இளமையில் கல் நில்லாது செல்! (புத்தக மதிப்புரை)
இன்று
புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் குரும்பலூர் இராஜீ மோகன் அவர்கள் எழுதிய
இளமையில் கல் நில்லாது செல்! என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம். இந்தப் புத்தகத்தை
நவம்பர் 2022 ஆம் ஆண்டு, சென்னை, ரத்னா ஆப்செட்
பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள்
116, விலை 200 ரூபாய்.
ஐயா
இராஜீமோகன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பிறந்தவர். அரசுப்பள்ளியில் 7 வது வரை படித்தவர். ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் குருகுலத்தில் உயர்க்கல்வியும், அண்ணா பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் பொறியியல் படிப்பையும், நிர்வாக மேலாண்மை
என்ற முதுநிலை படிப்பையும் பயின்றவர்.
37 வருடங்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தில் வெவ்வேறு துறைகளில்
பணியாற்றியவர்.
மாணவர்களின்
ஆற்றலை நெறிப்படுத்தும் இந்நூலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர்
மாண்பமை முனைவர் இராம.கதிரேசன் அவர்கள்
வாழ்த்துரை வழங்கியுள்ளார். நெய்வேலி சவகர் கல்லூரி முதல்வர் முனைவர் வெ.தி.சந்திரசேகரன்
அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.
குஜராத் பூகம்பம், சுனாமி, தானே புயல், வர்தா புயல் போன்ற
பேரிடர்களின் போது நிவாரண பணிகளை துரித காலத்தில் நிறைவேற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நம்பிக்கைக் கொடுத்தார். இராமகிருஷ்ண மடத்தின் வழிகாட்டுதலில், நெய்வேலி ஸ்ரீ
ராமகிருஷ்ண சேவா சங்கம் உருவாக காரணகர்த்தாவாக விளங்கிய நூலாசிரியர் அவர்கள், இருபது வருடங்களாக
சமூகத்தில் நலிவுற்றவர்களுக்கும், பெண்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பான சேவையை ஒருங்கிணைந்து செய்து வருகிறார்.
இவர்
தமது நூலில் சங்க இலக்கியங்கள் தொடங்கி, இன்றைய இலக்கியங்கள் வரை தமிழின் அழகியல் கூறுகளை அணிவகுத்து
கவிதைகளாகப் படைத்துள்ளார். இவருடைய கவிதைகளில் கீழடி அகழ்வாய்வு போன்று தோண்டத் தோண்ட
புதிய புதிய கருத்துக்களைப் படைத்துள்ளார்.
இந்நூலில்
ஆசிரியர் அவர்கள், வலியில் சூடும், விதைத்தது விளையும், வில்லில் நாண் வளையாது, இருளும் ஒளியும், இலக்கு பெரிதாக! கலக்கம் அரிதாக!, மரமும் காட்டும் அறம், அறிவு பணியட்டும் அன்பு உயரட்டும், அன்புக்கு வேண்டாம்
ஆறறிவு, வாசிப்பே தவம்; அதுவே வரம், வளர்ச்சியே
வாழ்வு!, சிலையும் நானே; சிற்பியும்
நானே, சலாம்! சலாம்! கலாமுக்கு சலாம்!, தேவநேயப் பாவாணர் என்று 95 தலைப்புக்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
இவரின்
கவிதைகள் புதுக்கவிதையின் வடிவத்தைத் தாங்கி, ஓசை நயம் பெற்று இனிமையுடன் மிளிர்கின்றன. இன்றைய இளைஞர்களில்
ஃபெரும்பான்மையோர் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டு, எந்தவித நோக்கமும்
இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய இளைஞர்களுக்கு,
”வலியும் சூடும் வளர்ச்சியின் படிகள்
இலக்கு நல்வழி; நன்மை பிறர்க்கானால்
விலக்கு தயக்கம் விரட்டு மயக்கம்
கலக்கம் வீண்; ஒழிப்பாய் நான் என்று
தன் கவிதை வழி நம்பிக்கை
விதையைப் பதிவு செய்கிறார்.
மேலும்
பல கவிதைகளில் நான் என்னும் அகந்தையை அழிக்கவேண்டும் என வலியுறுத்துகிறார். மக்களிடையே
அறச்சிந்தனையை வளர்க்கவேண்டும் என்ற பாங்கு ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுகின்றது.
”நீ நீயாய் இரு!
ஒப்பனை என்றும் போடாதிரு!
ஒப்புமை கூறி உனை உயர்த்தாதிரு!
திறந்த மனதாய் இரு!
தெரிந்தது மட்டும் கூறு!
என்று கூறி இறுதியில் ஆணவம்
என்பது அற்று இரு என்று முடிக்கிறார். இந்தக் கருத்து,
”நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது”
என்று வள்ளுவனின் குறளை
வேறுவிதமாக விளக்குவதாக உள்ளது.
வில்லில் நாண்
வளையாது
என்ற தலைப்பில்,
வில்லில் நாண் வளையாது
விரைந்து அம்பு முன்னே போகாது
உன்னில் நான் குறையாது
உறைந்த அன்பு எங்கும் பரவாது
அன்பின் தன்மையையும் விட்டும்
கொடுக்கும் மேன்மையையும் தம் கவிதைகளின் மூலம் உணர்த்துகிறார்.
வளர்ச்சியே
வாழ்வு
மரக்கிளையில் ஊரும் எறும்பு
தவறி விழுந்தால் பாரு!
கண நேரமும் கலங்குவது இல்லையே!
தானே எழும்பும், தன் பயணம் தொடருமே!
விதைகள் கீழே விழுந்து கிடந்தாலும்
முளைத்து தானே எழும். மனஉறுதி இருந்தால் உடல் களைத்தாலும் கரடான மலையில் கூட ஏறலாம், வெற்றி நம்மை
வந்து சேரும் என்று தன்னம்பிக்கையின் உறுதிநிலையைத் தம் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார்
ஆசிரியர்.
எண்ணங்களே, வாழ்வின் வண்ணங்கள்
எனும்
தலைப்பில்
”விளைச்சலின் பயன்நல் விளைப்பால்
வினையின் பயன்கொள் நினைப்பால்
அறம்போற்ற மனஉறுதி வேண்டும்
மனம்விடாத குணம் பெரிது வேண்டும்
நல்ல சிந்தனை கொண்டு இருந்தால்
நாம் நினைக்கும் அனைத்து செயல்களும் வெற்றிக் கிடைக்கும். இன்பமும் துன்பமும் கலந்து வரும் நம் வாழ்க்கையில் வெற்றி
என்னும் நல் உதயம் கண்ணுக்குத் தெரியும்.
பொருள் ஒன்றானாலும்
கோணங்கள் பல
சத்துவம், ராஜசம், தாமசம் என்ற
முக்குணம் போன்று அதிகாலை, பகல், இரவு என்று காலமும் மூன்றாய் மாதமும் வருடமும் பிரிந்து நிற்பதும், நட்பு – பகை, உடல் – உயிர் ஆளுமை – ஆணவம் என்று
பல கோணங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. காலம் குணம் மாறினாலும் நாம் மாறாமல் நிலைத்த நிலையில் இருக்க வேண்டும்.
நன்று உன்னுள், தீயது தள்ளிநில்!
வேகாத பருக்கையும் அமிர்தமாகும்
ஆறாதபசி அழிக்கும் வயிற்றுக்கு!
திரவியமும் தெகட்டிப் போகும்,
நிறைந்து வழியும் வயிற்றுக்கு!
தேடுவது எதுவெனத் தெரிந்திட
நாடுவது நல்லதாய் அமைந்திடும்!
இன்பமும் துன்பதும் மனதில்
வைத்து நல் கொள்கையில் உறுதியாக இருந்து வெற்றியை பெற்று ஆனந்தம் ஒளிரும். நிலையில்லாத பொருட்களில் நல்ல மகிழ்ச்சி கிடைக்காது. அதை அடைவதில்
உள்ளதே மனச்செறிவு கிடைக்கும்.
பணிவே நல்லணி
நிலையில்லாத
பொருளுக்காக ஆணவம் கொள்வதும், கல்வி கற்றவர்கள் கர்வமாக இருப்பதும், ‘நான்” என்ற அகந்தை
கொண்டு வாழ்வது நமக்கு இழுக்கைத் தரும். ‘கற்றது கடுகளவு, கல்லாதது கடலளவு’ என்ற ஔவையின்
வார்த்தைக்கேற்ப, நாம் சிந்தையில் கொண்டு, உணர்ந்து ஆணவத்தை விட்டுவிட வேண்டும். பிற உயிர்களையும்
தம் உயிர் போல எண்ணி அனைத்து உயிர்களையும் நேசிப்பவன் கடவுளாகப் போற்றப்படுகிறான். ஆகையால் தன்
நிலையை எண்ணி அனைவரிடமும் பணிந்து பண்புடன் இருப்பவன் அனைவர் மனதிலும் நின்று நிலைபெற்று
இருப்பான்.
உள்ளம் நெறிபட
உயர்வு உறுதிபடும்
கள்ளம் அழிபட
கண்ணியம் பெரிதுபடும்
சிறப்பான வாழ்விற்கு
சிறிய அறமே முறைபடும்
உயர்வு உன்னில்
உயர்ந்து நீ நில்
தன்னைக்
காத்துக் கொள்ள சினத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். விருப்பம் மிகுந்து, வினை ஆற்றினால் நீங்கள் செய்த நன்மைகள் உங்களைக் காக்கும் தன்மையுடையது. நன்மையும் தீமையும்
நம் கையில் என்று கணியன் பூங்குன்றன் கூறியது போல, ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றிய புரிதலும், நம்பிக்கையும்
இருந்தால் அவன் வாழ்க்கை உயர்வானதாக அமையும்.
வாசிப்பே தவம், அதுவே வரம்
வாசிப்பு அறிவு, சிந்தனை, மற்றும் மொழியறிவை மேம்படுத்துகிறது; மன
அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியைத் தருகிறது; புதிய
கருத்துக்கள், தகவல்கள் மற்றும் உலகைப் பற்றி அறிந்துகொள்ள
உதவுகிறது. வாசிப்பு
என்பது ஒருவரின் கல்வி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது.
”அகத்தையும் அகழ்ந்து ஆயுமாம் தவம்
உள்ளிருப்பை காட்டுவது வாசிப்பு தவம்
தவத்திற்கு ஒருவர் தமிழுக்கு இருவர்
காட்டில் அல்ல ஏட்டிலும் செய்வோம் தவம்
நாட்டை ஆக்குவோம் நிறை அன்பு வீடாய்
ஆனந்தம்
பெருக்குவோம், அனைவருக்கும்
பகிர்வோம்.
யோகம்
யோகம் என்பது உடல், மனம், மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைத்து ஆரோக்கியமான
வாழ்வை மேம்படுத்தும் ஒரு பண்டைய அறிவியல் மற்றும் கலை. இது 'இணைதல்'
அல்லது 'இணக்கமாக இருத்தல்' எனப் பொருள்படும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது. யோகா, நோயைத் தடுப்பதற்கும், ஆரோக்கியத்தை
மேம்படுத்துவதற்கும், வாழ்க்கை முறை தொடர்பான கோளாறுகளை
நிர்வகிப்பதற்கும் உதவுகிறது.
அகத்துள் கொள் யாகம்
இறையோடு பெறு யோகம்!
சுற்றுலா செல்லக்
கற்பதும் உண்டோ?
சுற்றுலா என்பது ஓய்வு, மகிழ்ச்சி, மன அமைதி மற்றும் புதிய அனுபவங்களுக்காக
ஒருவர் தனது வழக்கமான சுற்றுப்புறத்தை விட்டு வேறு இடங்களுக்கு மேற்கொள்ளும்
பயணமாகும். இது மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகிறது. சுற்றுலாத் தலங்கள் வரலாற்றுச் சின்னங்கள், இயற்கை
இடங்கள் மற்றும் கலாச்சார மையங்களாக இருக்கலாம்.
உடலுக்கேற்ற உணவு
உடுத்த எளிய உடுப்பு
கிடைத்த நல் இருப்பு
காட்டு முன் பொறுப்பு
தேவை மீறிய பொருள்
சுமையே தவிரத்திடு
திறந்த மனதுடன்
சுற்றி இருந்திடு!
உயர்ந்த புனிதம்
உருவான தினம் டிசம்பர் 25
டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை, வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய தினங்களாக கொண்டாப்படும் நாளாக
போற்றப்படுகிறது.
பகவத்கீதை உதித்த நாள்
விவேகானந்தர் பாறைநாள்
பகல்பத்து போய் பற்றுபோய்
பரமபத வாசல்காட்டு நாள்
ஏசுநாதர் பிறந்த நாள்
மார்கழி பத்து நாள்
தானம்தவம் சேர்பத்தும் காத்து
சேவையாற்ற சொல்லும் நாள்!
தமிழர் பொங்கல்!
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும்
பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை
முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி
தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில்
மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.
உயிர்காக்கு உணவுதரும் உழவருக்குத் திருநாள்
காண் எனும் மண்ணுக்கு தாழ்பணிந்து மரியாதை
நானெனும் எண்ணம்போய்
நாமெனும் உறவுகள்
வாழ்நாள் யாவும்நம்மை
வாழ்த்த ஆசிபெறும்
முழுமை உற்சாகம்
காணும் பொங்கல்!
சலாமுக்கு சலாம்!
“இளைஞர்களே கனவு
காணுங்கள், இந்திய எதிர்காலம் உங்கள் கைகளில் தான் உள்ளது” என்கிற இந்த உத்வேக வரியை நம் நாட்டு இளைஞர்களுக்கு வழங்கியவர் மறைந்த
ஏவுகணைத் தொழில் நுட்ப விஞ்ஞானியும், இந்திய நாட்டின் முன்னாள்
ஜனாதிபதியும் திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆவார்.
விதைத்த உன் விதைகள் விருட்சமாக்கும் எங்களை!
அக்னி சிறகுகள் நாங்கள் சேர்ந்து
அகிலத்தின் இருட்டைப் போக்குவோம்!
எட்டுத்திக்கும் ஏற்றம் காண்பிப்போம்! நீ
உதித்த நாளில் இந்த உறுதி எமதே!
பாரதி அறவழி
நடத்து சாரதி
1907-ஆம் ஆண்டில் 'இந்தியா' என்ற
வார ஏட்டையும் 'பாலபாரதம்' என்ற ஆங்கில
இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். அப்போது பாரதியின் கவனம் இந்திய சுதந்திர
போராட்டத்தின் பக்கம் திரும்பியது. சுதந்திரத்தை வலியுறுத்தும் கட்டுரைகளையும்
தலையங்கங்களையும் பிரசுரித்தார், வ.உ.சிக்கு விதிக்கப்பட்ட
இரட்டை ஆயுள் தண்டனையை கடுமையாக கண்டித்து கட்டுரைகள் எழுதினார்.
கருணைமிக உயிரெல்லாம்
காத்திடச் சொல் அன்புக்கவி
அருணனாய் அறிவொளி
காட்டிடச் சொல் ஒளிக்கவி
தருணமெலாம் தாயத்திற்கு
உழைக்கச்சொல் தேசக்கவி
நிறைவாக
அனைவருக்கும்
வழிகாட்டும் வாழ்வியல் நூலாக ‘இளமையில் கல் நில்லாது செல்’ என்னும் இக்கவிதை
படைப்பு அமைகின்றது. நூலின் தலைப்பே இளமையில் கல்விப் பயின்று, அதனால் முன்னேறி
செல் என்ற அடிப்படையில் இளைஞர்களுக்குச் சாதகமாகவும், முன்னேற்றத்திற்கு வழியாட்டியாக விளங்கும் வகையில் இந்நூலை
அமைத்துள்ளார் ஆசிரியர். கொரானா காலக்கட்டங்களில் எழுதிய கவிதை மலர்களை ஒன்றாக இணைத்து
நமக்கு நல்லதொரு பாமாலையாக கல்வி, அறம், முன்னேற்றம், சமுதாயம், தலைவர்கள், தமிழ்ச் சான்றோர்கள் என்று அனைத்து கண்ணோட்டத்திலும் தம்முடைய கவிதைகளை நமக்கு அளித்துள்ளார்.
எல்லாம் தெரிந்தவர்களும்
உலகில் இல்லை!
எதுவும் தெரியாதவர்களும்
உலகில் இல்லை!
Comments
Post a Comment