என் எண்ணச்
சிதறல்கள்! (2)
Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு
வருகிறேன். அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன்.
1. சேவை! தேவை!
முகம் பார்த்து செய்வது சேவை!
அகம் பார்த்து செய்வது தேவை!
2. சோதனை! சாதனை!
சங்கடம் இல்லாத சோதனை இல்லை!
சவால் இல்லாத சாதனை இல்லை!
3. புத்தகத்தின் பலன்களாக!
நம் வாழ்நாளில்
படிக்கும் புத்தகங்கள் சில கிலோ எடைதான்
பலன்?
பல டன்களாக இருக்கும்!
4. ஆலோசனை!
பலரிடம் ஆலோசனை கேட்கலாம்-முடிவு
உனதாக இருக்க வேண்டும்!
5. மெளனம்!
மெளனம் - என்பது
பேச்சில்லாமல் இருப்பது என்பதல்ல!
நினைவுகள் -என்ற
சப்தம் இல்லாமல் இருப்பது!
6. அனுபவப் பாடம்!
நம் வாழ்க்கை அனுபவத்தில்
கற்றுக் கொள்வதை விட
அடுத்தவர்களின்
வாழ்க்கை அனுபவத்தைப் பாடமாக
நெறிப்படுத்திக் கொள்பவனே
சாதனை மனிதனாக ஒளிர்கிறான்!
7. நிம்மதியான வாழ்விற்கு!
தவறுகள்
நம்மை பின் தொடரும்
நிழல்களல்ல!
நாமாக விரும்பி
அணிந்து கொள்ளும்
அணிகலன்கள்!
தவறுகளை உணர்ந்து
மனம் திருந்தினால் போதும்
வாழ்வில் நிம்மதி பெறலாம்!
8. ஓய்வு!
ஓய்வு என்பது
வேலை இல்லாமல் இருப்பதல்ல!
வேலையை மாற்றி
உற்சாகப் படுத்திக் கொள்வது!
9. குழப்பம்!
சில சந்தர்ப்பங்களில்
நிஜம் ஏற்படுத்துகின்ற
குழப்பங்களை விட
கற்பனைகள் ஏற்படுத்துகின்ற
குழப்பங்களே அதிகம்!
10.
மனநிம்மதியுடன்
வாழ!
தவறுகள் அனைத்தும்
குற்றங்கள் அல்ல!
தவறுகள் என்று
உணர்ந்தாலே போதும்! - அவை
குற்றங்கள் என்ற நிலைக்கு
செல்லாமல் வழிவகுக்கும்!
மனநிம்மதியைக் கொடுக்கும்!
11.
நூல்!
நல்ல நூலிலுள்ள
சிறிய வாசகம்!
ஒருவர் வாழ்வில்
வரலாற்றைப் புரட்டிப் போடும்
பெரிய ஆயுதம்!
12.
தேடல்!
உயிருக்காகவா?
உணர்வுக்காகவா?
தெளிவு நோக்கியா?
தெரியாத ஒன்றிற்காகவா?
தேடல் ஒரு கலையே!
எல்லா உயிருக்கும் உண்டு
தேடல் முற்றுமாக முடிவதில்லை!
அது ஒரு தொடர்கதையே!
13.
வெற்றி!
விரக்தியை விரட்டுங்கள்!
விபரீத எண்ணங்களைக் கைவிடுங்கள்!
மனக் கலக்கமின்றி
சிந்தனையில் தெளிவும்
தன் நம்பிக்கையும்
கொண்டு செயல்பட்டால்
வெற்றி நம் கையில்!
Comments
Post a Comment