் பம்பரம், சல்லிக்கட்டு, இளவட்டக்கல் தூக்குதல், போன்றவை அனைத்தும் வீரத்தோடும், வலுவோடும் இணைக்கப்படுகிறது. பெரும்பாலும் புறவெளிகளில் விளையாட்டுகள் நிகழும்.
பெண் விளையாட்டுகள்
பெண்ணின் விளையாட்டுகள் இல்லத்திற்கு முன்னர் முற்றத்திலோ, தெருவிலோ விளையாடலாம். அவை தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டி போன்றவை
வரையறுக்கப்பட்டவை.
பட்டினப்பாலை – பெண்மை வெளியை
அழித்த ஆண்வெளி
பட்டினப்பாலை பன்மை வெளியைக் காட்டுகிறது. வேறு வேறு மொழி பேசும் புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம் முற்பகுதியில் உள்ளது. விலங்கு பகை, கலங்கு பகை அறியாப் பல்குடிச் செழும்பாக்கம், குறும்பல்லூர்
கொண்ட சோழ நாடு பகை அறியாதது. பல குடிகள் வாழக்கூடிய செழுமையான நெய்தல் நிலத்து ஊர்களை
உடையது. குளிர்ந்த கிணற்றை
உடையது. கொழுக்கஞ்சி
ஓடக்கூடிய பகுதியில் வெண்கோயில் உள்ளது. வலை உணங்கு மணல் முன்றில் பெண்கள் வெண் கூதாளப்பூ அணிந்த
கோதையர் பனங்கள்ளருந்திப் பரதவரோடு ஆடுகின்றனர். மலரணி வாயில் பலர் தொழுங் கொடியும் உள்ளது. இத்தகைய பட்டித்தைப்
பெரும்பாழ் செய்தும் அமையாத பாட்டுடைத் தலைவனைப் பாடும் பின்பகுதியில் பொதுமக்கள் புணர்ச்சி
சுட்டப்படவில்லை.
ஆங்கண்
பலர் கூடிய பொது வழிகளையும் கந்துடைப் பொதிகையும் பெருஞ்சோற்று அட்டில் உடைய கொடுங்கால்
மாடங்களையும் விடுத்து அம்புக் கட்டுகளை உடைய ஞாயிலும், பொன்னொளி மின்னும் எயிலும் எழுகின்றன. இங்கு மக்கள்
புழங்கவில்லை. ஆட்டோடு புள்
விளையாடவும், பறழ் பன்றி
பல்கோழி திரியவும் இல்லை. ஆங்கு அரிமா அன்ன வேந்தன், பொற்றொடிப் புதல்வர், அழகிய மகளிர் மட்டுமே உளர். கொடுவரிக் குருளையான மன்னன் மார்பின் செஞ்சாந்து சிதைவதற்கே
மகளிரும், வாரிசுக்காகப்
புதல்வரும் அமைகின்றனர்.
அரண் மிகுந்த பிற மனிதர் வாழாத ஒற்றைப்பெருவெளி உருவாக்கப்படுகிறது. ஒற்றைப் பெருவெளியின்
நீட்சியாகவே பிற்காலக் கற்றளிகள் தோன்றின. அரசு உருவாக்கத்தில் தனிவெளி உருவாக்கம் முதன்மையானது. சிலரின் உட்புகுகையை
அனுமதிக்கும் பெருங்கோயில் வெளி போலவே வேந்தன் வெளியும் கட்டமைக்கப்படுகிறது. அவ்வெளியில்
எதுவும் முளைப்பதில்லை. புதல்வர்களைத் தவிர விளைவு இல்லாத வெளி. வேளாண்மை விடுத்த
போர்வெளி. பெண்வெளியை
முடக்கிய ஆண்மைவெளி. பெரும் வளாகமெங்கும் ஒருவனின் ஆணைக்கொடி பறக்கிறது. அரசவை உயர்
நடுவெளியில் கோல்கொண்ட அரசன் எழுந்தருளுகிறான். மன்னனுக்குரிய கோலும் வாளும் எதன் குறியீடு என விளக்க வேண்டியதில்லை. மனிதப்புழக்கத்தைக்
கட்டுக்குள் கொண்ட மனை பலர் புகத் திறந்த பகுவாய் வாயில் அன்று. அன்னம் பாலிக்கும்
பெண்வெளியின் தொடர்பை அறுத்த ஆண்வெளி உருவாக்கத்தைப் பட்டினப்பாலை முன்மொழிகிறது.
மதுரைக்காஞ்சி – திணைவெளி அழிவு
‘அகிலமெல்லாம் வென்றாலும் ஆறடிநிலமே சொந்தம்’ என்ற தொடர் சம்பிரதாயமே அன்றி வேறில்லை. மாங்குடி மருதனார்
‘வழிவழிச் சிறக்க
உன் வலம்படு கொற்றம் தேய்வன கெடுக நின் பகைவர் ஆக்கம்’ என்றே வேந்தனை வாழ்த்துகின்றார். மேற்கில் தோன்றிய தொழுபிறை போல வேந்தர் செல்வம் வளர வேண்டும். கிழக்கில் தோன்றிய
இருள்மதி போலப் பகைவர் ஆக்கம் தேய வேண்டும் என்றும் விரும்புகிறார்.
பழந்தமிழ் அகவல் காலத்தில் உருவான பிராந்திய இறையாண்மை ஒற்றை தெய்வீக இறையாண்மை
ஆக ஆனது. அவ்விறையாண்மை
மத அதிகாரம் ஆட்சி அதிகாரத்தோடு பிணைகிறது. இராஜகுருவின் கையசைவு நாற்புறத்தையும் அதிரச் செய்கிறது. பல்வேறுபட்ட
நிலங்களின் இறையான்மை ஒடுக்கப்பட்டு நகரவெளியை அடிப்படையாகக் கொண்ட ஒற்றை மேலாண்மைக்கு
உள்ளாக்கப்படுகிறது. இவ்வொற்றை மேலாண்மை திணைக்குடிகளை அழித்து உருவாக்கப்பட்டதாகும். தெய்வீக வெளியை
ஆளும் மன்னன் என்ற இறைவனைப் புகழ்வதே புலவரின் நோக்கமாக அமைகிறது.
ஐந்திணைகளைப் பனுவலில் காட்ட வேண்டும் என்ற அவா மாங்குடி மருதனார்க்கு உள்ளது. எனவே தான் மருதம்
சான்ற தண்பணை, முல்லை சான்ற
புறவு, அருங்கடி மாமலை, பாடல் சான்ற
சுரம், நெய்தல் சான்ற
வளம் எனத் திணைகளையும் வெளிகளையும் பதிவுசெய்கிறார். திணை வரலாற்றைச் சொல்வது புலவரின் நோக்கமன்று. மதுரையை மையமாகக்
கொண்டு பெரும் நிலவெளியைக் கட்டமைப்பதே அவர் நோக்கமாக உள்ளது. மதுரைக் காஞ்சியில்
ஐவகை நிலங்களும் நகரமும் நகர்சார் புலங்களும் காட்டப்பட்டுள்ளன. இனக்குழு மக்கள், சிறூர்த் தலைவர், குறுநில மன்னர்
நலிவுற்றுப் பெருவேந்தர்கள் நிலத்தை ஆண்ட கதையை மதுரைக்காஞ்சி கூறுகிறது.
பதிற்றுப்பத்து – குடியழிப்பும்
வெளி விரிவாக்கமும்
பேரரசு எழுச்சியைக் காட்டும் பதிற்றுப்பத்து. ‘உலகாண்ட சேரரின் வம்ச வரலாறு’ இனக்குழு வெளிகளை அழித்து எல்லையில்லா ஆளுகை வெளியை விரிவாக்கும்
பேரரசு நிறுவுதலுக்கான பனுவல். முதல் கருப் பொருட்களோடு பெரிதும் இணங்கியும் சற்றே பிணங்கியும்
மனித வாழ்வு எழுகிறது. முதல் கருப்பொருட்களைப் பேரரசுகள் கவனத்தில் கொள்வது இல்லை. தேவையின் பொருட்டே
அவற்றைப் பயன்படுத்துகின்றன. பேரரசு நிறுவுதலின் போருட்டு முதற் பொருளில் நிலமும் கருப்பொருளும்
அழிக்கப்படுகின்றன.
இனக்குழுக்களின் அழிவும் எஞ்சா மண்ணாசை வேந்தரின் தணியா வேட்கையும் அகச் சான்றுகளாகச்
சான்றோர் செய்யுட்களில் பரவிக்கிடக்கின்றன. நிலத்தைக் கைக்கொள்ளுதலும் குடியழிப்பும் இயற்கை அழிப்பும்
பெருவேந்தர் நடைமுறைகள். அதிகாரத்தின் கொடும் நாவுகள் படுகொலைகளைப் பனுவலாக்குகின்றன.
இனக்குழுவாழ்க்கை சுற்றுச்சூழல் வெளியைப் பேணுபவை; இயற்கையைப் பெரிது இடையூறு செய்யாதவை; வேந்துசார்
நடவடிக்கைகளோ இயற்கையை குலைப்பவை; இயற்கையைப் பொருட்படுத்தாதவை; அவை அதிகாரத்தை அடைவதற்காக நீர்நிலைகளையும் விளைநிலங்களையும்
அழிக்கத் தயங்காதவை; பயிர்களை எரியூட்டவோ, நச்சு விதைகளை வயல்களில் விதைக்கவோ அஞ்சாதவை; எனவே இயற்கையை
அழிப்பதைப் புறமென்றும், இயற்கையைப் போற்றுவதை அகமென்றும் கொள்ளமுடியும். அவ்வாறே வளமை, மண் ஆகியவற்றை
அகம் என்றும், வறன், விண் ஆகியவற்றைப்
புறம் என்றும் கொள்ளலாம்.
பதிற்றுப்பத்து, சேரர் சரிதம் மட்டுமன்று; இனக்குழு அழித்துப் பேரரசு உருவானதைச் சொல்லும் ஆவணம். ஐந்நிலம் அழித்து
ஒற்றைப் பெருநிலம் கட்டமைத்தக் கதையையும் சொல்கிறது. மேலும் மண்ணுலகோடு விண்ணுலகையும் உருவாக்கி மகிழ்கிறது. ஆண்மை வெளி
மேலோங்கிய கதையும் இதுவே ஆகும்.
அகவெளி பெண்டிர்க்கும் புறவெளி ஆணுக்குமாக நிர்மானிக்கப்படுகின்றன. சடங்கியல் நிலையில்
தனிவெளியில் மகளிர் இயங்குகின்றனர். வளம் நிரம்பிய வெளிகளை அழித்துப் பேரரசு வெளி எழுகிறது.
நிறைவாக
பண்டைச்
சமூகம் தொடங்கி சமகாலம் வரையிலான ‘வெளி’ மரபுகளைக் காணுதல் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது. நாம் வாழும்
புவியில் நிலம் என்கிற வெளி வாழ்வோடு தொடர்புடையது. கருப்பொருளான வாழ்க்கை முதற்பொருள் சார்ந்தது. திணை நிலம்
சார் வாழ்க்கை இயற்கையைப் பேணுதலாகும். ஆயின் நிலமழித்தல், வளங்களை சிதைத்தல், ஆறுகளில் மணலை எடுத்தல், பெருவளமனைகளில் சிறுகுடும்பம் உறைதல் போன்ற அனைத்தும் ஆதிக்க
முறையில் வெளியைக் கைப்பற்றுதல் ஆகும். அதிகார வர்க்கம் எவ்வாறு மக்களை ஆதிக்கம் செய்கிறது என்பதைப் பழந்தமிழ்
இலக்கியம் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
பார்வை நூல்
1.
முனைவர் க.
காசிமாரியப்பன், கள் மணக்கும் பக்கங்கள், காலச் சுவடி பதிப்பகம், நாகர்கோவில்.
Comments
Post a Comment