கீழடி அகழாய்வுகள்
இந்நூல்
கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும். கீழடி அகழாய்வில்
கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள், சுடுமண் சிற்பங்கள், பகடைக்காய்கள், செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம், பண்பாடு, தொழில், வாணிகம், பொருளாதாரம், விளையாட்டு
எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது. இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில்
இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர்.
இவர்
சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும்
சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு’ என்ற தலைப்பில்
வெளியிட்டக் கட்டுரையைக் கீழடிப் புதையல்
என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார். இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும், கீழடி அருங்காட்சியகம் குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார்.
இந்நூலில்
கீழடி புதையல், கலைகள், வணிகம், வேளாண்மை, நானோ தொழில் நுட்பம், புவியியல், வைகை ஆற்றுச் சமவெளி நாகரிகம் என்று 19 தலைப்புக்களில்
தன்னுடைய படைப்புக்களைப் படைத்துள்ளார்.
1.
கீழடி புதையல்
தமிழகத்தின்
நதிகளில் மிகவும் பழமையானது வைகை நதியாகும். மதுரைக்கு அருகில் பாயும் வைகை நதிக்கரை ஓரத்தில் ‘கீழடி’ என்னும் இடத்தில்
மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளில் தமிழர்களின் சங்க காலப் பண்பாட்டு வரலாற்றை
மீட்டுருவாக்கும் வகையில் முடிவுகள் வெளியிட்டுள்ளன. தொல்லியல் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு பொருள்கள்
தமிழர்களின் சிறப்பான பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இந்தியத்
தொல்லியல் கழகம் 2014 – ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
மாவட்டங்களில் வைகைநதிச் சமவெளிப் பகுதிகளில் 293 தளங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. அதில் முக்கியமான
பகுதி கீழடியாகும். மத்திய தொல்லியல் கழகத்தின் மேனாள் கண்காணிப்பாளர் திரு.கே. அமர்நாத் ராமகிருஷ்ணன்
தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுகளில்
7818 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம்
சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை அவர் கண்டறிந்திருக்கிறார்.
இதே
போல் தமிழ்நாடு தொல்லியல் துறையும் பலகட்ட ஆய்வுகளை நடத்தியிருக்கிறது. கீழடியில் இதுவரை 18,000 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 5,800 தொல்கலைப் பொருள்கள்
முதல் இரண்டு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்டவையாகும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு பொருள்களை கதிரியக்க
கரிமக் காலக்கணிப்பு செய்ததில் இவை ஆறாம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பது
நிரூபணமாகியுள்ளது. இது சங்க கால வரலாற்றை மேலும் 300 ஆண்டுகளுக்கு முன்னோக்கிச் செல்லும் முக்கிய நிகழ்வாகும். இந்தப் புதையல்
தமிழர்களுக்குக் கிடைத்துள்ள வரமாகும்.
2.
கீழடி தமிழி
எனும் மொழிச் சுரங்கம்
நாகரிகத்தின்
அளவுகோலாகக் கல்வி திகழ்கிறது. உலக வரலாற்றில் கல்வியால் ஏற்பட்ட புரட்சியே மனித வாழ்வைப்
புரட்டிப் போட்டுள்ளது என்று சொல்லலாம். அறியாமை அகலவும், பேதம் மறையவும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்விக்கு அடித்தளமாக
அமைவது எழுத்தறிவாகும். மொழி என்பது தகவல் தொடர்புச் சாதனமாக மட்டுமல்ல. அது அந்த மண்ணின்
பண்பாட்டை, வரலாற்றைத்
தாங்கி நிற்கிறது. மனிதன் மொழி தோன்றும் முன்பே தனது உணர்வுகளையும், எண்ணங்களையும்
அனுபவங்களையும் தங்கள் வாழ்விடங்களான குகைகள், பாறைகளில் ஓவியங்களாகச் செதுக்கி வைத்துப் பதிவு செய்துள்ளார்கள். மொழி தோன்றிய
பின் எழுத்து வடிவ மொழிகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்திய
அகர வரிசை எழுத்துக்களில் தொன்மையானது பிராமி ஆகும். இன்றைய இந்திய மொழிகள் பலவும் பிராமியிலிருந்து தோன்றியவையாகும். மொழியியல் வல்லுநர்
ஜார்ஜ் கிரியர்சன் என்பவர்
`Linguistic survey of India’ என்ற நூலில்
இந்தியாவில் 19 – ஆம் நூற்றாண்டில்
இறுதியில் 179 மொழிகளும் 544 வட்டார மொழிகளும்
இருந்துள்ளன என்கிறார். மேலும் 1990-ஆண்டுகளின் தொடக்கத்தில் இங்கு 32 மொழிகள் மட்டுமே 10 லட்சத்திற்கு அதிகமான மக்களால் பேசப்பட்டது என்றும் கூறுகிறார். `People linguistic survey of india’ என்ற அமைப்பின் கருத்துப்படி கடந்த 50 ஆண்டுகளில்
இந்தியாவில் 220க்கும் அதிகமான
மொழிகள் அழிந்துள்ளதாகத் தெரிவிக்கின்றது.
சித்திர எழுத்துகள்
சிந்துவெளியின் ஹரப்பா மக்கள் எழுதும் கலையை அறிந்திருந்தனர். மொகஞ்சதாரோவிலும்
ஹரப்பாவிலும் ஆயிரக்கணக்கான முத்திரைகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. அவை சித்திர
வடிவ எழுத்துக்களாகும். சிந்துவெளியல் சித்திர எழுத்துக்கள் முதலில் இடமிருந்து வலமாகவும்
பின் வலமிருந்து இடமாகவும் எழுதப்பட்டு இருக்கின்றன. இவை ‘பிராமி’ எழுத்து வகைகளுக்குரிய தன்மையுடன் திகழ்கின்றன. மேலும் ஆரிய
நாகரிகத்திற்கு முன்னதாக சிந்துவெளி நாகரிகம் திகழ்வதால் அதன் எழுத்து முறையும் ‘திராவிட பிராமி’ எழுத்து முறையாக
இருக்க வேண்டும் என்று சர். ஜான்மார்சல் முன்வைத்துள்ளார். திராவிட மொழிகள்
இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வ மொழிகள் என்று கால்டுவெல், எல்லீஸ் முதலான
ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.
தமிழ் எழுத்துக்கள் முதன்முதலில் கீறல் வடிவில் தோன்றி பின் எழுத்து வடிவில்
கீறலாகவும், கல்வெட்டாகவும், ஏட்டில் எழுத்தாகவும், அச்சில் அச்சாக, கணினியில் எழுத்துருவாகவும்
வளர்ந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. சங்க காலப் பானையோடுகள் பலவற்றில் காணப்பட்ட தமிழி எழுத்துப்
பெயர்ப பொறிப்புகள் பலவும் தமிழ் மண்ணில் கல்விப்பரவல் நிகழ்ந்திருந்ததை நிரூபிக்கின்றன. அறிவுத் தளத்தில்
இயங்கும் சங்க இலக்கியங்கள் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் வழி எழுதப்பட்டுள்ளன.
தமிழி கல்வெட்டுக்கள்
சங்க காலத்தில் தமிழி எழுத்துக்களைக் கொண்ட 110 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள்
கற்பாறைகளிலும் குகை வாழிடங்களிலும் காணப்படுகின்றன. கி.மு 3 – ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் கிடைத்துள்ள பிராமி கல்வெட்டுகள்
வரலாற்றுப் பாதையில் முக்கிய மைல்கல்லாக இருந்தன.
3.
கலைகள்
கலைகள்
என்பவை பொழுது போக்கிற்காக மட்டுமின்றி அவை மனிதனை மேம்படுத்தும் சாதனமாகவும் உள்ளன. ஆதிமனிதன் குகைகளில்
வாழும் காலம் தொட்டே தனது கலையுணர்வை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர். இவர்கள் கலைப்
பொருட்களைச் செய்ய கொம்புகள், தந்தங்கள், எலும்பாலான ஊசிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். கலைகளின் கலாச்சாரம்
கைவிடப்பட்டால் சமூகம் தழைத்தோங்காது. அக்காலத்தில் தமிழ்மக்கள் கட்டிடக் கலைத்திறனை மணிமேகலை காப்பியத்தில்,
”மகதவினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக்கொல்லரும் யவனத்தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்
கொண்டினிது இயற்றிய கண்கவர் செய்வினைப்
பவழத்திரள் காற் பன்மணிப் போதிகைத்
தவள நித்தலிரத் தாமந் தாழ்ந்த
கோணச் சந்தி மாண்வினை விதானத்துத்
தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பிற்
பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபம்”
என்று விளக்குகிறது. கீழடி அகழாய்வில்
புதைந்துள்ள கட்டிடப்பகுதிகள், கட்டிடச் சுவர்கள், செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறகள், மழைநீர் வடிகால் அமைப்புகள் போன்றவை தமிழர்களின் கட்டிடக்
கலையின் பண்பாட்டிற்குக் கட்டியம் கூறுவனவாகும். தரமான கட்டுமானப் பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. சிலிகா மண் 97% மற்றும் சுண்ணாம்புச்
சாத்துகள் கொண்டு கட்டப்பட்ட கட்டுமானங்கள் இன்று வரை உறுதியாக நிற்கின்றன. சிந்துவெளியில்
வீடுகள் பெரும்பாலும் செங்கற்கல்லால் கட்டப்பட்டுள்ளன. ஒரு கூர்மையான கத்தியின் முனையைக் கூட உள்ளே நுழைக்க முடியாத
அளவிற்கு செங்கற்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கபட்டுள்ளன.
தமிழர் சிற்பக்
கலைகள்
சிற்பக்கலை பண்டைய காலம் முதற்கொண்டே தமிழர்களால் வளர்த்தெடுக்கபட்டுள்ளன. சங்க காலத்தில்
மண், மரம் தந்தம், கல் ஆகியவற்றில்
சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் மண்ணீட்டாளர்கள் எனப்பட்டனர். மேலும் சங்க
காலத்தில் போர்க்களத்தில் இறந்த வீரனுக்கு கல்நட்டு அதில் அந்த விரனின் உருவத்தை செதுக்கி
வைத்த செய்தியைத் தொல்காப்பியம் எடுத்துக் கூறுகிறது. சன்னமான களிமண், வண்டல்மண் இவற்றுடன் நீரும் சேர்த்து உருவங்கள் செய்து தகுந்த
வெப்பநிலையில் சூளையில் வைத்துச் சுட்டு இவற்றை உருவாக்கினார்கள்.
4.
வணிகம்
பொருட்கள்
மற்றும் பணிகளை மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வது வணிகம் எனப்படுகிறது. நாகரிகத்தின்
ஒரு பகுதியாக வணிக நடவடிக்கைகள் இருக்கின்றன. தமிழர்கள் குறிப்பாக அயல்நாட்டு வணிகத்தில் மேம்பட்ட நிலையில்
இருந்துள்ளார்கள். சங்க இலக்கியமான பட்டினப்பாலை வணிகப் பண்பாட்டை வெளிப்படுத்தும்
இலக்கியமாகத் திகழ்கிறது.
”கொடுப்பதூஉங் குறைகொடாது
பல் பண்டம் பகிர்ந்து வீசும்
தொல் கொண்டிதுவன்று இருக்கை”
என்று பட்டிப்பாலை அறம்
சார்ந்த வணிகத்தை விளக்குகிறது. தமிழகத்தில் வைகை, தாமிரபரணி, காவிரி நதிகளின் ஓரங்கள் தமிழர்களின் அயல்நாட்டு வணிகத்திற்குப் பெரிதும் உதவின எனலாம். மேலும் பண்டைய
தலைநகரங்கள் அனைத்தும் வணிக நகரங்களாகத் திகழ்ந்துள்ளன.
யவனம், புட்பம், சீனம், சாவகம் போன்ற நாடுகளுடன்
தமிழகம் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததை 2
– ஆம் ஆண்டுக் கால கட்டங்களில் எழுதப்பட்ட தாலமி, பிலினி குறிப்புகள்
தெரிவிக்கின்றன. இந்தியாவின்
வடமேற்குப் பகுதிகளுடன் வணிகம் நடந்தேறியதைக் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் ஆவணப்படுத்தியுள்ளது.
5.
வேளாண்மை
அறிவியல்
வரலாற்று அடிப்படையில் மனிதர்கள் மேற்கொண்ட தொழில்களின் கால அடிப்படையில் வேளாண்மையுகம், தொழில்யுகம், மின்னியல் யுகம், மின்னணுயுகம், மின்னணுக் காந்தயுகம், அணுயுகம் எனப் பாகுப்படுத்தியுள்ளனர். இதில் நாகரிக வளர்ச்சியில் அளவை தீர்மானிப்பதில் வேளாண்மை முதன்மை இடம்பெறுகிறது.
வேளாண்மைக்கும், கால்நடைகளுக்கும்
நீர்த் தேவைகளுக்காக மழைப் பொழிவின்போது நீர் அனைத்தும் ஓரிடத்தில் விழக்கூடிய வகையில்
மழைநீர் சேகரிப்புக் குழாய்கள் அமைந்திருந்ததை நெடுநல்வாடைப் பாடல் கீழ்க்கண்டவாறு
எடுத்துக் கூறுகிறது.
”நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து
கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய கவிழ்ந்து
வீம் அருவிப்பாடு விறந்துஅயல்”
அதே
வழிமுறைகளில் கீழடியில் கண்டறியப்பட்ட உறைகிணறுகளில் அதிக அளவில் நீர்மட்டம் பராமரிக்கப்
பட்டிருந்திருக்கிறது. ஆடுமாடுகள் நீர் குடிக்கவும் பயிர்களின் நீர்பாசனத்திற்கும்
இவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வேளாண்மைப் பயன்பாட்டிற்கு என இரும்புப் பொருள்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
கீழடியின் வேளாண்மை
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் மாதிரிகளை கரிம ஆய்வு செய்ததில் அவை
காளை, எருமை, பசு முதலான
விலங்குகளின் எலும்புகள் எனத் தெரிய வந்துள்ளது. இது கீழடிக் காலத் தமிழர்கள் கால்நடைகளை வளர்த்தமைக்கான ஆதாரமாக
அமைந்திருக்கிறது. தொல்பழங்கால மக்களது நிலையான தேவைகளாக நீரும் உணவும் இருந்திருக்கின்றன.
சிந்து வெளியில் காளைகள், மாடுகள் பழக்கபட்டிருந்ததை ஆய்வுகள் தெரிவித்து இருக்கின்றன. அவர்கள் கோதுமையும்
சவ்வரிசியும் பயிர் செய்தார்கள். நெல்லும், எள்ளும், பட்டாணியும் பயிர் செய்துள்ளார்கள். பசு, ஆடு, செம்மறியாடு, பன்றி, கோழி ஆகியவற்றை
வளர்த்துள்ளார்கள். சிந்துவெளிக்கும் கீழடிக்கும் உள்ள வரலாற்று ஆதாரச் சான்றுகளைக்
கணக்கில் கொண்டால் தமிழர்களின் பண்பாட்டு வேர்கள் முன்னோக்கிச் செல்லும் தன்மையும்
உண்மையும் புலப்படும்.
6.
அழகியல்
கண்ணுக்கும்
கருத்துக்கும் மகிழ்ச்சி அளித்து நற்பண்புகளை வளர்ப்பது கலைகளின் இயல்பாகும். ‘பூரணத்தை
நாடும் இதய வேட்கைதான் அழகியல்’ என்பார் பிளாட்டோ. அது மனிதர்களின்
மனதில் அழகுணர்வை ஏற்படுத்தி மகிழ்ச்சி தரும். மனிதர்களின் கலை வாழ்வில் வெளிப்படும் தன்மையில் அழகியல்
உண்டாகிறது. ஒரு சமூகத்தின்
உணர்வுகளைப் புரிந்து கொள்வதும் அனுபவிப்பதும் அழகின் பரிமாணங்களாகும்.
பழந்தமிழர்
அழகியல்
சங்க கால மக்களின் வாழ்வியலில் அழகியல் முக்கிய இடம் வகிக்கின்றது. சங்க காலத்தில்
மகளிர் ஆடை, அணிகள் மூலம்
தங்கள் அழகியல் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர். பருத்தியால் நூல் நூற்று நெசவு நெய்த சங்கப் பெண்கள் குறித்த
பதிவுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி சங்க காலத்தில் மகளிர் தோள், கை, கைவிரல், இடுப்பு முதலிய
இடங்களில் அணியப்படும் அணிகளை அணிந்திருந்தனர். இதனை குறுந்தொகை,
”வணங்க இறைப்பணைத்தோள் எல்வளை மகளிர்”
எனக் குறிப்பிடுகிறது. பழங்கால மகளிரின்
அணிகலன்களிலேயே சிலம்பு மிகச்சிறந்த அணிகலனாக இருந்ததைச் சிலப்பதிகாரத்தில்,
..... தொடியோள் மெல்லடி மேவ வுஞ் சிலம்பே”
கூந்தல் நரைத்தாலும் அழகு
குறாயத தொல் முதுபெண்டிர், சிவப்பான பெண்கள், கறுப்பு அழகிகள், மயில் நடைக்காரிகள், மடமொழியோர் என்று பலவகையான பெண்களை மதுரைக்காஞ்சி வர்ணித்திருப்பதன்
மூலம் அறியலாம்.
7.
சிந்துவெளி
மண்ணுக்குள் வைரங்கள்
மண்ணுக்குள்
வைரமாக திகழ்ந்த சிந்துவெளி போன்றே கீழடியும் மின்னுகிறது என்றால் மிகையில்லை. சிந்து வெளிக்கும்
கீழடிக்குமான நாகரிகத் தொடர்புகள் வரலாற்றுத் தொடர்புடையது. கீழடிக்கும்
ஹரப்பாவிற்கும் இடையே உள்ள தூரம் சுமார்
1500 கிமீ ஆகும்.
1930 – ஆம் ஆண்டில் சென்னைக் கிழக்குக் கடற்கரையில் நடைபெற்ற ஆய்வுகளில்
சிந்துவெளியில் காணப்பட்டது போன்ற சங்குக் கூடுகள் கண்டறியப்பட்டன. அப்போதைய தொல்லியல்
துறையின் இயக்குநர் ஜெனலராக இருந்தவர் சர்.ஜான்மார்சலால் பாராட்டப்பட்ட திரு.கெ.என் தீட்ஷித்
அவர்கள் சிந்துவெளியில் இருந்ததைப் போன்று 23 வளையல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
8.
முதுமக்கள்
தாழி
முதுமக்கள்
தாழிகள் அல்லது ஈமத்தாழிகள் தமிழர்களின் பண்பாட்டு மரபில் முக்கிய இடம் வகிக்கின்றன. ‘தாழி’ என்ற தமிழ்
சொல்லிற்கு பானை என்று பெயர். பழங்காலத்தில் இறந்தவர்களைத் தாழியிலிட்டுப் புதைக்கும் பழக்கம்
இருந்தது. இந்தப் பழக்கம்
சங்க காலத்தில் நடைமுறையில் இருந்ததை மணிமேகலை, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, முதலான நூல்களின் வாயிலாக அறிகிறோம். இவை ஈமத்தாழிகள், முதுமக்கள்
தாழிகள், முதுமக்கள்
சாடிகள் என்று குறிப்பிடப்படுகின்றன.
இறந்தோர்
நினைவாக‘பள்ளிப்படை’ அமைத்த செய்திகளும்
காணப்படுகின்றன. மணிமேகலை ஐந்து
வகையான ஈம முறைகளை குறிப்பிடுகிறது.
”சுடுவோர் இடுவோர் தொடு குழிப்படுப்போர்
தாழ்வயினுடைப் போர் தாழியிற் கவிப்போர்”
இதில் இறுதியில் குறிப்பிடப்படும்
தாழியிற் கவிப்போர் என்பது தாழியில் புதைத்தல் என்பதைக் குறிக்கும். மேலும்,
”கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர்
உலகம் எய்தினன் ஆதலின்
அன்னோர்க் கவிக்கும் கண் அகன் தாழி” (புறம்,
228)
என்று புறநானூறு கூறுகிறது.
9.
நானோத் தொழில்
நுட்பம்
அறிவியலும்
தொழில் நுட்பமும் இணைபிரியாத ஒன்றாகும். அடிப்படை அறிவியலின் வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கிறது. அறிவியல் வளர்ச்சியே
சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், வாழ்வை எளிமையாக்குவதற்கும் தொழில் நுட்ப வளர்ச்சி பெரிதும்
பங்காற்றுகிறது. 5ஜி, செயற்கை அறிவுத்
தொழில் நுட்பங்கள் இன்று உலகை ஆளும் நிலையில் உள்ளன.
தமிழர்கள்
தங்கள் வாழ்வில் தொழில் நுட்பத்திற்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்கள். அறிவியல் கோட்பாடுகள்
தெரிந்திருக்காவிட்டாலும், தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்கள் புதிய பொருள்களைப்
படைத்தார்கள். உலகில் தோன்றிய
முதல் தொழில் நுட்பவாதி ‘பானை வனைந்தவரே’ என்றும் முதல் தொழில் நுட்பப் பொருள் பானை என்றும் கூறுவார்
சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள்.
‘நானோ மீட்டர் என்பது மிகச் சிறிய பொருள்களை உருவாக்குவதாகும். ஒரு மீட்டர்
நீளமுள்ள துணியை நூறுகோடிப் பாகமாகப் பிரித்தால் எந்த அளவில் துணி கிடைக்குமோ அந்த
அளவே ‘நானோ’ அளவாகும். நானோத் தொழில்
நுட்பங்கள் தாவரங்களிலும் காணப்படுகின்றன. தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதற்குக் காரணம் அதில்
நானோ அளவில் இருக்கிற முட்கள் தான். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியாளரும் முன்னாள் குடியரசு
தலைவருமான அப்துல் கலாம் அவர்களும் நானோ டெக்னாலஜி தொழில் நுட்பத்தின் வளரச்சி பற்றி
விரிவாக விவரித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியில் அதன் பங்கு அளப்பரியதாக இருக்கும்
என்பதை முன்பே கணித்திருக்கிறார். மருத்துவம், அறிவியல், இயற்பியல் துறைகளில் நானோத் தொழில் நுட்பங்கள் மாபெரும் மாற்றத்தை
உருவாக்கியுள்ளது. மனிதன் நோயின்றி வாழ்வதற்கும் இந்த தொழில் நுட்பம் பெரிதும்
உதவும் என்பது கலாமின் எண்ணமாகும்.
கீழடியில்
கண்டு எடுக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகளின் உட்புறச் சுவர்களில் தனித்துவமான கருப்புப் பூச்சுகள்
காணப்பட்டதையும் அவற்றில் ஒற்றைச் சுவர் கார்பன் நானோக் குழாய்கள் இருந்த்தையும், அவற்றின் காலம்
கி.மு 6 ஆம் நூற்றாண்டு
என்று மணிவண்ணன் கோகர்னேஸ்வரன் மற்றும் குழுவினர் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள். பழந்தமிழர்கள்
பளபளப்பிற்காகவும், உறுதித் தன்மைக்காகவும் நானோ பொருள்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்
என கருதுகோள்கள் கூறுகின்றன.
10.
புவியியல்
கீழடி
மதுரை நெடுஞ்சாலை வழியே கிழக்கு – தென்கிழக்காக 13
கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே மணலூர் கிராமம், வடக்கே 2 கி.மீ தொலைவில் வைகை நதி அமைந்துள்ளது. இதன் வடகிழக்கில்
நீர்நிலைகளும், தென் கிழக்கில்
அகரம் கிராமமும் அமைந்துள்ளது. ஊருணி, கண்மாய்கள் என இயற்கை அரண்கள் சூழ்ந்த பகுதியாக கீழடி காணப்படுகிறது.
கீழடி மண்வகைகள்
மண்ணியல் என்ற வகையில் கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மண் அடுக்குகளை ஆய்வுகள்
மேற்கொண்டதில் அவை,
·
முதல் மண் அடுக்கு 30 செ.மீ. முதல் 66 செ.மீ. வரை தடிமன்
கொண்ட களிமண்.
·
இரண்டாம் மண்
அடுக்கு சாம்பல் மண் துகள், மற்றும் தளர்வான களிமண்.
·
மூன்றாம் மண்
அடுக்கு மஞ்சள் நிறக் களிமண்.
·
நான்காம் மண்
அடுக்கு பழுப்புக் கலந்த கடின மண்ணடுக்கு.
தனிமங்கள் – சிலிக்கான், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மெக்னீசியம்
கீழடியில் வெளிப்படுத்திய
புவியியல் ஆய்வுகள்
·
இயலுலக புவிப்பரப்பியல் ஒளி ஆய்வு, காந்த அளவிப்
பகுப்பாய்வி, ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வி, தரை ஊடுருவல்
தொலை உணர்வு மதிப்பாய்வி, முதலான நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
·
நியூட்ரான்
தூண்டுதல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொல்பொருள்களை அணுக்கரு கதிர்வீச்சு அடிப்படையில் பகுத்தாய்கிறது.
·
பண்டைய தொல்பொருள்களைப்
பாதுகாக்க ‘ஆப்டிக்கல்
கோஹன்ஸ் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டன.
·
பழங்கால மனித
உடல்கள் இறந்த பிறகு உடல் மக்கிப் போகும் வரை நடக்கும் செயல்பாடுகளை அறிய ‘டேபோனமி’ பயன்படுத்தப்படுகிறது.
11.
கீழடி அருங்காட்சியகம்
கீழடி
தமிழர்களின் தொன்மைப் பெருமையை உலகெங்கும் கொண்டு சென்றுள்ளது. கீழடியில் தமிழ்நாடு
அரசு சார்பில் 2 ஏக்கர் பரப்பளவில்
ரூ 18.43 கோடி மதிப்பீட்டில்
அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொல்லியல் ஆய்வுத் துறை மேற்கொண்ட அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட
தொல்கலைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 காட்சிக்கூடங்கள், அமைக்கப்பட்டுள்ளன.
·
முதல் காட்சிக்
கூடத்தில் ‘மதுரையும் கீழடியும்’ என்ற தலைப்பில் வரலாற்றுத் தொடக்க கால தமிழர்களின் வாழ்வியலைச்
சித்தரிக்கும் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
· இரண்டாம் காட்சிக்
கூடத்தில் தொல்லியல் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
· மூன்றாம் காட்சிக்
கூடத்தில் தமிழர்கள் எழுத்தறிவு பெற்ற ஆவணங்களை விளக்கும் தொல்பொருள்கள்.
·
நான்காம் காட்சிக்
கூடத்தில் தொழில் பொருள்கள்.
·
ஐந்தாம் காட்சிக்
கூடத்தில் வணிகப் பொருள்கள்.
·
ஆறாம் காட்சிக்
கூடத்தில் பொழுது போக்கு மற்றும் விளையாட்டுப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நிறைவாக,
மிகுந்த சிரமங்களுடன் தொகுக்கப்பட்ட ஆய்வுகளைத் தொகுத்து எழுதப்பட்ட ‘கீழடிப் புதையல்’ என்று இந்த
நூல் நம் முன்னோர்களின் புதையலாகும். இதன் நோக்கம் தமிழினம், தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல்
முறையில் செய்ய ஊக்கப்படுத்துவதும், கீழடியில் கிடைத்தத்
தொல்பொருள்கள் எப்படித் தமிழர்களின் வரலாற்றில் புது வெளிச்சம் பாய்ச்சுகிறது என்பதையும்
இந்த நூலின் வழி உணர்த்துகிறார் நூலாசிரியர் அவர்கள். மிகச் சிறந்த நூல். நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூலாக இந்நூல் அமைகிறது.
பார்வை நூல்
1.
கீழடிப் புதையல்
-
Comments
Post a Comment